Friday, September 18, 2009

ஒரு கதையின் கதை!



ஒரு சிறுகதை புதிய நண்பர்களை தேடித் தரும் என்று சொல்லத் தகுந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனந்த விகடனில் மரியா கேண்ட்டீன் கதை வெளியான தினம் இரவு நான் சொந்த ஊருக்குப் பயணமாகிக் கொண்டிருந்தேன். புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு... ‘சார்... நீங்கதான் முருகேஷ் பாபுவா... மரியா கேண்ட்டீன் கதையை நீங்கதான் எழுதினீங்களா..?’ என்று கொஞ்சம் மிரட்டலாகவே கேட்டது ஒரு குரல்.

ஆமாம் சார்... நான் சேவியர்ஸில் படிச்சவன்...’ என்று சொன்ன நொடியில் அந்தப்பபக்கமிருந்து குரலே வரவில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு, ‘நான் ஜான்ஸ்... எங்க பசங்க எல்லாருக்கும் சொல்லிட்டேன்... எல்லாரும் உங்களுக்குப் பேசுவாங்க... தயவு செய்து தொந்தரவா நினைக்காதீங்க... உங்க ஆபீஸில் கெஞ்சி உங்க போன் நம்பரை வாங்கியிருக்கேன். சார்... ராத்திரி முழுக்க தூங்க முடியாது சார்... நீங்க செய்தது பெரிய விஷயம்...’ சிக்னல் கட்டாகும்வரை பேசிக் கொண்டே போனார்.

அதிகாலையில் மீண்டும் அதே எண்கள்... சார் ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டீங்களா... என் பிரெண்ட்ஸ் உங்ககிட்டே பேசணும்னு சொன்னாங்க... நீங்க டிராவல் பண்றதைச் சொல்லி வெயிட் பண்ணச் சொன்னேன். பேசச் சொல்லட்டுங்களா...’ என்றார்.

கல்லூரிக் காலங்களில் ஜான்ஸ் காலேஜ் என்றால் எங்களுக்கு பாகிஸ்தான் மாதிரி. அப்போது முறைத்துக் கொண்டு திரிந்த முஷரப்புகள் இப்போது எனக்காக வெயிட்டிங். சின்ன கர்வம் மனதில் எழ, மரியா கேண்ட்டீன் எல்லோருக்கும் பொதுதானே... என்ற பொது உணர்வு மண்டையில் தட்ட, உடனே நம்பர் அனுப்புங்க... நானே பேசறேன் என்றேன்.

சேச்சே... அது மரியாதையாக இருக்காது... என்ற அந்த நண்பர் போனை அணைக்க, அடுத்த நிமிடம் லைனில் வந்தார் வேறொருவர்.

‘சார்... எங்கக்கா நேத்து கோயமுத்தூரில் இருந்து பேசினாங்க... டேய், உங்க மரியா கேண்ட்டீனைப் பத்தி ஒரு கதை விகடனில் வந்திருக்குடா...னு சொன்னாங்க. மரியா கேண்ட்டீனைப் பத்தி என்ன இருக்கு எழுதனு நினைச்சேன். ஆனால், சார்... இனி மரியா கேண்ட்டீனுக்கு சாவே கிடையாது சார்... காலத்தில் அதை நிக்க வெச்சுட்டீங்க...’ என்றார்.

ஒரு கதையின் தீவிரத்தை நான் அப்போதுதான் உணர்ந்தேன்.

இன்னொரு நண்பர் போன் செய்தார்.

அந்த மரியா கேண்ட்டீன் இருந்த இடத்தை வாங்கிடணும்னு எவ்வளவோ டிரை பண்ணினோம். ஆனா, அதிலே அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததால் எங்களால் முடியலை. வாங்கியிருந்தா அதை தாஜ்மஹால் மாதிரி மாத்தியிருப்போம் என்றார்.

