Friday, October 28, 2011

7 ஆம் அறிவுக்கு என்னுடைய ஒன் லைன்!

காட்சி 1: சர்க்கஸ் கூடாரத்தில் படம் தொடங்குகிறது. ஓர் அழகான இண்ட்ரோ பாடல்! சூர்யாவின் சாகசங்களை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. ஸ்ருதியின் கண்களில் காதல் ஜொலிக்கிறது.

காட்சி 2: சூர்யா தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி பார்த்தா அது காதல்தான் என்று நண்பர்கள் சொல்ல, குழப்பத்தோடு இருக்கிறார் சூர்யா.

காட்சி 3: சீனாவில் ஒரு கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் நடக்கிறது. டோங்லி வருகிறார். காவலாளியை வசியம் செய்கிறார். கான்பரன்ஸ் கூட்டத்தில் இருப்பவர்கள் டோங்லியை நம்புகிறார்கள். டோங்லி என்ன அசைன்மெண்ட் என்று கேட்க, ஸ்ருதியைக் கொல்ல வேண்டும் என்கிறார் அந்த தலைவர்.

காட்சி 4: ஸ்ருதியை அவருடைய தோழி பரபரப்பாக வண்டியில் கொண்டு வந்து இறக்கிவிட, பஸ் ஸ்டாப்பில் யாருக்காகவோ காத்திருக்கிறார். கொஞ்சநேரத்தில் சூர்யா யானையில் வருகிறார். ஸ்ருதியை ஏற்றிக் கொள்கிறார். இருவரும் பேசிக் கொண்டே செல்கிறார்கள். ஸ்ருதியின் கூந்தல், உடை, உடல் எல்லாம் சூர்யா மீது பட, சிலிர்ப்போடு இருக்கிறார் சூர்யா.

காட்சி 5: டோங்லி விமானத்தில் வந்து இறங்குகிறான். யாருக்கோ போன் செய்கிறான். டாக்ஸி டிரைவரிடம் போனைக் கொடுத்து விலாசம் கேட்டுவிட்டு ஏறிக் கொள்கிறான்.

காட்சி 6: ஸ்ருதியும் அவளுடைய தோழியும் ஆராய்ச்சிகூடத்தில் இருக்கிறார்கள். டி.என்.ஏ பற்றிய ஆராய்ச்சிக்கான பின்னணி தகவலை இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

காட்சி 7: சர்க்கஸ் கூடாரத்தில் பார் கம்பி மீது ஸ்ருதி ஏறிப் பார்க்க ஆசைப்பட, சூர்யா அவளை மேலே ஏற்றிவிடுகிறார். பேலன்ஸ் பண்ணி நிற்க முற்படும் ஸ்ருதி தற்செயல் போல சூர்யா மீது விழ, அப்படியே தாங்கிக் கொள்கிறார். ஆனாலும் இருவரும் சரிந்து கீழே விழ, சூர்யாவுக்கு அடிபடுகிறது.

காட்சி 8: ஆஸ்பத்திரியில் கையில் கட்டோடு சூர்யா தன் நண்பர்களுடன் இருக்கிறான். காதலை எப்படிச் சொல்வது என்ற ரிகர்சல் நடக்கிறது. ஆளாளுக்கு விதவிதமாக ஐடியா கொடுக்க, சூர்யா கடைசியாக அவளுக்குப் பிடித்த மாதிரி பொம்மை செய்து அதில் லவ் யூ என்று எழுதிக் கொள்கிறார்.

காட்சி 9: ஸ்ருதி தன் தோழிகளோடு தீம் பார்க்கில் இருக்க, சூர்யா அங்கு வருகிறார். ஸ்ருதி பின்னாலேயே அலைகிறார். ஸ்ருதி திட்டிவிட, பரிசுப் பொருளைக் கொடுக்காமல் விட்டுவிடுகிறார். அதன்பிறகு ஸ்ருதியின் போனை சூர்யா அடித்து விடுகிறார் (அது ஸ்ருதிக்கும் தெரியும் என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை).

காட்சி 10: சர்க்கஸ் கூடாரத்தில் அந்த போனை வைத்துக் கொண்டு நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார் சூர்யா. அப்போது போன் அடிக்கிறது. ஸ்ருதி போன் பற்றி விசாரிக்கிறார். சூர்யா கொண்டுவந்து தருவதாகச் சொல்கிறார். அப்படியே ஒரு ட்ரீம் பாடல்!

காட்சி 11: டோங்லி ஒரு நாயைப் பிடித்து ஊசி போடுகிறான். அப்போது போலீஸ் வர அடித்துப் போட்டுவிட்டு தப்பிக்கிறான்.

காட்சி 12. சூர்யா சொன்ன இடத்துக்கு ஸ்ருதி வருகிறார். பொம்மை ஒரு பீஸ் கொடுக்கிறது. பொக்கே கடையில் ஒரு பீஸ் கொடுக்கிறார்கள். மூன்றாவது பீஸுடன் சூர்யா கே.எஃப்.சியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் பேச ஆரம்பிக்கும்போது போன் வர, ஸ்ருதி பதற்றமாக புறப்பட்டுச் செல்கிறார்.

