Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Saturday, February 17, 2024

கடைசி வீட்டு ஆச்சி!

 இந்தத் தலைப்பில் ஆனந்த விகடனில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அந்தக் கதைக்குள் பல ஆச்சிகள் இடம் பிடித்திருந்தார்கள். அதில் கடைசி வீட்டு ஆச்சிக்கும் பெரிய இடம் இருந்தது.

அவள் பெயர் சுப்பம்மாள்… ஆனால், ஊரில் பலருக்கும் அவளை மருதக்கார ஆச்சி என்றால்தான் தெரியும்… அவள் வாழ்க்கை கொஞ்சகாலம் மதுரையில் கழிந்ததால் அந்தக் காரணப் பெயர்.

கடைசி வீட்டு ஆச்சி என்பது கதையில் தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டைச் சேர்ந்தவள் என்ற பொருளில் இருக்கும். உண்மையில் அவள் வீடு தெருவின் நடுவேதான் இருந்தது.

எங்களுக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் மூன்று சகோதரர்கள். முதலாமவர் என் பாட்டனார்… அவருடைய வீடு மூத்தவனுக்கு மேல்பக்கம் என்ற மரபுப்படி மேற்கே அமைந்தது. இரண்டாமவருக்கு நடுவில் வீடு… கடைக்குட்டிக்கு கடைசியில் வீடு என்று தங்கள் நிலத்தில் மூவரும் பாகம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் மூன்றாமவரும் கடைசி வீட்டுக்காரருமான வள்ளித் தாத்தாவுக்கு மனைவியாக அமைந்ததால் அவள் கடைசி வீட்டு ஆச்சி!

முறையின்படி பார்த்தால் அவள் என் அப்பாவுக்கே ஆச்சி. ஆனால், அவள் என்னைத் தம்பி என்பாள். ஏனென்றால் அவள் அம்மாவின் பெயரும் குழலாமணி… என் அம்மாவுக்கும் ஒரு பெயர் குழல்வாய்மொழி! அதனால் அவளுக்கு நான் தம்பி… அதுவும் சின்னத் தம்பி!

அவள் வயதுக் கிழவிகளில் அவள் கொஞ்சம் விவரமானவள். ஊரில் எல்லோரும் கூட்டல் குறி போல படம் வரைந்து தாயம் விளையாடினால் அவள் மட்டும் ஒரு பலகையில் சதுரங்கம் போல கட்டங்கள் வரைந்து வேறு விதமான தாயம் விளையாடுவாள். கூடச் சேர்ந்து விளையாடும் கிழவிகளுக்கு விருத்தம் போடும் அளவுக்கு திருத்தமாக காய் நகர்த்தத் தெரியாது.

ஏ மதினி… எதை நவட்டலாம்… ஏ அத்த… இந்த விருத்தத்துக்கு அந்தக் காய அடிக்குமா… என்று அவளிடமே ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலும் சாந்த சொரூபியாக இருக்கும் ஆச்சி எப்போதாவது சகுனியாக ஆடுவாள், அதுவும் அவளுக்கு சீக்கிரம் ஆட்டம் முடிய வேண்டுமென்றால்..! என்னையும் சில நேரங்களில் விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்வார்கள். என் விருத்தத்துக்கு நானே காய் வைக்கிறேன் என்றால் ஆச்சிக்கு பொங்கிக் கொண்டு வரும்… அதிலும் அவள் காய் எதையாவது அடிப்பது போல வந்துவிட்டால் போதும்… கொதித்து விடுவாள். ‘ஏ ஆப்பா… எதை வைக்கணும்னு சொல்லு… குண்டியத் தூக்கிகிட்டு தூக்கிகிட்டு வராத…’ என்று செல்லமாக மிரட்டுவாள்.

என் மீது கூடுதல் பிரியத்தோடு இருப்பாள். ‘ஏ சின்னத்தம்பி… இந்த தேங்காய ஒடைச்சுக் குடு…’ என்று அழைப்பாள். அவள் வீட்டு பொங்கல் பானையில் தேங்காயை உடைத்து ஊற்றி பால் களைந்து ஊற்றவும் உதவுவேன்.. எங்க வீட்டு பழனியாச்சி கிழக்கு வாட்டமாக தீயை எரித்து பொங்கலை கீழ் முகமாக மிரட்டிப் பொங்க வைத்துவிட்டு, சூரியனப் பாத்து பொங்கியிருக்கு… நல்ல சகுனம் என்று பெருமை பேசிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பானையை நேர் குத்தாக வைத்து தீயை சரி சமமாக எரித்து எந்தப் பக்கம் பொங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மைக்காரியாகவும் இருப்பாள்.

அம்மாவுக்குத் துணையாக ஆத்துக்குக் குளிக்கப் போவாள். ஊர் வம்பு பேசாமல் குடும்பக் கதைகளை… உறவுகளை… வாழ்ந்தவர்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வருவாள். ஆற்றில் இருந்து சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவாள். ஆச்சி… ஆத்துல என்ன பெறக்குன..? என்றால் சொல்லமாட்டாள். ஏன்னா தாத்தா பேரு வள்ளி… சுள்ளினு சொன்னா அவரு பேரைச் சொல்றாப்புல ஆகிருமாம்!

ஒரே மகன் ஒரே மகள் என்று இரண்டே இரண்டு பிள்ளைகள்தான். இருவர் வீட்டிலுமே அதிகநாட்கள் தங்க மாட்டாள். வீடு வம்பாப் போயிரும் என்று ஓடி ஓடி வந்துவிடுவாள். வீட்டை அத்தனை சுத்தமாக வைத்திருப்பாள். குழம்பு வைக்க கல் சட்டி… சாப்பிடுவதற்கு அட்டகாசமான மரவை (மரத்தால் செய்யப்பட்ட தட்டு) என்று அவள் பயன்படுத்தும் பாத்திர பண்டங்களே வித்தியாசமாக இருக்கும்.

வாய்க்காலை ஒட்டிய வீடு என்பதால் பூச்சி பொட்டுகள் அடிக்கடி வரும் போகும்.. அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு போய்ட்டு வாத்தா ஆவுடையானு சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். புற்றுக் கோவில் என்று பெயர் பெற்ற சங்கரன் கோவில் சாமி கோமதி அம்மாள் என்பதால் பாம்பை ஆவுடை என்றும் சொல்வார்கள்.

அடிக்கடி பாம்புத் தொல்லை ஏற்பட, கடைசி வீட்டு ஆச்சி வீட்டுக்கும் கார வீட்டுக்கும் நடுவே இருக்கும் சுவரில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று முடிவானது. சும்மா ஒப்புக்கு ஒரு சுவர்தானே என்பதால் செங்கல் வரிசை வைத்து சுண்ணாம்பு காரையாக வைத்துக் கட்டியிருந்தார்கள். அதில் நிறைய இடைவெளி இருக்கும். அதனுள் பாம்பு பதுங்கியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது..?

சின்னதாக ஒரு மண்பானையை எடுத்து அதற்குள் வைக்கோலும் தென்னங் கூந்தல் நாரும் வைத்து அடைத்து உள்ளே சிறு கங்கை வைத்து ஒரு ஓட்டையை மறைத்து வைத்து பூசி விட்டாள். கூந்தலும் வைக்கோலும் மூட்டமாக மாற அந்த ஓட்டை வழியாக புகை சுவருக்குள் நுழையத் தொடங்கியது. நாங்கள் கம்போடு தயாரானோம். சுவரில் இருந்த ஓட்டைகளுக்குள் பதுங்கி இருந்த பாம்புகள் எல்லாம் டொப் டொப் என்று எகிறி வெளியே குதித்தன! ஒரே நாளில் சுவர் சுத்தமானது. ஆச்சியின் டெக்னாலஜி அப்படி!

கடைசி வீட்டு ஆச்சியை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள்.. அதற்குப் பல காரணங்கள் உண்டு!

அந்தக் கதையில் எழுதியதைப் போல ஆப்பம் சுட்டு விற்று வந்தாள். அதில் எழுதியது போலவே மாடு பத்திக் கொண்டு போகும் கடற்கரையாண்டிக்கு என்று தனியாக ஆப்பம் சுட்டு வைப்பாள். கணக்கு வைத்துச் சாப்பிட்டுக் காசு கொடுக்கும் சில கஸ்டமர்கள் அவளுக்கு எப்போதும் உண்டு! ஆனால், அவளைப் பொறுத்த வரையில் அது வியாபாரம் இல்லை… பசியாற்றும் உதவி! அப்படித்தான் சொல்லுவாள் அவள்.

மருத மரப் பட்டைகளைச் சேகரித்து வந்து இடித்துப் பொடியாக்கி வைத்திருப்பாள். அது சைபாலுக்கு முன்பே நான் பார்த்த சர்வரோக நிவாரணி… பல்லு வலிக்கு ஆச்சி என்றால் ஒரு சிட்டிகை பொடியை அள்ளி வலிக்கும் பல்லில் பூசுவாள். அதையே பல் விளக்கும் பொடியாகவும் தருவாள். குடி தண்ணீரில் போட்டு லேசான துவர்ப்போடு குடிக்கச் செய்வாள்.

இதை யார் கேட்டாலும் தருவாள்… இலவச மருத்துவம்… இன்னொரு உதவி!

பிடிப்பு தடவுவது, தொக்கம் எடுப்பது போன்ற பிசியோதெரபி வைத்தியராகவும் இருப்பாள். ஆற்றில் கீழே விழுந்ததில் இடது கை கொஞ்சம் பிசகி விட்டது, கடைசி வீட்டு ஆச்சிக்குதான்..! தன் வைத்தியம் தனக்குப் பலிக்காது என்பது போல அந்த இடது கை மொழிக்கட்டு (மணிக்கட்டு) மட்டும் கொஞ்சம் விலகியே செட் ஆகிவிட்டது. ஆனால், அதோடு தன் பிசியோ சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

இரண்டு பக்கமும் ஹெட்லைட் மூக்குத்தி, கலர் சேலை என்று இருந்த ஆச்சி தாத்தா செத்த பிறகு வெள்ளைச் சேலைக்கு மாறிவிட்டாள். கையில் இருக்கும் கைக்குட்டை கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஏன் ஆச்சி அப்படினு கேட்டா, ‘அதுதான் ஒன் தாத்தா’னு சொல்வா என்று அந்தக் கதையில் சொல்லியிருப்பேன்.

பொள்ளாச்சியில் இருக்கும் மகன் வீட்டுக்குச் செல்கிறேன் என்று கிளம்பிச் சென்றாள். திருவள்ளுவர் பஸ்ஸில் கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது. ஏறிக் கொண்ட பிறகு 14ம் நம்பர் சீட்டில் இருந்தவரைக் கேட்டு சீட் மாற்றிக் கொண்டு அவரைக் கடைசி வரிசைக்கு அனுப்பியிருக்கிறாள்.

ராஜபாளையம் தாண்டிய வண்டி விபத்துக்குள்ளாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை… 14ம் நம்பர் சீட்டில் இருந்த ஆச்சி மட்டும் ஆயுளை முடித்துக் கொண்டாள்.

சீட் நெஞ்சில் முட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னார்கள். கடைசி கடைசியாக அந்த 14ம் நம்பர் சீட் பயணிக்கு ஆச்சியால் முடிந்த உதவி!

Thursday, February 8, 2024

ரேடியோ ஆச்சி!

ஔவையார் என்று சொன்னாலே நமக்கு வயதான உருவம்தான் நினைவுக்கு வரும்… சும்மா ஆசைக்குப் பார்ப்பதற்குக் கூட ஔவையாரின் இளம்பருவத்து படம் என்று எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதற்கு ஔவையார் ரெபரன்ஸ் என்றால் எங்க வீட்டுக்கு மேல்பக்கம் குடியிருந்த திருவாய் ஆச்சியைச் சொல்ல எனக்கு வேறு எதுவும் இல்லை! நான் முதன்முதலில் பார்த்த நாள் முதலாக ஒரே தோற்றத்தில் அதுவும் தளர்ந்த முதிய தோற்றத்தில் இருந்தாள் திருவாய் ஆச்சி!

வீட்டின் மேல்பக்கம் தெருவை ஒட்டி ஒரு செம்பருத்திச் செடி… பேர்தான் செடி… ஆனால், மரம் போல அடர்ந்து நிற்கும். ஒருநாளில் ஐநூறு பூ பூக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு சிவப்பும் பச்சையும் சரிசமமாகத் தெரியும். அதைத் தாண்டி வந்தால் நிஜமான மரம் போல வளர்ந்து நிற்கும் நந்தியாவட்டை. அப்படியே பனியைக் கொட்டியது போல நந்தியாவட்டை பூத்துக் கிடக்கும்.

அந்த நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்களோடு சேர்த்து ஆற்றோரம் இருந்து பறித்துக் கொண்டு வரும் நொச்சி இலைகளையும் பச்சையாக வைத்து சிவப்பு வெள்ளை பச்சை என்ற வரிசையில் விளக்குச் சரம் கட்டுவாள் திருவாய் ஆச்சி!

வீடுகளுக்கு விளக்குச் சரம் கட்டிப் போடுவதும் அதற்கான கூலியாக நெல் வாங்கிக் கொள்வதுமான வாழ்க்கை அவளுடையது. பிள்ளைகளில் கடைக்குட்டியான பாலையாவின் குடும்பம் அந்த வீட்டில் இருக்க, அவர்களோடுதான் இருந்தாள். பாலையா தாத்தா (ஆச்சியின் கடைக்குட்டி மகனே எனக்கு தாத்தா என்றால் ஆச்சியின் வயதை நினைத்துப் பாருங்க!) ஜெயராம் பஸ் சர்வீஸில் டிரைவராக இருந்தார். அவர் மனைவி பகவதி ஆச்சி பீடி சுற்றுவார். அவர்களின் பிள்ளைகள்தான் திருவாய் ஆச்சிக்கு உதவி!

குறிப்பாக பாலையா தாத்தாவின் நடுள்ள மகன் துரையின் உதவி பேருதவி. அவன் (என்னைவிட இளையவன்) தான் ஆற்றுக்குப் போய் நொச்சி இலைகளைப் பறித்து வருவான், நந்தியாவட்டை மரத்தில் ஏறி குடலை நிறைய பூப்பறிப்பான். சாயங்கால நேரத்தில் சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக் கொண்டே போய் வீட்டு வீட்டுக்கு சரங்களைப் போட்டுவிட்டு வருவான். ஆச்சிக்கு உதவியாக இருந்தாலும் சுற்றியிருக்கும் நமக்கெல்லாம் உபத்திரவமாக இருக்கும் ஒரு விஷயம் அவனுடைய பாட்டுதான்! நந்தியாவட்டை மரத்தில் நிறு பூப்பறிக்கும் நேரத்தில் பாட்டு முழங்கிக் கொண்டே இருக்கும். கட்டைக் குரலில் கர்ண கொடூரமான முறையில் கவலையே படாமல் பாட்டு படித்துக் கொண்டிருப்பான்.

