Wednesday, December 25, 2013

இலக்கை விட்டுத் தராதீர்கள்?!


ஜெயசீலன்... ஒருமுறைதான் இவரை சந்தித்தேன்... சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து வந்திருந்தார். திருச்சிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து ஆராய்ச்சி படிப்பின் மீதே ஆர்வமாக இருந்து பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து வரை சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆச்சரிய மனிதர்!

எப்போதுமே விருந்தினரை அழைப்பதில் இரண்டு வகை இருக்கும். முதலாவது வகை வரப் போகிறவரை எதிர்பார்த்து யூனிட்டே காத்திருக்கும். ஏக மரியாதையோடு வாசலில் போய் அழைத்து வந்து அரங்கில் அமர வைத்து படப்பிடிப்பை நடத்தி அனுப்புவது. பெரும்பாலும் சினிமா பிரபலங்களுக்கு இந்த வரவேற்பு எப்போதுமே கிடைக்கும்.

அடுத்தகட்ட விருந்தினர்களை சூரியவணக்கம் குழுவுக்கு மட்டுமே தெரியும். மற்ற டெக்னீஷியன்கள், ‘யார் சார் இவரு..? என்ன செய்திருக்காரு..?’ என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்தபோது, ‘சார்... டிவி ஷூட்டிங்குக்கு வர்றாரு... சட்டைகூட போடாம வந்துட்டாரு..?’ என்றார் ஒரு டெக்னீஷியன். (அப்போது நாங்கள் சிரித்துக் கொண்டோம்... பேட்டியின் முடிவில் இவர்தான் முதல் ஆளாக நம்மாழ்வாரோடு நின்று படம் எடுத்துக் கொள்வார் என்று. அது நடக்கவும் செய்தது!)

ஆனால், பேட்டி முடிந்து செல்லும்போது, எல்லோரும் வலிக்க வலிக்க கைகுலுக்கி வாசல்வரை சென்று வழியனுப்புவார்கள். ஏனென்றால் அவர்கள் செய்திருக்கும் சாதனை அப்படிப்பட்டது.

ஜெயசீலனும் அப்படித்தான். இளமையான மெலிந்த தோற்றம்... இப்படித்தான் இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் இழுத்து கட்டப்பட்ட வேட்டி என்று முதல் பார்வையில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால், பேசி முடித்தபோது பெரும் பிரமிப்பு ஏற்பட்டுப் போனது எல்லோருக்கும்!

கல்லூரி காலத்திலேயே டாப் அப் செல் கார்டுகள் விற்று பணம் ஈட்டிய அவருடைய உழைப்பையும் லண்டன் சென்றபிறகுகூட அங்கே ஒரு உணவகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படித்ததும் பஸ் கட்டணத்தை மிச்சப்படுத்த கொட்டும் பனியில் சைக்கிள் மிதித்த கதையையும் அவர் விவரித்தபோது எல்லோருக்குமே சிலிர்ப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பின் முடிவில் தொகுப்பாளர்கள் இன்னும் சிலர் அவரோடு படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தபோது, ‘அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை...’ என்றார். அப்ப கொஞ்சகாலம் காத்திருக்கலாமா என்றேன். நான் காத்திருப்பேன்... ஆனா, அப்பா நிலைமை தெரியலை... நான் கேட்க வந்தது, படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமே அதை ஒளிபரப்ப முடியுமா என்றுதான்... வேண்டுகோளாகத்தான் கேட்கிறேன் என்றார்.

திங்கட்கிழமை படப்பிடிப்பு நடத்தி அதை புதன்கிழமை ஒளிபரப்பினோம். அன்று போன் செய்தார் ஜெயசீலன். ‘ரொம்ப நன்றி சார்... நான் பத்தாங்கிளாஸ் படிச்சப்ப நானூற்று ஐம்பதுக்கு மேல மார்க் வாங்கினேன். அதை போன்ல சொன்னப்ப பாஸாகிட்டேல்ல என்றுதான் கேட்டார். அதுதான் அவருக்கு தெரிந்தது. அடுத்து நான் படித்த பட்டப்படிப்போ மேற்படிப்போ என் ஆராய்ச்சியோ அவரை தொடவே இல்லை. ஆனா, இன்னிக்கு பேட்டி பார்த்ததும் கண்ணு கலங்கிட்டாரு... எனக்குத் தெரிஞ்சு நான் எங்கப்பாவை இன்னிக்கு தொட்டுட்டேன்...’ என்றார். நிறைவாக இருந்தது.

அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மறுபடியும் ஜெயசீலனின் போன்... காலைல அப்பா தவறிட்டாரு சார்... அவரை கடைசியா சந்தோஷப்படுத்துனது உங்க பேட்டிதான்... என் அப்பாவுக்கு சந்தோஷம் தரமுடிஞ்சது... நன்றி சார்...’ என்றார். இந்த நன்றியை என்ன செய்வது..?

சூரிய வ|ணக்கம் பேட்டியின்போது ஜெயசீலன் சொன்ன வார்த்தைகள் இவைதான்... எதற்காகவும் இலக்கை விட்டுத் தராதீர்கள்... விட்டுத் தந்தால் வாழ்க்கை முழுக்க அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்று! தான் பேட்டி அளிக்க முன்வந்தபோதுகூட அவர் இலக்கு வைத்திருந்தார், தன் அப்பா இந்த பேட்டியை பார்க்க வேண்டும்... அதற்காகத்தான் பேட்டி என்று! அந்த இலக்கை எட்டிவிட்டார்!

