Wednesday, November 27, 2013

கிரியேட்டிவ் ஹெட்!

காமேஸ்வரி அத்தை என்ன படித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அத்தை என்றால் அப்பா கூடப் பிறந்தவரோ இல்லை அம்மாகூடப் பிறந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவரோ கிடையாது. வேலைக்காக அப்பா ஊர் ஊராகச் சென்றபோது ஒரு ஊரில் நாங்கள் குடிபோன வளவு வீடுகளில் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் என்பதால் எனக்கு அத்தை!

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் என்னை அசத்திய பெண்மணி. அந்த வீட்டுக்குக் குடிபோன ரெண்டாம் நாள் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தார். வீட்டின் நிறைகுறைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார். அப்பாவின் வேலை, அம்மாவின் படிப்பு, எங்களுடைய சொந்த ஊர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் ப\ற்றியும் விசாரிப்பார்கள் என்று காத்திருந்தவருக்கு பெரிய அதிர்ச்சி. எங்கம்மா எதுவுமே கேட்காமல் காபி குடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டதும் அத்தைக்கு கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது.

ஆனாலும் சொல்லாமல் போவதாக இல்லை. அங்கேதான் முதன்முதலாக கிரியேட்டிவிட்டி என்றால் என்னவென்று நான் பார்த்தேன். ‘சரிம்மாநான் கிளம்பறேன்உங்க அண்ணாச்சி சாப்பாட்டுக்கு வந்திருவாக...!’ என்றார். எங்க அம்மாவுக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்பதால், ‘சரி போயிட்டு வாங்கஆமாஅண்ணாச்சி என்ன செய்றாங்க..?’ என்றார்.

ஊரைச் சுத்திட்டு சுத்திட்டு வந்து சாப்புடுவாருஇப்ப பாதி ஊரைச் சுத்தியிருப்பாருபசி வந்ததும் வீட்டுக்கு வந்துருவாருசாப்டுட்டு மீதி ஊரைச் சுத்தப் போவாரு…’ என்றார் அத்தை. கேள்வி கேட்ட அம்மாவுக்கு ஐயோ பாவம் என்றாகிவிட்டது. ஆனால், கழுத்தில் ஒற்றை வடம், காது, மூக்குகளில் கல் வைத்த தங்கம், செழிப்பான புடவை என்று வறுமையில் இருப்பது போல தோற்றமில்லாத அத்தையைப் பார்க்கும்போது செலவுகளை எப்படி சமாளிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஊரைச் சுத்தறாருன்னா வருமானம்ஏதாச்சும் நிலபுலம் இருக்குதா..? என்றாள் அம்மா! அத்தை சின்ன சிரிப்போடு சொன்னார். ‘அதான் ஒண்ணாந்தேதியானா சம்பளம் வந்திரும்லஊரைச் சுத்தறதுன்னா சும்மா இல்லைஅவரு போஸ்ட் மேனா இருக்காரு…’ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அம்மாவுக்கு கடுப்பாக இருந்ததோ என்னவோ தெரியாதுஎனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என் வீட்டுக்காரர் போஸ்ட் மேனாக இருக்கார் என்று சொல்லியிருந்தால் அது ஒற்றை வரி தகவலாக இருந்திருக்கும். ஆனால், அதற்கு ஒரு திரைக்கதை எழுதி அந்த ஒரு நிமிடத்தில் சோகம், காமடி, ஆச்சரியம் என்று பலவித உணர்வுகளைக் கொண்டு வந்த காமேஸ்வரி அத்தைதான் நான் பார்த்த முதல் கிரியேட்டிவ் ஹெட்! இத்தனைக்கும் அத்தை பள்ளிக்கூட லெவலைத் தாண்டியதில்லை என்றுதான் அவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர்களுடைய குடும்பத்தில் வருமான ஆதாரம் போஸ்ட் மேன் மாமாதான். அவர் சம்பளத்தில்தான் மாமா, அத்தை, வசந்தா அக்கா, ரவி அண்ணா, சுந்தர் அண்ணா எல்லாரும் சாப்பிட வேண்டும். ரவி அண்ணா வேலைக்காக அதையும் இதையும் முயற்சி செய்து பார்த்து அலைந்து கொண்டிருந்தார். பாதிநேரம் ஏதாவது வேலை விஷயமாக வெளியூரில் அலைந்து கொண்டிருக்கும் கேரக்டர். வசந்தா அக்காவுக்கு மாப்பிள்ளை முடிவாகி இருந்தது. சுந்தர் அண்ணா ஸ்கூல் படித்து முடித்து விட்டிருந்தார்.