அவன் பள்ளிக்கூடம் செல்லும் வரையில் அவன் பாட்டைக் கேட்கும் ஆச்சி, அதன் பிறகு ரேடியோவை ஆன் பண்ணுவாள். இந்த சேனல், இன்ன நிகழ்ச்சி என்ற வரையறை எல்லாம் கிடையாது. ஏதோ ராகம் ஏதோ தாளம் என்று அதுபாட்டுக்கு பாடிக் கொண்டே இருக்கும்.

இசை, பாடல்கள், வயலும் வாழ்வும் செய்திகள் என்று எல்லாமும் முடிந்த பிறகும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ ஏதாவது குரலில் பேசிக் கொண்டிருக்கும் அந்த ரேடியோ. பகவதி ஆச்சி பீடி சுற்ற பக்கத்து வீடுகளுக்குச் சென்று விடுவார். திருவாய் ஆச்சி மட்டும்தான் வீட்டில் என்பதால் ரேடியோ துணைக்கு இருக்கும்.

ஆச்சியும் அப்படித்தான் சொல்வாள். என்ன படிக்குனு எல்லாம் தெரியாது… அது படிச்சுகிட்டு இருந்தா வீட்டுல ஒரு ஆள் தொண இருக்க மாரி இருக்கும்… எனக்கும் மலைவு தெரியாது என்பாள். அது கூடவே அவள் சொல்லும் இன்னொரு விஷயம், ஆள் இருக்க மாரி இருந்தாலும் ஊர்க்காரப் பயலுவள மாரி அது பொரணி பேசாது என்பதுதான்! அவளும் யாரைப் பற்றியும் பேசமாட்டாள், அவளிடமும் யாரும் யாரைப் பற்றியும் பேச  முடியாது.

மாலை நேரங்களில் வீட்டுக்குப் போனால் கடிச்சாந் தண்ணி குடிக்கியா பாபு என்பாள். தேயிலைத் தூளைப் போட்டு கொதிக்க வைத்து தம்ளரில் ஊற்றிக் கொடுப்பாள், கூடவே கையில் ஒரு கருப்பட்டித் துண்டும். தேநீரை ஒரு மடக்கு குடித்துக் கொண்டு கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் கடிச்சாந் தண்ணி! ஒவ்வொரு மடக்குக்கும் சுவை மாறிக் கொண்டே இருக்கும் அந்த தேநீர்!

அதேபோல, டீ தண்ணிக்குள் முறுக்கு, காரா சேவு போன்றவற்றை உடைத்துப் போட்டுச் சாப்பிட்ட பழக்கம் கொண்ட எனக்கு, முதன் முதலில் சோளப் பொரியையும் அது போலவே போட்டுத் திங்கலாம், குடிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தவள் அவள்தான்!

முதுகுப் பக்கம் சாய்ந்து கொள்ள தலையணை, காலை நீட்டிக் கொள்ள ஒரு சாக்குப் பை… ஒருபக்கம் குவிந்து கிடக்கும் நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்கள், இன்னொருபக்கம் தண்ணீர் இருக்கும் கிண்ணத்துக்குள் கிடக்கும் வாழைநார் கயிறு! இரண்டையும் இழுத்து இழுத்து சரம் தொடுத்துக் கொண்டே இருக்கும் அவள் கை!

எங்கள் வீட்டு சன்னலும் அவள் வீட்டு முற்றமும் அருகருகே இருக்கும். இங்கிருந்து ஏச்சி என்று குரல் கொடுத்தால் அங்கிருந்து என்ன பாபு என்று பதில் சொல்லுவாள். அளிப் பாய்ச்சிய திண்ணையின் ஊடாக அவள் அமர்ந்திருப்பது தெரியும்.

ஒருநாளில் ஆச்சி வீட்டுக்கு வெளியே இருக்கும் மாப்பிள்ளைத் திண்ணையில் அமர்ந்து பாலையா டிரைவர் தாத்தா எதையோ ரிப்பே பார்த்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்தால் அது ஆச்சியோடு பேச்சுத் துணையாக இருக்கும் ரேடியோ! ஒங்க தாத்தா ஒக்கிட்டுட்டான்… அவனே ஒக்கிட்டுத் தாரேம்னு சொல்லியிருக்கான்… பாப்போம் என்றாள்.

ஆச்சியின் மூத்த பிள்ளைகள் வேலைகளில் இருந்தார்கள். கொஞ்சம் வசதியாகவும் இருந்தார்கள். ஆனால், கடைக்குட்டி கொஞ்சம் கஷ்டப்படுகிறான்.. நான் இங்கிருந்தால் அவனுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி கடைசி வரையில் இங்கேயே இருந்துவிட்டாள்.

அவள் காலத்துக்குப் பிறகு அந்த செம்பருத்திச் செடி, நந்தியாவட்டை எல்லாம் எடுபட்டு விட்டது. ஆச்சியின் வீடு நடுள்ள மகன் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கி விட்டார். கொஞ்சகாலத்தில் அவரும் வேறு ஒருவருக்கு விற்றுவிட, இப்போது ஜன்னலையே மறைத்துக் கொண்டு நிற்கிறது பெரும் சுவர். அந்தச் சுவருக்கும் அப்பால் ஏதேதோ மனித குரல்கள் கேட்டாலும் அந்த ஜீவனுள்ள ரேடியோ குரல் கேட்பதே இல்லை!

அதுசரி, அந்த ரேடியோ ஆளின் பேச்சுத் துணையைத் தேடும் திருவாய் ஆச்சிதான் அங்கில்லையே!

Sunday, January 28, 2024

’கதை சொல்லி’ பழனி ஆச்சி!

 ஒரு ஊர்ல ஒரு அண்ணன் தங்கச்சி… அந்தப் பொம்பளப் புள்ள பொறக்கயிலயே அவங்களோட அம்மாவும் அப்பாவும் செத்துப் போயிட்டாங்க… குடியிருக்க ஒரு குச்சிலு மட்டும்தான் சொந்தம்… அந்த அண்ணன் காரன் தான் தங்கச்சிய வளத்தான்… சின்னப் பய… அவனுக்கு என்ன முடியுமோ அதைக் கொண்டாந்தான்… காடு கரைனு போயி கையில கிடைக்கிற கீரைய எல்லாம் பறிச்சுகிட்டு வந்தான்… வழியில இருக்கிற குசக் குடியிலே ஒரு சட்டி யாசகம் கேட்டு வாங்கிட்டு வந்தான்… தோப்புக்காடுகள்ல பெறக்குன வெறகுகளைக் கொண்டாந்து போட்டு அடுப்பெரிச்சு அந்த கீரைய சட்டில போட்டு அவிச்சு தங்கச்சிக்கும் குடுத்து தானும் சாப்பிடுவான்… அதுதான் அவங்களுக்கு சாப்பாடு!

அடுத்த நாளு… அதுக்கு மறுநாளுனு அதுதான் சாப்பாடா இருந்துச்சு… ஒருநாள் என்ன செஞ்சான்… எப்பவும் போல கீரைய ஆஞ்சு கொண்டாந்து சட்டில வச்சு அவிச்சுட்டு, கொஞ்சம் ஆறட்டும்… அதுக்குள்ள குளிச்சுட்டு வந்துருவோம்னு குளிக்கப் போனான்.

நெதம் அண்ணந்தான நமக்கு கீர கடஞ்சு தாரான்… ஒருநாளு நாம அவனுக்கு கடஞ்சு குடுப்போம்னு கீர மத்தை எடுத்துகிட்டு போய் கீரச் சட்டியத் தூக்குனா தங்கச்சி… சூடு பொறுக்காம சட்டிய டொம்முனு தரையில வச்சுட்டா… சட்டி ஒடஞ்சிருச்சு…

குளிச்சுட்டு அண்ணன் காரன் பசியோட வந்தான். தங்கச்சி அழுதுகிட்டே நின்னா… அடுப்பங்கரையில சட்டி ஒடைஞ்சு கீர பூராம் கொட்டியிருந்ததப் பாத்தான். நிமிசத்துல கோபம் மூக்குக்கு ஏறிருச்சு. கீர மத்தை எடுத்து தங்கச்சி மேல எறிஞ்சான். அதே வேகத்துல அவளத் திரும்பிக் கூட பாக்காம வெளில போயிட்டான்… அது அவ நெத்திப் பொட்டுல கீறிட்டு. குபுகுபுனு ரெத்தம்… அழுதுகிட்டே நின்னா!

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து ஆளுக ஓடியாந்தாங்க… அம்மா இல்லாத புள்ளைய இப்படிப் போட்டா அடிப்பான் மனுசன்னு அவளக் கூட்டிகிட்டு போனாங்க… அவளும் அண்ணன் மேல இருந்த கோவத்துல அழுதுகிட்டே போயிட்டா. கோவத்தோட போன அண்ணன் ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி போல ரெண்டு கெழங்கக் கையில புடிச்சுகிட்டு வீட்டுக்கு வந்தான்.

வெளக்குப் பொருத்தாம வீடு இருட்டிக் கெடந்துது. தங்கச்சி பேரச் சொல்லி கூப்டுகிட்டே வந்தான். அவ இல்ல… எங்க போனானு தெரியலையேனு அக்கம்பக்கத்துல விசாரிச்சான்.. அங்க போனா இங்க போனானு சொன்னாங்களே தவிர யாருக்கும் சரியாச் சொல்லத் தெரியல… அப்பதான் ஊர்கார கெழவி ஒருத்தி புள்ள இல்லாத ஒரு புருசன் பொண்டாட்டி இங்க சத்துரத்துல இருந்தாங்க… அழுதுகிட்டு நின்ன புள்ளைய நாங்க வளக்கோம்னு சொல்லி கூட்டிட்டுப் போயிட்டாங்கனு சொன்னா. அண்ணனுக்கானா அழுகை அழுகையா வருது. எந்த ஊரு… என்ன லெக்குல போனாங்கனு விசாரிக்கான். யாருக்கும் தெரியல… பித்துப் புடிச்சாப்ல அலையுதாம். பொறவு அந்த ஊர்லயே இருக்கப் புடிக்காம வெளியூரு போயிருதான்.

வெளியூர்ல போயி கெடைச்ச வேலையப் பாக்காம்… அந்தத் தொழில் புடிபடுது… வேலைய விட்டுட்டு சொந்தமா தொழில் பண்ணுதாம்… நல்ல சம்பாத்தியம் கெடைக்கி… அந்த ஊருல ஒரு பெரிய மனுசனாகிருதாம். அவன்கிட்ட பத்து பேரு வேலை பாக்க அளவுக்கு வளர்ந்துருதான். மச்சு வீடெல்லாம் கட்டி வேலைக்கு ஆளு, போக வரு வண்டி வசதினு உண்டாக்கிட்டான்…

அப்ப அவன்கிட்ட வேலை பாக்க பெரியவரு ஒருத்தரு, இப்படியே இருந்தா எப்டி மொதலாளி… ஒரு கல்யாணம் முடிக்கலாம்லானு கேக்காரு… அவனும் சரி பொண்ணப் பாருங்கனு சொல்லிருதான்… அவரும் ஆளுகளுமா கூடமாட சேந்து ஒரு பொண்ணப் பாக்காங்க. இப்பம் இவன் தகுதிக்கு நா நீனு போட்டி இருந்தாலும் நல்ல குணமுள்ளவளா பாத்து கல்யாணம் முடிக்காங்க.

கல்யாணம் முடிஞ்ச மறுநாளு அவன் பொண்டாட்டி தலைக்கு குளிச்சுட்டு தலைய காயப்போட்டுகிட்டு மச்சுல நிக்கா… இவன் கீழ உக்காந்து யாருகூடவோ பேசிகிட்டிருந்தான்… மேல நிழலு விழுததப் பாத்து நிமுந்து பாக்கான்.. பொண்டாட்டி தலைகாயப் போட்டுகிட்டு நிக்கா… தலைக்கு பின்னால சூரிய வெளிச்சம் விழ அப்படியே மினுங்குதா… அப்டியே உத்துப் பாக்கான்… மஞ்சள் பூசுன மூஞ்சியிலே கண்ணுக்கு மேலே நெத்தியிலே ஒரு தழும்பு இருந்துச்சு.

அவனுக்கு மொழுக்குனு இருந்துச்சு… மச்சுக்கு ஓடுனான்… அந்த தழும்பக் காட்டி, இது எப்டி பட்டுச்சுனு கேட்டான்.. சின்ன வயசுல கீர கடையயில எங்கண்ணன் கீர மத்தைக் கொண்டு  மண்டையில அடிச்சுட்டான்னா… அவனுக்கு கிறுகிறுனு வந்திருச்சு…’’

’’ஏச்சி.. புள்ளையள்ட சொல்லுத கதையா இது.. வேல மெனக்கெட்டு இத ஒரு கதனு சொல்லிகிட்டிருக்கியே… என்று அம்மா ஆச்சியைக் கண்டித்துவிட்டு எங்களை முதுகில் ஒரு போடு போட்டு துரத்தி விடுவாங்க.

ஆச்சி பேரப் புள்ளைகளுக்கு கதை சொல்றது ஒண்ணும் புதுசு இல்ல… பெரும்பாலும் எல்லாருமே ஒரு ஊர்ல ஒரு ராஜானுதான் கதை சொல்லியிருப்பாங்க… ஆனா, எங்க பழனி ஆச்சி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, அனாதையாக தங்கையுடன் வாழ்கிற, தங்கை காணாமல் போன பிறகு வாழப் பிடிக்காமல் ஊரை விட்டு ஓடிப் போகிற, ஏதோ ஒரு தொழிலில் தன்னை நுழைத்துக் கொண்டு உழைத்து முன்னேறுகிற இளைஞனின் கதையைச் சொல்லுவாள்!

அப்பாவைப் பெற்ற ஆச்சியான பழனியாச்சி என் அம்மாவுக்கும் ஆச்சிதான். எங்கம்மாவுக்கு என் அப்பா தாய்மாமா முறை. அண்ணனும் தங்கையும் தங்களின் சுயம் அறியாமல் வேறு வேறு பின்னணியில் வளர்ந்து அவர்களே திருமணம் செய்து கொண்ட கதை எனக்கு அந்த நாட்களில் புரியவில்லை. அம்மா ஏன் இந்தக் கதைக்கு இவ்வளவு கோவப்படுறாங்க என்றும் தெரியவில்லை.

ஆச்சிக்கும் புரட்சிகரமான கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அவளுக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்வாள்.