வியப்பாக இருந்தது. வேறு யாருடைய வாழ்க்கையிலாவது இது போல ஒரு பொது இடம் சிம்மாசனம் போட்டு இருந்திருக்குமா தெரியவில்லை.

அதற்காக ஒரு சங்கம் அமையவிருந்தது... பொது நிதி திரட்டி அதை காப்பாற்ற முயற்சி நடந்திருக்கிறது. அதை நினைவுச் சின்னமாக்கும் திட்டம் இருந்திருக்கிறது. இது எதுவுமே நடக்காமல் போன விரக்தியில் இருந்தவர்களுக்கு இந்தக் கதை வடிவம் ஆறுதலாக இருந்தது.

இருக்கும்போது அப்பா அம்மாவின் மதிப்பு தெரியாது என்பது போல, நாட்கணக்கில் அங்கேயே காத்துக் கிடந்த நாங்கள், அதை ஒரு புகைப்படமாகக் கூட எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அவன் எடுத்திருக்கிறான்... இவன்கிட்டே இருக்கு என்பது போல பேச்சுதான் அடிபடுகிறது.

இத்தனை நினைவுகளைக் கிளறிவிட்ட கதையைத் தேடி எடுத்தேன்.


மரியா கேண்ட்டீன்

‘‘ஒரு மரியா கேன்ட்டீன்...’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர்.

‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’

‘‘சேவியர்ஸ்... எய்ட்டி செவன் & நைன்ட்டி செட்!’’ என்றேன் பரவசமாக.

ஏதோ அன்டார்டிகாவில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். ஆனால், என் பதிலைக் கேட்க அவகாசமில்லாமல் இடித்து மிதித்துக்கொண்டு ஏறிய கும்பலை நோக்கி, ‘‘உள்ளே போங்க... உள்ளே போங்க...’’ என்று கத்தத் தொடங்கிவிட்டார்.



மரியா கேன்ட்டீன், திருநெல்வேலியில் அழிக்க முடியாத ஓர் அடையாளம். பாளையங்கோட்டை

பஸ் ஸ்டாண்டைத் தாண்டி ஹைகிரவுண்ட் செல்லும் வழியில், சேவியர் கல்லூரிக்கும் ஜான்ஸ் கல்லூரிக்கும் இடையே தனித்த அடையாளத்தோடு நிற்கும் கட்டடம்.

நெல்லையின் எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் அதுதான் ஸ்பாட்... டாப்பு. அன்றைய கல்லூரி நடவடிக்கைகள் அங்கேதான் தீர்மானிக்கப்படும். ஸ்டிரைக் அடிக்கப் போகிறார்கள் என்றால், நெல்லை கமிஷனருக்கு முன்னால் மரியா கேன்ட்டீன் சேட்டனுக்குத் தெரிந்துவிடும்.

அந்த ஊரில் எந்தக் கல்லூரியில் படித்தவனாக இருந்தாலும் ஒருமுறையாவது மரியா கேன்ட்டீனில் சமோசா, டீ சாப்பிட்டிருப்பான். பெண்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. அதிலும் விதிவிலக்காக வெண்ணிலா என்னோடு மரியா கேன்ட்டீன் வந்திருக்கிறாள்.

‘‘என்னய்யா இடம் இது..? ஒரு ரூம்... வெளியே மூணு பக்கமும் வராண்டா. நாலு டேபிள் சேர். ஒரு ரெஸ்டாரென்ட் மாதிரியே தெரிய-லியே!’’ என்று ஆச்சர்ய பாவம் காட்டினாள். நான் அவளை ஒரு காபி சாப்பிடப் போகலாமா என்று கேட்டதும், ஏதோ பெரிய ரெஸ்டாரென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று நினைத்துவிட்டாள்.

‘‘இதுதான் எங்க ஃபேவரிட் ஸ்பாட். அநேகமாக இங்கே வர்ற முதல் பொண்ணு நீயாதான் இருப்பே!’’ என்று சிரித்தேன்.