இதற்கிடையே நாங்களும் ஊர் மாறி வந்துவிட்டோம். பிறகு ஒருநாள் தென்காசியில் கோவிலுக்கு விளக்கு போட அம்மாவோடு போயிருந்தபோது காமேஸ்வரி அத்தையைப் பார்த்தேன். சுந்தர் அண்ணா என்ன பண்றாங்க..? என்றேன். அவர் பத்தாங்கிளாஸ் முடிச்சான்லஇப்ப விஓவா இருக்கான். என்றார். அடடேபரவாயில்லையேஸ்டேட் கவர்மெண்ட்ல வேலைன்னா நல்ல விஷயம்தான் என்றேன். வேலை நல்ல வேலைதான்அவனுக்கு செலவுக்கு காசு குடுத்துதான் உங்க மாமா சம்பளமெல்லாம் கரையுதுஎன்றார். என்ன சொல்றீங்க அத்தை..? என்றேன். ஆமாப்பாவி ஓன்னா வெட்டி ஆபீசர்னு சொல்ல வந்தேன்பா..! என்றார். சிரித்துக் கொண்டேன். அதன்பிறகு மாமாவைப் போலவே சுந்தர் அண்ணாவும் போஸ்ட் மேன் வேலைக்குப் போய்விட்டார்.

அதன்பிறகு நீண்டநாள் கழித்து அண்ணன் திருமணத்துக்கு பத்திரிகை , கொடுப்பதற்காக போயிருந்தேன். சந்தோஷமாக பத்திரிகையை வாங்கிக் கொண்ட அத்தை, ‘பாபுநீ என்ன பண்றே..?’ என்றார்.

சென்னையிலே மீடியாவுல காமேஸ்வரி அத்தை வேலையைப் பார்த்துகிட்டிருக்கேன்..! என்றேன்!

Friday, November 8, 2013

சீதாம்மா!


அப்போது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்தின் மாணவத் தலைவர்தான் இலக்கிய மன்றத்துக்கும் தலைவர். ஆக, எனக்கு இரட்டைப் பொறுப்பு. பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்கு விருந்தினரைத் தேர்வு செய்ய மன்ற செயலாளர் சுப்புராஜுடன் அலைந்து திரிந்துவிட்டு களைப்போடு அவன் வீட்டுக்குச் சென்றோம்.

அம்மா... இவன் பாபு... ரெண்டு பேருக்கும் சாப்பாடு போடு...என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்கட்டுக்கு கூட்டிச் சென்றான். அப்போதே அம்மா என்று அழைக்காமல் அவ்வா என்று அழைக்கலாம் போல வயோதிகத்தில் இருந்தார் சுப்புவின் அம்மா! என் வீட்டில் அம்மாவின் சாப்பாட்டைத் தவிர வேறு சாப்பாடு அறியாத எனக்கு அந்தச் சாப்பாடு வேறு விதமாக ருசித்தது.

சுப்பு அவர்கள் வீட்டில் நாலாவதாகப் பிறந்தவன். மூத்த அக்காவுக்கு திருமணம் ஆகி, அண்ணனுக்கு திருமணம் ஆகி, இளைய அக்காவுக்கு திருமணம் ஆகி பல குழந்தைகளுக்கு அவ்வாவாகி விட்டதால் அம்மாவுக்கு தோற்றத்திலேயே அவ்வாத்தனம் வந்துவிட்டது. சுப்புவும் அவனுக்குப் பிறகு தம்பி கிருஷ்ணாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்பு வீடே கதி என்று ஆகிவிட்டது. எப்போது போனாலும் உரிமையோடு தட்டு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இருந்தது.

அம்மாவுக்கு முடியலைடா என்று படுத்திருப்பார். ஆனாலும் டீ போட்டுத் தரட்டுமா என்று எழுந்து வருவார். இல்லம்மா நாங்க கடைல பார்த்துக்கறோம் என்றாலும் எனக்கும் குடிக்கணும் போல இருக்குடா என்று சொல்லி டீ குடிக்க வைத்துவிட்டுதான் விடுவார்.

பேரக் குழந்தைகளுக்காக எப்போதும் பண்டம் செய்து கொண்டே இருப்பது அம்மாவின் இயல்பு. எப்போதுமே வீட்டில் எண்ணெய் வாசனை அடித்துக் கொண்டே இருக்கும். சனி ஞாயித்துக் கிழமைகள் என்றால் பிள்ளைகள் நிறைந்து வீடே கலகலவென்று இருக்கும். அண்ணி, அக்கா எல்லோரும் இருந்தாலும் அம்மா சமையலறையில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பார்.