ஆனால் கல்யாணம் செய்து கொண்ட அந்த ஜோடி அண்ணன் தங்கை என்பது தெரிந்த பிறகு அவர்கள் என்னவானார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆச்சியிடம் எப்போது மிச்சக் கதையச் சொல்லு என்றாலும், போ அங்குட்டு… ஒங்கம்மா கிழியாக் கிழிப்பா..? என்பாள். இன்றுவரையில் அந்தக் கதையின் முடிவு என்னவென்று தெரியவில்லை.

ஆனால், ஆச்சி எங்கிருந்து இந்தக் கதைகளை எடுக்கிறாள் என்பது புரியாத விஷயம். வயல் வேலைகளுக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வாளே, அப்போதா… சில பல ஆச்சிகளோடு அமர்ந்து புளி திருத்துவாளே, அப்போதா… வயலில் விளைந்த காய்கறிகளைப் பெட்டியில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக கூவி விற்று வருவாளே, அப்போதா… எப்போது சேகரிப்பாள் என்றே தெரியாது!

ஆச்சியின் பூர்வீகம் தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடி என்ற சிறிய ஊருக்கு அருகில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமான கம்பிளி! தன் ஊரின் கதைகளை ஆச்சி சொல்லிக் கேட்டதே இல்லை..! சொந்தம் விட்டுப் போயிறக் கூடாதுனு ஒங்க ஆச்சிய ஒங்க தாத்தாவுக்கு கெட்டி வெச்சாங்க… இல்லன்னா  அவரு தரத்துக்கு பொண்டாட்டியா இவ… என்று ஆச்சியின் நாத்தனார்காரிகள் உதட்டைச் சுழிப்பார்கள். ஆனால், அப்பாவுக்குப் பிறகு பிறந்த ஒரு டசன் பிள்ளைகளின் வரவு சொல்லும், ஆச்சியும் தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் என்று! (அப்பாவைத் தவிர யாருமே தங்கவில்லை என்பது தனி சோகம்)

பழனியாச்சி வெள்ளந்தியானவள்… அவளை ஆங்கிலம் பேச வைத்து ரசிப்போம் நாங்கள். ஆச்சி… போஸ்ட் ஆபீஸ் சொல்லு..? என்றால் போட்டாபீஸ் என்பாள். ஸ்டாம்ப் சொல்லு என்றால் சாம்ப் தாளு என்பாள். ஆனால், போஸ்ட் ஆபீஸ் பற்றியும் அங்கு விற்பனை ஆகும் ஸ்டாம்ப் பற்றியும் அவள்தான் விவரம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வாள்.

தாத்தா ரயில்வேயில் வேலை பார்த்தவர். சர்வீஸில் இருக்கும்போதே இறந்துவிட, ஆச்சிக்கு பென்ஷன் கிடைக்கத் தொடங்கியது. கூடவே பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் ஃபார்மஸி படித்த என் தந்தை அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். சம்பிரதாயமான மனுவாக, என் தந்தையின் வேலையை எனக்குத் தந்தால் என் குடும்பம் பிழைக்கும் என்று கருணை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரிக்க, ரயில்வேயில் இருந்து அதிகாரி ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா… ஐயா இறந்து போனதுல உங்க குடும்பம் கஷ்டப்படுதா என்று கேட்க, அவுக இல்லேங்கறதத் தவிர வேற குறை இல்லை… கடவுள் புண்ணியத்துல வயல், வீடு, தோப்பு துறவுனு நல்லாத்தான் இருக்கோம்.. என்று சொல்லிவிட, அந்த அதிகாரி, இந்த வேலை வழங்கப்படாவிட்டாலும் இன்னாருடைய குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வராது என்று அறிக்கை அனுப்பிவிட்டார். ஆச்சியின் ஒரே பதில், நா உள்ளதத் தானே சொன்னேன் என்பதுதான்!

ஆச்சி ஒருதடவை என் பேரன் பாஸ் ஆகிட்டா அவன் கையால ஒனக்கு பூக்கூடை கொண்டாறேன் என்று வேண்டிக் கொண்டாள். எஞ்சினியரிங் முடித்து இன்று பெரிய வேலையில் இருக்கும் என் சகோதரன் பரீட்சையில் பாஸ் ஆக வேண்டும் என்று என் ஆச்சி வேண்டிக்கொண்டது அவருடைய ஒண்ணாங்கிளாஸ் பரீட்சையின்போது! என் அம்மா ஆச்சியை சத்தம் போட்டு அடுத்தடுத்து அவள் மொட்டை போடுவது அதுஇதுவென்று முன்னேறிச் சென்று விடாமல் தடுத்த விட்டார்கள்.

ஒரே மகன் தான்… ஆனாலும் அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி பிணக்கு வரும்… வீட்டை விட்டு வெளியேறி எதிரே இருக்கும் குச்சிலில் தனி சமையல் செய்வாள். முறைப்பாகத் திரிவாள். திடீரென்று பாத்திர பண்டங்களை அள்ளிக் கொண்டு வந்து அடுக்களையில் போட்டுவிட்டு ஒன்றாகச் சாப்பிடுவாள். அதனாலேயே அம்மா அவள் செல்லும்போதும் ஏனென்று கேட்பதில்லை… மீண்டும் வரும்போதும் ஏதும் சொல்வதில்லை.

தோள்பட்டை தொடங்கி மணிக்கட்டு வரையிலும் இரண்டு கைகளிலும் பச்சை குத்தியிருந்த ஆச்சி அந்தக் கை முழுக்க சுருக்கங்கள் படர்ந்த நேரத்தில் பாத்திர பண்டங்களோடு பேங்க் பாஸ்புக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். என்னைக் கொண்டு முடியல… இந்தா… நான் இருக்கையிலேயே பணத்த எடுத்துரு… செத்துட்டம்னா அதை எடுக்க செரமப்படுவீங்க… என்றாள். சொன்னபடியே அவளால் எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

நிறை வாழ்வு வாழ்ந்தவள்தானே… பேரன்கள் எல்லாருமாகச் சேர்ந்து மேளதாளம் வைத்து வழியனுப்பலாமே என்றார்கள். ஒரு மரணத்தை எப்படிக் கொண்டாட முடியும்… அதோடு, தன் தங்கை என்பதை அறியாமலே திருமணம் செய்து கொண்டவன் அந்த உண்மை தெரிந்த பிறகு என்ன செய்தான் என்பதைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு சென்றவளின் விடைபெறுதலில் சிறு வருத்தம் இருக்கத்தானே செய்யும்!

Sunday, January 21, 2024

டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி!

 எங்க ஊர்ல (கொட்டாகுளம், தென்காசி மாவட்டம்) டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சினு ஒருத்தி இருந்தா! (ஒருமை எல்லாமே உரிமைதான்!) அந்த வீட்டுத் தாத்தா ரயில்வேயிலே டிரைவரா இருந்ததால அந்த ஆச்சி டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி! அவளுக்கு வேறு சில பெயர்களும் இருந்தன. சுளுக்கு தடவுத ஆச்சி… பார்வை பாக்குற ஆச்சி என்பது போல… கூடவே பெத்தவங்க வெச்ச பேரான பொன்னம்மா ஆச்சி என்ற பெயரும் இருந்தது!

பொதுவாக இரட்டைப் பிள்ளைகளைப் பெறும் அம்மாக்களுக்கு சுளுக்குத் தடவும் திறன் வந்துவிடுவதாக ஊர்பக்கம் ஒரு நம்பிக்கை! அந்த ஆச்சிக்கும் இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். ராமலட்சுமி சித்தியும் லட்சுமண மாமாவும்! அந்த இருவரும் கடைக்குட்டிகள்… அவர்களுக்கு முன்னதாக சண்முக ஆச்சியில் (ஆமா… அம்மாவும் ஆச்சி… மகளும் ஆச்சி…) தொடங்கி அரி மாமா வரையில் மூணு நாலு பொம்பளைப் புள்ளைகள்… ரெண்டு மூணு ஆம்பளைப் புள்ளைகள்!

சிறு வயதில் மரங்களில் ஏறுவது, குளங்களில் தாவுவது, வயக்காடுகளில் ஓடுவது போன்றவற்றுக்கு நடுவே பள்ளிக்கூடமும் போய் வந்து கொண்டிருந்தேன். அதனால் அடிக்கடி எனக்கு சுளுக்குப் பிடித்துக் கொள்ளும். அம்மா பொன்னம்மா ஆச்சி வீட்டுக்குத்தான் கூட்டிப் போவார்.

இந்த இடத்தில் டிரைவர் தாத்தா பற்றிய சிறு குறிப்பு… நான் முதன்முதலில் சட்டைக் கைப் பகுதியில் தங்க பித்தான் வைத்து போட்டிருந்ததைப் பார்த்த முதல் மனிதன் அவர்தான். எனக்கு விவரம் தெரிந்த காலத்திலேயே அவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனாலும் டிரைவர் என்பதுதான் அவர் அடையாளம். முன் பற்கள் கொட்டிப் போய் நாக்கை வைத்து அந்தப் பள்ளத்தை மறைத்துக் கொண்டேதான் பேசுவார்.

கூடவே இடைவிடாமல் கையில் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். அதனாலும் இருமலுக்கு நடுவே பேசுவதால் அவருடைய பேச்சில் தெளிவு இருக்காது. ஆனால், கிண்டல் செய்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்.

‘என்னடே… மாசத்துக்கு ஒரு தரவ எம் பொண்டாட்டி ஒன்னத் தடவிக் குடுக்கணுமோ… கூட்டுப் போய் கூட வச்சுக்கிட வேண்டியதுதான… என்பார். அந்த வயதில் எனக்குப் புரியாது. ஒங்களுக்கு வேணும்னா நீங்களும் தடவச் சொல்லுங்க… என்பேன். சுற்றி இருக்கும் எல்லாரும் சிரிப்பார்கள். அதுவும் எதற்கு என்று எனக்குப் புரியாது. என்ன சொல்லுதாவோ ஒங்க தாத்தா என்றபடி அடுக்களையில் இருந்து ஈரக் கையைச் சேலையில் துடைத்தபடி வருவாள் ஆச்சி.

அவளுக்கு முன்னே வரும் அவளுடைய சிரிப்பு. சின்ன சத்தம் எல்லாம் இல்லை… ஹா… ஹா… என்றாள் என்றால் பத்து தெரு தாண்டி இருக்கும் பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஏ.டி. ஹார்ன் அடித்தது போல இருக்கும். சத்தம் தெருவுக்கு கேட்கும் வகையில் இடியாகச் சிரிப்பது அவள் இயல்பு.

தாத்தா தங்கப் பித்தான் என்றால் ஆச்சி சின்ன ஜரிகைக் கரை வைத்த பட்டுப் போன்ற சேலைதான் கட்டுவாள். பெரும்பாலும் அடர் நிறத்தில் இருக்கும் சேலையாகத்தான் இருக்கும். எப்போது போனாலும் துலக்கமாக இருப்பாள்.

சிறு பிள்ளைகளுக்கு குடல் ஏறிவிட்டது என்றால் ஆச்சியிடம்தான் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். என்னன்னே தெரியல… வயத்தால நிக்காம போவுது… என்று வரும் தாயை முதலில் பிள்ளைக்கும் தாய்க்கும் விபூதி பூசி விட்டு சமாதானப்படுத்துவார். ‘ஒண்ணுஞ் செய்யாது… முதல்ல புள்ளையத் தூக்கி நிக்க வை… என்பாள். பிள்ளையின் முன்னால் குத்துக்கால் வைத்து அமர்ந்து கொண்டு தன் முன்னங்கால்களைக் கொண்டு நிற்க வைக்கப்பட்ட பிள்ளையின் கால்களை அழுத்தி மிதித்துக் கொள்வாள்.

அடி வயிற்றில் இடமும் வலுமாக தட்டிப் பார்ப்பாள். ஏதோ ஒரு பக்கத்தில் பொத் பொத்தென்று சத்தம் வரும். அந்த இடத்தைக் குறித்துக் கொள்வாள். எண்ணையைத் தொட்டு மெதுவாக மேலே இருந்து பெருவிரலால் அழுத்தி கீழ் நோக்கி இழுப்பாள். பிள்ளை மூச்சுத் திணறும். முறுக்கிக் கொள்ள முயற்சிக்கும். ஆனால், காலை நகர்த்தவே முடியாமல் ஆச்சியில் முன்னங்கால் அழுத்தியிருக்கும்.

‘குன்னுதாம் பாரு… எங்கனயோ தலைகுப்புற விழுந்திருக்கான்… அதான், குடலு ஏறியிருக்கு…’ என்பாள். அந்தப் பிள்ளையைப் பெத்தவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வரும். ஆமா ஆச்சி… நேத்து சாய்ங்காலம் நா டிவி பாத்துகிட்டு இருந்தேன்… இந்தப் பய பின்னாடிகூடி சேருல ஏறுனான்… அப்டியே கொட சாஞ்சுட்டான்… தல தரையில அடிக்கதுக்குள்ள தூக்கிட்டேன்… அப்பம் புடிச்சு பாலுகூட குடிக்கல… அதான் கொடல் ஏத்தம் போலுக்கு! என்றபடி பிள்ளையைப் பிடித்துக் கொண்டு நிற்பாள்.

நல்லா கம்முகூட்டுக்குள்ள கையக் குடுத்து அத்தாசமா தூக்கிப் புடி… வில்லா வளையுதாம் பாரு… என்றபடி பொத் பொத்தென்று சத்தம் வரும் பகுதியில் இடது உள்ளங்கையை தொடுவது போல வைத்துக் கொண்டு அந்தப் புறங்கையில் வலது கையால் லேசாகக் குத்தியபடி மேலே இருந்து கீழே இறக்குவாள்.

முக்கிக் கொண்டும் முனங்கிக் கொண்டும் இருந்த பிள்ளை மெதுவாகச் சிரிக்கும். ஒரு துண்டு அச்சுவெல்லத்தை எடுத்து கையில் கொடுத்து, தூக்கிட்டுப் போ… நல்லா அழவிட்டு பாலக் குடு… வயத்தால போறது புடிச்சிரும்… என்று இன்னொரு முறை விபூதியைப் பூசி அனுப்பி விடுவாள். ஒரு பைசா ஃபீஸ் கிடையாது! அவர்களிடம் எல்லாம் எதுவும் சொல்லாத டிரைவர் தாத்தா என்னிடம் மட்டும் எசலுவார்.

ஏடே… ஒங்கப்பன்கிட்ட ரூவா வாங்கியாந்திருக்கியா… சும்மா சும்மா எம் பொண்டாட்டிட்ட வந்து சட்டையக் கழட்டிட்டு நிக்கியே… என்னடே நெனைச்சுகிட்டிருக்க…’ என்பார். எனக்கு அவர் விளையாட்டாகக் கேட்கிறாரா… சீரியஸாகக் கேட்கிறாரா என்று ரொம்ப நாளுக்குத் தெரியாமல் இருந்தது.