அவர் தந்தையும் சொல்லும் சேதி இதுதான்... இலக்கை விட்டுத் தராதீர்கள்... அதை அடையும் வரை எந்த இழப்பும் உங்களுக்கு வராது என்று!

Friday, December 6, 2013

மற்றும் பலர்! - எல்லாம் முருகன் துணை!

அப்போது நான் திருச்செந்தூரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படிக்கச் சென்றிருந்தேன். ஆதித்தனார் கல்லூரியில் தனி கோர்ஸாக இதை நடத்தினார்கள், சிவந்தி அகடமி சார்பில்! எம்.. எகனாமிக்ஸ் படிச்சுட்டு என்ன செய்யப் போறேஇதையாச்சும் ஒழுங்கா படிசிவில் சர்வீஸ் இல்லைன்னாலும் ஏதோ ஒரு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி கவர்மெண்ட் வேலைக்குப் போயிறலாம் என்று அப்பா சொன்னதால் அங்கு சேர்ந்தேன். அங்கு போனது பரீட்சை எழுதி ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்றுதான். ஆனால் போனதற்கு லாபம் பிஎஸ் என்கிற நண்பன் பழனிச்சாமிதான்! அந்த வகுப்புகளில் ஒழுங்காகப் படித்த பழனிச்சாமி தேர்வெழுதி வென்று இன்று சென்னை வானிலியில் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஆனால், இன்றைய மற்றும் பலரின் பிரதான கதை பழனிச்சாமியைப் பற்றியது அல்ல. எங்களுக்கு பொதுவான ஒரு கதாபாத்திரம் பற்றித்தான்!

சிவந்தி அகடமி மாணவர்கள் நாங்கள் என்றாலும் எங்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்கவில்லை. உணவு வேண்டுமானால் அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை. அது எங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு லாட்ஜில் மாத வாடகைக்கு அறை எடுத்துக் கொண்டோம். உறைவிடம் கிடைத்துவிட்டதுஉணவு..!

எங்களுக்கு மாலைநேரம்தான் வகுப்பு. அதனால் காலையும் மதியமும் உணவு என்பது பெரும்பாடாக இருந்தது. படிப்பதற்கு எக்கச்சக்கமாக இருக்கும். அதனால் சாப்பாட்டைத் தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. திருச்செந்தூர் போன்ற நகரும் ஜனத்தொகை மிகுந்த ஒரு ஆன்மிக ஊரில் சாப்பாடு என்பது யாருக்குமே பிரதானமாக இருக்க வாய்ப்பில்லை. எங்களைப் போல வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்கள் பாடு திண்டாட்டம்தான்!

கிடைத்த ஓட்டல்களிலும் கடைகளிலும் சாப்பிட்டுப் பார்த்தோம். எதுவும் செட் ஆகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒருநாள் காலை வழக்கமாக டீ குடிக்கும் கடைக்குப் போனோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிறு கடை அது. டீ, காபி., வடை என்ற அளவில் இயங்கும் அந்தக் கடையை கணவனும் மனைவியுமாக ஒரு தம்பதி நடத்தி வந்தனர். அவர்களுடைய சுத்தமான நடவடிக்கை எங்களை அந்த டீக்கடையின் வாடிக்கையாளர்கள் ஆக்கியிருந்தது. சும்மா கேட்டுப் பார்க்கலாமே என்று பேச்சைப் போட்டோம்.

நீங்க ஏன் டிபன் போடுறதில்லை..?’ என்ற எங்கள் கேள்விக்கு, அந்த கணவர், ‘இவ்ளோ சின்ன கடைக்கெல்லாம் யாரு டிபன் சாப்பிட வருவாங்கடீயும் வடையும்தான் ஓடும்…’ என்றார். ஆனால், எங்கள் கேள்வியின் உள் அர்த்தம் அந்த பெண்மணிக்கு தெரிந்திருந்தது. நேரடியாகவே கேட்டார். ‘உங்களுக்கு தினமும் டிபன் செய்து தரணுமா..?’ என்று. ஆமாம் என்பது போல தலையசைத்தோம்.

நாளைக்கு வாங்க…’ என்று சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் காலையில் அந்த டீக்கடைக்கு எதிர் மண்டபத்தில் எங்களுக்கு இலை போட்டார். சுடச்சுட இட்லி, சட்னி பறிமாறினார். சாம்பார் செய்யலைஎன்றார். அவர் வீட்டுக்காக செய்து வைத்திருந்த பொடியைக் கொடுத்தார். ஏங்கிக் கிடந்த எங்களுக்கு வீட்டுச் சுவை..! அப்படியே மத்தியானம் சாப்பாடு போடுறீங்களா..? என்றோம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘தினமும் சாம்பார், ரசம், ரெண்டு வகை கறி, மோர்னு போட முடியாது. குழம்பு, மோர், கறினு வைக்கலாம். ஓகேயா..? என்றார். ஓகே என்று சொல்ல வைத்தது இட்லியின் சுவை!

