Saturday, February 17, 2024

கடைசி வீட்டு ஆச்சி!

 இந்தத் தலைப்பில் ஆனந்த விகடனில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அந்தக் கதைக்குள் பல ஆச்சிகள் இடம் பிடித்திருந்தார்கள். அதில் கடைசி வீட்டு ஆச்சிக்கும் பெரிய இடம் இருந்தது.

அவள் பெயர் சுப்பம்மாள்… ஆனால், ஊரில் பலருக்கும் அவளை மருதக்கார ஆச்சி என்றால்தான் தெரியும்… அவள் வாழ்க்கை கொஞ்சகாலம் மதுரையில் கழிந்ததால் அந்தக் காரணப் பெயர்.

கடைசி வீட்டு ஆச்சி என்பது கதையில் தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டைச் சேர்ந்தவள் என்ற பொருளில் இருக்கும். உண்மையில் அவள் வீடு தெருவின் நடுவேதான் இருந்தது.

எங்களுக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் மூன்று சகோதரர்கள். முதலாமவர் என் பாட்டனார்… அவருடைய வீடு மூத்தவனுக்கு மேல்பக்கம் என்ற மரபுப்படி மேற்கே அமைந்தது. இரண்டாமவருக்கு நடுவில் வீடு… கடைக்குட்டிக்கு கடைசியில் வீடு என்று தங்கள் நிலத்தில் மூவரும் பாகம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் மூன்றாமவரும் கடைசி வீட்டுக்காரருமான வள்ளித் தாத்தாவுக்கு மனைவியாக அமைந்ததால் அவள் கடைசி வீட்டு ஆச்சி!

முறையின்படி பார்த்தால் அவள் என் அப்பாவுக்கே ஆச்சி. ஆனால், அவள் என்னைத் தம்பி என்பாள். ஏனென்றால் அவள் அம்மாவின் பெயரும் குழலாமணி… என் அம்மாவுக்கும் ஒரு பெயர் குழல்வாய்மொழி! அதனால் அவளுக்கு நான் தம்பி… அதுவும் சின்னத் தம்பி!

அவள் வயதுக் கிழவிகளில் அவள் கொஞ்சம் விவரமானவள். ஊரில் எல்லோரும் கூட்டல் குறி போல படம் வரைந்து தாயம் விளையாடினால் அவள் மட்டும் ஒரு பலகையில் சதுரங்கம் போல கட்டங்கள் வரைந்து வேறு விதமான தாயம் விளையாடுவாள். கூடச் சேர்ந்து விளையாடும் கிழவிகளுக்கு விருத்தம் போடும் அளவுக்கு திருத்தமாக காய் நகர்த்தத் தெரியாது.

ஏ மதினி… எதை நவட்டலாம்… ஏ அத்த… இந்த விருத்தத்துக்கு அந்தக் காய அடிக்குமா… என்று அவளிடமே ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலும் சாந்த சொரூபியாக இருக்கும் ஆச்சி எப்போதாவது சகுனியாக ஆடுவாள், அதுவும் அவளுக்கு சீக்கிரம் ஆட்டம் முடிய வேண்டுமென்றால்..! என்னையும் சில நேரங்களில் விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்வார்கள். என் விருத்தத்துக்கு நானே காய் வைக்கிறேன் என்றால் ஆச்சிக்கு பொங்கிக் கொண்டு வரும்… அதிலும் அவள் காய் எதையாவது அடிப்பது போல வந்துவிட்டால் போதும்… கொதித்து விடுவாள். ‘ஏ ஆப்பா… எதை வைக்கணும்னு சொல்லு… குண்டியத் தூக்கிகிட்டு தூக்கிகிட்டு வராத…’ என்று செல்லமாக மிரட்டுவாள்.

