Thursday, August 27, 2009

அதென்ன பேரு... மரியா கேண்டீன்?


பெருங்கூட்டமாக வந்து வரிசையில் நின்று ஆதரவுக் கரம் நீட்டிய அத்தனை பிளாகர்களுக்கும் நன்றி (அதான் பத்திரிகைகாரன்னு சொன்னோமுல்ல... கொஞ்சம் கூட்டி குறைச்சுத்தான் சொல்வோம்!)
அந்த கும்பலில் பெரும்பான்மையானோரின் குரல் அதென்ன பேரு... மரியா கேண்டீன் என்பதாக இருந்தது.

தாஜ்மஹாலைப் போய் ஏன் இந்தப் பேருனு கேட்பீங்களா?

திருநெல்வேலியிலே சேவியர்ஸ் காலேஜுக்கும் ஜான்ஸ் காலேஜுக்கும் நடுவிலே முக்குல இருந்த கேண்டீனுக்குப் பேருதான் மரியா கேண்டீன்!
அங்கே ஒரு அட்டெண்டஸ் வைத்தால் நிச்சயமாக நூறு சதவிகித அட்டெண்டன்ஸ் கிடைக்கும். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கும் கேண்டீன் அது.

நடுவே ஓர் அறை... சுற்றிலும் மூன்று பக்கமும் ஓட்டுச் சாய்ப்பு... அதில் சில நாற்காலி மேஜைகள், அறைக்குள்ளே சில மேஜை நாற்காலிகள்... ஒருபக்கம் சேட்டனின் கல்லா!

சாயாவும் சமோசாவும்தான் பேமஸ்! இந்த இரண்டையும் ஆர்டர் பண்ணினால் கூடவே சிகரெட்டையும் கொண்டு வந்து வைப்பார். யாருக்கு என்ன பிராண்ட் என்பதை காலேஜ் அட்மிஷன்போது அப்ளிகேஷனில் எழுதிக் கொடுத்திருப்போமோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு மிகச் சரியாக இருக்கும். (ஹாஸ்டலில் இருந்த என்னைப் பார்க்க வந்த அப்பாவை அழைத்துக் கொண்டு ஒருமுறை மரியா கேண்டீனுக்குப் போனேன்... பழக்க தோஷத்தில் சிகரெட்டைக் கொண்டு வந்து வைத்துவிட்டார் சேட்டன். அதன்பிறகு என் அப்பா என் செலவுக்கான பணத்தில் நூறு ரூபாயை அதிகப்படுத்திவிட்டார்)

கல்லூரியில் சஸ்பெண்ட் ஆன நண்பர்களுக்கு அதுதான் கிளாஸ் ரூம்... அங்கு உட்கார்ந்து அத்தனை பாடங்களையும் நோட்ஸ் எடுத்துக் கொள்வார்கள். எல்லா கல்லூரிகளும் சேர்ந்து ஏதாவது போராட்டம் நடத்தலாம் என்றால் அதற்கான ஆலோசனை அங்குதான் நடக்கும். ஜான்ஸ் கல்லூரி மாணவனைப் போட்டுத் தாக்கிடலாம்னு சேவியர்ஸ் காலேஜ் கும்பல் ஒரு டேபிளிலும் சேவியர்ஸ் பயலை ஒரு காட்டு காட்டிறணும்னு ஜான்ஸ் காலேஜ் பசங்க இன்னொரு டேபிளிலும் உட்கார்ந்து சதியாலோசனை செய்வது இந்த கேண்டீனில் வைத்துதான்! ஆனால், இதெல்லாம் தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்... என் கடன் சமோசா பண்ணிக் கிடப்பதே! என்பது போல கருமமே கண்ணாக இருப்பார் சேட்டன்.

இதெல்லாம் நடந்து முடிந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு நானும் நண்பர்கள் முருகவேள், ஆனந்த் ஆகியோரும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது மரியா கேண்டீனைப் பற்றி பேச்சு வந்தது.

‘டேய்... மரியா கேண்டீனை இடிச்சுட்டாங்க தெரியுமா?’ என்றான் ஆனந்த். நான் நொறுங்கிப் போனேன். அந்த உரையாடலை அப்படியே நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்து என் பிளாக் ஸ்பாட்டைத் திறந்து அதன் பெயரை மரியா கேண்டீன் என்று மாற்றினேன். (கூடவே ஆனந்த விகடனில் மரியா கேண்டீன் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதினேன்)

இனி சேவியர்ஸ் , ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள் மனதில் என்றுமே அது ’மரியா’ கேண்டீன்தான்!

நீண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளி..!


எங்காத்துக்காரரும் சந்தைக்குப் போறாருங்கற மாதிரி நானும் பிளாக் எழுதறேன்னு ஆரம்பிச்சேன்... ரொம்ப சுமாரா ஒரு டிசைனை வெச்சுகிட்டு என்ன செய்றதுனு புரியாததாலும் சோம்பேறித்தனத்தாலும் அப்படியே அதை கிடப்பில் போட்டு வெச்சுட்டேன்..!

எழுதறதுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கு..! இப்போ நிறைய நேரமும் இருக்கு! எழுத ஆரம்பிக்கலாம்னு பிள்ளையார் சுழி போட்டிருக்கேன்!

அதுக்கு முன்னே என்னைப் பத்தி கொஞ்சம் சொல்லிடறேன்... ஏன்னா, விசிட் அடிக்கும் எல்லோருக்கும் என்னைப் பத்தி தெரியும்னு நினைச்சா பூனை கண்ணை மூடிகிட்ட கதைதான்!

நான் முருகேஷ் பாபு...

விகடன் என்னுடைய எழுத்து அடையாளம்... இப்போது விலாசம் மாறி இருக்கிறேன்...

இப்போ தெனாலினு ஒரு இணைய தள பத்திரிகையில் இருக்கேன்...

நாளையில் இருந்து எழுதலாம்னு ஐடியா... வேணும், உங்க ஆசீர்வாதம்... அப்புறமா எதிர்வாதம்!