அப்பாடாசாப்பாடு பிரச்னை தீர்ந்தது என்ற நினைப்போடு நிம்மதியான எங்களுக்கு அடுத்தநாளே இடி இறங்கியது. காலை டீ சாப்பிட சென்றபோதே, ‘அண்ணேஇன்னிக்கு டிபன் குடுக்க முடியாது போல இருக்கு..?’ என்றார் அந்த அக்கா. விஷயம் என்னவென்றால், உன் வியாபாரத்துக்கு எங்க மண்டபத்தை பயன்படுத்திக்கிறியா..? என்று மண்டப மேலாளர் விரட்டிவிட்டாராம். சில நொடிகள் யோசித்த நாங்கள், ‘பரவாயில்லைஇந்த பெஞ்ச்சில் உட்கார்ந்துக்கறோம்…’ என்றோம். கிட்டத்தட்ட சாலையில் வெட்ட வெளியில் கிடந்தது பெஞ்ச்.

சங்கடத்தோடு பறிமாறினார் அந்த அக்கா. இட்லிக்கு பதிலாக இளந்தோசைதக்காளி சட்னி. ‘ரோட்டுல உட்கார்ந்து சாப்பிட வெச்சுட்டாங்களேமதியம் உங்க லாட்ஜுக்கு வேணா கொண்டாந்துடட்டுமா..? என்றார். ஆனால், அது கொஞ்சம் தொலைவுகூடவே எத்தனை பாத்திரங்களை அள்ளிக் கொண்டு வர வேண்டும்என்ற யோசனை வேறு. பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். மதியமும் கிட்டத்தட்ட ரோட்டுக் கடை சாப்பாடுதான்!

அடுத்தநாள் சென்றபோது பெஞ்சை மறைத்து ஒரு திரை கட்டப்பட்டிருந்தது. ரோட்டுல போற வர்றவங்க பார்த்துகிட்டே போறது எங்களுக்கு சங்கடமா இருக்குஅதான்என்றார் அந்த அக்கா. ‘உங்களை சிரமப்படுத்தறோம்…’ என்றோம். ‘அண்ணேஉங்க தயவுல எங்க புள்ளைக டிபன் சாப்பிடுதுங்கநாங்க ரெண்டு பேரும் மத்தியானம் சுடுசோறு சாப்பிடுதோம்சும்மா இருங்க…’ என்றார் அந்த அக்கா. அவர் டீ வேண்டுமா என்பதைத் தாண்டி எதுவுமே பேசுவதில்லை.

நடுவே வந்த சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் வெரைட்டி சாதமும் முட்டையும் பார்சல் கட்டிக் கொடுத்தார். கிட்டத்தட்ட வீட்டு சாப்பாடு போல தினம் ஒரு வகை கிடைத்தது. ஒருநாள் நாங்கள் இட்லி சாப்பிட்டு விட்டு எழுந்ததும் அந்த வழியே சென்ற ஒரு குடும்பம், ‘இட்லி கிடைக்குமா..?’ என்றது. நிமிர்ந்து எங்களைப் பார்த்த அக்காவின் கண்களில் ஈரம்! அதன்பிறகு எங்களைத் தவிர ஏழெட்டு பேராவது காலை டிபனுக்கு வரத் தொடங்கினார்கள். அதேபோல மதியமும் கூடுதலாக நாலைந்து சாப்பாடு போகத் தொடங்கியது.

நான் படிப்பை ஏறக்கட்டிவிட்டு ஊர் திரும்பிய ஓராண்டு கழித்து அப்பா அம்மா எல்லாரும் திருச்செந்தூருக்குச் சென்றோம். என் கண்கள் அந்த டீக்கடையைத் தேடின. ஆனால், அந்த இடம் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு இருந்தது. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சின்ன மனச் சுமையோடு கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அண்ணே என்று ஒரு குரல். டீக்கடைக்கார அக்கா ஒரு ஓட்டலில் இருந்து இறங்கி ஓடி வந்தார்.

என்ன அண்ணேபார்க்காத மாரி போறிய..?’ என்றார். ‘நான் பழைய இடத்துல தேடுனேன்…’ என்று சொல்லிவிட்டு அம்மா அப்பாவை அறிமுகப்படுத்தினேன். கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார். இடம் விசாலமாக இருந்தது. நாலைந்து பெஞ்ச்கள் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் ஆட்கள் இருந்தார்கள். இட்லி, பொங்கல் என்று எல்லா இலைகளும் நிரம்பியிருந்தன.

இது லீஸ் கடைசீக்கிரம் சொந்தமாக்கிரணும். எல்லாம் உங்க கை ராசிஉங்க ரூபத்துல முருகன் வந்து வழிகாமிச்சுட்டாரு. உங்க பேரும் பழனி அண்ணன் பேரும் முருகன் பேருதானவேற என்னத்த நான் சொல்லபழனி அண்ணன் எப்படி இருக்காருபேச்சு வார்த்தை இருக்கா..?’ என்று விசாரித்தபடியே, ‘அண்ணனுக்கு டீ போடுங்கசர்க்கரை கம்மியா இருக்கட்டும்…’ என்று பழைய வசனத்தைப் பேசினார். டீ மேடையில் அக்காவின் கணவர் கருமமே கண்ணாக டீ ஆற்றிக் கொண்டிருந்தார். கண்களால் வரவேற்றதோடு சரி!