என் மீது கூடுதல் பிரியத்தோடு இருப்பாள். ‘ஏ சின்னத்தம்பி… இந்த தேங்காய ஒடைச்சுக் குடு…’ என்று அழைப்பாள். அவள் வீட்டு பொங்கல் பானையில் தேங்காயை உடைத்து ஊற்றி பால் களைந்து ஊற்றவும் உதவுவேன்.. எங்க வீட்டு பழனியாச்சி கிழக்கு வாட்டமாக தீயை எரித்து பொங்கலை கீழ் முகமாக மிரட்டிப் பொங்க வைத்துவிட்டு, சூரியனப் பாத்து பொங்கியிருக்கு… நல்ல சகுனம் என்று பெருமை பேசிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பானையை நேர் குத்தாக வைத்து தீயை சரி சமமாக எரித்து எந்தப் பக்கம் பொங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மைக்காரியாகவும் இருப்பாள்.

அம்மாவுக்குத் துணையாக ஆத்துக்குக் குளிக்கப் போவாள். ஊர் வம்பு பேசாமல் குடும்பக் கதைகளை… உறவுகளை… வாழ்ந்தவர்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வருவாள். ஆற்றில் இருந்து சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவாள். ஆச்சி… ஆத்துல என்ன பெறக்குன..? என்றால் சொல்லமாட்டாள். ஏன்னா தாத்தா பேரு வள்ளி… சுள்ளினு சொன்னா அவரு பேரைச் சொல்றாப்புல ஆகிருமாம்!

ஒரே மகன் ஒரே மகள் என்று இரண்டே இரண்டு பிள்ளைகள்தான். இருவர் வீட்டிலுமே அதிகநாட்கள் தங்க மாட்டாள். வீடு வம்பாப் போயிரும் என்று ஓடி ஓடி வந்துவிடுவாள். வீட்டை அத்தனை சுத்தமாக வைத்திருப்பாள். குழம்பு வைக்க கல் சட்டி… சாப்பிடுவதற்கு அட்டகாசமான மரவை (மரத்தால் செய்யப்பட்ட தட்டு) என்று அவள் பயன்படுத்தும் பாத்திர பண்டங்களே வித்தியாசமாக இருக்கும்.

வாய்க்காலை ஒட்டிய வீடு என்பதால் பூச்சி பொட்டுகள் அடிக்கடி வரும் போகும்.. அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு போய்ட்டு வாத்தா ஆவுடையானு சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். புற்றுக் கோவில் என்று பெயர் பெற்ற சங்கரன் கோவில் சாமி கோமதி அம்மாள் என்பதால் பாம்பை ஆவுடை என்றும் சொல்வார்கள்.

அடிக்கடி பாம்புத் தொல்லை ஏற்பட, கடைசி வீட்டு ஆச்சி வீட்டுக்கும் கார வீட்டுக்கும் நடுவே இருக்கும் சுவரில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று முடிவானது. சும்மா ஒப்புக்கு ஒரு சுவர்தானே என்பதால் செங்கல் வரிசை வைத்து சுண்ணாம்பு காரையாக வைத்துக் கட்டியிருந்தார்கள். அதில் நிறைய இடைவெளி இருக்கும். அதனுள் பாம்பு பதுங்கியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது..?

சின்னதாக ஒரு மண்பானையை எடுத்து அதற்குள் வைக்கோலும் தென்னங் கூந்தல் நாரும் வைத்து அடைத்து உள்ளே சிறு கங்கை வைத்து ஒரு ஓட்டையை மறைத்து வைத்து பூசி விட்டாள். கூந்தலும் வைக்கோலும் மூட்டமாக மாற அந்த ஓட்டை வழியாக புகை சுவருக்குள் நுழையத் தொடங்கியது. நாங்கள் கம்போடு தயாரானோம். சுவரில் இருந்த ஓட்டைகளுக்குள் பதுங்கி இருந்த பாம்புகள் எல்லாம் டொப் டொப் என்று எகிறி வெளியே குதித்தன! ஒரே நாளில் சுவர் சுத்தமானது. ஆச்சியின் டெக்னாலஜி அப்படி!

கடைசி வீட்டு ஆச்சியை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள்.. அதற்குப் பல காரணங்கள் உண்டு!

அந்தக் கதையில் எழுதியதைப் போல ஆப்பம் சுட்டு விற்று வந்தாள். அதில் எழுதியது போலவே மாடு பத்திக் கொண்டு போகும் கடற்கரையாண்டிக்கு என்று தனியாக ஆப்பம் சுட்டு வைப்பாள். கணக்கு வைத்துச் சாப்பிட்டுக் காசு கொடுக்கும் சில கஸ்டமர்கள் அவளுக்கு எப்போதும் உண்டு! ஆனால், அவளைப் பொறுத்த வரையில் அது வியாபாரம் இல்லை… பசியாற்றும் உதவி! அப்படித்தான் சொல்லுவாள் அவள்.