அது உண்மைதான் என்பது போல டீ சப்ளை செய்யும் சேட்டன், வெண்ணிலாவை உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பார்த்தான்.

வெண்ணிலா எதுவும் கேட்காமலே கேக் கொண்டு வந்து கொடுத்தான். எனக்கு வழக்கம்போல எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒரு பிளேட் சமோசா, ஒரு டீ, அரை பாக்கெட் சிகரெட்!

‘‘ஓ... ஆர்டர் பண்ணாமலே எல்லாம் வருதுன்னா, ஐயா இங்கே ரெகுலர் கஸ்டமரா?’’

‘‘எப்பவுமே எல்லாருக்கும் இங்கே ஆர்டர் பண்ணாமலே எல்லாம் கிடைக்கும். சமோசா, டீ ரெகுலர். யாருக்கு எந்த சிகரெட்டுங்கிறது எல்லாம் ஒரே வாரத்தில் பழகிடும். ஒருதடவை எங்கப்பாவும் நானும் இங்கே வந்தோம். அப்பவும் இதே-போல சிகரெட்டைக் கொண்டு வந்து வெச்சுட்டான்..!’’ என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு டீயை உறிஞ்சினேன்.

‘‘என்ன, அந்த சிகரெட் பாக்கெட்டை உங்கப்பா எடுத்துக்கிட்டாரா..? இப்படி ஏதாவது மொக்கையா ஜோக் அடிக்காதே!’’ என்று சிரித்த வெண்ணிலா, என்னையே கடிப்பது போல சமோசாவைக் கடித்தாள்.

‘‘இல்லல்ல... நான் பதறின வேகத்தைப் பார்த்துட்டு, கல்லாவில் இருந்தவர் ஓடி வந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துட்டு, ‘இதுக்கு முன்னால காபி சாப்பிட்ட கஸ்டமர் கேட்டதை பையன் இப்போ கொண்டு வந்து கொடுத்துட்டான். ஸாரி சார்!’னு சமாளிச்சுட்டார். டீ எப்படி இருக்கு?’’ என்றேன்.

‘‘எங்க ஹாஸ்டல் மெஸ்ஸைவிட நல்லா இருக்கு’’ என்றாள். வெண்ணிலா, மெடிக்கல் காலேஜ் மாணவி.

எனக்குக் கல்லூரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஹாஸ்டலுக்கு ஓடி, சோப்புப் போட்டு முகம் கழுவி, சட்டை& பேன்ட் மாற்றி, டவுன் பஸ்ஸைப் பிடித்து ஹைகிரவுண்டில் போய் இறங்குவேன். அங்குதான் மெடிக்கல் காலேஜும், வெண்ணிலா தங்கியிருந்த தனியார் ஹாஸ்டலும் இருந்தன.

வெண்ணிலாவும் கிட்டத்தட்ட தயாராக இருப்பாள். இருவரும் பேசிக்கொண்டே தினம் ஒரு திசையில் நடப்போம். அப்படி ஒரு தினத்தில்தான் அவளை மரியா கேன்ட்டீனுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு அடிக்கடி அவள் என்னுடன் மரியா கேன்ட்டீன் வரத் தொடங்கினாள்.

‘‘ஏம்ப்பா... வர லேட்டாகும்னு முன்னாடியே சொல்லியிருந்தா, நானும் லேட்டாவே வந்திருப்பேன்ல. நீ வந்திடுவேனு நம்பி கேன்ட்டீனுக்கு வந்து உட்கார்ந்துட்டேன். உங்க சேட்டன் பழக்கதோஷத்துல சமோசா, டீயோடு அரை பாக்கெட் சிகரெட்டையும் வெச்சுட்டுப் போயிட்டார். பக்கத்து டேபிள் பார்ட்டிங்க தெறிச்சுட்டாங்க தெரியுமா?’’ என்று ஒரு நாள் வெண்ணிலா சொன்னபோது சிரிப்பு பீறிட்டது.

