Wednesday, December 25, 2013

இலக்கை விட்டுத் தராதீர்கள்?!


ஜெயசீலன்... ஒருமுறைதான் இவரை சந்தித்தேன்... சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து வந்திருந்தார். திருச்சிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து ஆராய்ச்சி படிப்பின் மீதே ஆர்வமாக இருந்து பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து வரை சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆச்சரிய மனிதர்!

எப்போதுமே விருந்தினரை அழைப்பதில் இரண்டு வகை இருக்கும். முதலாவது வகை வரப் போகிறவரை எதிர்பார்த்து யூனிட்டே காத்திருக்கும். ஏக மரியாதையோடு வாசலில் போய் அழைத்து வந்து அரங்கில் அமர வைத்து படப்பிடிப்பை நடத்தி அனுப்புவது. பெரும்பாலும் சினிமா பிரபலங்களுக்கு இந்த வரவேற்பு எப்போதுமே கிடைக்கும்.

அடுத்தகட்ட விருந்தினர்களை சூரியவணக்கம் குழுவுக்கு மட்டுமே தெரியும். மற்ற டெக்னீஷியன்கள், ‘யார் சார் இவரு..? என்ன செய்திருக்காரு..?’ என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்தபோது, ‘சார்... டிவி ஷூட்டிங்குக்கு வர்றாரு... சட்டைகூட போடாம வந்துட்டாரு..?’ என்றார் ஒரு டெக்னீஷியன். (அப்போது நாங்கள் சிரித்துக் கொண்டோம்... பேட்டியின் முடிவில் இவர்தான் முதல் ஆளாக நம்மாழ்வாரோடு நின்று படம் எடுத்துக் கொள்வார் என்று. அது நடக்கவும் செய்தது!)

ஆனால், பேட்டி முடிந்து செல்லும்போது, எல்லோரும் வலிக்க வலிக்க கைகுலுக்கி வாசல்வரை சென்று வழியனுப்புவார்கள். ஏனென்றால் அவர்கள் செய்திருக்கும் சாதனை அப்படிப்பட்டது.

ஜெயசீலனும் அப்படித்தான். இளமையான மெலிந்த தோற்றம்... இப்படித்தான் இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் இழுத்து கட்டப்பட்ட வேட்டி என்று முதல் பார்வையில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால், பேசி முடித்தபோது பெரும் பிரமிப்பு ஏற்பட்டுப் போனது எல்லோருக்கும்!

கல்லூரி காலத்திலேயே டாப் அப் செல் கார்டுகள் விற்று பணம் ஈட்டிய அவருடைய உழைப்பையும் லண்டன் சென்றபிறகுகூட அங்கே ஒரு உணவகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படித்ததும் பஸ் கட்டணத்தை மிச்சப்படுத்த கொட்டும் பனியில் சைக்கிள் மிதித்த கதையையும் அவர் விவரித்தபோது எல்லோருக்குமே சிலிர்ப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பின் முடிவில் தொகுப்பாளர்கள் இன்னும் சிலர் அவரோடு படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தபோது, ‘அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை...’ என்றார். அப்ப கொஞ்சகாலம் காத்திருக்கலாமா என்றேன். நான் காத்திருப்பேன்... ஆனா, அப்பா நிலைமை தெரியலை... நான் கேட்க வந்தது, படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமே அதை ஒளிபரப்ப முடியுமா என்றுதான்... வேண்டுகோளாகத்தான் கேட்கிறேன் என்றார்.

திங்கட்கிழமை படப்பிடிப்பு நடத்தி அதை புதன்கிழமை ஒளிபரப்பினோம். அன்று போன் செய்தார் ஜெயசீலன். ‘ரொம்ப நன்றி சார்... நான் பத்தாங்கிளாஸ் படிச்சப்ப நானூற்று ஐம்பதுக்கு மேல மார்க் வாங்கினேன். அதை போன்ல சொன்னப்ப பாஸாகிட்டேல்ல என்றுதான் கேட்டார். அதுதான் அவருக்கு தெரிந்தது. அடுத்து நான் படித்த பட்டப்படிப்போ மேற்படிப்போ என் ஆராய்ச்சியோ அவரை தொடவே இல்லை. ஆனா, இன்னிக்கு பேட்டி பார்த்ததும் கண்ணு கலங்கிட்டாரு... எனக்குத் தெரிஞ்சு நான் எங்கப்பாவை இன்னிக்கு தொட்டுட்டேன்...’ என்றார். நிறைவாக இருந்தது.

அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மறுபடியும் ஜெயசீலனின் போன்... காலைல அப்பா தவறிட்டாரு சார்... அவரை கடைசியா சந்தோஷப்படுத்துனது உங்க பேட்டிதான்... என் அப்பாவுக்கு சந்தோஷம் தரமுடிஞ்சது... நன்றி சார்...’ என்றார். இந்த நன்றியை என்ன செய்வது..?

சூரிய வ|ணக்கம் பேட்டியின்போது ஜெயசீலன் சொன்ன வார்த்தைகள் இவைதான்... எதற்காகவும் இலக்கை விட்டுத் தராதீர்கள்... விட்டுத் தந்தால் வாழ்க்கை முழுக்க அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்று! தான் பேட்டி அளிக்க முன்வந்தபோதுகூட அவர் இலக்கு வைத்திருந்தார், தன் அப்பா இந்த பேட்டியை பார்க்க வேண்டும்... அதற்காகத்தான் பேட்டி என்று! அந்த இலக்கை எட்டிவிட்டார்!

அவர் தந்தையும் சொல்லும் சேதி இதுதான்... இலக்கை விட்டுத் தராதீர்கள்... அதை அடையும் வரை எந்த இழப்பும் உங்களுக்கு வராது என்று!

Friday, December 6, 2013

மற்றும் பலர்! - எல்லாம் முருகன் துணை!

அப்போது நான் திருச்செந்தூரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படிக்கச் சென்றிருந்தேன். ஆதித்தனார் கல்லூரியில் தனி கோர்ஸாக இதை நடத்தினார்கள், சிவந்தி அகடமி சார்பில்! எம்.. எகனாமிக்ஸ் படிச்சுட்டு என்ன செய்யப் போறேஇதையாச்சும் ஒழுங்கா படிசிவில் சர்வீஸ் இல்லைன்னாலும் ஏதோ ஒரு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி கவர்மெண்ட் வேலைக்குப் போயிறலாம் என்று அப்பா சொன்னதால் அங்கு சேர்ந்தேன். அங்கு போனது பரீட்சை எழுதி ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்றுதான். ஆனால் போனதற்கு லாபம் பிஎஸ் என்கிற நண்பன் பழனிச்சாமிதான்! அந்த வகுப்புகளில் ஒழுங்காகப் படித்த பழனிச்சாமி தேர்வெழுதி வென்று இன்று சென்னை வானிலியில் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஆனால், இன்றைய மற்றும் பலரின் பிரதான கதை பழனிச்சாமியைப் பற்றியது அல்ல. எங்களுக்கு பொதுவான ஒரு கதாபாத்திரம் பற்றித்தான்!

சிவந்தி அகடமி மாணவர்கள் நாங்கள் என்றாலும் எங்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்கவில்லை. உணவு வேண்டுமானால் அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை. அது எங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு லாட்ஜில் மாத வாடகைக்கு அறை எடுத்துக் கொண்டோம். உறைவிடம் கிடைத்துவிட்டதுஉணவு..!

எங்களுக்கு மாலைநேரம்தான் வகுப்பு. அதனால் காலையும் மதியமும் உணவு என்பது பெரும்பாடாக இருந்தது. படிப்பதற்கு எக்கச்சக்கமாக இருக்கும். அதனால் சாப்பாட்டைத் தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. திருச்செந்தூர் போன்ற நகரும் ஜனத்தொகை மிகுந்த ஒரு ஆன்மிக ஊரில் சாப்பாடு என்பது யாருக்குமே பிரதானமாக இருக்க வாய்ப்பில்லை. எங்களைப் போல வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்கள் பாடு திண்டாட்டம்தான்!