மருத மரப் பட்டைகளைச் சேகரித்து வந்து இடித்துப் பொடியாக்கி வைத்திருப்பாள். அது சைபாலுக்கு முன்பே நான் பார்த்த சர்வரோக நிவாரணி… பல்லு வலிக்கு ஆச்சி என்றால் ஒரு சிட்டிகை பொடியை அள்ளி வலிக்கும் பல்லில் பூசுவாள். அதையே பல் விளக்கும் பொடியாகவும் தருவாள். குடி தண்ணீரில் போட்டு லேசான துவர்ப்போடு குடிக்கச் செய்வாள்.

இதை யார் கேட்டாலும் தருவாள்… இலவச மருத்துவம்… இன்னொரு உதவி!

பிடிப்பு தடவுவது, தொக்கம் எடுப்பது போன்ற பிசியோதெரபி வைத்தியராகவும் இருப்பாள். ஆற்றில் கீழே விழுந்ததில் இடது கை கொஞ்சம் பிசகி விட்டது, கடைசி வீட்டு ஆச்சிக்குதான்..! தன் வைத்தியம் தனக்குப் பலிக்காது என்பது போல அந்த இடது கை மொழிக்கட்டு (மணிக்கட்டு) மட்டும் கொஞ்சம் விலகியே செட் ஆகிவிட்டது. ஆனால், அதோடு தன் பிசியோ சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

இரண்டு பக்கமும் ஹெட்லைட் மூக்குத்தி, கலர் சேலை என்று இருந்த ஆச்சி தாத்தா செத்த பிறகு வெள்ளைச் சேலைக்கு மாறிவிட்டாள். கையில் இருக்கும் கைக்குட்டை கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஏன் ஆச்சி அப்படினு கேட்டா, ‘அதுதான் ஒன் தாத்தா’னு சொல்வா என்று அந்தக் கதையில் சொல்லியிருப்பேன்.

பொள்ளாச்சியில் இருக்கும் மகன் வீட்டுக்குச் செல்கிறேன் என்று கிளம்பிச் சென்றாள். திருவள்ளுவர் பஸ்ஸில் கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது. ஏறிக் கொண்ட பிறகு 14ம் நம்பர் சீட்டில் இருந்தவரைக் கேட்டு சீட் மாற்றிக் கொண்டு அவரைக் கடைசி வரிசைக்கு அனுப்பியிருக்கிறாள்.

ராஜபாளையம் தாண்டிய வண்டி விபத்துக்குள்ளாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை… 14ம் நம்பர் சீட்டில் இருந்த ஆச்சி மட்டும் ஆயுளை முடித்துக் கொண்டாள்.

சீட் நெஞ்சில் முட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னார்கள். கடைசி கடைசியாக அந்த 14ம் நம்பர் சீட் பயணிக்கு ஆச்சியால் முடிந்த உதவி!

Thursday, February 8, 2024

ரேடியோ ஆச்சி!

ஔவையார் என்று சொன்னாலே நமக்கு வயதான உருவம்தான் நினைவுக்கு வரும்… சும்மா ஆசைக்குப் பார்ப்பதற்குக் கூட ஔவையாரின் இளம்பருவத்து படம் என்று எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதற்கு ஔவையார் ரெபரன்ஸ் என்றால் எங்க வீட்டுக்கு மேல்பக்கம் குடியிருந்த திருவாய் ஆச்சியைச் சொல்ல எனக்கு வேறு எதுவும் இல்லை! நான் முதன்முதலில் பார்த்த நாள் முதலாக ஒரே தோற்றத்தில் அதுவும் தளர்ந்த முதிய தோற்றத்தில் இருந்தாள் திருவாய் ஆச்சி!

