Wednesday, August 25, 2021

வீடுபேறு! 16/16


D-6/4… என்னுடைய முதல் வீடு… ஆமாம்… அப்பாவின் வீடு, மாமாவின் வீடு, தாத்தாவின் வீடு என்ற அடையாளங்களுடனே வாழ்ந்த நான் சென்னைக்கு வந்த பிறகு பல வீடுகளில் தங்கியிருந்தாலும் அத்தனையுமே அறைகள்தான். யார் கேட்டாலும் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கியிருக்கேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு வீடு என்ற அடையாளத்தைத் தந்தது கோடம்பாக்கம் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒற்றைப் படுக்கையறையைக் குறிக்கும் D வரிசையில் ஆறாவது பிளாக்கில் இருந்த நாலாம் எண் வீடுதான்!

ஒரு தளத்தில் நான்கு வீடுகள் இருக்கும் வகையிலான அமைப்பு கொண்டு அடுக்குமாடி கட்டடம். நான்கு வீட்டு வாசல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கும். ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டால் அது அடுத்த வீட்டுக்குமான கோலமாக காட்சியளிக்கும். அந்த அளவுக்கு நெருக்கமான வாசல்களைக் கொண்ட அமைப்பு அது.

திருமணம் முடிந்த பிறகு மனைவி சீதாவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குத்தான் வந்தேன். நான்கு மாடிகளைக் கொண்ட அந்த ஆறாம் எண் அபார்ட்மெண்டில் தரைத் தளத்திலேயே இருந்தது நாலாம் எண் வீடு! அலுவலக நண்பர் வேல்ஸ்-க்கு சொந்தமான வீடு.

வீட்டில் பெண் பார்க்கலாமா என்று கேட்டநாளில்தான் வேல்ஸ் வீட்டில் குடியிருந்தவர் காலி செய்து கொண்டு போனார். (இரண்டும் தனித்தனி சம்பவங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை) கல்யாணமானால் வீடு வேண்டுமே என்ற முன்னேற்பாட்டுடன் அதை மடக்கிப் பிடித்துவிட்டேன்.

வீடு நண்பர் வேல்ஸ்- உடையது என்றாலும் நான் வாடகையை எல்.ஐ.சியில்தான் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தில்தான் வீட்டுக் கடன் வாங்கியிருந்தார் அவர். நான் அந்த வீட்டைக் காலி செய்யும் வரையில் வெளியில் விலை வாசியும் வாடகை நிலவரமும் ஏறியிருந்தாலும் கடைசி வரையில் கடனுக்கான இ.எம்.ஐ என்னவோ அதைத்தான் வாடகையாகக் கட்டி வந்தேன்.

நான் அந்த மாத வாடகையை இ.எம்.ஐ-யாகக் கட்டினேனா என்பதைப் பற்றிக்கூட கேட்க மாட்டார். சில மாதங்களில் தவற விட்டு சேர்த்து அடுத்த மாதத்தில் கட்டியிருக்கிறேன். அவருடைய கணக்குக்காக ரசீதுகளை மட்டும் கொடுத்துவிடுவேன்.

ஒருகட்டத்தில் நானே இ.எம்.ஐ கட்டி அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளப் போவது போன்ற தோற்ற மயக்கத்தில் இருந்தேன். அந்த அளவுக்கு சொந்த வீட்டின் உணர்வைத் தந்த வீடு அது!

மேலே சொன்னது போல ஒற்றைப் படுக்கையறைதான் வீடு… நுழைந்தவுடன் ஒரு ஹால்… அதில் உள்ள ஒரு வாசலில் நுழைந்தால் அடுக்களை… இன்னொரு வாசலில் நுழைந்தால் படுக்கையறை..! கழிவறையும் குளியலறையும் தனித்தனியாக ஹாலில் இருந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும். இந்த வசதிதான் இந்த வீட்டின் சிறப்பு.

விருந்தினர்கள் வந்திருந்தாலும் கூட ஹாலில் படுத்திருப்பவர்கள் இரவு நேர இயற்கை உபாதைகளுக்காக படுக்கையறைக் கதவைத் தட்ட வேண்டிய தேவை இல்லை. பல நாட்களை விருந்தினர்களோடு கழித்த எங்களுக்கு இது பெரும் வசதியாக இருந்தது.

இரட்டைப் படுக்கை அறைகளைக் கொண்ட சி வகையில் பல பிளாக்குகள், ஒற்றைப் படுக்கையறை கொண்ட டி வகையில் பல பிளாக்குகள், ஒற்றை அறை வீடான ஈ வகையில் பல பிளாக்குகள் என்று ஒரு கிராமம் அளவுக்கு குடும்பங்களால் நிறைந்திருந்த குடியிருப்பு அது!

பாஸ்கர் சக்தி, யுகபாரதி, ராஜூ முருகன் என்று பல நண்பர்கள் புடைசூழ குடியிருந்த குடியிருப்பு என்பதால் அந்நியமாகவே இல்லை. பழகிய இந்த நண்பர்களுக்கு நிகராக புதிதாகக் கிடைத்த ஆஷா அம்மா, சுபா அம்மா போன்ற சகோதரிகளும் அந்த நினைவுகளை இனிமையாக்கினர்.  அந்த வகையில் அந்த வீடு எப்போதுமே இல்லம்தான்!

தீபனின் படிப்புக்காக (எல்.கேஜிதான்) கோடம்பாக்கத்தில் இருந்து இடம்பெயர்ந்து வளசரவாக்கம் வந்து சேர்ந்து குடியிருந்த வாடகை வீடுகள் தந்த அனுபவம் வேறு வகை! சொந்த வீடு வாங்கும் முடிவை நோக்கித் தள்ளும் அளவுக்கு அன்பானவர்களாக இருந்தார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

அப்படித்தான் கிடைத்தது ஜேட் அபார்ட்மெண்ட்ஸ் என்ற குடியிருப்பில் உள்ள வீடு! ஆதார் கார்டில் இடம் பிடித்து அசைக்க முடியாத அடையாளமாகி இருக்கும் அந்த வீடுதான் பத்தாண்டுகளுக்கும் மேலாக என் விலாசம். இரட்டைப் படுக்கையறை, இரண்டிலும் தனித்தனியே பாத்ரூம்கள் என்று வசதிக்குக் குறைவில்லை.