வெண்ணிலாவை ரத்த தான முகாம் ஒன்றில்தான் சந்தித்தேன். எங்கள் கல்லூரியில் நான் சேர்மன். கூடவே என்.எஸ்.எஸ். தலைவர். அதனால், கல்லூரி ஏற்பாடு செய்த ரத்த தான முகாமை என்னை துவக்கி வைக்கச் சொல்லிவிட்டார் பிரின்சிபல்.

துவக்கிவைப்பது என்றால் ரிப்பன் வெட்டுகிற சமாசாரம் இல்லையே... ரத்தம் கொடுப்பது பற்றி எனக்குள் ஆயிரம் தயக்கங்கள் இருந்தன. மருத்துவக் கல்லூரி டீமில் வந்து இறங்கிய வெண்ணிலாதான், ரத்தம் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் வராது என்பதை விளக்கமாகச் சொன்னாள்.

சேர்மன் பதவிக்காக இல்லையென்றாலும், என்.எஸ்.எஸ். தலைவர் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிரின்சிபல் சொன்னதற்காக இல்லை என்றாலும்... வெண்ணிலாவுக்காக ரத்தம் கொடுக்கத் தயாரானேன். எத்தனை பாட்டில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று தாராளமாக அறிவித்தேன். மையமாகச் சிரித்தாள்.

என்னுடைய ரத்த தானச் சாதனைப் புகைப்படம், அடுத்த நாள் தினசரி பேப்பர்களில் வெளியானது. எங்கள் கல்லூரி சார்பாக ரத்தம் கொடுத்தவர்களுக்கான சர்டிஃபிகேட்டுகளுடன் வந்த வெண்ணிலா, ‘‘போட்டோவில் நீ ஒண்ணும் பயந்த மாதிரி தெரியலையே...’’ என்றாள். அப்படித்தான் ஆரம்பித்தது நட்பு.

‘‘இனிமேல் சகட்டுமேனிக்கு யார் கேட்டாலும் ரத்தம் கொடுக்கப் போய் நிற்காதே..!’’ என்றாள்.

‘‘அடப்பாவி... இப்படித் தொழிலுக்கே துரோகம் பண்றியே. உனக்கே இது நல்லாயிருக்கா?’’ என்றேன் பொய்க் கோபத்தோடு.

‘‘அதுக்கில்லைப்பா... உன்னோடது ரொம்ப ரேர் குரூப். தேவைப் படும்போது மட்டும் கொடுக்க வேண்டிய ரத்தம். இன்னும் சொல்லப் போனா, ராயல் பிளட் குரூப்’’ என்றாள். அதில் என் சாதனை ஏதும் இல்லை என்றா லும், பெருமையாக இருந்தது. அதன் பிறகு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஆபரேஷன் என்று ஒருமுறை அவளே அழைத்தாள்.





அன்றைய தினம் மிகவும் முக்கிய மானது. அன்றுதான் வெண்ணிலாவிடம் என் காதலைச் சொன்னேன், அதுவும் எங்கள் நட்புக்கு சாட்சியாக இருந்த அதே மரியா கேன்ட்டீனில்.

நான் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்த வெண்ணிலாவின் கண்கள் நீரில் பளபளத்தன. ‘‘நீ இதை ஒரு நாள் சொல்வேனு எனக்குத் தெரியும்’’ என்றாள். ‘‘நீ சொல்லாத வரைக்கும் இன்னிக்குத் தப்பிச்சுட் டேன்னு ஒரு நிம்மதி பிறக்கும். இப்போ அதைக் கெடுத்துட்டே...’’ என்று வெண்ணிலா பேசிக்கொண்டே போக, எனக்குள் குழப்பம்!

ஒருவனுடைய காதல் விண்ணப் பம், ஒரு பெண்ணுக்கு சந்தோஷத் தைக் கொடுக்கும்; அல்லது, கோபத்-தைக் கொடுக்கும். இப்படி ஒரு துயரத்தைக் கொடுக்குமா..? அறி-முகமே இல்லாத ஒருவன் என்றாலும் பரவாயில்லை; என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும்... ஏன்?