வீட்டின் மேல்பக்கம் தெருவை ஒட்டி ஒரு செம்பருத்திச் செடி… பேர்தான் செடி… ஆனால், மரம் போல அடர்ந்து நிற்கும். ஒருநாளில் ஐநூறு பூ பூக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு சிவப்பும் பச்சையும் சரிசமமாகத் தெரியும். அதைத் தாண்டி வந்தால் நிஜமான மரம் போல வளர்ந்து நிற்கும் நந்தியாவட்டை. அப்படியே பனியைக் கொட்டியது போல நந்தியாவட்டை பூத்துக் கிடக்கும்.

அந்த நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்களோடு சேர்த்து ஆற்றோரம் இருந்து பறித்துக் கொண்டு வரும் நொச்சி இலைகளையும் பச்சையாக வைத்து சிவப்பு வெள்ளை பச்சை என்ற வரிசையில் விளக்குச் சரம் கட்டுவாள் திருவாய் ஆச்சி!

வீடுகளுக்கு விளக்குச் சரம் கட்டிப் போடுவதும் அதற்கான கூலியாக நெல் வாங்கிக் கொள்வதுமான வாழ்க்கை அவளுடையது. பிள்ளைகளில் கடைக்குட்டியான பாலையாவின் குடும்பம் அந்த வீட்டில் இருக்க, அவர்களோடுதான் இருந்தாள். பாலையா தாத்தா (ஆச்சியின் கடைக்குட்டி மகனே எனக்கு தாத்தா என்றால் ஆச்சியின் வயதை நினைத்துப் பாருங்க!) ஜெயராம் பஸ் சர்வீஸில் டிரைவராக இருந்தார். அவர் மனைவி பகவதி ஆச்சி பீடி சுற்றுவார். அவர்களின் பிள்ளைகள்தான் திருவாய் ஆச்சிக்கு உதவி!

குறிப்பாக பாலையா தாத்தாவின் நடுள்ள மகன் துரையின் உதவி பேருதவி. அவன் (என்னைவிட இளையவன்) தான் ஆற்றுக்குப் போய் நொச்சி இலைகளைப் பறித்து வருவான், நந்தியாவட்டை மரத்தில் ஏறி குடலை நிறைய பூப்பறிப்பான். சாயங்கால நேரத்தில் சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக் கொண்டே போய் வீட்டு வீட்டுக்கு சரங்களைப் போட்டுவிட்டு வருவான். ஆச்சிக்கு உதவியாக இருந்தாலும் சுற்றியிருக்கும் நமக்கெல்லாம் உபத்திரவமாக இருக்கும் ஒரு விஷயம் அவனுடைய பாட்டுதான்! நந்தியாவட்டை மரத்தில் நிறு பூப்பறிக்கும் நேரத்தில் பாட்டு முழங்கிக் கொண்டே இருக்கும். கட்டைக் குரலில் கர்ண கொடூரமான முறையில் கவலையே படாமல் பாட்டு படித்துக் கொண்டிருப்பான்.

அவன் பள்ளிக்கூடம் செல்லும் வரையில் அவன் பாட்டைக் கேட்கும் ஆச்சி, அதன் பிறகு ரேடியோவை ஆன் பண்ணுவாள். இந்த சேனல், இன்ன நிகழ்ச்சி என்ற வரையறை எல்லாம் கிடையாது. ஏதோ ராகம் ஏதோ தாளம் என்று அதுபாட்டுக்கு பாடிக் கொண்டே இருக்கும்.

இசை, பாடல்கள், வயலும் வாழ்வும் செய்திகள் என்று எல்லாமும் முடிந்த பிறகும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ ஏதாவது குரலில் பேசிக் கொண்டிருக்கும் அந்த ரேடியோ. பகவதி ஆச்சி பீடி சுற்ற பக்கத்து வீடுகளுக்குச் சென்று விடுவார். திருவாய் ஆச்சி மட்டும்தான் வீட்டில் என்பதால் ரேடியோ துணைக்கு இருக்கும்.

ஆச்சியும் அப்படித்தான் சொல்வாள். என்ன படிக்குனு எல்லாம் தெரியாது… அது படிச்சுகிட்டு இருந்தா வீட்டுல ஒரு ஆள் தொண இருக்க மாரி இருக்கும்… எனக்கும் மலைவு தெரியாது என்பாள். அது கூடவே அவள் சொல்லும் இன்னொரு விஷயம், ஆள் இருக்க மாரி இருந்தாலும் ஊர்க்காரப் பயலுவள மாரி அது பொரணி பேசாது என்பதுதான்! அவளும் யாரைப் பற்றியும் பேசமாட்டாள், அவளிடமும் யாரும் யாரைப் பற்றியும் பேச  முடியாது.