எப்போது சென்னையில் இருந்து சென்றாலும் அம்மாவைப் பார்க்காமல் வரமாட்டேன். ‘என்ன பாபு... எப்படி இருக்க... வேலையெல்லாம் நல்லா போகுதா... எங்க தலைமுறையை நாங்க கழிச்சுட்டோம்... உங்க நைனா தையல்ல கொண்டு வர்றதை வெச்சு ரெண்டு பிள்ளைகளைக் கட்டிக் குடுத்து எல்லாப் பிள்ளைகளையும் படிக்க வெச்சுட்டோம். உங்க காலம் அப்படி இல்லை... கவனமா நடந்துக்கோ...என்பார்.

நைனா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் இத்தனை கட்டுசெட்டக குடித்தனம் செய்ததே பெரிய சாதனைதான். அண்ணனை வங்கி அதிகாரி ஆக்கி, அக்காக்களை நல்லவிதமாக கட்டிக் கொடுத்திருப்பதே பெரிய விஷயம்தான். நான் வேலை தேடி சென்னைக்கு நகர்ந்துவிட்ட பிறகு சுப்புவுக்கும் அரசு வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கும் திருமணம் முடிந்து அவன் தம்பிக்கும் திருமணம் முடிந்த ஒருநாளில் சுப்பு வீட்டுக்குச் சென்றேன்.

அன்று தீபாவளியோ என்னவோஅக்கா, அண்ணா, சுப்பு, அவன் தம்பி என்று எல்லோரும் குடும்ப சகிதமாக கூடியிருந்தார்கள். கொஞ்சம் தளர்ந்த நடையில் வாசலுக்கு வந்த அம்மாவின் புடவை தொடைப்பகுதியில் இருந்த ஈரம் சொன்னது, உள்ளே அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று. அண்ணியின் ஸ்பெஷலான சிக்கன் சமையல் அன்று. ஆனல், அம்மாவும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தார்.

எனக்கு திருமணம் நிச்சயமானபோது நைனா கொஞ்சம் தளர்ந்து தையல் கடையை மூடிவிட்டார். வீட்டிலேயே மிஷின் போட்டு பொழுதுபோக்காக தைத்துக் கொண்டிருந்தார். நிச்சயத்துக்கு வந்த அம்மாவால் என் திருமணத்துக்கு வர வாய்க்கவில்லை. திருமணத்துக்கு சில தினங்கள் முன்பு நைனா தவறிப் போக, அம்மாவோ சுப்புவோ திருமணத்துக்கு வரவில்லை.

திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு என் மனைவியை அழைத்துக் கொண்டு சுப்பு வீட்டுக்குச் சென்றேன். படுக்கையில் சாய்ந்திருந்த அம்மா, என் மனைவியின் கன்னத்தைத் தடவி சந்தோஷப்பட்டார். ‘பாபுஉன்னால உன் ஆயுசுக்கும் என்னை மறக்க முடியாதுப்பாஏன்னா என் பேருள்ள பொண்ணைக் கட்டியிருக்கியேஆமாஅவளை எப்படிக் கூப்பிடப் போறே..?’ என்றார்.

இப்போதும் நான் என் மனைவியை பெரும்பாலும் அம்மா என்றுதான் கூப்பிடுகிறேன்..!

Sunday, November 3, 2013

வேடந்தாங்கல்!

தொகுப்பு எழுதினால்தான் சமர்ப்பணம் போடணுமா என்ன... இந்தக் கட்டுரை தமயந்தி அக்காவுக்கு சமர்ப்பணம்..! முகநூலில் அவர் எழுதிய தெற்கு பஜார் என்ற திருநெல்வேலி குறிப்புகள்தான் எனக்கு வேலு அண்ணனை நினைவுக்குக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் அவர் தெற்கு பஜார்காரர் இல்லை... அதைத்தாண்டி மார்க்கெட் முக்குல அன்னபூர்ணாவுக்கு எதுத்தாப்ல பப்ளிக் டெலிபோன் பூத் வெச்சிருந்தார்.

வெள்ளைச் சட்டை, குங்குமப் பொட்டு என்று அவர் தோரணையே கம்பீரமாக இருக்கும். நாற்காலியில் காலை மடித்துப் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்திருப்பார். கழுத்தில் மின்னும் சங்கிலி, வலது கையில் வாட்ச், விரலில் அகல மோதிரம் என்று பவுசுக்கும் குறைவிருக்காது. அவருடைய டெலிபோன் பூத் ஓரமாக நிற்கும் சக்கர வண்டியைப் பார்க்காவிட்டால் வேலு அண்ணன் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதை நம்பவே முடியாது.