இந்தப்பக்கம் ஆறு, அந்தப்பக்கம் ஆறு என்று இரண்டு பிளாக்குகளில் 12 வீடுகள்… ஆனால், 12 வீடுகள் என்பதைவிட 12 க்தவுகள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மூடிய கதவுகள்தான் கண்ணில் படும். நகரத்தில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் கதவுகள் அவை!

மூடிய கதவுகளுக்குள் அன்பும் அரவணைப்புமாக இருந்தாலும் கூடி வாழும் இயல்பினனான எனக்கு மூடிய கதவுகள் மூச்சு முட்ட வைக்கின்றன.

சிறிய சன்னல் திறப்பு போல 12ல் ஒரு வீடு மட்டுமே உறவு போல போய் வரும் அளவுக்கு உரிமை கொடுத்திருக்கிறது. ஒரு வெப் சீரிஸே எடுக்கும் அளவுக்கு அழகழகான கதைகள் கொண்ட சகோதரிகள் அம்மாவோடு வாழும் வீடு..! அந்த வீட்டில் இப்போதைய புதிய வரவு நோயல் (இன்னும் ஒரு வயதைத் தொடாத குட்டிப் பயல்) வீட்டை இன்னும் அழகாக்கி இருக்கிறான்.

இதுவரையில் சொன்ன எத்தனையோ வீடுகளில் என் வேர்களைப் பரப்பியிருப்பதால் இந்த வீட்டில் என்னால் நிலை கொண்டிருக்க முடிகிறது.

ஏனென்றால் வீடு என்பது வெறுமனே வீடு மட்டுமல்ல!

அன்பும் நன்றியும்..!

Sunday, August 15, 2021

வீடுபேறு! 15/16

காணி நிலம் வேண்டும் என்ற பாரதிக்கு நட்பு வட்டாரம் ரொம்பக் குறைவாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஏக்கர் கணக்கில் நிலம் வேண்டும் என்று கேட்டிருப்பார் சௌபா அண்ணன் தோட்டம் போல!

மதுரை திண்டுக்கல் சாலையில் கொட ரோட்டுக்குப் பக்கத்தில் உள்ளே உள்ளே பல கிலோமீட்டர் பயணித்துச் சென்றால் சௌபா அண்ணனின் தோட்டத்தை அடையலாம், இல்லை, அது அண்ணனின் வீடு!

வீடு என்றால் முற்றம், திண்ணை, முன்னறை, பின் அறை, அடுக்களை என்று எல்லாமும் இருக்க வேண்டும் அல்லவா… இதையும் நீங்கள் அப்படி நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அங்கு இருப்பது ஒற்றை அறையும் ஒரு சமையலறையும்தான்! மற்ற எல்லாமே சுற்றியுள்ள தோட்டத்தின் பார்வையில்தான்..!

பொதுவாக அரவத்தின் அசைவு கேட்டால்தான் கோழிகளெல்லாம் நடுங்கும் என்று சொல்வார்கள், ஆனால், சௌபா அண்ணன் தோட்டத்தில் வளரும் கோழிகள் எல்லாம் அவருடைய நண்பர்களின் குரல் கேட்டால்தான் நடுங்கும். யார் வந்தாலும் நிச்சயமாக ஒன்றிரண்டு கோழிகளுக்கு சொர்க்கமோ நரகமோ நிச்சயம்!

போய் இறங்கும்போதே எல்லைச் சாமி போல இரு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்பார். ஒருகையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்.

‘வாடா தம்பி… வாடா தம்பி…’ என்பார். அவரிடம் எப்போதும் இரண்டு கேள்விகள் இருக்கும். என்ன படிச்சுகிட்டிருக்கே..? இது முதல் கேள்வி..! என்ன எழுதிகிட்டிருக்கே..? இது இரண்டாவது கேள்வி. இந்த இரண்டுக்கும் அவருக்கு திருப்தியான பதில் கிடைக்காவிட்டால் ஆளே கொஞ்சம் முகம் வாடிப் போய்விடுவார்.

இங்கே வந்திருடா எழுதறதுக்கு… சாப்பாடு கீப்பாடு எல்லாம் பார்த்துக்கிடலாம்…  பேப்பர் பேனாவெல்லாம் வேணும்னாலும் வாங்கிக்கிடலாம் என்பார். அண்ணே… லேப்டாப்புல எழுத ஆரம்பிச்சு கொள்ள நாள் ஆகிருச்சுண்ணே… இப்ப போய்… என்றால் சிரிப்பார். டேய்… அண்ணனை பழசுன்றியா… என்பார்.

எங்களுடைய முன்னத்தி ஏர் அவர்… மாணவப்பத்திரிகையாளர் என்ற திட்டத்தின் முதல் செட் மாணவர் அவர். சௌந்தர பாண்டியனாகத் தொடங்கி சௌபா ஆனவர். எழுத்துல பொரட்டிறணும்டா… இல்லன்னா, எழுதி என்னத்துக்கு..? என்பார்.

என்னுடைய திருமணத்துக்கு அவரையும் அழைத்திருந்தேன். அவரோ அலுவலக நண்பர்களை எல்லாம் தோட்டத்துக்கு வரவழைத்துவிட்டார். எல்லோரும் இங்கே இருந்து குற்றாலத்துக்கு பாபு கல்யாணத்துக்குப் போயிறலாம் என்று சொல்லி! சொன்னபடியே எல்லாரும் வந்துவிட்டார்கள் அண்ணனைத் தவிர! உற்சாகக் கொண்டாட்டத்தில் சர்க்கரை அளவு கூடி நகர முடியாமல் போய்விட்டது. விட்றா தம்பி… அண்ணன் தோட்டத்துல இருந்தாலும் அன்னிக்கு அங்கேதான் இருந்தேன்… என்று சமாதானம் சொன்னார்.