‘‘இல்லை, நான் சொல்லலைன்னே நினைச்சுக்கோ. நிதானமா யோசிச்சு முடிவு பண்ணு’’ என்று வெண்ணிலாவை பஸ் ஏற்றிவிட்டு, ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். ‘காதலைச் சொல்லி ஒரு பெண்ணைக் குழப்பிவிட்டோமோ..?’ என்று குழப்பம் எனக்கு.

அடுத்த நாளும் மரியா கேன்ட்டீனில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம்.

‘‘நான் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு நொந்து போயிருக்கேம்ப்பா! எனக்கு உள்ளுக்குள்ள ஒரு கனவு ஓடிட்டிருக்கு. நான் டாக்டர் ஆகியே தீரணும். என் கன-வைக் கலைச்சுடாதே! உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னா, படிப்பு தடுமாறிடுமோன்னு பயந்து பயந்து உள்ளுக்குள் வெச்சுக்கிட்டு தவிச் சுட்டு இருந்தேம்ப்பா! ஆனா, நீயே சொன்னதுக்குப் பிறகு, மறுக்க முடியலை. கடைசி வரைக்கும் என்னோடு ஆதரவா, உறுதியா நிக்கணும். நிப்ப தானே? இல்லேன்னா நான் சுக்கல் சுக்கலா நொறுங்கிப் போயிடுவேன்’’ என்றபோது, வெண்ணிலா கண்களில் வெள்ளமாக நீர்.

சட்டென்று அவளுடைய கண்களைத் துடைத்துவிட்டு, கைகளைப் பற்றிக்கொண்டேன்.

‘‘என்ன வெண்ணிலா, என்ன பேசறே..? உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா..? இந்த மரியா கேன்ட்டீன் சாட்சியா சொல்றேன்... உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!’’

‘ப்பீய்ங்...’ என்ற விசில் சத்தத்துக்கு வண்டி குலுங்கி நின்றது.

‘‘சார்... நீங்க கேட்ட ஸ்டாப்பிங் வந்துடுச்சு!’’ என்ற கண்டக்டரின் உலுப்பலில் சுதாரித்து பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.

பஸ் நகர்ந்து போக, மரியா கேன்ட்டீன் இருந்த இடத்தை என் கண்கள் துழாவின. சுத்தமாக இடித்துச் சமதளமாக்கி காம்பவுண்ட் போட்டு வைத்திருந்தார்கள்.

சாட்சி இல்லையென்றாலும், குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

Tuesday, September 15, 2009

நான் சென்னைவாசியான தினம்!

நாசர் என்றொரு நண்பர்... அவர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார்... நான் அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில் இருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்தில் கிலோமீட்டரெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பீர்கள். உண்மைதான்... அவருடைய எண் என்னிடம் இருக்கிறது. என்னுடைய எண் அவரிடம் இருக்கிறது.

ஆனால், நாங்கள் பேசிக் கொண்டது ஓராண்டுக்கு முன்... நான் விகடனை விட்டு வெளியே வந்தது அவருக்குத் தெரியாது! நியாயமாக நான் விகடனை விட்டு விலகப் போகிறேன் என்பதை ஆசிரியர் அசோகனிடம் சொல்லும் முன் எம்.டி-யிடம் சொல்லும் முன் நாசரிடம்தான் நான் சொல்லியிருக்க வேண்டும்...

இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக் வரப் போகிறது என்பதை யூகித்திருப்பீர்களே... உங்கள் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே தயாராகிவிடுங்கள்.

அது 1994-ம் ஆண்டு... ‘சென்னைக்கு வா... ஆயிரம் வேலைகள் உனக்காகக் காத்திருக்கிறது...’ என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு என்னை சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் நாசரும் இஸ்மாயிலும். நாசர் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார். அவரோடு தங்கியிருந்த இஸ்மாயில் மேலூரார், வெங்கட், வேத்து எல்லோரும் என்னை ஸ்வீகரித்துக் கொண்டனர்.