திரும்பி கல்லாவைப் பார்த்தேன்அக்கா இலைகளில் சட்னி, சாம்பார் பார்த்து ஊற்றிக் கொண்டே சொன்னார். ‘அதுக்கு மட்டும் சம்பள ஆள் வெச்சிருக்குசமையலும் சப்ளையும் நாமதான்சாப்டுட்டு போறியளா..?’ என்றார்.

மனசு நிறைந்துவிட்டது!

Wednesday, November 27, 2013

கிரியேட்டிவ் ஹெட்!

காமேஸ்வரி அத்தை என்ன படித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அத்தை என்றால் அப்பா கூடப் பிறந்தவரோ இல்லை அம்மாகூடப் பிறந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவரோ கிடையாது. வேலைக்காக அப்பா ஊர் ஊராகச் சென்றபோது ஒரு ஊரில் நாங்கள் குடிபோன வளவு வீடுகளில் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் என்பதால் எனக்கு அத்தை!

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் என்னை அசத்திய பெண்மணி. அந்த வீட்டுக்குக் குடிபோன ரெண்டாம் நாள் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தார். வீட்டின் நிறைகுறைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார். அப்பாவின் வேலை, அம்மாவின் படிப்பு, எங்களுடைய சொந்த ஊர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் ப\ற்றியும் விசாரிப்பார்கள் என்று காத்திருந்தவருக்கு பெரிய அதிர்ச்சி. எங்கம்மா எதுவுமே கேட்காமல் காபி குடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டதும் அத்தைக்கு கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது.

ஆனாலும் சொல்லாமல் போவதாக இல்லை. அங்கேதான் முதன்முதலாக கிரியேட்டிவிட்டி என்றால் என்னவென்று நான் பார்த்தேன். ‘சரிம்மாநான் கிளம்பறேன்உங்க அண்ணாச்சி சாப்பாட்டுக்கு வந்திருவாக...!’ என்றார். எங்க அம்மாவுக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்பதால், ‘சரி போயிட்டு வாங்கஆமாஅண்ணாச்சி என்ன செய்றாங்க..?’ என்றார்.

ஊரைச் சுத்திட்டு சுத்திட்டு வந்து சாப்புடுவாருஇப்ப பாதி ஊரைச் சுத்தியிருப்பாருபசி வந்ததும் வீட்டுக்கு வந்துருவாருசாப்டுட்டு மீதி ஊரைச் சுத்தப் போவாரு…’ என்றார் அத்தை. கேள்வி கேட்ட அம்மாவுக்கு ஐயோ பாவம் என்றாகிவிட்டது. ஆனால், கழுத்தில் ஒற்றை வடம், காது, மூக்குகளில் கல் வைத்த தங்கம், செழிப்பான புடவை என்று வறுமையில் இருப்பது போல தோற்றமில்லாத அத்தையைப் பார்க்கும்போது செலவுகளை எப்படி சமாளிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஊரைச் சுத்தறாருன்னா வருமானம்ஏதாச்சும் நிலபுலம் இருக்குதா..? என்றாள் அம்மா! அத்தை சின்ன சிரிப்போடு சொன்னார். ‘அதான் ஒண்ணாந்தேதியானா சம்பளம் வந்திரும்லஊரைச் சுத்தறதுன்னா சும்மா இல்லைஅவரு போஸ்ட் மேனா இருக்காரு…’ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அம்மாவுக்கு கடுப்பாக இருந்ததோ என்னவோ தெரியாதுஎனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என் வீட்டுக்காரர் போஸ்ட் மேனாக இருக்கார் என்று சொல்லியிருந்தால் அது ஒற்றை வரி தகவலாக இருந்திருக்கும். ஆனால், அதற்கு ஒரு திரைக்கதை எழுதி அந்த ஒரு நிமிடத்தில் சோகம், காமடி, ஆச்சரியம் என்று பலவித உணர்வுகளைக் கொண்டு வந்த காமேஸ்வரி அத்தைதான் நான் பார்த்த முதல் கிரியேட்டிவ் ஹெட்! இத்தனைக்கும் அத்தை பள்ளிக்கூட லெவலைத் தாண்டியதில்லை என்றுதான் அவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர்களுடைய குடும்பத்தில் வருமான ஆதாரம் போஸ்ட் மேன் மாமாதான். அவர் சம்பளத்தில்தான் மாமா, அத்தை, வசந்தா அக்கா, ரவி அண்ணா, சுந்தர் அண்ணா எல்லாரும் சாப்பிட வேண்டும். ரவி அண்ணா வேலைக்காக அதையும் இதையும் முயற்சி செய்து பார்த்து அலைந்து கொண்டிருந்தார். பாதிநேரம் ஏதாவது வேலை விஷயமாக வெளியூரில் அலைந்து கொண்டிருக்கும் கேரக்டர். வசந்தா அக்காவுக்கு மாப்பிள்ளை முடிவாகி இருந்தது. சுந்தர் அண்ணா ஸ்கூல் படித்து முடித்து விட்டிருந்தார்.