அவருடைய தோட்டத்தையும் அந்த வீட்டையும் தமயந்தி அக்கா அழகாக தன்னுடைய தடயம் படத்தில் பதிவு செய்திருப்பார். எல்லோருடைய மனதிலும் இருக்கும் அந்த வீடு, அடையாளமாக அவர் படத்திலும் இருக்கிறது.

இரண்டுமுறை அந்த வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

முதன்முறை ராஜூமுருகனுடன்… ஒரு இலக்கில்லாத பயணத்தின் ஒரு மாலைப் பொழுதில் அவரைத் தேடிப் போனோம். சில பல கோழிகள் குலை நடுங்கின. ஆனால், போகும்போதே, அண்ணன்கிட்டே சிக்கிடக் கூடாது… நம் பயணத் திட்டத்தில் பெரிய ஓட்டை விழுந்துவிடும்… அண்ணன் நம்மளை அமுக்கிப் போட்டுருவார் என்று பேசிக் கொண்டேதான் போனோம்.

அதேபோல அவரும் முயன்றார். ஆனால், வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கு… இந்த வழியாகப் போறப்ப உங்ககிட்டே பாஸ் போடாம போறது மரியாதையா இருக்காதேனுதான் வந்தோம் என்று சொல்லி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டோம். எங்கள் பயணத்தின் நோக்கத்தைக் கேட்டுக் கொண்டவர் நாலைந்து நபர்களின் பெயர்களைச் சொல்லி, அவங்களைப் பாருங்க… உங்க முழுக் கதைக்குமான புள்ளிகளை அவங்க வரைஞ்சு கொடுப்பாங்க என்றார். அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

அதன் பிறகு ஒருமுறை கரு.பழனியப்பனோடு போயிருந்தேன். அப்போது இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். தேவைப்பட்டால் பம்ப்ஷெட்டில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் குளிப்போம், இல்லையென்றால் பாத்ரூமில் குளிப்போம் என்று சகலமும் கொண்டாட்டமாகவே இருந்தது.

அப்போதுதான் கலங்கிய கண்களோடு நடமாடிக் கொண்டிருந்த சௌபா அண்ணன் சொன்னார். பாபு… இந்த வீட்டுக்கு நம்ம எம்டி வந்திருக்கார் தெரியுமா..? ஒருநாள் நான் வர்றேன்னு சொன்னார். இங்கே வசதியெல்லாம் இருக்காதுனு சொன்னேன். உன்கூட இருக்கறதைவிட பெரிய வசதி என்ன இருந்துடப் போவுது… நான் வர்றேன்னு கிளம்பி வந்துட்டார். அம்மாவும் கூட வந்திருந்தாங்க!

நான், எம்டி எல்லாரும் சீட்டு விளையாடினோம். சின்னப் பிள்ளை மாதிரி இங்கேயும் அங்கேயுமா நடமாடினார். சந்தோஷமா இருக்கேன்… ரொம்ப நிறைவா இருக்கேன்னு மனசாரச் சொல்லிகிட்டே இருந்தார். மனசே இல்லாமல்தான் கிளம்பிப் போனார்னு சௌபா அண்ணன் சொல்லும்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!

உட்கார்ந்து பேச, எழுத, சாப்பிட என்று தனியாக ஒரு ஷெட் அமைத்திருப்பார். அங்கேயேதான் அமர்ந்து கொண்டிருப்பார். அந்த ஷெட்டுக்குள் யார் யாரெல்லாம் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று பட்டியல் வாசித்துக் கொண்டே இருப்பார். பாரதி ராஜாவில் தொடங்கும் பட்டியல்… பலப்பல மனிதர்கள் பெயரால் நீண்டுகொண்டே செல்லும். பெரிய ஆள் சின்ன ஆள் எல்லாம் கிடையாது, எல்லோரும் சௌபா அண்ணனின் நண்பர்கள். அவ்வளவே! வேறு யாரிடமாவது பட்டியலைச் சொல்லும்போது நிச்சயம் என் பெயரையும் சொல்வார்.

பாபு… பிள்ளைகளையும் வீட்டம்மாவையும் கூட்டிட்டு வா… நாலுநாள் இருந்துட்டு போ என்பார். எத்தனையோ பேரோட சினிமா இந்த வீட்டுல உருவாகி இருக்கு… நீயும் உன் கதையை இங்கே வந்து எழுது என்பார். நிச்சயம் வர்றேன்ணே என்பேன்.

அந்த வீட்டின் அடையாளமாக சிரிக்கும் புத்தர் நின்று கொண்டிருப்பார்.

இப்படி சுகமான நினைவுகளோடு இதை முடித்துவிடலாம்தான். ஆனால், எப்போதுமே நாங்கள் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மூத்தவர் சௌபா அண்ணன் தானே… இந்தக் கட்டுரையை அப்படி இனிமையாக முடிக்க அவர் விடவில்லை…

எல்லா நண்பர்களுக்கும் இளைப்பாறுதல் தந்த அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

இரு கையை விரித்து நின்று வாரி அணைத்து வரவேற்ற அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

சிரிக்கும் புத்தர் பார்த்தபடியே நின்ற அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

சௌபா அண்ணனின் மகன் சடலத்தையும் தோண்டி எடுத்தார்கள்…

அதற்கு முந்தைய கணம் வரையில் வீடாக இருந்தது அது!

ஏமாத்திட்டீங்க சௌபா அண்ணே!