கிடைத்த ஓட்டல்களிலும் கடைகளிலும் சாப்பிட்டுப் பார்த்தோம். எதுவும் செட் ஆகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒருநாள் காலை வழக்கமாக டீ குடிக்கும் கடைக்குப் போனோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிறு கடை அது. டீ, காபி., வடை என்ற அளவில் இயங்கும் அந்தக் கடையை கணவனும் மனைவியுமாக ஒரு தம்பதி நடத்தி வந்தனர். அவர்களுடைய சுத்தமான நடவடிக்கை எங்களை அந்த டீக்கடையின் வாடிக்கையாளர்கள் ஆக்கியிருந்தது. சும்மா கேட்டுப் பார்க்கலாமே என்று பேச்சைப் போட்டோம்.

நீங்க ஏன் டிபன் போடுறதில்லை..?’ என்ற எங்கள் கேள்விக்கு, அந்த கணவர், ‘இவ்ளோ சின்ன கடைக்கெல்லாம் யாரு டிபன் சாப்பிட வருவாங்கடீயும் வடையும்தான் ஓடும்…’ என்றார். ஆனால், எங்கள் கேள்வியின் உள் அர்த்தம் அந்த பெண்மணிக்கு தெரிந்திருந்தது. நேரடியாகவே கேட்டார். ‘உங்களுக்கு தினமும் டிபன் செய்து தரணுமா..?’ என்று. ஆமாம் என்பது போல தலையசைத்தோம்.

நாளைக்கு வாங்க…’ என்று சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் காலையில் அந்த டீக்கடைக்கு எதிர் மண்டபத்தில் எங்களுக்கு இலை போட்டார். சுடச்சுட இட்லி, சட்னி பறிமாறினார். சாம்பார் செய்யலைஎன்றார். அவர் வீட்டுக்காக செய்து வைத்திருந்த பொடியைக் கொடுத்தார். ஏங்கிக் கிடந்த எங்களுக்கு வீட்டுச் சுவை..! அப்படியே மத்தியானம் சாப்பாடு போடுறீங்களா..? என்றோம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘தினமும் சாம்பார், ரசம், ரெண்டு வகை கறி, மோர்னு போட முடியாது. குழம்பு, மோர், கறினு வைக்கலாம். ஓகேயா..? என்றார். ஓகே என்று சொல்ல வைத்தது இட்லியின் சுவை!

அப்பாடாசாப்பாடு பிரச்னை தீர்ந்தது என்ற நினைப்போடு நிம்மதியான எங்களுக்கு அடுத்தநாளே இடி இறங்கியது. காலை டீ சாப்பிட சென்றபோதே, ‘அண்ணேஇன்னிக்கு டிபன் குடுக்க முடியாது போல இருக்கு..?’ என்றார் அந்த அக்கா. விஷயம் என்னவென்றால், உன் வியாபாரத்துக்கு எங்க மண்டபத்தை பயன்படுத்திக்கிறியா..? என்று மண்டப மேலாளர் விரட்டிவிட்டாராம். சில நொடிகள் யோசித்த நாங்கள், ‘பரவாயில்லைஇந்த பெஞ்ச்சில் உட்கார்ந்துக்கறோம்…’ என்றோம். கிட்டத்தட்ட சாலையில் வெட்ட வெளியில் கிடந்தது பெஞ்ச்.

சங்கடத்தோடு பறிமாறினார் அந்த அக்கா. இட்லிக்கு பதிலாக இளந்தோசைதக்காளி சட்னி. ‘ரோட்டுல உட்கார்ந்து சாப்பிட வெச்சுட்டாங்களேமதியம் உங்க லாட்ஜுக்கு வேணா கொண்டாந்துடட்டுமா..? என்றார். ஆனால், அது கொஞ்சம் தொலைவுகூடவே எத்தனை பாத்திரங்களை அள்ளிக் கொண்டு வர வேண்டும்என்ற யோசனை வேறு. பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். மதியமும் கிட்டத்தட்ட ரோட்டுக் கடை சாப்பாடுதான்!