மார் முழுக்கச் சளி படர்ந்து இருமலுக்குக் கூட தெம்பில்லாமல் தவித்து மிகவும் சிரமப்பட்டார் தாத்தா. அந்த தங்க பித்தான் சட்டைக்கு மேலே கம்பளிச் சட்டை போட்டு காதை மறைத்து கம்பளித் துண்டு கட்டியிருந்தாலும் கூட அவரால் குளிரைச் சமாளிக்க முடியவில்லை.

உடல் ஒருபக்கம் படுத்தி எடுக்க மனதை வருத்தும் விதமாக மருமகன்கள் இருவரின் அடுத்தடுத்த மரணம் தாத்தாவை இன்னும் பலவீனமாக்கியது. சம்பிரதாயம் என்ற பெயரில் மகள்கள் அணிந்திருந்த வெள்ளைச் சேலை இருவரையும் உலுக்கி விட்டது. படுக்கையே வீடானது தாத்தாவுக்கு. அவருடைய உடல் உபாதை எல்லாரையும் வருத்தியது. ஒருநாள் எல்லோர் வருத்தமும் தீர அவர் விடைபெற்றுக் கொண்டார். தாத்தாவின் காலத்துக்குப் பிறகு ஆச்சியின் கோலம் வெள்ளையாகி விட்டது.

தொடர்ந்த வாழ்வில் மருமகப் பிள்ளைகளின் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்த போதே மரணம் குறித்த அவள் சிந்தனை விரிந்திருக்க வேண்டும். தாத்தாவின் மரணம் அந்தச் சிந்தனையை இன்னும் ஆழமாக்கியது. மூத்த மருமகனில் தொடங்கிய வரிசை எதிர்பாராத தருணங்களில் அடுத்தடுத்த மருமகன்களின் உயிரில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆச்சியும் சிந்தனையின் ஆழங்களுக்குச் சென்று கொண்டே இருந்தாள். துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் சின்னதாகக் கண்கள் கசியும்… அவ்வளவுதான் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டாள் ஆச்சி.

பிள்ளைகளின் வளர்ச்சி… பேரக் குழந்தைகளின் கல்யாணம் என்று பலதும் பார்த்து ஓய்ந்து வாழ்க்கையின் இறுதிக்கு வந்துவிட்டாள் ஆச்சி. இந்த காலகட்டத்தில் அவள் சிந்தனை சலனமில்லாத ஆழத்துக்குள் சென்றுவிட்டது. பேச்சு குறைந்து எல்லாவற்றையுமே வேறு உலகத்தில் இருந்து பார்க்கும் பார்வையுடனே அணுகத் தொடங்கினாள்.

ஆச்சிக்கு உடலும் நலிந்து விட்டது. ஒருநாள் அழைத்து, நாளைக்கு விடியக் காலைல எல்லாப் படத்துக்கும் பூப் போட்ருங்க… வெளக்கு எல்லாம் தேய்ச்சு வைச்சிருங்க… சக்கரப் பொங்கலு வெச்சிருங்க… என்றெல்லாம் சொல்லிவிட்டு, கட்டில் வேண்டாம்… படுக்கைய தரையில கிழமேலா விரிச்சுப் போடுங்க என்று சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாள். எல்லோரும் விசும்பி அழ, யாரும் அழப்படாது… நா ஒண்ணும் கையிலயும் இடுப்புலயுமா நண்டு சிண்டுகள விட்டுட்டுப் போவல… எல்லாம் அனுபவிச்சுட்டுதான் போறேன்… சுத்தியிருந்து எல்லாரும் ஓம் நமச்சிவாய சொல்லுங்க… போற வழிக்கு கேட்டுகிட்டே போறேன்… என்றவள், தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.

சொன்னது போலவே ஊரே கூடி எல்லோரும் ஓம் நமச்சிவாய பாட, சிரித்த முகத்தோடு இந்த உலகை விட்டு விடைபெற்றுச் சென்றாள், டிரைவர் வீட்டு ஆச்சி என்று அழைக்கப்பட்ட, சுளுக்கு தடவுத ஆச்சி என்று அழைக்கப்பட்ட, தொக்கம் எடுக்க ஆச்சி என்று அழைக்கப்பட்ட, பொன்னம்மா ஆச்சி!

Wednesday, August 25, 2021

வீடுபேறு! 16/16


D-6/4… என்னுடைய முதல் வீடு… ஆமாம்… அப்பாவின் வீடு, மாமாவின் வீடு, தாத்தாவின் வீடு என்ற அடையாளங்களுடனே வாழ்ந்த நான் சென்னைக்கு வந்த பிறகு பல வீடுகளில் தங்கியிருந்தாலும் அத்தனையுமே அறைகள்தான். யார் கேட்டாலும் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கியிருக்கேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு வீடு என்ற அடையாளத்தைத் தந்தது கோடம்பாக்கம் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒற்றைப் படுக்கையறையைக் குறிக்கும் D வரிசையில் ஆறாவது பிளாக்கில் இருந்த நாலாம் எண் வீடுதான்!

ஒரு தளத்தில் நான்கு வீடுகள் இருக்கும் வகையிலான அமைப்பு கொண்டு அடுக்குமாடி கட்டடம். நான்கு வீட்டு வாசல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கும். ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டால் அது அடுத்த வீட்டுக்குமான கோலமாக காட்சியளிக்கும். அந்த அளவுக்கு நெருக்கமான வாசல்களைக் கொண்ட அமைப்பு அது.

திருமணம் முடிந்த பிறகு மனைவி சீதாவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குத்தான் வந்தேன். நான்கு மாடிகளைக் கொண்ட அந்த ஆறாம் எண் அபார்ட்மெண்டில் தரைத் தளத்திலேயே இருந்தது நாலாம் எண் வீடு! அலுவலக நண்பர் வேல்ஸ்-க்கு சொந்தமான வீடு.

வீட்டில் பெண் பார்க்கலாமா என்று கேட்டநாளில்தான் வேல்ஸ் வீட்டில் குடியிருந்தவர் காலி செய்து கொண்டு போனார். (இரண்டும் தனித்தனி சம்பவங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை) கல்யாணமானால் வீடு வேண்டுமே என்ற முன்னேற்பாட்டுடன் அதை மடக்கிப் பிடித்துவிட்டேன்.

வீடு நண்பர் வேல்ஸ்- உடையது என்றாலும் நான் வாடகையை எல்.ஐ.சியில்தான் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தில்தான் வீட்டுக் கடன் வாங்கியிருந்தார் அவர். நான் அந்த வீட்டைக் காலி செய்யும் வரையில் வெளியில் விலை வாசியும் வாடகை நிலவரமும் ஏறியிருந்தாலும் கடைசி வரையில் கடனுக்கான இ.எம்.ஐ என்னவோ அதைத்தான் வாடகையாகக் கட்டி வந்தேன்.

நான் அந்த மாத வாடகையை இ.எம்.ஐ-யாகக் கட்டினேனா என்பதைப் பற்றிக்கூட கேட்க மாட்டார். சில மாதங்களில் தவற விட்டு சேர்த்து அடுத்த மாதத்தில் கட்டியிருக்கிறேன். அவருடைய கணக்குக்காக ரசீதுகளை மட்டும் கொடுத்துவிடுவேன்.

ஒருகட்டத்தில் நானே இ.எம்.ஐ கட்டி அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளப் போவது போன்ற தோற்ற மயக்கத்தில் இருந்தேன். அந்த அளவுக்கு சொந்த வீட்டின் உணர்வைத் தந்த வீடு அது!

மேலே சொன்னது போல ஒற்றைப் படுக்கையறைதான் வீடு… நுழைந்தவுடன் ஒரு ஹால்… அதில் உள்ள ஒரு வாசலில் நுழைந்தால் அடுக்களை… இன்னொரு வாசலில் நுழைந்தால் படுக்கையறை..! கழிவறையும் குளியலறையும் தனித்தனியாக ஹாலில் இருந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும். இந்த வசதிதான் இந்த வீட்டின் சிறப்பு.

விருந்தினர்கள் வந்திருந்தாலும் கூட ஹாலில் படுத்திருப்பவர்கள் இரவு நேர இயற்கை உபாதைகளுக்காக படுக்கையறைக் கதவைத் தட்ட வேண்டிய தேவை இல்லை. பல நாட்களை விருந்தினர்களோடு கழித்த எங்களுக்கு இது பெரும் வசதியாக இருந்தது.

இரட்டைப் படுக்கை அறைகளைக் கொண்ட சி வகையில் பல பிளாக்குகள், ஒற்றைப் படுக்கையறை கொண்ட டி வகையில் பல பிளாக்குகள், ஒற்றை அறை வீடான ஈ வகையில் பல பிளாக்குகள் என்று ஒரு கிராமம் அளவுக்கு குடும்பங்களால் நிறைந்திருந்த குடியிருப்பு அது!

பாஸ்கர் சக்தி, யுகபாரதி, ராஜூ முருகன் என்று பல நண்பர்கள் புடைசூழ குடியிருந்த குடியிருப்பு என்பதால் அந்நியமாகவே இல்லை. பழகிய இந்த நண்பர்களுக்கு நிகராக புதிதாகக் கிடைத்த ஆஷா அம்மா, சுபா அம்மா போன்ற சகோதரிகளும் அந்த நினைவுகளை இனிமையாக்கினர்.  அந்த வகையில் அந்த வீடு எப்போதுமே இல்லம்தான்!

தீபனின் படிப்புக்காக (எல்.கேஜிதான்) கோடம்பாக்கத்தில் இருந்து இடம்பெயர்ந்து வளசரவாக்கம் வந்து சேர்ந்து குடியிருந்த வாடகை வீடுகள் தந்த அனுபவம் வேறு வகை! சொந்த வீடு வாங்கும் முடிவை நோக்கித் தள்ளும் அளவுக்கு அன்பானவர்களாக இருந்தார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

அப்படித்தான் கிடைத்தது ஜேட் அபார்ட்மெண்ட்ஸ் என்ற குடியிருப்பில் உள்ள வீடு! ஆதார் கார்டில் இடம் பிடித்து அசைக்க முடியாத அடையாளமாகி இருக்கும் அந்த வீடுதான் பத்தாண்டுகளுக்கும் மேலாக என் விலாசம். இரட்டைப் படுக்கையறை, இரண்டிலும் தனித்தனியே பாத்ரூம்கள் என்று வசதிக்குக் குறைவில்லை.

இந்தப்பக்கம் ஆறு, அந்தப்பக்கம் ஆறு என்று இரண்டு பிளாக்குகளில் 12 வீடுகள்… ஆனால், 12 வீடுகள் என்பதைவிட 12 க்தவுகள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மூடிய கதவுகள்தான் கண்ணில் படும். நகரத்தில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் கதவுகள் அவை!

மூடிய கதவுகளுக்குள் அன்பும் அரவணைப்புமாக இருந்தாலும் கூடி வாழும் இயல்பினனான எனக்கு மூடிய கதவுகள் மூச்சு முட்ட வைக்கின்றன.

சிறிய சன்னல் திறப்பு போல 12ல் ஒரு வீடு மட்டுமே உறவு போல போய் வரும் அளவுக்கு உரிமை கொடுத்திருக்கிறது. ஒரு வெப் சீரிஸே எடுக்கும் அளவுக்கு அழகழகான கதைகள் கொண்ட சகோதரிகள் அம்மாவோடு வாழும் வீடு..! அந்த வீட்டில் இப்போதைய புதிய வரவு நோயல் (இன்னும் ஒரு வயதைத் தொடாத குட்டிப் பயல்) வீட்டை இன்னும் அழகாக்கி இருக்கிறான்.

இதுவரையில் சொன்ன எத்தனையோ வீடுகளில் என் வேர்களைப் பரப்பியிருப்பதால் இந்த வீட்டில் என்னால் நிலை கொண்டிருக்க முடிகிறது.

ஏனென்றால் வீடு என்பது வெறுமனே வீடு மட்டுமல்ல!

அன்பும் நன்றியும்..!

Sunday, August 15, 2021

வீடுபேறு! 15/16

காணி நிலம் வேண்டும் என்ற பாரதிக்கு நட்பு வட்டாரம் ரொம்பக் குறைவாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஏக்கர் கணக்கில் நிலம் வேண்டும் என்று கேட்டிருப்பார் சௌபா அண்ணன் தோட்டம் போல!

மதுரை திண்டுக்கல் சாலையில் கொட ரோட்டுக்குப் பக்கத்தில் உள்ளே உள்ளே பல கிலோமீட்டர் பயணித்துச் சென்றால் சௌபா அண்ணனின் தோட்டத்தை அடையலாம், இல்லை, அது அண்ணனின் வீடு!

வீடு என்றால் முற்றம், திண்ணை, முன்னறை, பின் அறை, அடுக்களை என்று எல்லாமும் இருக்க வேண்டும் அல்லவா… இதையும் நீங்கள் அப்படி நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அங்கு இருப்பது ஒற்றை அறையும் ஒரு சமையலறையும்தான்! மற்ற எல்லாமே சுற்றியுள்ள தோட்டத்தின் பார்வையில்தான்..!

பொதுவாக அரவத்தின் அசைவு கேட்டால்தான் கோழிகளெல்லாம் நடுங்கும் என்று சொல்வார்கள், ஆனால், சௌபா அண்ணன் தோட்டத்தில் வளரும் கோழிகள் எல்லாம் அவருடைய நண்பர்களின் குரல் கேட்டால்தான் நடுங்கும். யார் வந்தாலும் நிச்சயமாக ஒன்றிரண்டு கோழிகளுக்கு சொர்க்கமோ நரகமோ நிச்சயம்!

போய் இறங்கும்போதே எல்லைச் சாமி போல இரு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்பார். ஒருகையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்.

‘வாடா தம்பி… வாடா தம்பி…’ என்பார். அவரிடம் எப்போதும் இரண்டு கேள்விகள் இருக்கும். என்ன படிச்சுகிட்டிருக்கே..? இது முதல் கேள்வி..! என்ன எழுதிகிட்டிருக்கே..? இது இரண்டாவது கேள்வி. இந்த இரண்டுக்கும் அவருக்கு திருப்தியான பதில் கிடைக்காவிட்டால் ஆளே கொஞ்சம் முகம் வாடிப் போய்விடுவார்.

இங்கே வந்திருடா எழுதறதுக்கு… சாப்பாடு கீப்பாடு எல்லாம் பார்த்துக்கிடலாம்…  பேப்பர் பேனாவெல்லாம் வேணும்னாலும் வாங்கிக்கிடலாம் என்பார். அண்ணே… லேப்டாப்புல எழுத ஆரம்பிச்சு கொள்ள நாள் ஆகிருச்சுண்ணே… இப்ப போய்… என்றால் சிரிப்பார். டேய்… அண்ணனை பழசுன்றியா… என்பார்.

