Sunday, February 13, 2022

கடைசி (வீட்டு) விவசாயி!

 




தர்மர் தாத்தா… எங்க ஊர்ல (கொட்டாகுளம் – தென்காசி மாவட்டம்) எங்க தெருவுல கீழக் கடைசியில இருக்க வீடு அவரோடதுதான்… பங்கு பாகமெல்லாம் பிரிச்சது போக அவருக்கு கிடைச்சது ஒரு குச்சிலும் கையகல நிலமும்தான்.

எல்லாரும் நாத்தங்கால்னு சொல்றதைத்தான் தருமரு வயலும்பாரு… அவருக்குக் கிடைச்சது அம்புட்டுதான் என்ன செய்ய..? என்றுதான் ஊருக்குள் பேசிக் கொள்வார்கள்.

ஆனால் ஒரு கோட்டை விதைப்பாடு நிலம் வைத்திருப்பவர் கூட அத்தனை அக்கறையாக வயலுக்குப் போக மாட்டார்கள். தினமும் காலையில் களைகொத்தியோடு வயலுக்கு கிளம்பிவிடுவார்.

நாற்று பாவுவதில் தொடங்கி களை எடுப்பது, உரம், பூச்சி மருந்து போடுவது என்று போய் அறுவடை செய்வது வரை தாத்தாவும் அவர் வீட்டு ஆச்சியும்தான் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

எங்கள் ஊருக்கே விவசாயத்துக்கு தண்ணீர் வருவது மேற்கே இருக்கும் கண்ணுப்புளி மெட்டு அணையில் இருந்துதான்! வயல் வைத்திருப்பவர்கள் வீட்டுக்கு ஒரு ஆள் தண்ணீர் அடைக்க வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. தலைப்பாகையை இறுகக் கட்டிக் கொண்டு முதல் ஆளாக வந்துவிடுவார். தாத்தா, சின்னப் புள்ள ஒண்ணுக்கு இருந்தா மறுகால் வெட்டி விடணும்… அந்த வயலுக்கு நீங்க எதுக்கு அலையறீங்க..? என்றால், என்னப்பா… ஊருக்கு ஒத்தது எனக்கும்… வயல்காரங்க வாங்கன்னா வரணுமா இல்லையா..? என்பார்.

எத்தனை பஞ்சத்திலும் தன் விவசாயத்தை அவர் கைவிடவே இல்லை.

தன் ஒற்றை மகளுக்கு மாப்பிள்ளை தேடும்போது அவர் வைத்த ஒரே நிபந்தனை… என் வீட்டை எடுத்துகிடட்டும்… ஆனா, வயலை வெள்ளாமை பார்க்காம போட்டுறக் கூடாது என்பதுதான்!

கடைசி விவசாயி படத்தில் மாயாண்டி ஐயாவைப் பார்க்கும்போது தருமர் தாத்தாதான் நினைவுக்கு வந்தார்!

(அவரைத் தவிர ‘முருகனடிமை’ ராமையா, உப்பு தோசைகளும் எங்கள் ஊரில் உண்டு!)

நன்றி மணிகண்டன்!