இதற்கிடையே நாங்களும் ஊர் மாறி வந்துவிட்டோம். பிறகு ஒருநாள் தென்காசியில் கோவிலுக்கு விளக்கு போட அம்மாவோடு போயிருந்தபோது காமேஸ்வரி அத்தையைப் பார்த்தேன். சுந்தர் அண்ணா என்ன பண்றாங்க..? என்றேன். அவர் பத்தாங்கிளாஸ் முடிச்சான்லஇப்ப விஓவா இருக்கான். என்றார். அடடேபரவாயில்லையேஸ்டேட் கவர்மெண்ட்ல வேலைன்னா நல்ல விஷயம்தான் என்றேன். வேலை நல்ல வேலைதான்அவனுக்கு செலவுக்கு காசு குடுத்துதான் உங்க மாமா சம்பளமெல்லாம் கரையுதுஎன்றார். என்ன சொல்றீங்க அத்தை..? என்றேன். ஆமாப்பாவி ஓன்னா வெட்டி ஆபீசர்னு சொல்ல வந்தேன்பா..! என்றார். சிரித்துக் கொண்டேன். அதன்பிறகு மாமாவைப் போலவே சுந்தர் அண்ணாவும் போஸ்ட் மேன் வேலைக்குப் போய்விட்டார்.

அதன்பிறகு நீண்டநாள் கழித்து அண்ணன் திருமணத்துக்கு பத்திரிகை , கொடுப்பதற்காக போயிருந்தேன். சந்தோஷமாக பத்திரிகையை வாங்கிக் கொண்ட அத்தை, ‘பாபுநீ என்ன பண்றே..?’ என்றார்.

சென்னையிலே மீடியாவுல காமேஸ்வரி அத்தை வேலையைப் பார்த்துகிட்டிருக்கேன்..! என்றேன்!

Friday, November 8, 2013

சீதாம்மா!


அப்போது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்தின் மாணவத் தலைவர்தான் இலக்கிய மன்றத்துக்கும் தலைவர். ஆக, எனக்கு இரட்டைப் பொறுப்பு. பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்கு விருந்தினரைத் தேர்வு செய்ய மன்ற செயலாளர் சுப்புராஜுடன் அலைந்து திரிந்துவிட்டு களைப்போடு அவன் வீட்டுக்குச் சென்றோம்.

அம்மா... இவன் பாபு... ரெண்டு பேருக்கும் சாப்பாடு போடு...என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்கட்டுக்கு கூட்டிச் சென்றான். அப்போதே அம்மா என்று அழைக்காமல் அவ்வா என்று அழைக்கலாம் போல வயோதிகத்தில் இருந்தார் சுப்புவின் அம்மா! என் வீட்டில் அம்மாவின் சாப்பாட்டைத் தவிர வேறு சாப்பாடு அறியாத எனக்கு அந்தச் சாப்பாடு வேறு விதமாக ருசித்தது.

சுப்பு அவர்கள் வீட்டில் நாலாவதாகப் பிறந்தவன். மூத்த அக்காவுக்கு திருமணம் ஆகி, அண்ணனுக்கு திருமணம் ஆகி, இளைய அக்காவுக்கு திருமணம் ஆகி பல குழந்தைகளுக்கு அவ்வாவாகி விட்டதால் அம்மாவுக்கு தோற்றத்திலேயே அவ்வாத்தனம் வந்துவிட்டது. சுப்புவும் அவனுக்குப் பிறகு தம்பி கிருஷ்ணாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்பு வீடே கதி என்று ஆகிவிட்டது. எப்போது போனாலும் உரிமையோடு தட்டு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இருந்தது.

அம்மாவுக்கு முடியலைடா என்று படுத்திருப்பார். ஆனாலும் டீ போட்டுத் தரட்டுமா என்று எழுந்து வருவார். இல்லம்மா நாங்க கடைல பார்த்துக்கறோம் என்றாலும் எனக்கும் குடிக்கணும் போல இருக்குடா என்று சொல்லி டீ குடிக்க வைத்துவிட்டுதான் விடுவார்.

பேரக் குழந்தைகளுக்காக எப்போதும் பண்டம் செய்து கொண்டே இருப்பது அம்மாவின் இயல்பு. எப்போதுமே வீட்டில் எண்ணெய் வாசனை அடித்துக் கொண்டே இருக்கும். சனி ஞாயித்துக் கிழமைகள் என்றால் பிள்ளைகள் நிறைந்து வீடே கலகலவென்று இருக்கும். அண்ணி, அக்கா எல்லோரும் இருந்தாலும் அம்மா சமையலறையில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பார்.

எப்போது சென்னையில் இருந்து சென்றாலும் அம்மாவைப் பார்க்காமல் வரமாட்டேன். ‘என்ன பாபு... எப்படி இருக்க... வேலையெல்லாம் நல்லா போகுதா... எங்க தலைமுறையை நாங்க கழிச்சுட்டோம்... உங்க நைனா தையல்ல கொண்டு வர்றதை வெச்சு ரெண்டு பிள்ளைகளைக் கட்டிக் குடுத்து எல்லாப் பிள்ளைகளையும் படிக்க வெச்சுட்டோம். உங்க காலம் அப்படி இல்லை... கவனமா நடந்துக்கோ...என்பார்.

நைனா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் இத்தனை கட்டுசெட்டக குடித்தனம் செய்ததே பெரிய சாதனைதான். அண்ணனை வங்கி அதிகாரி ஆக்கி, அக்காக்களை நல்லவிதமாக கட்டிக் கொடுத்திருப்பதே பெரிய விஷயம்தான். நான் வேலை தேடி சென்னைக்கு நகர்ந்துவிட்ட பிறகு சுப்புவுக்கும் அரசு வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கும் திருமணம் முடிந்து அவன் தம்பிக்கும் திருமணம் முடிந்த ஒருநாளில் சுப்பு வீட்டுக்குச் சென்றேன்.

