Friday, June 18, 2010

மணிரத்னம் காட்டும் திருநெல்வேலி எங்கே இருக்கிறது?

எல்லோரும் ராவணனைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலிக்காரனான எனக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை, காரணம் கதையின் களமாகச் சொல்லப்படும் திருநெல்வேலி!
பொதுவாக கதையைப் பார்க்கும்போது இடத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். பொள்ளாச்சியில் படம் எடுத்துவிட்டு ஒரே ஒரு போர்டில் அபத்தமாக ராமநாதபுரம் என்று காட்டுவார்கள். இதிலும் அதேபோல, அங்கங்கே பைன் மரங்களும் ரப்பர் மரங்களும் எட்டிப் பார்த்தாலும் அதை திருநெல்வேலி மலைக் காடு என்று நம்புகிறோம். அதேபோல, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியையும் நம்புகிறோம். அதையெல்லாம் நான் குறைசொல்லவரவில்லை. என் வருத்தமெல்லாம் வேறு!
ரோஜாவின் காலத்தில் இருந்தே மணிரத்னத்துக்கு திருநெல்வேலியின் மீது கோபம் போலிருக்கிறது. அந்தத் தமிழைக் குதறி எடுக்கிறார். ராவணன் அதன் உச்சமாக இருக்கிறது. வாடே, போடே... என்னல... யான் இப்படி? என்பன போன்ற சில வார்த்தைகளை அங்கங்கே போட்டுவிட்டால் அது நெல்லைத் தமிழாகிவிடும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அவருக்கு வசதிப்படும் நேரத்தில் வட்டார மொழி எட்டிப் பார்க்கிறது.
அந்த மொழியில் கோபம் எபபடி இருக்கும், சிருங்காரம் எப்படி இருக்கும், எக்காளம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கொஞ்சமும் ஹோம் ஒர்க் பண்ணாமல் தமிழின்மீது லாரியை ஏற்றியிருக்கிறார். அவருடைய உதவியாளராக இருந்த அழகம்பெருமாள் டும் டும் டும் படத்தில் காட்டிய திருநெல்வேலியைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்தியிருக்கலாம். இதிலும் போட்டோகிராபராக எட்டிப் பார்க்கும் அழகம்பெருமாள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
இன்னொருபக்கம், விக்ரமுக்கு ஊர் விக்கிரமசிங்கபுரம் என்கிறார். ஆனால், தங்கச்சி கல்யாணத்தைக் கொண்டுபோய் தங்கக் கோவில் மாதிரியான இடத்தில் நடத்துகிறார். மாப்பிள்ளை குஜரத் சேட்டு என்று சொல்லியிருந்தால்கூட கொஞ்சம் நம்பியிருக்கலாம். நீங்கள் ராவணனோடு சேர்த்து ராவண் எடுக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டுமா? ஏன், திருநெல்வேலியில் படம்பிடித்துக் கொண்டுபோய் பம்பாயில் காட்ட உங்களுக்கு தைரியம் இல்லையா? அப்படிக் காட்டினால் அம்பானி முதலாளி கோவிச்சுக்குவரோ?
இதையெல்லாமாவது பொறுத்துக் கொள்ளலாம். ப்ரியாமணி கல்யாணத்துக்கு முதல்நாள் மருதாணி வைக்கும் வைபவம் நடக்கிறது. ஒடுக்கப்பட்ட இனம் என்று பொங்கிப் பொங்கிப் பேசும் விக்ரம் அவர்களின் குலத்தில் மருதாணி என்பது எங்கே இருந்து வருகிறது சார்? எங்கள் ஊர் கல்யாணம் எப்படி நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா... உங்கள் சினிமா வசதிக்காக கொஞ்சம் மிகைப்படுத்தலாம்... அதற்காக சேட்டு வீட்டுக் கல்யாணமாக்கி விருந்தில் ஜாங்கிரி போடாதீர்கள்.
நீங்கள் ராமன் கோஷ்டியில் இருந்துகொண்டு ராவணன் எடுக்கிறீர்கள்... மேல்குடியில் இருந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை அபத்தமாகச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகளை நான் வைக்கவில்லை. எங்க திருநெல்வேலி தமிழைக் கையில் எடுத்து காலி பண்ணாதீங்கனுதான் சொல்றேன்!

Wednesday, June 16, 2010

என் குடும்ப மரம்!

இதுதான் வேர்!

சங்குபுரம்... ராயகிரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. ராயகிரி சேத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. சேத்தூர் ராஜபாளையத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.

ராஜபாளையம் இப்போதுதான் வறண்டபூமியாகிக் கொண்டிருக்கிறது. சேத்தூர் அதற்கு சில ஆண்டுகள் முன்னமே... ராயகிரி அதற்கும் பல ஆண்டுகள் முன்னதாகவே... அப்படியானால் சங்குபுரம் சில தலைமுறைகளுக்கு முன்னேயே வறண்டு போய்விட்டது.