கையில் இருந்த காசைக் கொண்டு ஒரு மாதம் எந்த கஷ்டமும் இல்லாமல் காலம் கழிந்தது. அதற்குள் ஒரு வேலை தேடிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

என்ன மாதிரி வேலை தேடலாம் என்றுகூட எனக்கு ஐடியா இல்லை. நாசர்தான் சொன்னார், ‘பாபு... நீங்க விகடன் மாணவ நிருபரா இருந்தவர்தானே... மேலூர் காரன் கம்பெனியில் ஒரு பிஸினஸ் பத்திரிகை பண்றாங்க... ஜாயின் பண்ணுங்களேன்...’ என்றார்.

‘ஓகே என்று பத்திரிகையாளனானேன். அதன்பிறகுதான் விகடனுக்குப் போய் பழைய நண்பர்களைப் பார்க்கவே தோன்றியது.

’பொருளாதாரம்’ என்ற பெயரில் வெளியான அந்தப் பத்திரிகையின் பணி என் பொருளாதாரத்தைப் பெரிதாக உயர்த்தவில்லை. நேர்முகத் தேர்வில் என்ன சம்பளம் எதிர்பார்க்கறீங்கனு கேட்டால் 1500 ரூபாய் சொல்லுங்க என்று நாசர்தான் சொல்லிக் கொடுத்தார். அதற்கே அதிர்ந்து போன ஆசிரியர் 900 ரூபாய் தருவதாகச் சொன்னார். எந்த கணக்கும் பார்க்கத் தெரியாத நான் சம்மதித்து வேலையில் சேர்ந்தேன்.

ஒரேமாதத்தில் ஒரு சிக்கல் வந்தது. நடுவே விகடனுக்கு நண்பர்களைப் பார்க்கப் போனபோது, பத்திரிகை வேலைன்னா விகடனுக்கு வந்திடலாமேனு சொன்னாங்க. ஆனால் விகடனில் ஆரம்பத்தில் பங்களிப்பாளனாகத்தான் சேரமுடியும். அதாவது என் கட்டுரைகள் பிரசுரமானால் அதற்கு சன்மானம் கிடைக்கும். சம்பளம் ஏதும் கிடையாது.

என்ன செய்வது என்று குழப்பம். முதல் தேதி கிடைக்கும் 900 ரூபாயா... விகடனா?

நாசர்தான் சொன்னார்... ‘பாபு... காலை டிபன், காபி மத்த தேவைகளுக்கு அண்ணாச்சி கடையில் கணக்கு ஆரம்பிச்சுடுங்க... ராத்திரியும் ஞாயிற்றுக் கிழமையிலும் வீட்டுக்கு சாப்பாடு கொண்டு வரும் அம்மாவிடம் உங்களுக்கும் சேர்த்து சொல்லிடலாம். மதியம் மட்டும் உங்க பொறுப்பு.

இதில் அண்ணாச்சி கடைக்கு பணம் கிடைக்கும்போது செட்டில் பண்ணிக்கலாம்... சாப்பாட்டுக்கார அம்மாவுக்கும், வீட்டு வாடகைக்கும் நாங்க பார்த்துக்கறோம். அதனால், வருமானத்தைப் பற்றி யோசிக்காதீங்க... உங்க எதிர்காலத்தை மனசில் வெச்சு முடிவு பண்ணுங்க’ என்று நாசர் சொன்ன வார்த்தைகளை வைத்து விகடனில் சேர்ந்தேன்.

முதல் மாதத்திலேயே 1500 ரூபாய் சன்மானம். என் ஓட்டம் அதிகமானது. ஒருகட்டத்தில் என் சன்மானத் தொகையில் மிரண்டு போன விகடன் நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நிறுவனம் என்னை ஊழியனாக்கியது.