எங்களுடைய முன்னத்தி ஏர் அவர்… மாணவப்பத்திரிகையாளர் என்ற திட்டத்தின் முதல் செட் மாணவர் அவர். சௌந்தர பாண்டியனாகத் தொடங்கி சௌபா ஆனவர். எழுத்துல பொரட்டிறணும்டா… இல்லன்னா, எழுதி என்னத்துக்கு..? என்பார்.

என்னுடைய திருமணத்துக்கு அவரையும் அழைத்திருந்தேன். அவரோ அலுவலக நண்பர்களை எல்லாம் தோட்டத்துக்கு வரவழைத்துவிட்டார். எல்லோரும் இங்கே இருந்து குற்றாலத்துக்கு பாபு கல்யாணத்துக்குப் போயிறலாம் என்று சொல்லி! சொன்னபடியே எல்லாரும் வந்துவிட்டார்கள் அண்ணனைத் தவிர! உற்சாகக் கொண்டாட்டத்தில் சர்க்கரை அளவு கூடி நகர முடியாமல் போய்விட்டது. விட்றா தம்பி… அண்ணன் தோட்டத்துல இருந்தாலும் அன்னிக்கு அங்கேதான் இருந்தேன்… என்று சமாதானம் சொன்னார்.

அவருடைய தோட்டத்தையும் அந்த வீட்டையும் தமயந்தி அக்கா அழகாக தன்னுடைய தடயம் படத்தில் பதிவு செய்திருப்பார். எல்லோருடைய மனதிலும் இருக்கும் அந்த வீடு, அடையாளமாக அவர் படத்திலும் இருக்கிறது.

இரண்டுமுறை அந்த வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

முதன்முறை ராஜூமுருகனுடன்… ஒரு இலக்கில்லாத பயணத்தின் ஒரு மாலைப் பொழுதில் அவரைத் தேடிப் போனோம். சில பல கோழிகள் குலை நடுங்கின. ஆனால், போகும்போதே, அண்ணன்கிட்டே சிக்கிடக் கூடாது… நம் பயணத் திட்டத்தில் பெரிய ஓட்டை விழுந்துவிடும்… அண்ணன் நம்மளை அமுக்கிப் போட்டுருவார் என்று பேசிக் கொண்டேதான் போனோம்.

அதேபோல அவரும் முயன்றார். ஆனால், வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கு… இந்த வழியாகப் போறப்ப உங்ககிட்டே பாஸ் போடாம போறது மரியாதையா இருக்காதேனுதான் வந்தோம் என்று சொல்லி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டோம். எங்கள் பயணத்தின் நோக்கத்தைக் கேட்டுக் கொண்டவர் நாலைந்து நபர்களின் பெயர்களைச் சொல்லி, அவங்களைப் பாருங்க… உங்க முழுக் கதைக்குமான புள்ளிகளை அவங்க வரைஞ்சு கொடுப்பாங்க என்றார். அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

அதன் பிறகு ஒருமுறை கரு.பழனியப்பனோடு போயிருந்தேன். அப்போது இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். தேவைப்பட்டால் பம்ப்ஷெட்டில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் குளிப்போம், இல்லையென்றால் பாத்ரூமில் குளிப்போம் என்று சகலமும் கொண்டாட்டமாகவே இருந்தது.

அப்போதுதான் கலங்கிய கண்களோடு நடமாடிக் கொண்டிருந்த சௌபா அண்ணன் சொன்னார். பாபு… இந்த வீட்டுக்கு நம்ம எம்டி வந்திருக்கார் தெரியுமா..? ஒருநாள் நான் வர்றேன்னு சொன்னார். இங்கே வசதியெல்லாம் இருக்காதுனு சொன்னேன். உன்கூட இருக்கறதைவிட பெரிய வசதி என்ன இருந்துடப் போவுது… நான் வர்றேன்னு கிளம்பி வந்துட்டார். அம்மாவும் கூட வந்திருந்தாங்க!

நான், எம்டி எல்லாரும் சீட்டு விளையாடினோம். சின்னப் பிள்ளை மாதிரி இங்கேயும் அங்கேயுமா நடமாடினார். சந்தோஷமா இருக்கேன்… ரொம்ப நிறைவா இருக்கேன்னு மனசாரச் சொல்லிகிட்டே இருந்தார். மனசே இல்லாமல்தான் கிளம்பிப் போனார்னு சௌபா அண்ணன் சொல்லும்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!

உட்கார்ந்து பேச, எழுத, சாப்பிட என்று தனியாக ஒரு ஷெட் அமைத்திருப்பார். அங்கேயேதான் அமர்ந்து கொண்டிருப்பார். அந்த ஷெட்டுக்குள் யார் யாரெல்லாம் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று பட்டியல் வாசித்துக் கொண்டே இருப்பார். பாரதி ராஜாவில் தொடங்கும் பட்டியல்… பலப்பல மனிதர்கள் பெயரால் நீண்டுகொண்டே செல்லும். பெரிய ஆள் சின்ன ஆள் எல்லாம் கிடையாது, எல்லோரும் சௌபா அண்ணனின் நண்பர்கள். அவ்வளவே! வேறு யாரிடமாவது பட்டியலைச் சொல்லும்போது நிச்சயம் என் பெயரையும் சொல்வார்.

பாபு… பிள்ளைகளையும் வீட்டம்மாவையும் கூட்டிட்டு வா… நாலுநாள் இருந்துட்டு போ என்பார். எத்தனையோ பேரோட சினிமா இந்த வீட்டுல உருவாகி இருக்கு… நீயும் உன் கதையை இங்கே வந்து எழுது என்பார். நிச்சயம் வர்றேன்ணே என்பேன்.

அந்த வீட்டின் அடையாளமாக சிரிக்கும் புத்தர் நின்று கொண்டிருப்பார்.

இப்படி சுகமான நினைவுகளோடு இதை முடித்துவிடலாம்தான். ஆனால், எப்போதுமே நாங்கள் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மூத்தவர் சௌபா அண்ணன் தானே… இந்தக் கட்டுரையை அப்படி இனிமையாக முடிக்க அவர் விடவில்லை…

எல்லா நண்பர்களுக்கும் இளைப்பாறுதல் தந்த அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

இரு கையை விரித்து நின்று வாரி அணைத்து வரவேற்ற அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

சிரிக்கும் புத்தர் பார்த்தபடியே நின்ற அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

சௌபா அண்ணனின் மகன் சடலத்தையும் தோண்டி எடுத்தார்கள்…

அதற்கு முந்தைய கணம் வரையில் வீடாக இருந்தது அது!

ஏமாத்திட்டீங்க சௌபா அண்ணே!

Friday, August 6, 2021

வீடுபேறு! 14/16

 ஆச்சி வீடு என்பது அன்னையின் வீடுதான்… எந்தப் பிள்ளையிடம் உங்க ஆச்சி வீடு எது என்று கேட்டாலும் அம்மாவைப் பெற்ற ஆச்சியைத்தான் சொல்லுமே தவிர, அப்பாவைப் பெற்ற ஆச்சியைச் சொல்லும் பிள்ளைகள் மிக மிகக் குறைவு. நானும் அப்படித்தான்… அதற்கு அம்மா ஆச்சியின் பிரியம் ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் அப்பா ஆச்சி எங்களுடனேயே இருந்தாள் என்பதுதான்!

அம்மா வளர்ந்ததெல்லாம் மதுரையில்… திருமணம் ஆகும்வரை அங்குதான் இருந்தார். அதனால் எங்களுக்கு தொடக்க காலத்தில் ஆச்சி வீடு என்றால் அது மேலப் பொன்னகரத்தில் இருந்த ஆச்சிவீடுதான். நான் பார்த்த முதல் அடுக்குமாடிக் குடியிருப்பு!

அது எப்படி கீழ் வீடு ஒருவருக்கும் மேல் வீடு இன்னொருவருக்கும் சொந்தமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியம் வெகுநாட்களாக எனக்கு இருந்தது.

ஒற்றை அறை, ஒரு சமையலறை, அதிலேயே வாசல் வைத்து ஒரு பாத்ரூம், பின்னால் ஒரு பால்கனி, அதை ஒட்டி ஒரு கக்கூஸ்! இவ்வளவுதான் மொத்த வீடும். ஆனால், தாத்தா அந்த ஒற்றை அறையை காட்போர்டு தட்டி வைத்து மறைத்து ஒரு சிறிய வராண்டா போன்ற பகுதியாகவும் ஒரு படுக்கையறையாகவும் மாற்றியிருந்தாங்க. அடுக்களையும் பெரியதாகவே இருக்கும். அதனால் அந்த வீட்டில் நெருக்கடி என்பதே தெரியாது.

இந்த அறைகளை விட மனதுக்குள் இடம் பிடித்து உட்கார்ந்திருப்பது முழுப் பரீட்சை லீவில் நாங்கள் செல்லும்போது ஆச்சி சமைத்துத் தரும் முப்பது நாள் முப்பது சமையல்தான். காலையிலும் மதியமும் அத்தனை வெரைட்டியில் சமைத்துப் போடுவாங்க. ஆச்சி என்றால் முட்டைக் குழம்பு வாசனைதான் முதலில் வரும்!

அதன்பிறகு ஆச்சி வீடு என்றால் அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்குக் குடிபெயர்ந்த பிறகு குடியிருந்த கிட்டங்கி வீடுதான்! சொந்தமாக இருந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் காலி செய்ய மறுத்து கோர்ட்டுக்குப் போக, வழக்காடி வெற்றி பெற்று வீட்டை மீட்டார்கள் தாத்தா. அதுவரையில் குடியிருந்த வீடுதான் கிட்டங்கி வீடு!

விவசாயிகள் தானியங்களைக் கொட்டி வைத்துப் பாதுகாக்கும் கிட்டங்கியை ஒட்டியிருந்த வீடு என்பதால் அதற்கு கிட்டங்கி வீடு என்று பெயர்.

ஒருபக்கம் கிட்டங்கி சுவர் மதில் போல நீண்டிருக்க அதையொட்டிய காலி இடத்தைத் தாண்டி வரிசையாக நிற்கும் வீடுகளே கிட்டங்கி வீடு. கிட்டத்தட்ட பத்து வீடுகள் இருந்தன. அத்தனை வீடுகளும் ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டவை. எல்லாச் சுவர்களுமே பொதுச் சுவராக ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்க, வீட்டைப் போலவே மனிதர்களும் ஒட்டி உறவாடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

அப்பாவின் நண்பரான ஷாப் கடை பாய் வீட்டில்தான் தாத்தா ஆச்சி குடியிருந்தார்கள். முதல் வீடு பாய் வீடு, அடுத்த வீடு தாத்தா குடியிருந்த வீடு, அதையடுத்து செல்வநாயகம் பெரியப்பா வீடு. அப்பாவோடு பணியாற்றிய அவர் அதன்காரணமாகவே எனக்கு பெரியப்பா.

ஆனால் மருந்தாளுனர் படிப்பின்போதே சொல்லிக் கொடுப்பார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் நடை உடை பாவனை தொடங்கி தோளில் போடும் துண்டு வரையில் அப்பாவும் பெரியப்பாவும் ஒன்று போல இருப்பார்கள்.

அங்குதான் முதன்முதலில் மணி ப்ளாண்ட் பார்த்தேன். அந்த வீட்டு பெரியம்மாவின் அப்பா பாட்டில்களில் மணி ப்ளாண்ட் வளர்த்தார். கூடவே பூனைகளும் வளர்த்தார்.

செல்வநாயகம் பெரியப்பாவின் பிள்ளைகளான ஜேம்ஸ் அண்ணன், சேவியர், ஜெஸ்ஸி என்கிற ஜெயசீலன் மூவரும் இருந்ததால் தாத்தா வீட்டுக்குப் போனால் விளையாட்டுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும்.

கிட்டங்கி வீடும் கிட்டத்தட்ட மூன்று பத்தி வீடுதான். சைடு ரூம் இருக்கும் என்பதால் சிறு வசதி கூடுதலாகத் தெரியும். சைடு ரூம் அளவையும் சேர்த்து அடுக்களை நீளமாக இருக்கும். பின்னால் இருக்கும் புறவாசல் அந்த வீட்டுக்கு தனி அழகைக் கொடுக்கும்.

கிட்டங்கி வீடு என்றவுடன் என் நினைவில் வருவது அந்த மொத்த வீடுகளுக்கும் பொதுவாக இருந்த அடிகுழாய்தான். செலவுக்குத் தண்ணீரை அங்குதான் அடித்து எடுக்க வேண்டும். சின்னப் பசங்களாக இருக்கும் என்னாலோ அண்ணனாலோ பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்க முடியாது. அதனால் சிறிய குடம் ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தக் குடத்தைக் கொண்டுபோய் குழாயடியில் வைத்து அடிகுழாயை அடித்தால் நான்கே அடியில் குடம் நிரம்பி விடும். அதனால் நானும் அண்ணனும் அந்த குடத்துக்கு நாலடியார் என்றே பெயர் வைத்திருந்தோம்.

அந்த வீட்டில் இருக்கும்போதுதான் பெரிய மனிதன் போல தனியே கடைக்குப் போவேன். பலமுறை என்னைத் தேடிக் கொண்டு யாராவது வரவேண்டியிருக்கும். ஏனென்றால், வித்தியாசமாக எதையாவது பார்த்தால் வேடிக்கை பார்த்தபடி நின்றுவிடுவேன்.

அப்படித்தான் ஒருமுறை மதிய விருந்து முடிந்து வெற்றிலை பாக்கு வாங்கிவரச் சொன்னார்கள். கிட்டங்கியை ஒட்டி கோர்ட், தாலுகா ஆபீஸ் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இருக்கும் என்பதால் அது பிஸியான பஜாராக இருக்கும். அதில் ஒரு கடைக்குப் போய் ஒரு ரூபாயைக் கொடுத்து வெற்றிலை பாக்கு கொடுங்க என்றேன். அப்போது என்னை இடித்துக் கொண்டு வந்து நின்ற நபர் ஒருவர் இடுப்பில் இருந்து கத்தியை உருவி கடைக்காரரை நோக்கி வீச, கண்ணிமைக்கும் நொடியில் கடைக்காரர் அதை லாவகமாகத் தடுத்து அதே கத்தியால் வந்தவரைக் குத்தினார். நிதானமாக என்னிடம் வாங்கிய காசைக் கொடுத்து, பக்கத்து கடையிலே வாங்கிக்கோ தம்பி என்று சொல்லிவிட்டு கடையை அடைத்துவிட்டு அப்போது வந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டார். பதற்றத்தில் உறைந்து போய் நின்றிருந்த என்னை மாமா வந்து கூட்டிக் கொண்டு போனார்.