அந்த வறட்சியின் கொடுமை தாங்காமல் கிருஷ்ணன் தன் மூன்று மகன்களையும் அழைத்துக் கொண்டு மனைவி வழி சொந்தங்கள் வாழும் ஊரைத் தேடி நடக்கிறார் பஞ்சம் பிழைக்க..! அந்த முதல் அடியில் இருந்துதான் என் குடும்ப சரித்திரம் தொடங்குகிறது! அதற்கு முன்பு கிருஷ்ணன் குடும்பம் என்னவாக இருந்தது, அவருடைய கிழவியை எப்படிக் கல்யாணம் முடித்துக் கொண்டார் என்பதைச் சொல்ல ஆளில்லை.

’பொண்டாட்டி ஊரோடு வந்துட்டாலும் மீசை முறுக்கைக் கைவிடாத மனுஷன். அவங்க கண் பார்வையில இருக்கலாமே ஒழிய கைநிழலுல இருக்கக் கூடாதுனு வைராக்கியமா வாழ்ந்த மனுஷன். சின்னதா ஒரு குடிலைப் போட்டுகிட்டு அன்னாடம் உழைச்சு குடும்பம் குழந்தைகளைக் காபந்து பண்ணிகிட்டுக் கிடந்த மனுஷனுக்குக் கை ஓய்ஞ்சு போனதும் ஊரு நினைப்பு வந்துடுச்சு. என் சுத்து சொந்தங்களை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரட்டா...’னு சொல்லிட்டு சங்கோரத்துக்குப் புறப்பட்டுப் போனாரு உங்க தாத்தன். வெற்றிலையோடு குடும்ப வரலாற்றையும் போட்டு ஒதுக்கிக் கொண்டு சாறு ஒழுகும் வாயோடு கதை சொன்னாள் கடைசி வீட்டு ஆச்சி! அந்த கிருட்டினன் கிழவனின் மூன்றாவது மருமகள்.

போன மனுஷனைப் பத்தி ஒரு பூவுக் காலமா ஒரு தாக்கலும் இல்லை. என்னாச்சுனு வீட்டுப் பொம்பளை… அதான் எங்க மாமியார்காரி புலம்ப நடுள்ள பிள்ளையை அதான் எங்க சின்ன மச்சானைக் கையிலே புடிச்சுகிட்டுக் கிளம்பினாரு எங்க மாமியாரோட அண்ணன் பெரிய போத்தி. அதான் எங்க பெரியய்யா!

இன்னைக்கப் போல அன்னைக்கு காரு பஸ்ஸெல்லாம் பெருசாக் கிடையாதே... பெரிய போத்தியும் எங்க சின்ன மச்சானும் நடந்தே போகையிலே முக்கால்வாசி தூரம் கடந்திருக்கையிலே எதுத்தாப்புல வந்தான் ஏகாளி.

அய்யா... தாக்கல் கிடைச்சு வர்றீகளா... இல்லை தானா வர்றீங்களா... நேத்து ரத்திரி நம்ம கிட்டுனன் ஐயா தவறிப் போனாருன்னு மூச்சுவாங்கி நின்னான் ஏகாளி.

ஒருநாழிகை கலங்கி நின்ன பெரிய போத்தி, நீ அப்படியே போய் தங்கச்சிகிட்டே தகவல் சொல்லி கடைசிகாரியங்களை செய்யச் சொல்லிடு... நான் மருமவனைக் கூட்டிக்கிட்டு சங்கோரத்துக்குப் போறேன்னு சொல்லிட்டு நடையை விரசாப் போட்டாரு. மூத்த மகன் இருந்தாலும் அப்பனுக்குக் கொள்ளி போடுற பாக்கியம் அடுத்த மகனுக்குதான் அமைஞ்சுது. இதுதான் விதினு வெத்திலையைத் துப்பிட்டு வெள்ளைச் சேலையில் வாயைத் துடைச்சுகிட்டு போயிட்டா கடைசிவீட்டு ஆச்சி!

என்னதான் பஞ்சம்னு பாதை விலகி வந்துட்டாலும் தன் உசுரு சொந்த ஊருலதான் போகணும்னு வைரக்கியமா இருந்த எங்க தாத்தனோட தாத்தனை நினைக்கையில் பிரமிப்பா இருக்கு.

தாத்தனுக்கு அங்கே கொள்ளி போட்டு குடம் உடைக்கையிலே இங்கே கிழவிக்கு எல்லா காரியமும் ஆகி கண்ணீர் வத்திப் போச்சு! அதோட ஊர் தடமும் அழிஞ்சு சொந்த ஊரு குற்றாலம் பக்கத்துல இருக்கற கொட்டாகுளம்னு ஆகிப் போச்சு!
அங்கேதான் ஆரம்பிச்சது எங்க தாத்தனோட அப்பா சிதம்பரத்தோட சீரான ஆட்சி! அவரு பேரு சிதம்பரம்... ரயில்வே ஊழியர்... ஆனா, அங்கே அவரு பேரு சுப்பையா! ஏன் அப்படி?

சொல்றேன் அந்த சுவாரஸ்யமான கதையை!