அப்போது நாசர் சொன்னார்.

‘பாபு... நம்ம ரூமுக்கு புதுசா ஒரு பொடியன் வந்திருக்கான்... அவன் செட்டில் ஆகற வரைக்கும் நாமதான் செலவுகளைப் பார்த்துக்கணும். அதனால், உங்க ஷேருக்கு மேல் 500 ரூபாய் கொடுங்க...’ சந்தோஷமாகக் கொடுத்தேன்.

விகடனில் நிரந்த ஊழியரின் பெயரைத்தான் நிருபர் குழு பட்டியலில் போடுவார்கள். என் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றபோது அந்த அறையே உற்சாகப் பெருக்கெடுத்து ஓடியது.

அதன்பிறகு என் உயரத்தை அவர் விகடன் மூலமே அறிந்துகொள்வார். என்ன பாபு... ஜூ.வி--க்கு போயிட்டீங்க போலிருக்கு... அடடே... சீனியர் சப் எடிட்டராகிட்டீங்களா? என்று என் வளர்ச்சியை அவர் தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

அப்படிப் பட்டவரிடம் சொல்லிவிட்டுத்தானே நான் விகடனை விட்டு வெளியேறி இருக்கவேண்டும். ஆனால், யாருக்கும் தகவல் சொல்ல அவகாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ்-ஸில் புதிய எண்ணை அனுப்பி வைத்தேன். அதன்பிறகு கிடைத்த அவகாசத்தில் மெசேஜ் கிடைத்ததா என்று தொழில் ரீதியான தொடர்பில் இருப்பவர்களுக்கெல்லாம் விசாரித்தேன்.

கடந்த ஞாயிறன்று தென்காசியில் இருந்து நண்பன் சுப்புராஜ் போன் செய்தான். ‘டேய்... நாசர் உன்னோடு பேசணுமாம்...’ என்றான்.

மொபைலில் தெரியாது என்றாலும் என் தலை தானாகக் கவிழ்ந்துகொண்டது.

‘என்ன பாபு... நீங்க விகடனில் இல்லையாமே... சுப்பு சொன்னான். நான் நேத்து ஊருக்கு வந்தேன். அக்காவுக்கு கேன்சர்... சென்னையில் என் வீட்டில் வெச்சுத்தான் பார்த்தோம்... ஒருவருஷ போராட்டத்துக்கு பலனில்லாமல் நேத்து இறந்துட்டாங்க...’ என்றார்.

மொத்தமாக அதிர்ந்து போனேன்.

‘ஒருவருஷமாவா... ஒரு வார்த்தை சொல்லலையே..?’ என்றேன்.

என்ன பண்றது பாபு... நாம சென்னைவாசிகளாகிட்டோமே!’ என்றார்.

அவர் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார்... ஆனால், நான் சென்னைவாசி ஆகிவிட்டேன்!

Sunday, September 13, 2009

ஹேப்பி பர்த் டே!

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்... கிராமத்தில் எங்கள் வீடே பரபரப்பாக இருந்தது. விடிந்தால் அப்பாவுக்கு அறுபது வயது பூர்த்தி ஆகிறது. நானும் மனைவி குழந்தையும் முதல்நாளே போய்விட்டோம். நாங்கள் போய்ச் சேர்ந்த தினத்தின் மாலையில் தங்கையும் அத்தானும் குழந்தைகளோடு வந்து சேர்ந்தார்கள். அண்ணன் முக்கியமான வேலை இருப்பதால் காலை வெள்ளனே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்.

சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டிருந்தோம். சித்தப்பா குழந்தைகள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வந்துவிட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டோம்.

கோவில் எல்லாம் வேண்டாம்... வீட்டில் விளக்கு முன்னால் அமர்ந்து எல்லோருக்கும் ஆசி வழங்கினால் போதும் என்று முடிவு செய்திருந்தோம். கோவில்களுக்குப் போய் விமரிசையாகச் செய்து கொண்டால் அத்தனை திருப்திகரமாக வாழ்க்கை தொடர்வதில்லை என்று சிலர் சொன்னதால் இந்த ஏற்பாடு!