இன்னொருமுறை இரவு உணவு முடித்துவிட்டு வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். பெட்டிக்கடை வரைக்கும் போய்விட்டேன். அப்போதுதான் பக்கத்து கடையில் டிஸ்ப்ளேயில் வைத்திருந்த டிவியில் ஏதோ ஜாக்கிசான் படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கிய என்னை கடை அடைக்கும் நேரம் வரையில் காணவில்லையே என்று தேடி வந்த அண்ணன் அழைத்துக் கொண்டு போனார்.

மூன்றாவது முறை சந்தை பக்கத்தில் நடந்து கொண்டிருந்த பாம்பு கீரி சண்டைக்காக காத்துக் கொண்டிருந்தேன். அங்கே வீட்டில் நான் வாங்கி வரப் போகும் காய்கறிக்காக சமைக்காமல் காத்துக் கொண்டிருந்தார்கள். கீரி பாம்பை விடவில்லை என்றாலும் பரவாயில்லை, கிளம்பி விடலாம் என்று பார்த்தால் நகர்ந்தால் ரத்தம் கக்கிச் செத்துருவே என்று மிரட்டிக் கொண்டிருந்தான் பாம்பாட்டி. என்ன செய்வது என்று காலைச் சேர்த்து நின்று கொண்டிருந்த என்னைத் தலையில் தட்டி கூட்டிக் கொண்டு போனார் தாத்தா!

கிட்டங்கி வீட்டில் காற்றைப் போல மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. என்ஜினியரிங் படித்திருந்த மாமா சுயமாக ஒரு டேப் ரெக்கார்டரை அசெம்பிள் செய்து பாட வைப்பார். அந்த டேப் ரெக்கார்டரில் இருந்து நீளமாக வயர் இழுத்து அடுக்களையிலோ திண்ணையிலோ ஸ்பீக்கரை வைத்து பாட்டுப் போடுவார். திடீரென்று கொஞ்சநேரத்துக்கு பாட்டு கேட்காது. ஆச்சியும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவர்கள் பேசியது ஒலிபரப்பாகும். ஸ்பீக்கரை மைக்காக மாற்றி பேசியதைப் பதிவு செய்திருப்பார்.

ஒருவர் பாட, இன்னொருவர் குடத்தில் தாளம் போட, இன்னொருவர் வேறொரு வாத்தியம் வாசிக்க என்று மாமாக்கள் எல்லோரும் சேர்ந்து கச்சேரியே நடத்துவார்கள். அதில் பல பாடல்கள் ஒலிப்பதிவும் ஆகும். அந்த ஒலிநாடாக்கள் எங்கிருக்கின்றனவோ… ஆனால், பாடல்கள் என் மனதில் இன்னமும் ஒலிக்கின்றன.

சொந்த வீட்டு சுகம் வராது என்று அங்கிருக்கும்போது பேச்சு எழும். ஆனால், என்னைப் பொறுத்த அளவில் கிட்டங்கி வீடு இல்லையென்றால் இத்தகைய அனுபவங்கள் கிட்டியிருக்காது அல்லவா!

Monday, August 2, 2021

வீடுபேறு! 13/16

 நீ என்ன பண்றே… வண்டியை எடுத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு… அங்கே இருந்து ஒரே வண்டியில நாம அசைன்மெண்ட்டுக்கு போயிறலாம்… அப்டியே ஆபீஸ் போயிட்டாக் கூட சாயங்காலம் வீட்டுல வந்து வண்டியை எடுத்துக்கோ..!’ முதல்நாள் அசைன்மெண்டுக்காகப் பேசும்போதே சொல்லிவிடுவார் பொன்ஸி அண்ணன். (பொன்.சந்திரமோகன் என்பது அவர் பெயர். அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவரே கூட திரும்பிப் பார்க்க மாட்டார்) விகடனின் சீனியர் போட்டோகிராபர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் மட்டுமல்ல… தற்காலிக நிருபராக இருந்த என்னோடு அசைன்மெண்ட் வரும் ஒரே ஆள் அவர்தான் என்பதாலும் பதில் சொல்லாமல் கேட்டுக் கொள்வேன்.

நான் தங்கியிருந்த அறையில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு கேகே நகரில் இருக்கும் பொன்ஸி அண்ணன் வீட்டுக்குப் போகும் நேரத்துக்கு நான் அசைன்மெண்ட் ஸ்பாட்டுக்கே போய்விடலாம். அவரும் அதே நேரத்துக்குப் புறப்பட்டால் அங்கு வந்துவிடலாம். ஆனால், செய்யமாட்டார். தன் வீட்டுக்குதான் வரவைப்பார்.

முதன்முறையாக அழைத்தபோது இல்லண்ணே… நேரே ஸ்பாட்டுக்கு வந்துடறேன்… என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கொஞ்சம் எரிச்சலோடுதான் அவர் வீட்டுக்குப் போனேன்.

கேகே நகர் பொன்னம்பலம் காலனியில் இருந்தது அவர் வீடு. ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட் அது. ஹால், கிச்சன், ஒரு படுக்கையறை என்று சிம்பிளாக இருக்கும் வீடு. நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த வீட்டில்தான் கஸ்தூரி ராஜா, செல்வராகவன், தனுஷ் எல்லாம் ஆரம்ப காலத்தில் குடியிருந்தனர் என்பதை பின்னாளில் அறிந்தேன்.

படியேறி மாடியில் இருக்கும் பொன்ஸி அண்ணன் வீட்டுக்குச் செல்வதற்குள் இடைச்செருகல் செய்தி… சென்னையில் பேச்சிலராக வாழ்ந்த காலத்தில் பெரும்பாலும் ப்ரெஞ்ச் எனப்படும் பிரேக்ஃபாஸ்டுக்கும் லஞ்சுக்கும் இடைப்பட்ட சாப்பாடுதான் வாய்க்கும். அதாவது, பனிரெண்டு மணியளவில் நேராகப் போய் மீல்ஸ் சாப்பிட்டு விடுவோம். காலையில் ரொம்பப் பசியாக இருந்தால் ஒரு டீ எக்ஸ்ட்ராவாக ஓடும். அப்படித்தான் இருக்கும் நிருபர் வாழ்க்கை!

காலிங் பெல்லில் கைவைக்கும்போதே உள்ளே இருந்து அண்ணன் குரல் வந்துவிடும். ‘வாங்கண்ணே… கதவு திறந்துதான் இருக்கு…’

பொன்ஸி அண்ணனின் தம்பி பொன்.காசிராஜனுக்கும் எனக்கும் சம வயது… ஆனால், பொன்ஸி அண்ணன் என்னை அண்ணே என்றுதான் கூப்பிடுவார். விகடனுக்கே அவர் அண்ணன்… ஆனால் விகடனில் எல்லோரும் அவருக்கு அண்ணந்தான்!

உள்ளே போனால் இரண்டு தட்டுகளில் சோறு பரிமாறப்பட்டு குழம்பு ஊற்றி தயாராக வைத்திருப்பார். ‘அண்ணி ஸ்கூலுக்கு போயிருச்சு… நானும் ரெடியாகிட்டேன்… தட்டுல எடுத்து வெச்சேன்… நீங்க வந்துட்டீங்க… ஆறிடுச்சுன்னா கடகடனு சாப்டுறலாம்… நீங்க ஆரம்பிங்க… நான் சட்டையை மாத்திட்டு வந்துடறேன் என்றபடி அறைக்குள் சென்று விடுவார்.

நாம மதியம் சாப்டே பழகிட்டோமே என்று மனசு நினைத்தாலும் வயிறு சோற்றைப் பார்த்ததும் பசிக்கும். குழம்பு வாசனை வேறு ஆளை இழுக்கும். அசைன்மெண்டே அதுதான் என்பது போல எடுத்துப் போட்டு சாப்பிட ஆரம்பிப்பேன். ஆற வைத்த சோத்தையும் நம் தட்டில் கொட்டுவார். அண்ணே… அண்ணே என்பதற்குள் அதன் தலையில் குழம்பை ஊற்றுவார். சாப்பிடுங்க… நான்லாம் சாப்டாச்சு… என்று கேமரா பையைச் சரிபார்க்கத் தொடங்குவார்.

பொன்ஸி அண்ணன் வீடு என்று நினைத்தாலே அறைகளை முந்திக் கொண்டு நினைவுக்கு வருவது சுடுசோறும் சுவையான குழம்பும்தான். அண்ணி பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் குழம்புதான் பிரதானமாக இருக்கும். லீவு நாளில் போனால் கோழி, ஆடு என்று வெளுத்துக் கட்டலாம்.

அதாவது லீவு நாளில் போவது என்பது சாப்பாட்டுக்காகத்தான். கொஞ்சநாளில் பொன் காசி ராஜனும் விகடனுக்கு வந்துவிட்டான். அதன்பிறகு பெரும்பான்மையாக நாங்கள் இருவரும்தான் அசைன்மெண்ட் செல்வோம். அண்ணனுக்கு பதில் தம்பி என்பது மாறியிருக்குமே தவிர, அந்த சாப்பாடு மேட்டரில் மாற்றமே இருக்காது. அந்த விஷயத்தில் பொன்ஸி அண்ணன் எட்டடி என்றால் காசிராஜன் பதினாறு அடிதான். (மிகச் சமீபத்தில் அவனுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று பார்க்கப் போயிருந்தேன். திரும்பும்போது கைநிறைய பழங்கள் கொடுத்து அனுப்பினான்.)

அலுவலகத்தில் இருந்து புறப்படும்போதே நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்கப்பா என்பார். ஆசிரியராக வேலை செய்யும் அண்ணிக்கு (இதில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர் என்ற பெருமையும் பட்டமும் பெற்றவர் வேறு) ஒருநாளாவது லீவு குடுங்க அண்ணே என்றால், அட… வாங்கப்பா… நாம சமைச்சு அண்ணிக்கு குடுப்போம் என்பார். ஆனால், நாம் செல்லும்போதே சமைத்து ரெடியாக வைத்திருப்பார் அண்ணி.

சும்மா சம்பிரதாயத்துக்குச் சொல்வார்களே… இதை உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்க என்று… அண்ணன் வீடு என்பது எங்களுக்கு அப்படித்தான். அது காசியின் வீடாகவும் இருந்ததால் உண்மையிலேயே எங்கள் வீடு போலத்தான் வைத்திருந்தோம். ஆங்கில சானல்களில் போடும் படங்களைப் பார்க்க நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருப்பதில் தொடங்கி, அகால நேரத்தில் அசைன்மெண்ட் முடித்துவிட்டு வந்து படுப்பது வரையில் சொந்த வீட்டில்கூட சில சச்சரவுகள் வர வாய்ப்புள்ள வேலைகளை எல்லாம் சலிக்காமல் செய்வோம்.

அண்ணனும் காசியும் சொந்த ஊரான தேனி, வடபுதுப்பட்டியில் ஒரு வீடு கட்டினார்கள். கீழேயும் மேலேயுமாகப் பெரிய வீடு. அந்த வீட்டைக் கட்டிய கையோடு காசி கல்யாணமும் முடித்தான். அப்போது ரெண்டு பேரும் சென்னையிலே இருக்கீங்க… எதுக்கு இங்கே இவ்வளவு பெரிய வீடு என்றதற்கு, எல்லோரும் வந்தாப் போனா வீடு கொள்ளணும்ல… என்றார்கள். எல்லோரும் என்பது நாங்கதான்! ஏனென்றால் அவர்களுடைய உறவுகள் எல்லோரும் அந்த ஊரில்தான் இருக்கிறார்கள்.

(இப்போது காசி சொந்த ஊரில் ஒரு தோட்டமும் வீடும் அமைத்திருக்கிறான். அதுபற்றிப் பேசும்போதும் எல்லோரும் வந்தால்கூட படுக்க கொள்ள வசதியா இருக்கும் என்றுதான் சொல்கிறான்.)

சாப்பாடு மட்டுமல்ல… ஊருக்குப் போயிருந்தேன்பா… பலாப்பழம் கொண்டு வந்தேன் என்று சுளைகள் கொடுப்பார்… மாம்பழம் வந்துச்சு என்று பழங்கள் கொடுப்பார். ஒருமுறை சீக்கிரம் வீட்டுக்கு வா என்று அழைத்தார். போனேன். படுக்கை நிறைய புதிது புதிதான சட்டைகளைக் கொட்டி வைத்திருந்தார். நம்ம மாம்ஸ் ஒருத்தர் எக்ஸ்போர்ட் பிசினஸில் இருக்கார்… அவங்க லாட் லாட்டா பேக்கிங் பண்ணுனது போக மிஞ்சிய சட்டைகளை கட்டி வெச்சிருந்தார். நான் எடுத்துட்டு வந்துட்டேன்… உன் சைஸுக்கு இருக்கறதுல உனக்கு பிடிச்ச சட்டைகளை எடுத்துக்கோ என்றார். நாலைந்து சட்டைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

பொன் காசியின் திருமணத்துக்குப் பிறகு அண்ணன், அண்ணி தனி வீடாகவும் காசியும் அவன் மனைவி சுஜாதா தனி வீடாகவும் எடுத்து விட்டனர். இப்போது இருவருமே சென்னையில் தனித்தனி வீடு கட்டிக் கொண்டு விட்டார்கள்.

கல்யாணமான புதிதில் வழக்கம்போல அசைன்மெண்ட் வேலையாக காசியின் வீட்டுக்குச் சென்றேன். இப்போது எனக்கும் திருமணம் ஆகிவிட்டதால் காலை சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துவிட்டுத்தான் சென்றேன்.

காசியின் மனைவி சுஜாதா கேட்டார்… ‘உங்களுக்கு காபியா… டீயா… இல்லை ஹார்லிக்ஸ், பூஸ்டா..?’

அதுசரி… அண்ணியைப் போல இவர் வேலைக்குச் செல்லவில்லை அல்லவா… உபசரிப்பு இந்த அளவுக்குக் கூட இல்லைன்னா எப்படி?!

Wednesday, July 28, 2021

வீடுபேறு! 12/16

 மதுரை… என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஊர்… என்னுடைய பல ’முதல்’கள் இங்கேதான் அரங்கேறியிருக்கின்றன. என்னுடைய தாத்தா இங்கே பணியாற்றிய காலங்களில் முழு பரீட்சை விடுமுறைகள் அனைத்துமே மதுரையில்தான் கழிந்தன. இப்போதும் எனக்கு சி6/11, மேலப்பொன்னகரம் மூன்றாவது தெரு என்பது மனப்பாடமாக இருக்கும் விலாசம். என் தாத்தா அந்த ஊரை விட்டு வந்தபிறகு அந்த ஊரோடு இருந்த உறவு விட்டுப் போய்விட்டது. மதுரைக்கு நான் விருந்தினன் ஆகிவிட்டேன். அதன்பிறகு மதுரைக்கு வர நேர்ந்த காலங்களில் விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறேன்.