அவரால் நடக்க முடியாது என்றாலும் அவர் வாயில் இருந்து நடக்காது... நடத்த முடியாது என்ற வார்த்தைகளே வராது. எதைச் சொன்னாலும் செஞ்சுடலாம் தம்பி என்றுதான் ஆரம்பிப்பார். ஒருவேளை அது அவர் சக்திக்கு மிஞ்சிய விஷயமாக இருந்தால், செஞ்சுடலாம் தம்பி.,.. ஆனா, அதுல இப்படியாப்பட்ட சிக்கல் இருக்கு... அதை மீறி உனக்கு இந்த விஷயத்தைச் செய்யணுமானு யோசனை பண்ணிக்கோ! என்பார். நமக்கே அது தேவையில்லை என்று தோன்றிவிடும்!

திருநெல்வேலியில் எந்த தியேட்டராக இருந்தாலும் வேலு அண்ணன் பேரைச் சொன்னால் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் வாங்கலாம். அது அவர் மேல் பரிதாபப்பட்டு கிடைப்பது அல்ல... கவுண்டரில் டிக்கெட் கிழிப்பவர் தொடங்கி, முறுக்கு விற்பவர் வரைக்கும் (இந்த பட்டியலில் முதலாளிகள் உண்டா என்று தெரியாது) வேலு அண்ணனிடம் கடன்பட்டிருப்பார்கள்.

அவருடைய மூன்று சக்கர சைக்கிள் பூத் ஓரமாகக் கிடக்குமே தவிர ஒருநாளும் வேலு அண்ணன் அதை ஓட்டிப் பார்த்ததில்லை. வீட்டில் புறப்பட்டு ரெடியாக இருந்துகொண்டு கடைக்கு போன் அடிப்பார். கடையில் இருந்து யாராவது சைக்கிளில் போய் அழைத்துக் கொண்டு வருவார்கள். அதேபோல மதியம் சாப்பாட்டுக்கு போகும்போதும் யாராவது அழைத்துக் கொண்டு போவார்கள். கடைக்கு வரும்போதே பவுடர் மின்னும். ஆனாலும் வந்தவுடனேயே ஒரு கோட்டிங் கொடுத்துக் கொள்வார். அதேபோல கடையைவிட்டு புறப்படும்போது ஒரு கோட்டிங் அடித்துவிட்டுதான் புறப்படுவார்.

வேலு அண்ணனோடு கூடப் பிறந்தவர்கள் நாலைந்து பேர் உண்டு. ஆனால், ஒருநாளும் அந்த டெலிபோன் பூத்தில் அவருடைய சொந்தம் என்று யாரையும் பார்த்தது இல்லை. எப்போதும் நண்பர்கள் புடைசூழத்தான் இருப்பார்.

மாரியப்பன், செந்தில் மூலமாகத்தான் நான் வேலு அண்ணனுக்கு அறிமுகம் ஆனேன். முதல்நாளே என்ன தோழா... உங்க ரத்த வகை என்ன..? என்றார். ஓ பாசிட்டிவ் என்றேன். சின்னக் குழந்தைக்கு ரத்தம் குடுத்தீங்களாமே... வெரிகுட்... என்கிட்டே யாராச்சும் கேட்டா சொல்றேன் என்றார். நீங்க ரத்தம் குடுப்பீங்களாண்ணே... என்றேன். என்னை அறியாமல் என் கண்கள் காலைப் பார்த்தன. ரத்தம் கையிலேதானே எடுப்பாங்க... என்று வேலு அண்ணன் சிரித்தபடி சொன்னது இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.

நான் திருநெல்வேலியை விட்டு அம்பாசமுத்திரத்துக்கு மேற்படிப்புக்காகச் சென்ற பிறகும் பாளையங்கோட்டை செல்லும்போதெல்லாம் வேலு அண்ணனைப் பார்க்காமல் வருவதில்லை.

அப்படியொரு நாளில் வேலு அண்ணன் தனியாக பூத்தில் உட்கார்ந்திருந்தார். கூடுதலாக எந்த மேக்கப்பும் இல்லை. ஆனால், முகத்தில் களை கொஞ்சம் கூடுதலாக இருந்தது. கல்யாணம் முடிஞ்சிருச்சு தோழா... என்றார்.

பசங்களை எங்கே காணோம் என்றேன். நீங்க ஒருமுறை எனக்காக நான் சொல்லச் சொல்ல ஒரு நண்பரோட ஆட்டோகிராஃப் நோட்டுல எ\ழுதுனது ஞாபகம் இருக்கா..? என்றார்.

கமா ஃபுல் ஸ்டாப் உட்பட ஞாபகம் இருந்தது.

எப்போதும் பறவைகள் வருகை... வேடந்தாங்கலுக்கு மட்டுமல்ல... இந்த வேலுவின் பூத்துக்கும்தான்! பறவைகள் போகலாம்... வரலாம்... போய் வாருங்கள்! என்று நானே எழுதிக் கொடுத்தேன் அன்று!

என்ன தோழரே... யோசனை... உங்க கார் காத்துகிட்டிருக்கு... போய் வாருங்கள் என்றார்!