Friday, August 6, 2021

வீடுபேறு! 14/16

 ஆச்சி வீடு என்பது அன்னையின் வீடுதான்… எந்தப் பிள்ளையிடம் உங்க ஆச்சி வீடு எது என்று கேட்டாலும் அம்மாவைப் பெற்ற ஆச்சியைத்தான் சொல்லுமே தவிர, அப்பாவைப் பெற்ற ஆச்சியைச் சொல்லும் பிள்ளைகள் மிக மிகக் குறைவு. நானும் அப்படித்தான்… அதற்கு அம்மா ஆச்சியின் பிரியம் ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் அப்பா ஆச்சி எங்களுடனேயே இருந்தாள் என்பதுதான்!

அம்மா வளர்ந்ததெல்லாம் மதுரையில்… திருமணம் ஆகும்வரை அங்குதான் இருந்தார். அதனால் எங்களுக்கு தொடக்க காலத்தில் ஆச்சி வீடு என்றால் அது மேலப் பொன்னகரத்தில் இருந்த ஆச்சிவீடுதான். நான் பார்த்த முதல் அடுக்குமாடிக் குடியிருப்பு!

அது எப்படி கீழ் வீடு ஒருவருக்கும் மேல் வீடு இன்னொருவருக்கும் சொந்தமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியம் வெகுநாட்களாக எனக்கு இருந்தது.

ஒற்றை அறை, ஒரு சமையலறை, அதிலேயே வாசல் வைத்து ஒரு பாத்ரூம், பின்னால் ஒரு பால்கனி, அதை ஒட்டி ஒரு கக்கூஸ்! இவ்வளவுதான் மொத்த வீடும். ஆனால், தாத்தா அந்த ஒற்றை அறையை காட்போர்டு தட்டி வைத்து மறைத்து ஒரு சிறிய வராண்டா போன்ற பகுதியாகவும் ஒரு படுக்கையறையாகவும் மாற்றியிருந்தாங்க. அடுக்களையும் பெரியதாகவே இருக்கும். அதனால் அந்த வீட்டில் நெருக்கடி என்பதே தெரியாது.

இந்த அறைகளை விட மனதுக்குள் இடம் பிடித்து உட்கார்ந்திருப்பது முழுப் பரீட்சை லீவில் நாங்கள் செல்லும்போது ஆச்சி சமைத்துத் தரும் முப்பது நாள் முப்பது சமையல்தான். காலையிலும் மதியமும் அத்தனை வெரைட்டியில் சமைத்துப் போடுவாங்க. ஆச்சி என்றால் முட்டைக் குழம்பு வாசனைதான் முதலில் வரும்!

அதன்பிறகு ஆச்சி வீடு என்றால் அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்குக் குடிபெயர்ந்த பிறகு குடியிருந்த கிட்டங்கி வீடுதான்! சொந்தமாக இருந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் காலி செய்ய மறுத்து கோர்ட்டுக்குப் போக, வழக்காடி வெற்றி பெற்று வீட்டை மீட்டார்கள் தாத்தா. அதுவரையில் குடியிருந்த வீடுதான் கிட்டங்கி வீடு!

விவசாயிகள் தானியங்களைக் கொட்டி வைத்துப் பாதுகாக்கும் கிட்டங்கியை ஒட்டியிருந்த வீடு என்பதால் அதற்கு கிட்டங்கி வீடு என்று பெயர்.

ஒருபக்கம் கிட்டங்கி சுவர் மதில் போல நீண்டிருக்க அதையொட்டிய காலி இடத்தைத் தாண்டி வரிசையாக நிற்கும் வீடுகளே கிட்டங்கி வீடு. கிட்டத்தட்ட பத்து வீடுகள் இருந்தன. அத்தனை வீடுகளும் ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டவை. எல்லாச் சுவர்களுமே பொதுச் சுவராக ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்க, வீட்டைப் போலவே மனிதர்களும் ஒட்டி உறவாடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

அப்பாவின் நண்பரான ஷாப் கடை பாய் வீட்டில்தான் தாத்தா ஆச்சி குடியிருந்தார்கள். முதல் வீடு பாய் வீடு, அடுத்த வீடு தாத்தா குடியிருந்த வீடு, அதையடுத்து செல்வநாயகம் பெரியப்பா வீடு. அப்பாவோடு பணியாற்றிய அவர் அதன்காரணமாகவே எனக்கு பெரியப்பா.

ஆனால் மருந்தாளுனர் படிப்பின்போதே சொல்லிக் கொடுப்பார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் நடை உடை பாவனை தொடங்கி தோளில் போடும் துண்டு வரையில் அப்பாவும் பெரியப்பாவும் ஒன்று போல இருப்பார்கள்.

அங்குதான் முதன்முதலில் மணி ப்ளாண்ட் பார்த்தேன். அந்த வீட்டு பெரியம்மாவின் அப்பா பாட்டில்களில் மணி ப்ளாண்ட் வளர்த்தார். கூடவே பூனைகளும் வளர்த்தார்.

செல்வநாயகம் பெரியப்பாவின் பிள்ளைகளான ஜேம்ஸ் அண்ணன், சேவியர், ஜெஸ்ஸி என்கிற ஜெயசீலன் மூவரும் இருந்ததால் தாத்தா வீட்டுக்குப் போனால் விளையாட்டுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும்.

கிட்டங்கி வீடும் கிட்டத்தட்ட மூன்று பத்தி வீடுதான். சைடு ரூம் இருக்கும் என்பதால் சிறு வசதி கூடுதலாகத் தெரியும். சைடு ரூம் அளவையும் சேர்த்து அடுக்களை நீளமாக இருக்கும். பின்னால் இருக்கும் புறவாசல் அந்த வீட்டுக்கு தனி அழகைக் கொடுக்கும்.