முந்தையா பாராவில் சொன்ன முதல் பட்டியலில் கொஞ்சம் இங்கே சொல்கிறேன். முதன்முதலாக கோன் ஐஸ் சாப்பிட்டது மதுரையில்தான்… குளிரூட்டப்பட்ட ஆவின் பால் குடித்தது இங்கேதான்… பொருட்காட்சி பார்த்தது, சர்க்கஸ் பார்த்தது இங்கேதான்… ஏசி திரையரங்கில் சினிமா பார்த்தது இங்கேதான்! (சினிப்ரியா தியேட்டரில் கல்லுக்குள் ஈரம்) சைக்கிள் கற்றுக் கொண்டது இங்கேதான்… இப்படி பல இருக்கின்றன. எல்லாமே குழந்தைப் பிராய நினைவுகள்…

அதன்பிறகு விகடனுக்கான தேர்வை எழுதிய இடம் மதுரைதான்… அங்கிருந்துதான் என் பயணத்தைத் தொடங்கினேன். பல போட்டித் தேர்வுகளை மதுரைக்கு வந்து எழுதியிருக்கிறேன். அந்த வகையில் என் வேலை முயற்சியின் முதல் அங்குதான் தொடங்கியது.

இந்த வரிசையில், திருமணத்துக்குப் பிறகு நடந்த மிக முக்கியமான முதல் ஒன்று இருக்கிறது. நானும் என் மனைவியும் முதன்முதலாக சண்டை போட்டுக் கொண்ட இடம் மதுரைதான்!

என் அண்ணியின் வீடு… என் மனைவியின் அக்கா வீடு! விருந்துக்கு வந்த இடத்தில் சின்னதாக மன வருத்தம்… இருவரும் முதுகுகாட்டிப் படுத்திருந்தோம். விடிந்தபிறகும் சண்டை தொடர்ந்தால் விபரீதமாகிவிடும் என்பதால் அதைத் தொடரவில்லை. அனேகமாக எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த பூசல்… ஊடல் அது! இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்டது! முதல் என்பதால் நினைவில் தங்கியிருக்கிறது.

அண்ணியின் வீடு கொஞ்சம் வித்தியாசமான அமைப்பில் இருக்கும். அவர்களுக்கு இரண்டு வீடுகள் உண்டு. அதாவது வீடு இரண்டு இடத்தில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தளங்கள் இருக்கும்.

முதலில் அவர்கள் இப்போது இருக்கும் வீடு… இது கொஞ்சம் பெரிய வீடு. தரைத் தளத்தில் வாடகைக்கு ஆள் இருக்க, முதல் மாடிப் படியேறிப் போனால் படிக்கட்டு முடியும் இடத்தில் சிறு திண்ணை இருக்கும். அதில் இருந்து உள்ளே நுழைந்தால் சின்னதாக ஓர் அறை… ஹால் என்று சொல்லலாம், ஆனால் அது அகலமான விசாலமான சித்திரத்தைக் கொடுக்கும் என்பதால் அறை என்று சொல்கிறேன். அதைத் தாண்டி உள்ளே சென்றால் இன்னொரு சிறிய அறை… அதற்குப் பின்னால் அடுக்களை. இந்த வீட்டின் பெரிய அறை என்றால் அடுக்களைதான்! அங்கிருந்து வெளியேறி சிறிய சந்து போன்ற பகுதியில் நடந்து சென்றால் கட்டக் கடைசியில் பாத்ரூம்!

படுக்கையறை என்பது அடுத்த மாடியில் இருக்கிறது. அண்ணியும் அண்ணாச்சியும் கீழே அறையிலேயே படுத்துக் கொள்வார்கள் என்பதால் படுக்கையறை என்பது விருந்தினர்களின் வருகையின்போதுதான்!

திரும்பிய பக்கமெல்லாம் பரோட்டாக் கடைகளுக்குப் பெயர்போன மதுரையில் அண்ணியின் வீட்டின் பின்னாலேயே ஒரு கடை இருக்கிறது. போய்ச் சேர்ந்த அன்றே தூக்குச் சட்டியுடன் கடைக்குக் கிளம்பிவிடுவான் என் மகன். அவனுக்குக் கடை தெரியும் என்னும் அளவுக்கு பழக்கமான விஷயம் பரோட்டா வாங்குவது!

அவர்களுடைய இன்னொரு வீடு அதற்கு முந்தைய தெருவில் இருக்கிறது. அது மிகவும் சிறிய வீடு… அதுவும் கீழே ஒரு வளையல் கடை… முதல் மாடியில் ஒரு வீடு… இரண்டாவது மாடியில் ஒரு வீடு என்று இருக்கும். வீடு என்று சொன்னாலும் படியேறி வாசலைத் திறந்து நுழைந்தால் அடுக்களை, அடுத்து ஒரு சிறிய அறை… அவ்வளவுதான் மொத்த வீடும். ஆனாலும் விசாலமான தோற்றம் தருவது வீடல்ல… வசிக்கும் மனிதர்கள்தான்!

அண்ணியைப் பொறுத்த அளவில் அவரை வீட்டின் ராகுல் டிராவிட் என்று சொல்லலாம். மிகவும் பொறுமையாகவும் திறமையாகவும் சூழலை சமாளிக்கும் வித்தை அறிந்தவர். அதனாலேயே வீட்டின் முக்கிய முடிவுகள் எல்லாவற்றுக்கும் அவருடைய ஆலோசனையும் இருக்கும்.

அண்ணாச்சியைப் பொறுத்த வரையில் சிரிப்பு மட்டுமே அவருடைய அடையாளம். எதுவாக இருந்தாலும் சிரிப்பு முகத்தில் இருக்கும். சொல்லும் விஷயங்கள் ரொம்ப கன்சர்வேட்டிவாக இருந்தாலும் அவர் சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் பார்க்க வேண்டும்.

அண்ணியின் வீட்டில் போய்த் தங்கிய காலங்கள் மிகவும் குறைவுதான். சென்னைக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசிக்கும் இடையே இருக்கும் ஊர் மதுரை என்பதால் போகும் வரும் வழிகளில் காரை நிறுத்தி இளைப்பாறிக் கொள்ளும் இடமாகவே இருக்கிறது. அதையும் தாண்டி சில தருணங்கள் தங்க வாய்த்திருக்கிறது.

எந்த அகால நேரத்தில் சென்றாலும் எனக்காக ஃபில்டர் காபியோடு தயாராக இருப்பார். ஊரெல்லாம் டீ குடிக்கும் ஆசாமியான எனக்கு ஃபில்டர் காபி மீது தனி காதல் உண்டு. அதை எப்போதோ ஒருமுறை சொல்லி வைக்க, அதன்பிறகு எப்போது சென்றாலும் ஃபில்டர் காபி நிச்சயமாக இருக்கும்.

சும்மா கடமைக்கு காபி போட்டுக் கொடுத்தோம் என்பதாக இருக்காது. அதைக் கையில் கொடுத்துவிட்டு நம் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். முதல் வாய் குடித்தவுடன் நம் முகத்தில் தெரியும் ரியாக்‌ஷன் அவருக்கு முக்கியம். அதன்பிறகு எத்தனை பாராட்டினாலும் உண்மையான பாராட்டு அந்த முக பாவனைதான்! அதைக் கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால், அவர் மனதில் எந்த கணத்தில் என்ன ஓடுகிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது, முற்றம், திண்ணை, தாண்டினால், ஹால், அதையடுத்து படுக்கையறை, பின்னால் அடுக்களை என்ற வழக்கமான வரிசை போல இல்லாமல் சிறிதும் பெரிதுமான அறைகளோடு புதிர்கட்டங்களைப் போன்ற அவருடைய வீட்டைப் போலவே அவர் மனமும்!

Sunday, July 25, 2021

வீடுபேறு! 11/16

 ‘மதுரையில இருந்து காரைக்குடி போற பஸ்ல ஏறிடு… திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டுல இறங்கி அப்படியே வெளில வந்து ரைட் திரும்பு… ஒரு கோவில் கண்ணுல படும். அதோட காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஒரு சந்து மாதிரி போகும்… அதிலே நுழைஞ்சு வந்தா சந்து முடிவிலே ஒரு தெப்பக்குளம் வரும். அதை ஒட்டி ஒரு லைன் வீடு இருக்கும்… அதிலே முதல் வீடு…’ செழியன் தன் வீட்டுக்கு வழி சொல்வதே கூகுள் மேப் போட்ட மாதிரி தெளிவாக இருக்கும்.

செழியன் எப்போதுமே அப்படித்தான்… எதையுமே விலாவாரியாகப் பேசுவான். அந்த விஷயத்தில் அவன் அம்மா மாதிரி. ‘பாபு…’ என்று ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், கை பரபரவென்று வேலை செய்து கொண்டே இருக்கும். ‘வந்தவனை ஒரு வாய் சாப்பிட விடும்மா… பேசிகிட்டே இருந்தா எப்படி..?’ என்று அப்பா சொன்னால்கூட வாய்தானே சாப்பிடப் போவுது… பேசுறது காதுலதானே விழணும்… சும்மா இருங்க…’ என்று அதற்கும் டீடெய்லாகப் பேசுவார்கள்.

நீச்சல் குளத்தோடு வீடு என்பது பெரிய கனவான்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை… செழியனின் அப்பா போன்ற எளிய பள்ளிக்கூட ஆசிரியரின் வீடாகவும் அது இருக்கலாம். செழியன் அடையாளம் சொல்லும் தெப்பக்குளம் என்பது அவன் வீட்டு நீச்சல் குளம் போல வீட்டோடு ஒட்டித்தான் இருக்கும். ஆனால், நான் போன சமயங்களில் எல்லாம் பெரும்பாலும் வறண்டு போய்த்தான் கிடக்கும்.

செழியன் என் கல்லூரி நண்பன். நான் பொருளாதாரம் படித்த பாளை, சேவியர் கல்லூரியில் அவன் வேதியியல் படித்தான். விடுதியிலும் ஒரே அறையில் கூட தங்கியதில்லை. ஆனால், அவன் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்தான். யார் எது செய்தாலும் பாராட்டுவது அவன் குணம்.

தன் வீட்டைப் பற்றியும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி பற்றியும் பேசிக் கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் வீடு மீது எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போனது. போய் அவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

‘டேய்… எங்க புதுக்கோட்டை ஏரியாவுல ஜல்லிக்கட்டு பிரமாதமா இருக்கும்… பொங்கலுக்கு வீட்டுக்கு வர்றியா என்று கேட்டான். எங்கள் வீட்டில் பொங்கல் முக்கியமான பண்டிகை என்பதையோ இறந்து போன எங்கள் ஆச்சிக்கு அன்று இரவு சேலை வைத்துக் கும்பிடுவோம் என்பதையோ மறந்து, அவனோடு புறப்பட்டு விட்டேன். (பொங்கலுக்கும் ஏன் வரவில்லை என்று என் அப்பா விடுதிக்கு தேடி வந்ததும், என்னவோ தோன்றி பொங்கல் அன்று பகலில் நான் செழியன் வீட்டில் இருந்து புறப்பட்டு இரவில் வீடு வந்து அம்மாவிடம் திட்டு வாங்கியதும் தனிக் கதை!)

வெளிப்பார்வைக்கு செழியன் வீடு வராண்டா, ஹால், படுக்கையறை, கிச்சன் என்று இருந்தாலும் உண்மையில் அது அம்மாவின் அன்பு, அப்பாவின் கனிவு, அக்காவின் செல்லம், தங்கையின் பாசம், தம்பியின் உரிமை போன்றவற்றின் வடிவமாகத்தான் இருந்தது.

ஒட்டுமொத்தமாக நண்பர்கள் கூட்டமாகச் சென்றபோது மொட்டைமாடியில் படுத்து உறங்குவது, மொத்தமாக சோறு பிசைந்து அம்மா உருட்டி உருட்டித் தர எல்லோரும் சாப்பிட்டது என்று இப்போது சொல்வதற்கு விக்ரமன் பட மாண்டாஜ் போல இருந்தாலும் அன்று அத்தனையும் கொண்டாட்டமாகவே இருந்தது.

அம்மா எங்களோடு எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொள்வார். அப்பா எல்லாவற்றுக்கும் மவுன சாட்சியாக இருப்பார். அதுதான் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு ஆதாரம். சின்னதாக சாதித்தாலும் பெரிதாக பாராட்டுவார். பெரிதாக தவறு செய்தாலும் சிறிதாக தண்டனை தருவார். அம்மா கொடுக்கும் தண்டனை என்பது மற்றவர்கள் பார்வைக்கு சின்னதாகத்தான் இருக்கும். ஆனால், அனுபவிப்பவனுக்குத் தெரியும், அதன் வேதனை!

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். நாற்காலி தண்டனை, அம்மாவின் தண்டனைகளில் ஒன்று. ஏதாவது தப்பு பண்ணிட்டா, சேர்ல உட்காருனு சொல்வாங்க. அதாவது கைகளை சேரில் வைத்திருப்பது போல நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்திருப்பது போன்ற போஸில் இருக்க வேண்டும். ப்பூ… இவ்ளோதானா என்று தோன்றும். ஆனால், அப்படி அரைகுறையாகக் குனிந்த நிலையில் ஐந்தாவது நிமிடத்தில் மணிக்கட்டு தொடங்கி, இடுப்பு, குதிகால், மூட்டு என்று சகல பாகங்களும் நம்மிடம் மன்னிப்புக் கேளுடா பாவி… என்று கெஞ்சத் தொடங்கும். மன்னிப்புக் கேட்ட பிறகும் சகஜமாக நிமிர்ந்து நிற்க, இன்னோர் ஐந்து நிமிடங்கள் பிடிக்கும்.

கல்லூரிக் காலம் தாண்டினால் அதோடு நண்பர்களின் தொடர்பும் விட்டுப் போவது இயற்கைதானே… ஆனால், எங்கள் நட்பு இயற்கைக்கு விரோதமானது.

நான் மேற்படிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு டிப்ளோமோ படித்தேன். அதற்கான செமினாரில் கலந்து கொள்ள மதுரை வருவேன். அப்போதெல்லாம் செழியன் வீட்டுக்குப் போவேன். சனி இரவு போய் தங்கிவிட்டு ஞாயிறு காலை மறுபடியும் வகுப்புகளுக்காக மதுரை திரும்பிவிடுவேன். சில நாட்களில் செழியன் ஊரில் இருக்க மாட்டான். ஆனாலும் என் வீடுதானே என்ற உரிமையோடு செல்வேன்.