அன்று தீபாவளியோ என்னவோஅக்கா, அண்ணா, சுப்பு, அவன் தம்பி என்று எல்லோரும் குடும்ப சகிதமாக கூடியிருந்தார்கள். கொஞ்சம் தளர்ந்த நடையில் வாசலுக்கு வந்த அம்மாவின் புடவை தொடைப்பகுதியில் இருந்த ஈரம் சொன்னது, உள்ளே அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று. அண்ணியின் ஸ்பெஷலான சிக்கன் சமையல் அன்று. ஆனல், அம்மாவும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தார்.

எனக்கு திருமணம் நிச்சயமானபோது நைனா கொஞ்சம் தளர்ந்து தையல் கடையை மூடிவிட்டார். வீட்டிலேயே மிஷின் போட்டு பொழுதுபோக்காக தைத்துக் கொண்டிருந்தார். நிச்சயத்துக்கு வந்த அம்மாவால் என் திருமணத்துக்கு வர வாய்க்கவில்லை. திருமணத்துக்கு சில தினங்கள் முன்பு நைனா தவறிப் போக, அம்மாவோ சுப்புவோ திருமணத்துக்கு வரவில்லை.

திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு என் மனைவியை அழைத்துக் கொண்டு சுப்பு வீட்டுக்குச் சென்றேன். படுக்கையில் சாய்ந்திருந்த அம்மா, என் மனைவியின் கன்னத்தைத் தடவி சந்தோஷப்பட்டார். ‘பாபுஉன்னால உன் ஆயுசுக்கும் என்னை மறக்க முடியாதுப்பாஏன்னா என் பேருள்ள பொண்ணைக் கட்டியிருக்கியேஆமாஅவளை எப்படிக் கூப்பிடப் போறே..?’ என்றார்.

இப்போதும் நான் என் மனைவியை பெரும்பாலும் அம்மா என்றுதான் கூப்பிடுகிறேன்..!

Sunday, November 3, 2013

வேடந்தாங்கல்!

தொகுப்பு எழுதினால்தான் சமர்ப்பணம் போடணுமா என்ன... இந்தக் கட்டுரை தமயந்தி அக்காவுக்கு சமர்ப்பணம்..! முகநூலில் அவர் எழுதிய தெற்கு பஜார் என்ற திருநெல்வேலி குறிப்புகள்தான் எனக்கு வேலு அண்ணனை நினைவுக்குக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் அவர் தெற்கு பஜார்காரர் இல்லை... அதைத்தாண்டி மார்க்கெட் முக்குல அன்னபூர்ணாவுக்கு எதுத்தாப்ல பப்ளிக் டெலிபோன் பூத் வெச்சிருந்தார்.

வெள்ளைச் சட்டை, குங்குமப் பொட்டு என்று அவர் தோரணையே கம்பீரமாக இருக்கும். நாற்காலியில் காலை மடித்துப் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்திருப்பார். கழுத்தில் மின்னும் சங்கிலி, வலது கையில் வாட்ச், விரலில் அகல மோதிரம் என்று பவுசுக்கும் குறைவிருக்காது. அவருடைய டெலிபோன் பூத் ஓரமாக நிற்கும் சக்கர வண்டியைப் பார்க்காவிட்டால் வேலு அண்ணன் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதை நம்பவே முடியாது.

அவரால் நடக்க முடியாது என்றாலும் அவர் வாயில் இருந்து நடக்காது... நடத்த முடியாது என்ற வார்த்தைகளே வராது. எதைச் சொன்னாலும் செஞ்சுடலாம் தம்பி என்றுதான் ஆரம்பிப்பார். ஒருவேளை அது அவர் சக்திக்கு மிஞ்சிய விஷயமாக இருந்தால், செஞ்சுடலாம் தம்பி.,.. ஆனா, அதுல இப்படியாப்பட்ட சிக்கல் இருக்கு... அதை மீறி உனக்கு இந்த விஷயத்தைச் செய்யணுமானு யோசனை பண்ணிக்கோ! என்பார். நமக்கே அது தேவையில்லை என்று தோன்றிவிடும்!

திருநெல்வேலியில் எந்த தியேட்டராக இருந்தாலும் வேலு அண்ணன் பேரைச் சொன்னால் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் வாங்கலாம். அது அவர் மேல் பரிதாபப்பட்டு கிடைப்பது அல்ல... கவுண்டரில் டிக்கெட் கிழிப்பவர் தொடங்கி, முறுக்கு விற்பவர் வரைக்கும் (இந்த பட்டியலில் முதலாளிகள் உண்டா என்று தெரியாது) வேலு அண்ணனிடம் கடன்பட்டிருப்பார்கள்.