கிட்டங்கி வீடு என்றவுடன் என் நினைவில் வருவது அந்த மொத்த வீடுகளுக்கும் பொதுவாக இருந்த அடிகுழாய்தான். செலவுக்குத் தண்ணீரை அங்குதான் அடித்து எடுக்க வேண்டும். சின்னப் பசங்களாக இருக்கும் என்னாலோ அண்ணனாலோ பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்க முடியாது. அதனால் சிறிய குடம் ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தக் குடத்தைக் கொண்டுபோய் குழாயடியில் வைத்து அடிகுழாயை அடித்தால் நான்கே அடியில் குடம் நிரம்பி விடும். அதனால் நானும் அண்ணனும் அந்த குடத்துக்கு நாலடியார் என்றே பெயர் வைத்திருந்தோம்.

அந்த வீட்டில் இருக்கும்போதுதான் பெரிய மனிதன் போல தனியே கடைக்குப் போவேன். பலமுறை என்னைத் தேடிக் கொண்டு யாராவது வரவேண்டியிருக்கும். ஏனென்றால், வித்தியாசமாக எதையாவது பார்த்தால் வேடிக்கை பார்த்தபடி நின்றுவிடுவேன்.

அப்படித்தான் ஒருமுறை மதிய விருந்து முடிந்து வெற்றிலை பாக்கு வாங்கிவரச் சொன்னார்கள். கிட்டங்கியை ஒட்டி கோர்ட், தாலுகா ஆபீஸ் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இருக்கும் என்பதால் அது பிஸியான பஜாராக இருக்கும். அதில் ஒரு கடைக்குப் போய் ஒரு ரூபாயைக் கொடுத்து வெற்றிலை பாக்கு கொடுங்க என்றேன். அப்போது என்னை இடித்துக் கொண்டு வந்து நின்ற நபர் ஒருவர் இடுப்பில் இருந்து கத்தியை உருவி கடைக்காரரை நோக்கி வீச, கண்ணிமைக்கும் நொடியில் கடைக்காரர் அதை லாவகமாகத் தடுத்து அதே கத்தியால் வந்தவரைக் குத்தினார். நிதானமாக என்னிடம் வாங்கிய காசைக் கொடுத்து, பக்கத்து கடையிலே வாங்கிக்கோ தம்பி என்று சொல்லிவிட்டு கடையை அடைத்துவிட்டு அப்போது வந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டார். பதற்றத்தில் உறைந்து போய் நின்றிருந்த என்னை மாமா வந்து கூட்டிக் கொண்டு போனார்.

இன்னொருமுறை இரவு உணவு முடித்துவிட்டு வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். பெட்டிக்கடை வரைக்கும் போய்விட்டேன். அப்போதுதான் பக்கத்து கடையில் டிஸ்ப்ளேயில் வைத்திருந்த டிவியில் ஏதோ ஜாக்கிசான் படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கிய என்னை கடை அடைக்கும் நேரம் வரையில் காணவில்லையே என்று தேடி வந்த அண்ணன் அழைத்துக் கொண்டு போனார்.

மூன்றாவது முறை சந்தை பக்கத்தில் நடந்து கொண்டிருந்த பாம்பு கீரி சண்டைக்காக காத்துக் கொண்டிருந்தேன். அங்கே வீட்டில் நான் வாங்கி வரப் போகும் காய்கறிக்காக சமைக்காமல் காத்துக் கொண்டிருந்தார்கள். கீரி பாம்பை விடவில்லை என்றாலும் பரவாயில்லை, கிளம்பி விடலாம் என்று பார்த்தால் நகர்ந்தால் ரத்தம் கக்கிச் செத்துருவே என்று மிரட்டிக் கொண்டிருந்தான் பாம்பாட்டி. என்ன செய்வது என்று காலைச் சேர்த்து நின்று கொண்டிருந்த என்னைத் தலையில் தட்டி கூட்டிக் கொண்டு போனார் தாத்தா!

கிட்டங்கி வீட்டில் காற்றைப் போல மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. என்ஜினியரிங் படித்திருந்த மாமா சுயமாக ஒரு டேப் ரெக்கார்டரை அசெம்பிள் செய்து பாட வைப்பார். அந்த டேப் ரெக்கார்டரில் இருந்து நீளமாக வயர் இழுத்து அடுக்களையிலோ திண்ணையிலோ ஸ்பீக்கரை வைத்து பாட்டுப் போடுவார். திடீரென்று கொஞ்சநேரத்துக்கு பாட்டு கேட்காது. ஆச்சியும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவர்கள் பேசியது ஒலிபரப்பாகும். ஸ்பீக்கரை மைக்காக மாற்றி பேசியதைப் பதிவு செய்திருப்பார்.

ஒருவர் பாட, இன்னொருவர் குடத்தில் தாளம் போட, இன்னொருவர் வேறொரு வாத்தியம் வாசிக்க என்று மாமாக்கள் எல்லோரும் சேர்ந்து கச்சேரியே நடத்துவார்கள். அதில் பல பாடல்கள் ஒலிப்பதிவும் ஆகும். அந்த ஒலிநாடாக்கள் எங்கிருக்கின்றனவோ… ஆனால், பாடல்கள் என் மனதில் இன்னமும் ஒலிக்கின்றன.

சொந்த வீட்டு சுகம் வராது என்று அங்கிருக்கும்போது பேச்சு எழும். ஆனால், என்னைப் பொறுத்த அளவில் கிட்டங்கி வீடு இல்லையென்றால் இத்தகைய அனுபவங்கள் கிட்டியிருக்காது அல்லவா!

Monday, August 2, 2021

வீடுபேறு! 13/16

 நீ என்ன பண்றே… வண்டியை எடுத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு… அங்கே இருந்து ஒரே வண்டியில நாம அசைன்மெண்ட்டுக்கு போயிறலாம்… அப்டியே ஆபீஸ் போயிட்டாக் கூட சாயங்காலம் வீட்டுல வந்து வண்டியை எடுத்துக்கோ..!’ முதல்நாள் அசைன்மெண்டுக்காகப் பேசும்போதே சொல்லிவிடுவார் பொன்ஸி அண்ணன். (பொன்.சந்திரமோகன் என்பது அவர் பெயர். அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவரே கூட திரும்பிப் பார்க்க மாட்டார்) விகடனின் சீனியர் போட்டோகிராபர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் மட்டுமல்ல… தற்காலிக நிருபராக இருந்த என்னோடு அசைன்மெண்ட் வரும் ஒரே ஆள் அவர்தான் என்பதாலும் பதில் சொல்லாமல் கேட்டுக் கொள்வேன்.