இன்னும் சில நாட்களில் என்னோடு செமினாரில் கலந்து கொள்ள வந்த நண்பர்களையும் எதுக்கு லாட்ஜ்ல ரூம் எடுக்கறீங்க… என்கூட வாங்க என்று அழைத்துக் கொண்டு செழியனின் வீட்டுக்குப் போவேன். போன் வசதி எல்லாம் இல்லாத அந்த காலகட்டத்தில் திடுதிப்பென்று இரவு சாப்பாட்டு நேரத்தில் இரண்டு மூன்று பேரோடு போய் நின்றால் பெத்த அம்மாவுக்கே கோபம் வரும். ஆனால், செழியனின் அம்மா சிரித்த முகமாக வந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பார். அப்பா டிபனுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குவார்.

அந்த சுற்றுவட்டாரத்தில் என்ன நிகழ்வு என்றாலும் அதற்கான மையப்புள்ளியாக செழியன் வீடு இருக்கும். காரைக்குடியில் நண்பர் குள. சண்முக சுந்தரத்தின் திருமணத்துக்கு போகும்போது வழியில் திருப்பத்தூரில் இறங்கி செழியனையும் கூட்டிக் கொண்டுதான் போனேன். கல்யாணச் சாப்பாட்டை மிஸ் பண்ணிவிட்டு (லேட்டாகப் போனதும் ஒரு காரணம்) செழியன் வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டேன்.

பாதைகள் மாறி பயணங்கள் வேறான பிறகு என் வீட்டுக்குச் செல்வதே அபூர்வமானது போல செழியன் வீட்டுக்குச் செல்வதும் இல்லை என்றாகி விட்டது. விகடனுக்காக ஒருமுறை சர்வே டூர் சென்றிருந்தோம். கிடைத்த அரைமணி இடைவெளியில் திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வலது பக்கம் திரும்பி, கோவில் காம்பவுண்டை ஒட்டிய சந்து வழியாக ஓடி, காய்ந்து கிடந்த தெப்பக்குளத்தைக் கடந்து லைன் வீட்டின் முதல் வீட்டின் முன்னால் போய் மூச்சு வாங்கி நின்றேன். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது.

பக்கத்து வீட்டு கதவைத் தட்டினேன். ‘குழந்தை சாமி சார்…’ என்றதும் ‘அவங்க காலி பண்ணி போயிட்டாங்களே… சர்ச் பக்கத்துல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்காங்க…’ என்றார்.

அங்கே போனேன். அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். ‘வா பாபு… அக்கா கல்யாணத்துக்குப் பிறகு… தங்கச்சியைக் கட்டிக் குடுத்த பிறகு… அப்பா ரிட்டையர்ட் ஆன பிறகு… செழியன் பிசினஸ் அதுஇதுனு அலைஞ்சு கடைசியா லாரி வாங்கி செட்டில் ஆன பிறகு… என்று அம்மா வழக்கம் போல பேசிக் கொண்டே போக அப்பா வழக்கம் போல அமைதியாக இருந்தார்.

ஆனால், இருவர் முகத்திலும் வழக்கமான சிரிப்பு இல்லை, ஒருவேளை அது ஒருபோதும் அலையடிக்காத அந்த தெப்பக் குள வீட்டிலேயே இருக்குமோ?!

Tuesday, July 20, 2021

வீடுபேறு! 10/16

படையப்பா படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில் ரஜினியின் உடைகளை செந்தில் அணிந்து கொண்டு பெண்பார்க்கச் செல்வார். அப்போது ரஜினி வழியெல்லாம் மாப்பிள்ளை அவர்தான்… அவர் போட்டிருக்கும் உடை என்னுடையது என்று சொல்லிக் கொண்டே செல்வார். அதுபோல, நான் சென்னையில் முதன்முதலில் வாங்கிய வீடு என்னுடையதுதான்… ஆனால், அதில் குடியிருந்தது நண்பன் ராஜநாராயணன் தான்!

ஊரில் சொந்தமாக வீடு இருக்கிறது… சென்னை என்பது பிழைக்க வந்த ஊர்தான் என்ற எண்ணம் பிரதானமாக இருந்தாலும் வாங்கும் சம்பளம் செலவுக்கே சரியாகப் போய்விடும் நிலையில் இருந்த எனக்கு சொந்த வீடு என்பது கனவிலும் நடக்காத விஷயமாகத்தான் இருந்தது.

ஆனால், நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கினேன். அதற்கு இருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். முதலாவது ஆள் என்னுடைய சீனியர் அசோகன் சார் (இப்போது தமிழ் இந்து நாளிதழின் ஆசிரியர்) அவர்களுடைய மனைவி அஞ்சனா மேடம். ‘என்னங்க… வீடு கீடுனு வாங்க வேணாமா… இப்பதான் காசு கையிலே மிஞ்சி நிற்கும்.. குடும்பம் குழந்தைனு ஆகிட்டா வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்… இப்பவே பாருங்க…’ என்று சொன்னதோடு நில்லாமல் வண்டியில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் காட்டினார். அதனால்தான் முதல் நன்றி அவருக்கு!

அப்போது சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளான ஆதம்பாக்கம்,. வேளச்சேரி பகுதிகளில் அவர் காட்டாத வீடு இல்லை, பார்க்காத தெரு இல்லை. எல்லாமே ஆறு லட்சம், ஏழு லட்சம் என்கிற ரேஞ்சில் இருந்தது. சும்மா விசாரித்துப் பார்க்கலாமே என்று சம்பள கணக்கைக் காட்டி வங்கியில் வீட்டுக் கடன் கேட்டபோது அதிகபட்சம் ரெண்டு லட்சம் வரை தரலாம் என்றார்கள். மீதிக்கு..?

வீடு ஐடியாவை மூட்டை கட்டிவிட்டு, வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் சொன்னது போலவே அஞ்சனா மேடம் அலுவலகத்தில் உள்ள பல இளைஞர்களிடமும் சொல்லியிருப்பார் அல்லவா..? அப்படிப்பட்ட ஒரு ஆள் ம.கா.சிவஞானம். அவருக்கு தான் இரண்டாவது நன்றி..! ஏன் என்று அடுத்து சொல்கிறேன்.

பழைய வீடுகளாகப் பார்க்கலாம். கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற யோசனையோடு தேடிய ம.கா.சி. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டைப் பற்றி பேப்பரில் படித்துவிட்டு குறித்து வைத்திருந்தார். ‘பாபு… ஆபீஸ் போற வழியில் அதைப் பார்த்துட்டுப் போகலாமா..? என்று கேட்க, நானும் ஓகே சொன்னேன். அவரிடம் விலாசம் வாங்கிக் கொண்டு நான் முதலில் அந்த இடத்துக்குப் போய்விட்டேன். அது ஒற்றைப் படுக்கையறை வீடு!

மகாசி தேடிக் கொண்டிருந்தது இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. நான் ஒற்றைப் படுக்கை விஷயத்தைச் சொன்னதுமே, அப்ப அதைப் பார்க்கிறது வேஸ்ட்… விட்டுறலாம் பாபு என்று சொல்லிவிட்டார். அவர் வேண்டாமென்று சொன்ன வீடு என்னைப் பார்த்து வாங்கிக்கோயேன் என்று வேண்டி விரும்பிக் கேட்டது போல இருந்தது.

ஆதம்பாக்கம் ஏரியாவில் வீடு தேடி அலைந்த காலத்துக்கும் இப்போது கோடம்பாக்கத்தில் வீட்டைப் பார்த்துக் கொண்டு நின்ற இந்த காலத்துக்கும் இடையே என் சம்பளம் ஏதோ கொஞ்சம் உயர்ந்து நின்றது. வங்கியில் விசாரித்தபோது நாலு லட்சம் வரை கடன் கிடைக்கும் என்றார்கள். ஒரு லட்சம் மேற்கொண்டு தேவைப்பட்டது. அதை என்னுடைய பர்சனல் வங்கியான அப்பாவிடம் இருந்து வாங்கினேன்.

அப்படித்தான் சென்னையில் நான் ஹவுஸ் ஓனர் ஆனேன். என் திருமணமும், வீடு வாங்கும் படலமும் ஒன்றாக நடந்தது. திருமண சமயத்தில் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட, திருமணம் முடிந்த நிலையில் ரெஜிஸ்ட்ரேஷன்  முடிந்தது. வாங்கும்போது குடியிருந்த பழைய ஓனர் காலி செய்ய, இரண்டு மாதம் எடுத்துக் கொள்ள, அதற்குள் நாங்கள் வாடகை வீட்டில் செட்டில் ஆகியிருந்தோம்.

சரியாக அந்த வீடு காலியான நேரத்தில் நண்பன் ராஜநாராயணனுக்கு திருமணம் நடந்தது. இங்கே குடி வந்துவிடேன் என்று சொல்ல, அவனும் மனைவி மதுவுடன் வந்து இறங்கினான். அவர்களை வரவேற்று ஆரத்தி எடுத்து வீட்டுக்கு பால் காய்ச்சி எல்லாமும் செய்து குடி வைத்தோம்.

அன்றுமுதல் அது ராஜநாராயணனின் வீடானது. நான் மிகவும் உரிமையோடு போய்த் தங்குவேன். எல்லாமும் செய்வேன். ஆனால், அது என் வீடு என்று தோன்றவே தோன்றாது. அதுதான் ஆச்சரியம்!

ராஜநாராயணன் வீடு காலி செய்து போன பிறகு கூட அடுத்தடுத்து வாடகைக்கு ஆள் தேடினோமே தவிர, அங்கு குடி போகலாம் என்ற எண்ணமே எழவில்லை. இத்தனைக்கும் நாங்கள் குடியிருந்ததும் ஒற்றைப் படுக்கையறை வீடுதான்!

சில காலங்களுக்குப் பிறகு வேறு வேறு ஆட்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். ஒரு வீட்டு ஓனராக அங்கு செல்வதும் குடியிருப்பவர் வீட்டில் ஒரு தம்ளர் காபி குடிப்பதுமாகத்தான் அந்த வீட்டோடு உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு சில இளைஞர்கள் வந்து தங்கினார்கள். என் நண்பனின் மருமகன் வந்து வீடு கேட்டான். அவனும் இன்னும் இரு நண்பர்களும் தங்கப் போவதாகச் சொல்லி! சரி… அபார்ட்மெண்டில் குற்றம் சொல்லாத வகையில் நடந்து கொள்ளுங்க என்ற கோரிக்கையோடு அவர்களைத் தங்க வைத்தேன். அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மொட்டை மாடியில் அதிகம் திரிகிறார்கள் உங்கள் டெனண்ட் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. மொட்டை மாடிக்கெல்லாம் போகாதீங்கப்பா என்றேன். சரிங்க அங்கிள் என்றார்கள். ஒருகட்டத்துக்குப் பிறகு அவர்களைக் காலி செய்ய வைக்க வேண்டியதாகிவிட்டது.

அதன்பிறகு குடி வைத்தால் குடும்பத்துக்குதான் என்ற முடிவோடு இருந்தேன். கணவன், மனைவி, குழந்தை என்று சிம்பிளான குடும்பம் வந்து கேட்க, சம்மதித்து சாவியைக் கொடுத்தேன். மாதம் 2500 ரூபாய் வாடகை என்பது பேச்சு. ஆனால், ஒரு மாதம்கூட அவர் முழு வாடகையைக் கொடுத்தது கிடையாது.

சார்… பாத்ரூம் தாழ்ப்பாள் மாத்தினேன்… முப்பத்தி ரெண்டு ரூபா ஆச்சு என்று கழித்துக் கொண்டு கொடுப்பார். அடுத்த மாதம், பால்கனியில் சின்ன ரிப்பேர் என்று ஒரு தொகையைக் கழிப்பார்.

இதையெல்லாம் செய்யும் முன்னே சொல்லலாமே என்றால் எப்படி சார் உங்களைத் தொந்தரவு செய்ய முடியும்? என்றார்.

இதில் ஏற்பட்ட சலிப்பு ஒருபக்கம்… குடியிருந்த வளசரவாக்கம் பகுதியில் இரண்டு படுக்கையறை வீடாகப் பார்க்கலாம் என்ற திட்டம் மறுபுறமுமாக நெருக்க, இந்த வீட்டை விற்றுவிடலாம் என்று முடிவு செய்தேன். அப்போது அந்த வீட்டின் சந்தை மதிப்பு 14 லட்ச ரூபாய். குடியிருந்த மனிதரே வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஆனால், எனக்கு சிறு சலுகை தரவேண்டும். வாடகைக்காகக் கொடுத்த அட்வான்ஸைக் கூட வீட்டை வாங்குவதற்கான அட்வான்ஸாக வெச்சுக்கோங்க… மேற்கொண்டு பத்து லட்ச ரூபாய் கொடுத்துடறேன் என்றார். அதாவது மொத்த மதிப்பு 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

கட்டாது சாமி என்று காலி செய்ய வைத்தேன்.

இவர் கொடுத்த சலிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இந்த வீட்டை விற்றுவிடலாம் என்ற விதை என்னுள் விழுந்தது அந்த பேச்சிலர்ஸ் இருந்தார்கள் என்று சொன்னேனே… அப்போதுதான்..!

ராஜநாராயணன் இருந்த போது என் வீடென உரிமையோடு புழங்கிய வீட்டில்… அடுத்து வந்த வாடகைகாரர்கள் காபி கொடுத்து உபசரித்த வீட்டில்… உள்ளே வராதீங்க சார் என்று சொல்லி கதவைத் திறக்க மறுத்த இளைஞன்தான் அந்த வீடு உனக்கானதில்லை என்பதை உணர்த்தினான். வாடகைக்கு விட்டுட்டீங்கள்ல… நாங்க சொன்னால்தான் வரணும் என்றான். இத்தனைக்கும் என்னிடம் நான் பார்த்துக்கறேன் அங்கிள் என்று பேசி வாடகைக்கு வந்த என் நண்பனின் மருமகன் அந்த வீட்டை தன் நண்பர்களுக்கு உள் வாடகைக்கு விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த நண்பர்களில் ஒருவன் தான் என்னை வாசலில் நிறுத்தினான்.

பரவாயில்லைப்பா… மொத்த அபார்ட்மெண்டையும் ரிப்பேர் செய்யப் போறாங்க… தனிப்பட்ட முறையில் வீட்டில் ஏதாவது செய்யணுமா என்று நான் பார்க்கணும்… அதனால் நீ கதவைத் திறந்துதான் ஆகணும்… என்று சொன்னதோடு அந்த மருமகனுக்கும் போன் அடித்தேன். பிறகுதான் கதவு திறந்தது.

ஒருவேளை அவர்கள் என் வீட்டை டாஸ்மாக் குடோனுக்கு உள் வாடகைக்கு விட்டிருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு கிச்சன் நிறைந்திருந்தது.

ஆக என்னை வெளியில் நிறுத்தி வீட்டை விற்கும் முடிவெடுக்கத் தூண்டியவன் உண்மையில் ‘குடி’யிருந்தவன் தான்!