‘ஏங்க... மாமாவும் அத்தையும் ஆசீர்வாதம் பண்ணும்போது வெறுங்கையோடு பண்ணினா நல்லாவா இருக்கும்...’ என்று என் மனைவி சொல்ல, நாங்களும் தங்கையும் அடித்து பிடித்து ஆட்டோ எடுத்துக் கொண்டு தென்காசிக்கு ஓடினோம்.

‘கொடுக்கற பொருள் காலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி இருக்கணும்...’ என்று பேசிக் கொண்டே போய், கடைசியில் பாத்திரக் கடையில் புகுந்து எல்லோருக்கும் அடுக்கு ஜாடிகளை வாங்கிக் கொண்டோம்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது... அப்பா குளித்து முடித்து புதிய ஆடைகள் அணிந்து வந்தர்... அம்மாவும் புதிய சேலை கட்டியிருந்தார். அண்ணனும் அண்ணியும் குழந்தைகளோடு வந்து சேர பேரக் குழந்தைகளால் வீடே கலகலப்பானது.

அப்பாவும் அம்மாவும் முதன்முதலாக தாத்தா ஆச்சி (அம்மாவின் அப்பா அம்மா) காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, தாத்தாவும் ஆச்சியும் அறுபது ஸ்பெஷல் மோதிரம் அணிவித்தார்கள். அடுத்து ஒவ்வொருவராக அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். ஒவ்வொருவருக்கும் பரிசுகளை எடுத்துக் கொடுக்கும்போது அப்பா அம்மா முகத்தில் அத்தனை பெருமிதம்.

இதுவரையில் எங்கள் ஊரில் அப்படி யாரும் செய்ததில்லை. ஆனால், ஆசி பெற்றவர்கள் திருப்தி முகமாக நிமிர்வதைப் பார்த்தபோது என் மனைவியை நன்றியோடு பார்த்தேன். எங்களுக்கும் விபூதி பூசி பரிசு கொடுத்தார்கள் அப்பாவும் அம்மாவும்.

அண்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்பாவுக்கு அறுபது ஸ்பெஷல் மோதிரம் அணிவித்தார். அப்பாவுக்கு பெருமிதமாக இருந்தது. அவருடைய ரிட்டயர்ட்மெண்ட் தினத்துக்கு நாங்கள் யாரும் போகமுடியாத சூழல் இருந்ததை இந்த நிகழ்ச்சி மறக்க வைத்துவிட்டது.

எல்லோருக்கும் சுவையான சூப்பரான சாப்பாடு போட்டோம். அன்று நாள் முழுக்க அம்மா ஈரங்கசிந்த கண்களோடு நடமாடிக் கொண்டிருந்தார். இரவில் ஏன் என்று கேட்டபோது, ‘பிள்ளைகள் எல்லாம் கூடி அறுபதாவது பிறந்த நாள் கொண்டாட உங்கப்பாவுக்கு கொடுத்து வெச்சிருக்கு’ என்றார்.

இது பழைய கதை...
இன்று என் அம்மாவுக்கு அறுபது வயது பூர்த்தியாகிறது. அம்மா கிராமத்தில்... நான் சென்னையில்... என் சகோதரி சேலம்- ஆத்தூரில்... என் சகோதரர் சுவிட்சர்லாந்தில்!

காலையில் போன் செய்தேன்... ஹேப்பி பர்த் டே அம்மா என்றேன்... நீ வீடு கிரஹப் பிரவேசத்துக்கு எடுத்துக் கொடுத்த சேலையைக் கட்டாம வெச்ச்ருக்கேன்... அதைத்தாண்டா இன்னிக்கு கட்டப் போறேன்... எல்லாருக்கும் இங்கேருந்தே என் ஆசீர்வாதங்கள்’ என்றார்.

அதுதான் அம்மா!