மாலை நேரங்களில் வீட்டுக்குப் போனால் கடிச்சாந் தண்ணி குடிக்கியா பாபு என்பாள். தேயிலைத் தூளைப் போட்டு கொதிக்க வைத்து தம்ளரில் ஊற்றிக் கொடுப்பாள், கூடவே கையில் ஒரு கருப்பட்டித் துண்டும். தேநீரை ஒரு மடக்கு குடித்துக் கொண்டு கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் கடிச்சாந் தண்ணி! ஒவ்வொரு மடக்குக்கும் சுவை மாறிக் கொண்டே இருக்கும் அந்த தேநீர்!

அதேபோல, டீ தண்ணிக்குள் முறுக்கு, காரா சேவு போன்றவற்றை உடைத்துப் போட்டுச் சாப்பிட்ட பழக்கம் கொண்ட எனக்கு, முதன் முதலில் சோளப் பொரியையும் அது போலவே போட்டுத் திங்கலாம், குடிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தவள் அவள்தான்!

முதுகுப் பக்கம் சாய்ந்து கொள்ள தலையணை, காலை நீட்டிக் கொள்ள ஒரு சாக்குப் பை… ஒருபக்கம் குவிந்து கிடக்கும் நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்கள், இன்னொருபக்கம் தண்ணீர் இருக்கும் கிண்ணத்துக்குள் கிடக்கும் வாழைநார் கயிறு! இரண்டையும் இழுத்து இழுத்து சரம் தொடுத்துக் கொண்டே இருக்கும் அவள் கை!

எங்கள் வீட்டு சன்னலும் அவள் வீட்டு முற்றமும் அருகருகே இருக்கும். இங்கிருந்து ஏச்சி என்று குரல் கொடுத்தால் அங்கிருந்து என்ன பாபு என்று பதில் சொல்லுவாள். அளிப் பாய்ச்சிய திண்ணையின் ஊடாக அவள் அமர்ந்திருப்பது தெரியும்.

ஒருநாளில் ஆச்சி வீட்டுக்கு வெளியே இருக்கும் மாப்பிள்ளைத் திண்ணையில் அமர்ந்து பாலையா டிரைவர் தாத்தா எதையோ ரிப்பே பார்த்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்தால் அது ஆச்சியோடு பேச்சுத் துணையாக இருக்கும் ரேடியோ! ஒங்க தாத்தா ஒக்கிட்டுட்டான்… அவனே ஒக்கிட்டுத் தாரேம்னு சொல்லியிருக்கான்… பாப்போம் என்றாள்.

ஆச்சியின் மூத்த பிள்ளைகள் வேலைகளில் இருந்தார்கள். கொஞ்சம் வசதியாகவும் இருந்தார்கள். ஆனால், கடைக்குட்டி கொஞ்சம் கஷ்டப்படுகிறான்.. நான் இங்கிருந்தால் அவனுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி கடைசி வரையில் இங்கேயே இருந்துவிட்டாள்.

அவள் காலத்துக்குப் பிறகு அந்த செம்பருத்திச் செடி, நந்தியாவட்டை எல்லாம் எடுபட்டு விட்டது. ஆச்சியின் வீடு நடுள்ள மகன் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கி விட்டார். கொஞ்சகாலத்தில் அவரும் வேறு ஒருவருக்கு விற்றுவிட, இப்போது ஜன்னலையே மறைத்துக் கொண்டு நிற்கிறது பெரும் சுவர். அந்தச் சுவருக்கும் அப்பால் ஏதேதோ மனித குரல்கள் கேட்டாலும் அந்த ஜீவனுள்ள ரேடியோ குரல் கேட்பதே இல்லை!

அதுசரி, அந்த ரேடியோ ஆளின் பேச்சுத் துணையைத் தேடும் திருவாய் ஆச்சிதான் அங்கில்லையே!