நான் தங்கியிருந்த அறையில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு கேகே நகரில் இருக்கும் பொன்ஸி அண்ணன் வீட்டுக்குப் போகும் நேரத்துக்கு நான் அசைன்மெண்ட் ஸ்பாட்டுக்கே போய்விடலாம். அவரும் அதே நேரத்துக்குப் புறப்பட்டால் அங்கு வந்துவிடலாம். ஆனால், செய்யமாட்டார். தன் வீட்டுக்குதான் வரவைப்பார்.

முதன்முறையாக அழைத்தபோது இல்லண்ணே… நேரே ஸ்பாட்டுக்கு வந்துடறேன்… என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கொஞ்சம் எரிச்சலோடுதான் அவர் வீட்டுக்குப் போனேன்.

கேகே நகர் பொன்னம்பலம் காலனியில் இருந்தது அவர் வீடு. ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட் அது. ஹால், கிச்சன், ஒரு படுக்கையறை என்று சிம்பிளாக இருக்கும் வீடு. நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த வீட்டில்தான் கஸ்தூரி ராஜா, செல்வராகவன், தனுஷ் எல்லாம் ஆரம்ப காலத்தில் குடியிருந்தனர் என்பதை பின்னாளில் அறிந்தேன்.

படியேறி மாடியில் இருக்கும் பொன்ஸி அண்ணன் வீட்டுக்குச் செல்வதற்குள் இடைச்செருகல் செய்தி… சென்னையில் பேச்சிலராக வாழ்ந்த காலத்தில் பெரும்பாலும் ப்ரெஞ்ச் எனப்படும் பிரேக்ஃபாஸ்டுக்கும் லஞ்சுக்கும் இடைப்பட்ட சாப்பாடுதான் வாய்க்கும். அதாவது, பனிரெண்டு மணியளவில் நேராகப் போய் மீல்ஸ் சாப்பிட்டு விடுவோம். காலையில் ரொம்பப் பசியாக இருந்தால் ஒரு டீ எக்ஸ்ட்ராவாக ஓடும். அப்படித்தான் இருக்கும் நிருபர் வாழ்க்கை!

காலிங் பெல்லில் கைவைக்கும்போதே உள்ளே இருந்து அண்ணன் குரல் வந்துவிடும். ‘வாங்கண்ணே… கதவு திறந்துதான் இருக்கு…’

பொன்ஸி அண்ணனின் தம்பி பொன்.காசிராஜனுக்கும் எனக்கும் சம வயது… ஆனால், பொன்ஸி அண்ணன் என்னை அண்ணே என்றுதான் கூப்பிடுவார். விகடனுக்கே அவர் அண்ணன்… ஆனால் விகடனில் எல்லோரும் அவருக்கு அண்ணந்தான்!

உள்ளே போனால் இரண்டு தட்டுகளில் சோறு பரிமாறப்பட்டு குழம்பு ஊற்றி தயாராக வைத்திருப்பார். ‘அண்ணி ஸ்கூலுக்கு போயிருச்சு… நானும் ரெடியாகிட்டேன்… தட்டுல எடுத்து வெச்சேன்… நீங்க வந்துட்டீங்க… ஆறிடுச்சுன்னா கடகடனு சாப்டுறலாம்… நீங்க ஆரம்பிங்க… நான் சட்டையை மாத்திட்டு வந்துடறேன் என்றபடி அறைக்குள் சென்று விடுவார்.

நாம மதியம் சாப்டே பழகிட்டோமே என்று மனசு நினைத்தாலும் வயிறு சோற்றைப் பார்த்ததும் பசிக்கும். குழம்பு வாசனை வேறு ஆளை இழுக்கும். அசைன்மெண்டே அதுதான் என்பது போல எடுத்துப் போட்டு சாப்பிட ஆரம்பிப்பேன். ஆற வைத்த சோத்தையும் நம் தட்டில் கொட்டுவார். அண்ணே… அண்ணே என்பதற்குள் அதன் தலையில் குழம்பை ஊற்றுவார். சாப்பிடுங்க… நான்லாம் சாப்டாச்சு… என்று கேமரா பையைச் சரிபார்க்கத் தொடங்குவார்.

பொன்ஸி அண்ணன் வீடு என்று நினைத்தாலே அறைகளை முந்திக் கொண்டு நினைவுக்கு வருவது சுடுசோறும் சுவையான குழம்பும்தான். அண்ணி பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் குழம்புதான் பிரதானமாக இருக்கும். லீவு நாளில் போனால் கோழி, ஆடு என்று வெளுத்துக் கட்டலாம்.

அதாவது லீவு நாளில் போவது என்பது சாப்பாட்டுக்காகத்தான். கொஞ்சநாளில் பொன் காசி ராஜனும் விகடனுக்கு வந்துவிட்டான். அதன்பிறகு பெரும்பான்மையாக நாங்கள் இருவரும்தான் அசைன்மெண்ட் செல்வோம். அண்ணனுக்கு பதில் தம்பி என்பது மாறியிருக்குமே தவிர, அந்த சாப்பாடு மேட்டரில் மாற்றமே இருக்காது. அந்த விஷயத்தில் பொன்ஸி அண்ணன் எட்டடி என்றால் காசிராஜன் பதினாறு அடிதான். (மிகச் சமீபத்தில் அவனுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று பார்க்கப் போயிருந்தேன். திரும்பும்போது கைநிறைய பழங்கள் கொடுத்து அனுப்பினான்.)