காட்சி 13: ஸ்ருதியின் தோழி அழைப்பை அடுத்து ஸ்ருதியின் ஆராய்ச்சிகூடத்தில் அவரும் தோழியும் இருக்கிறார்கள். தோழி காட்டிய விஷயத்தை ஸ்ருதி நெட்டில் பார்த்துவிட்டு பரபரப்பாகிறாள். அந்த விஷயம், சீனாவில் நடக்கும் நோய்க்கிருமி பற்றிய ஓர் ஆராய்ச்சி குறித்தது. இருவரும் அதிர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்கள். அந்த இடத்தில் அந்த கிருமி பற்றிய விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஸ்ருதி அந்த கிருமி தாக்கியதும் உடலில் கொப்புளம் ஏற்பட்டு புண்ணாகும் என்று சொல்கிறாள். டோங்லி மருந்து செலுத்திய நாய் அதேபோல பாதிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறது.

காட்சி 14: சர்ப்ரைஸாக ஸ்ருதியைப் பார்த்து காதலைச் சொல்வதற்காக வீட்டுக்கு வரும் சூர்யா சர்க்கஸ்தனங்கள் செய்து பூட்டிய வீட்டுக்குள் நுழைகிறார். அங்கே சூர்யாவின் படங்களை வைத்து விதவிதமான அறிவியல் மருத்துவ படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சூர்யா அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டே வர, ஓர் இடத்தில் கம்பீரமான மீசையோடு அரசர் வேடத்தில் சூர்யாவின் படம் வரையப்பட்டிருக்கிறது. சூர்யா அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி கதவைத் திறந்து உள்ளே வருகிறார். சூர்யாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

காட்சி 15: ஸ்ருதி சூர்யாவுக்கு டி.என்.ஏ. ஆராய்ச்சி பற்றி விளக்குகிறார். சூர்யா பிரமை பிடித்தவர் போல அரசர் டைப் படத்தை பார்த்துக் கொண்டேயிருக்க, ஸ்ருதி அது உன் படம் அல்ல... பல்லவ இளவரசன் போதி தர்மனின் படம்... அவன் வழித் தோன்றல்தான் நீ... என்று சொல்ல. சூர்யாவுக்கு அதிர்ச்சி!

காட்சி 16: போதி தர்மன் ஃப்ளாஷ்பேக்!

காட்சி 17: காஞ்சிபுரத்தில் டி.என்.ஏ. கலெக்‌ஷனுக்காக வந்திருந்தப்போ உன்னைப் பற்றி தெரிஞ்சுது. என்னுடைய ஆராய்ச்சிக்காக உன்னுடைய டி.என்.ஏவை எடுத்து டெஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்... அதுக்காகத்தான் உன்னை ஃபாலோ பண்ணினேன். சும்மா ஆராய்ச்சிக்குதான் அப்போ வந்தேன்... ஆனா, இப்போ உன் தேவை நிஜமாகவே அவசியமாகி இருக்கு... என்று சொல்லும் ஸ்ருதி சூர்யாவின் கையில் இருக்கும் காதல் பொம்மையைப் பார்த்து குழப்பமாகிறாள். எனக்கு உன்மேல் காதல் இல்லை என்கிறாள்.

உன் ஆராய்ச்சிக்காக என் காதலை ஊறுகாய் ஆக்கிட்டியே... என்று கத்தும் சூர்யா காதல் பரிசை அங்கேயே வீசிவிட்டு கண்ணீரோடு வெளியேறுகிறார்.

யம்மா யம்மா பாடல்!

காட்சி 18: டோங்லி ஸ்ருதியின் வீட்டைக் கண்டுபிடித்து கள்ளச் சாவி போட்டு உள்ளே நுழைந்து ஸ்ருதியைத் தேடுகிறான். அப்போது அவளுடைய ஆராய்ச்சி பற்றித் தெரிந்து கொள்கிறான். உடனே போன் செய்து சீனாவில் யாருக்கோ பேசுகிறான். சீனாவில் இருப்பவன், ‘நோ... போதி தர்மன் மறுபடியும் வரக் கூடாது... அவனையும் சேர்த்து கொன்னுடு...’ என்று கட்டளை போடுகிறான்.

காட்சி 19: ஊரெங்கும் ஆங்காங்கே மக்கள் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட, மர்மக் காய்ச்சல் பரவியது என்ற செய்தி பரபரப்பாகிறது. ஸ்ருதி அதிர்ச்சியோடு அந்தச் செய்தியையும் தான் நெட்டில் பார்த்த விஷயத்தையும் முடிச்சுப் போட்டுப் பார்த்து தன் தோழிக்கு போன் செய்து பகிர்ந்து கொள்கிறாள். தோழி இதற்கு என்ன வழி என்று கேட்க, ஒரே வழி போதி தர்மன் தான் என்று சொல்கிறாள்.

காட்சி 20: சர்க்கஸ் கூடாரம் கலைக்கப்பட்டு வேறு ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. சூர்யா சோகமாக பெட்டியைக் கட்டிக் கொண்டு புறப்படுகிறார். அவருடைய நண்பர்கள் அவரை வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்புகிறார்கள். ஸ்ருதி தன் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறாள். சர்க்கஸ் வளாகத்தில் தேடிவிட்டு நண்பர்களிடம் விசாரிக்கிறாள். சூர்யா புறப்பட்டுச் சென்றுவிட்டதைச் சொல்கிறார்கள். கவலையோடு ஸ்ருதி வாசலுக்கு வர, அவளுடைய ஸ்கூட்டரில் அலட்சியமாக அமர்ந்திருக்கிறான் டோங்லி!

இடைவேளை!