அவருடைய மூன்று சக்கர சைக்கிள் பூத் ஓரமாகக் கிடக்குமே தவிர ஒருநாளும் வேலு அண்ணன் அதை ஓட்டிப் பார்த்ததில்லை. வீட்டில் புறப்பட்டு ரெடியாக இருந்துகொண்டு கடைக்கு போன் அடிப்பார். கடையில் இருந்து யாராவது சைக்கிளில் போய் அழைத்துக் கொண்டு வருவார்கள். அதேபோல மதியம் சாப்பாட்டுக்கு போகும்போதும் யாராவது அழைத்துக் கொண்டு போவார்கள். கடைக்கு வரும்போதே பவுடர் மின்னும். ஆனாலும் வந்தவுடனேயே ஒரு கோட்டிங் கொடுத்துக் கொள்வார். அதேபோல கடையைவிட்டு புறப்படும்போது ஒரு கோட்டிங் அடித்துவிட்டுதான் புறப்படுவார்.

வேலு அண்ணனோடு கூடப் பிறந்தவர்கள் நாலைந்து பேர் உண்டு. ஆனால், ஒருநாளும் அந்த டெலிபோன் பூத்தில் அவருடைய சொந்தம் என்று யாரையும் பார்த்தது இல்லை. எப்போதும் நண்பர்கள் புடைசூழத்தான் இருப்பார்.

மாரியப்பன், செந்தில் மூலமாகத்தான் நான் வேலு அண்ணனுக்கு அறிமுகம் ஆனேன். முதல்நாளே என்ன தோழா... உங்க ரத்த வகை என்ன..? என்றார். ஓ பாசிட்டிவ் என்றேன். சின்னக் குழந்தைக்கு ரத்தம் குடுத்தீங்களாமே... வெரிகுட்... என்கிட்டே யாராச்சும் கேட்டா சொல்றேன் என்றார். நீங்க ரத்தம் குடுப்பீங்களாண்ணே... என்றேன். என்னை அறியாமல் என் கண்கள் காலைப் பார்த்தன. ரத்தம் கையிலேதானே எடுப்பாங்க... என்று வேலு அண்ணன் சிரித்தபடி சொன்னது இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.

நான் திருநெல்வேலியை விட்டு அம்பாசமுத்திரத்துக்கு மேற்படிப்புக்காகச் சென்ற பிறகும் பாளையங்கோட்டை செல்லும்போதெல்லாம் வேலு அண்ணனைப் பார்க்காமல் வருவதில்லை.

அப்படியொரு நாளில் வேலு அண்ணன் தனியாக பூத்தில் உட்கார்ந்திருந்தார். கூடுதலாக எந்த மேக்கப்பும் இல்லை. ஆனால், முகத்தில் களை கொஞ்சம் கூடுதலாக இருந்தது. கல்யாணம் முடிஞ்சிருச்சு தோழா... என்றார்.

பசங்களை எங்கே காணோம் என்றேன். நீங்க ஒருமுறை எனக்காக நான் சொல்லச் சொல்ல ஒரு நண்பரோட ஆட்டோகிராஃப் நோட்டுல எ\ழுதுனது ஞாபகம் இருக்கா..? என்றார்.

கமா ஃபுல் ஸ்டாப் உட்பட ஞாபகம் இருந்தது.

எப்போதும் பறவைகள் வருகை... வேடந்தாங்கலுக்கு மட்டுமல்ல... இந்த வேலுவின் பூத்துக்கும்தான்! பறவைகள் போகலாம்... வரலாம்... போய் வாருங்கள்! என்று நானே எழுதிக் கொடுத்தேன் அன்று!

என்ன தோழரே... யோசனை... உங்க கார் காத்துகிட்டிருக்கு... போய் வாருங்கள் என்றார்!

Tuesday, October 29, 2013

மாரியப்பன் டெய்லர்!

 
எங்கள் வீட்டுக்கு தீபாவளி எப்போதுமே டெய்லர் சித்தப்பா மூலமாகத்தான் வரும்! அப்பா துணி எடுத்துவிட்டு வந்து இறங்கும்போதே, ‘மாரியப்பா... வீட்டுக்கு வா..!’ என்பார். கையில் டேப்போடு வந்துவிடுவார்.

துணியின் நிறத்தை வைத்தே அது எனக்கு எடுக்கப்பட்டதா இல்லை அண்ணனுக்கு எடுக்கப்பட்டதா என்பதைச் சொல்லிவிடும் சாமர்த்தியம் எப்போதுமே அவருக்கு உண்டு. கரெக்டாக துணியை எடுத்து அளந்து பார்த்துவிட்டு, ‘பாபு... வாடே..’ என்றபடி அளவெடுப்பார். உயரத்தை அளந்துகொண்டிருக்கும்போதே, பார்வை அப்பா பக்கம் போகும். அவர் போதும் என்று சொல்லும் வரையில் அளவு நீண்டுகொண்டேபோகும். முழுக்கை வேண்டாம் என்று ஈனஸ்வரத்தில் முனகுவேன். ‘துணி வீணாப் போயிரும்... முழுக்கை வெச்சிரு...’ என்பார் அப்பா.

ரெண்டு பாக்கெட்... மூடி வெச்ச பாக்கெட் என்று நான் சொல்லும் மாடலைவிட, ‘ரவுடிப் பயலுக்கு தைக்க மாரி தைச்சுறாத... படிக்க புள்ள போடுத சட்ட... பாத்து தை...’ என்ற அப்பாவின் வார்த்தைகள்தான் எடுபடும்.