அடுத்தநாள் சென்றபோது பெஞ்சை மறைத்து ஒரு திரை கட்டப்பட்டிருந்தது. ரோட்டுல போற வர்றவங்க பார்த்துகிட்டே போறது எங்களுக்கு சங்கடமா இருக்குஅதான்என்றார் அந்த அக்கா. ‘உங்களை சிரமப்படுத்தறோம்…’ என்றோம். ‘அண்ணேஉங்க தயவுல எங்க புள்ளைக டிபன் சாப்பிடுதுங்கநாங்க ரெண்டு பேரும் மத்தியானம் சுடுசோறு சாப்பிடுதோம்சும்மா இருங்க…’ என்றார் அந்த அக்கா. அவர் டீ வேண்டுமா என்பதைத் தாண்டி எதுவுமே பேசுவதில்லை.

நடுவே வந்த சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் வெரைட்டி சாதமும் முட்டையும் பார்சல் கட்டிக் கொடுத்தார். கிட்டத்தட்ட வீட்டு சாப்பாடு போல தினம் ஒரு வகை கிடைத்தது. ஒருநாள் நாங்கள் இட்லி சாப்பிட்டு விட்டு எழுந்ததும் அந்த வழியே சென்ற ஒரு குடும்பம், ‘இட்லி கிடைக்குமா..?’ என்றது. நிமிர்ந்து எங்களைப் பார்த்த அக்காவின் கண்களில் ஈரம்! அதன்பிறகு எங்களைத் தவிர ஏழெட்டு பேராவது காலை டிபனுக்கு வரத் தொடங்கினார்கள். அதேபோல மதியமும் கூடுதலாக நாலைந்து சாப்பாடு போகத் தொடங்கியது.

நான் படிப்பை ஏறக்கட்டிவிட்டு ஊர் திரும்பிய ஓராண்டு கழித்து அப்பா அம்மா எல்லாரும் திருச்செந்தூருக்குச் சென்றோம். என் கண்கள் அந்த டீக்கடையைத் தேடின. ஆனால், அந்த இடம் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு இருந்தது. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சின்ன மனச் சுமையோடு கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அண்ணே என்று ஒரு குரல். டீக்கடைக்கார அக்கா ஒரு ஓட்டலில் இருந்து இறங்கி ஓடி வந்தார்.

என்ன அண்ணேபார்க்காத மாரி போறிய..?’ என்றார். ‘நான் பழைய இடத்துல தேடுனேன்…’ என்று சொல்லிவிட்டு அம்மா அப்பாவை அறிமுகப்படுத்தினேன். கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார். இடம் விசாலமாக இருந்தது. நாலைந்து பெஞ்ச்கள் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் ஆட்கள் இருந்தார்கள். இட்லி, பொங்கல் என்று எல்லா இலைகளும் நிரம்பியிருந்தன.

இது லீஸ் கடைசீக்கிரம் சொந்தமாக்கிரணும். எல்லாம் உங்க கை ராசிஉங்க ரூபத்துல முருகன் வந்து வழிகாமிச்சுட்டாரு. உங்க பேரும் பழனி அண்ணன் பேரும் முருகன் பேருதானவேற என்னத்த நான் சொல்லபழனி அண்ணன் எப்படி இருக்காருபேச்சு வார்த்தை இருக்கா..?’ என்று விசாரித்தபடியே, ‘அண்ணனுக்கு டீ போடுங்கசர்க்கரை கம்மியா இருக்கட்டும்…’ என்று பழைய வசனத்தைப் பேசினார். டீ மேடையில் அக்காவின் கணவர் கருமமே கண்ணாக டீ ஆற்றிக் கொண்டிருந்தார். கண்களால் வரவேற்றதோடு சரி!

திரும்பி கல்லாவைப் பார்த்தேன்அக்கா இலைகளில் சட்னி, சாம்பார் பார்த்து ஊற்றிக் கொண்டே சொன்னார். ‘அதுக்கு மட்டும் சம்பள ஆள் வெச்சிருக்குசமையலும் சப்ளையும் நாமதான்சாப்டுட்டு போறியளா..?’ என்றார்.

மனசு நிறைந்துவிட்டது!