அலுவலகத்தில் இருந்து புறப்படும்போதே நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்கப்பா என்பார். ஆசிரியராக வேலை செய்யும் அண்ணிக்கு (இதில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர் என்ற பெருமையும் பட்டமும் பெற்றவர் வேறு) ஒருநாளாவது லீவு குடுங்க அண்ணே என்றால், அட… வாங்கப்பா… நாம சமைச்சு அண்ணிக்கு குடுப்போம் என்பார். ஆனால், நாம் செல்லும்போதே சமைத்து ரெடியாக வைத்திருப்பார் அண்ணி.

சும்மா சம்பிரதாயத்துக்குச் சொல்வார்களே… இதை உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்க என்று… அண்ணன் வீடு என்பது எங்களுக்கு அப்படித்தான். அது காசியின் வீடாகவும் இருந்ததால் உண்மையிலேயே எங்கள் வீடு போலத்தான் வைத்திருந்தோம். ஆங்கில சானல்களில் போடும் படங்களைப் பார்க்க நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருப்பதில் தொடங்கி, அகால நேரத்தில் அசைன்மெண்ட் முடித்துவிட்டு வந்து படுப்பது வரையில் சொந்த வீட்டில்கூட சில சச்சரவுகள் வர வாய்ப்புள்ள வேலைகளை எல்லாம் சலிக்காமல் செய்வோம்.

அண்ணனும் காசியும் சொந்த ஊரான தேனி, வடபுதுப்பட்டியில் ஒரு வீடு கட்டினார்கள். கீழேயும் மேலேயுமாகப் பெரிய வீடு. அந்த வீட்டைக் கட்டிய கையோடு காசி கல்யாணமும் முடித்தான். அப்போது ரெண்டு பேரும் சென்னையிலே இருக்கீங்க… எதுக்கு இங்கே இவ்வளவு பெரிய வீடு என்றதற்கு, எல்லோரும் வந்தாப் போனா வீடு கொள்ளணும்ல… என்றார்கள். எல்லோரும் என்பது நாங்கதான்! ஏனென்றால் அவர்களுடைய உறவுகள் எல்லோரும் அந்த ஊரில்தான் இருக்கிறார்கள்.

(இப்போது காசி சொந்த ஊரில் ஒரு தோட்டமும் வீடும் அமைத்திருக்கிறான். அதுபற்றிப் பேசும்போதும் எல்லோரும் வந்தால்கூட படுக்க கொள்ள வசதியா இருக்கும் என்றுதான் சொல்கிறான்.)

சாப்பாடு மட்டுமல்ல… ஊருக்குப் போயிருந்தேன்பா… பலாப்பழம் கொண்டு வந்தேன் என்று சுளைகள் கொடுப்பார்… மாம்பழம் வந்துச்சு என்று பழங்கள் கொடுப்பார். ஒருமுறை சீக்கிரம் வீட்டுக்கு வா என்று அழைத்தார். போனேன். படுக்கை நிறைய புதிது புதிதான சட்டைகளைக் கொட்டி வைத்திருந்தார். நம்ம மாம்ஸ் ஒருத்தர் எக்ஸ்போர்ட் பிசினஸில் இருக்கார்… அவங்க லாட் லாட்டா பேக்கிங் பண்ணுனது போக மிஞ்சிய சட்டைகளை கட்டி வெச்சிருந்தார். நான் எடுத்துட்டு வந்துட்டேன்… உன் சைஸுக்கு இருக்கறதுல உனக்கு பிடிச்ச சட்டைகளை எடுத்துக்கோ என்றார். நாலைந்து சட்டைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

பொன் காசியின் திருமணத்துக்குப் பிறகு அண்ணன், அண்ணி தனி வீடாகவும் காசியும் அவன் மனைவி சுஜாதா தனி வீடாகவும் எடுத்து விட்டனர். இப்போது இருவருமே சென்னையில் தனித்தனி வீடு கட்டிக் கொண்டு விட்டார்கள்.

கல்யாணமான புதிதில் வழக்கம்போல அசைன்மெண்ட் வேலையாக காசியின் வீட்டுக்குச் சென்றேன். இப்போது எனக்கும் திருமணம் ஆகிவிட்டதால் காலை சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துவிட்டுத்தான் சென்றேன்.

காசியின் மனைவி சுஜாதா கேட்டார்… ‘உங்களுக்கு காபியா… டீயா… இல்லை ஹார்லிக்ஸ், பூஸ்டா..?’

அதுசரி… அண்ணியைப் போல இவர் வேலைக்குச் செல்லவில்லை அல்லவா… உபசரிப்பு இந்த அளவுக்குக் கூட இல்லைன்னா எப்படி?!

Wednesday, July 28, 2021

வீடுபேறு! 12/16

 மதுரை… என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஊர்… என்னுடைய பல ’முதல்’கள் இங்கேதான் அரங்கேறியிருக்கின்றன. என்னுடைய தாத்தா இங்கே பணியாற்றிய காலங்களில் முழு பரீட்சை விடுமுறைகள் அனைத்துமே மதுரையில்தான் கழிந்தன. இப்போதும் எனக்கு சி6/11, மேலப்பொன்னகரம் மூன்றாவது தெரு என்பது மனப்பாடமாக இருக்கும் விலாசம். என் தாத்தா அந்த ஊரை விட்டு வந்தபிறகு அந்த ஊரோடு இருந்த உறவு விட்டுப் போய்விட்டது. மதுரைக்கு நான் விருந்தினன் ஆகிவிட்டேன். அதன்பிறகு மதுரைக்கு வர நேர்ந்த காலங்களில் விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறேன்.