அளவெல்லாம் எடுத்து முடித்த பிறகு தலையைச் சொறிவார் டெய்லர். ‘கேன்வாஸ் வாங்கணும்... பட்டன் வாங்கணும்... தீவாளி செலவு இருக்கு...’ என்ற டெய்லரின் வாயை நூறு ரூபாயால் அடைப்பார் அப்பா.

நம்பர் கடை பக்கம் பார்த்தேன்... தொலைச்சுருவேன்...’ என்ற அப்பாவுக்கு தெரியும், அந்த நூறு ரூபாய் எங்கே மாற்றப்படும் என்று..!எனக்கும் தெரியும் எந்தச் சமயத்தில் போனால் அளவு மாறும் என்று..! தீபாவளி அன்று அப்பா கண்டுபிடித்துவிடுவார்... ஆனால், அன்று டெய்லரிடம் போய்ப் பேசமுடியாது. ஏனெறால் அவர் கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்.

ஒருகட்டத்துக்குப் பிறகு டெய்லர் கடை எங்கள் சங்கமாகிவிட்டது. அங்கேதான் அரட்டை..! முன்னால் கடை... பின்னால் வீடு என்று டெய்லருக்கும் தொழிலும் குடும்பமும் ஒன்றாகவே இருந்தது. கடையையும் வீட்டையும் பிரிக்கும் நடையில் அமர்ந்துதான் பீடி சுற்றுவாள் வள்ளி சித்தி... டெய்லர் சித்தப்பாவின் மனைவி.

கண் பார்க்கும் வேலைய கை செய்யணும்டே... அதுதான் கலை..!’ என்பார் அடிக்கடி. அது உண்மைதான் என்பது போல அவருடைய கைகள் துணியில் நாட்டியமாடும். ஆளைப் பார்த்தே அளவெடுத்துவிடுவார். ஆனால், எதுவாக இருந்தாலும் சாயங்காலம் ஆறு மணிவரைதான். அதன்பிறகு அளவெல்லாம் இழவாகிவிடும். கோடி ரூபாய் கொடுத்தால்கூட லுங்கியைக்கூட மூட்டமாட்டார்.

ஊருக்குள் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் அவர்தான். கொஞ்சநாளில் இன்னும் சில தையல் கடைகள் எங்கள் ஊருக்குள் முளைத்தன. சட்டென்று பெரிய ரேக் செய்து கடையில் வைத்து துணிகளை வாங்கி வைத்து விற்கத் தொடங்கினார். ஆனால், ஊருக்குள் இழவு விழுந்தால் கோடித் துணி வாங்க மட்டுமே அவரிடம் போனார்கள். அதனால் எல்லா துணிகளையும் விற்றுவிட்டு கடையில் அந்த கண்ணாடி ரேக்கையும் விற்றுவிட்டார்.

எனக்கு முதன்முதலாக பேண்ட் அவர்தான் தைத்தார். டவுசர் வரைக்கும் ஓகே... நான் பேண்டை தென்காசியிலே தைச்சுக்கிறேனே என்றபோது யூனிஃபார்ம்தானே... மாரியப்பன்கிட்டேயே குடு என்று அப்பா அதட்டல் போட துணி கைமாறியது.

ஆனால், அவர் பேண்ட் தைத்துக் கொடுத்ததுபோல அத்தனை கச்சிதமான பேண்ட் இதுவரையில் எனக்கு அமையவில்லை. என் உடலோடு ஒட்டியும் இருந்தது. உட்கார கொள்ள வசதியாகவும் இருந்தது. ஆனாலும் அடுத்தடுத்த பேண்ட்களை தென்காசியில் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

கால சுழற்சியில் சாராயம் குடித்துக் கொண்டிருந்த மாரியப்பன் டெய்லர் கசாயத்துக்கு இறங்கினார். அதுவும் பகலிலேயே..! அப்போது யாரோ சில பெண்கள் அவரிடம் ஜாக்கெட் தைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நூல் கோர்க்க முடியாத அளவுக்கு கைகள் நடுங்கின.

வள்ளி சித்தி பீடி சுற்றலில் அந்த குடும்பம் சுழலத் தொடங்கியது. ஊருக்குள் யாரோ இறந்தபோது நானும் பாடை தூக்கி வருவேன் என்று பிடிவாதமாக தொங்கிக் கொண்டே வந்தார். ‘சின்யா... ஒன்ன தனியா ஒருநா தூக்கிட்டுப் போறோம்யா... விடுய்யா...’ என்று வேடிக்கையாகச் சொன்னபோதுகூட விடவில்லை.

அவம் குடிச்சுட்டு அழுவுதான்னு நினைக்காத... இன்னைக்கு பகல்குடிகாரனாகிட்டாங்கறது வாஸ்தவம்தான்... ஆனா, மெட்ராஸ்ல தொழில் பழகிட்டு வந்து கட வெச்சப்ப இவருதான முத சட்டையக் குடுத்தாரு... அது அவன் நினைப்புல இருக்கும்லா... என்று மயானக் கரையில் ஒருவர் சொல்லக் கேட்டபோது எனக்கு மாரியப்பன் டெய்லர் பகலிலேயே குடிக்கத் தொடங்கிய நாள் நினைவுக்கு வந்தது.

அன்றுதான் வெளியூர் சென்று திரும்பிய நண்பன் ஒருவன் தான் வாங்கி வந்த ரெடிமேட் சட்டைகளை கடையில் வைத்து எங்களிடம் காட்டினான்.