முந்தையா பாராவில் சொன்ன முதல் பட்டியலில் கொஞ்சம் இங்கே சொல்கிறேன். முதன்முதலாக கோன் ஐஸ் சாப்பிட்டது மதுரையில்தான்… குளிரூட்டப்பட்ட ஆவின் பால் குடித்தது இங்கேதான்… பொருட்காட்சி பார்த்தது, சர்க்கஸ் பார்த்தது இங்கேதான்… ஏசி திரையரங்கில் சினிமா பார்த்தது இங்கேதான்! (சினிப்ரியா தியேட்டரில் கல்லுக்குள் ஈரம்) சைக்கிள் கற்றுக் கொண்டது இங்கேதான்… இப்படி பல இருக்கின்றன. எல்லாமே குழந்தைப் பிராய நினைவுகள்…

அதன்பிறகு விகடனுக்கான தேர்வை எழுதிய இடம் மதுரைதான்… அங்கிருந்துதான் என் பயணத்தைத் தொடங்கினேன். பல போட்டித் தேர்வுகளை மதுரைக்கு வந்து எழுதியிருக்கிறேன். அந்த வகையில் என் வேலை முயற்சியின் முதல் அங்குதான் தொடங்கியது.

இந்த வரிசையில், திருமணத்துக்குப் பிறகு நடந்த மிக முக்கியமான முதல் ஒன்று இருக்கிறது. நானும் என் மனைவியும் முதன்முதலாக சண்டை போட்டுக் கொண்ட இடம் மதுரைதான்!

என் அண்ணியின் வீடு… என் மனைவியின் அக்கா வீடு! விருந்துக்கு வந்த இடத்தில் சின்னதாக மன வருத்தம்… இருவரும் முதுகுகாட்டிப் படுத்திருந்தோம். விடிந்தபிறகும் சண்டை தொடர்ந்தால் விபரீதமாகிவிடும் என்பதால் அதைத் தொடரவில்லை. அனேகமாக எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த பூசல்… ஊடல் அது! இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்டது! முதல் என்பதால் நினைவில் தங்கியிருக்கிறது.

அண்ணியின் வீடு கொஞ்சம் வித்தியாசமான அமைப்பில் இருக்கும். அவர்களுக்கு இரண்டு வீடுகள் உண்டு. அதாவது வீடு இரண்டு இடத்தில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தளங்கள் இருக்கும்.

முதலில் அவர்கள் இப்போது இருக்கும் வீடு… இது கொஞ்சம் பெரிய வீடு. தரைத் தளத்தில் வாடகைக்கு ஆள் இருக்க, முதல் மாடிப் படியேறிப் போனால் படிக்கட்டு முடியும் இடத்தில் சிறு திண்ணை இருக்கும். அதில் இருந்து உள்ளே நுழைந்தால் சின்னதாக ஓர் அறை… ஹால் என்று சொல்லலாம், ஆனால் அது அகலமான விசாலமான சித்திரத்தைக் கொடுக்கும் என்பதால் அறை என்று சொல்கிறேன். அதைத் தாண்டி உள்ளே சென்றால் இன்னொரு சிறிய அறை… அதற்குப் பின்னால் அடுக்களை. இந்த வீட்டின் பெரிய அறை என்றால் அடுக்களைதான்! அங்கிருந்து வெளியேறி சிறிய சந்து போன்ற பகுதியில் நடந்து சென்றால் கட்டக் கடைசியில் பாத்ரூம்!

படுக்கையறை என்பது அடுத்த மாடியில் இருக்கிறது. அண்ணியும் அண்ணாச்சியும் கீழே அறையிலேயே படுத்துக் கொள்வார்கள் என்பதால் படுக்கையறை என்பது விருந்தினர்களின் வருகையின்போதுதான்!

திரும்பிய பக்கமெல்லாம் பரோட்டாக் கடைகளுக்குப் பெயர்போன மதுரையில் அண்ணியின் வீட்டின் பின்னாலேயே ஒரு கடை இருக்கிறது. போய்ச் சேர்ந்த அன்றே தூக்குச் சட்டியுடன் கடைக்குக் கிளம்பிவிடுவான் என் மகன். அவனுக்குக் கடை தெரியும் என்னும் அளவுக்கு பழக்கமான விஷயம் பரோட்டா வாங்குவது!

அவர்களுடைய இன்னொரு வீடு அதற்கு முந்தைய தெருவில் இருக்கிறது. அது மிகவும் சிறிய வீடு… அதுவும் கீழே ஒரு வளையல் கடை… முதல் மாடியில் ஒரு வீடு… இரண்டாவது மாடியில் ஒரு வீடு என்று இருக்கும். வீடு என்று சொன்னாலும் படியேறி வாசலைத் திறந்து நுழைந்தால் அடுக்களை, அடுத்து ஒரு சிறிய அறை… அவ்வளவுதான் மொத்த வீடும். ஆனாலும் விசாலமான தோற்றம் தருவது வீடல்ல… வசிக்கும் மனிதர்கள்தான்!

அண்ணியைப் பொறுத்த அளவில் அவரை வீட்டின் ராகுல் டிராவிட் என்று சொல்லலாம். மிகவும் பொறுமையாகவும் திறமையாகவும் சூழலை சமாளிக்கும் வித்தை அறிந்தவர். அதனாலேயே வீட்டின் முக்கிய முடிவுகள் எல்லாவற்றுக்கும் அவருடைய ஆலோசனையும் இருக்கும்.

அண்ணாச்சியைப் பொறுத்த வரையில் சிரிப்பு மட்டுமே அவருடைய அடையாளம். எதுவாக இருந்தாலும் சிரிப்பு முகத்தில் இருக்கும். சொல்லும் விஷயங்கள் ரொம்ப கன்சர்வேட்டிவாக இருந்தாலும் அவர் சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் பார்க்க வேண்டும்.

அண்ணியின் வீட்டில் போய்த் தங்கிய காலங்கள் மிகவும் குறைவுதான். சென்னைக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசிக்கும் இடையே இருக்கும் ஊர் மதுரை என்பதால் போகும் வரும் வழிகளில் காரை நிறுத்தி இளைப்பாறிக் கொள்ளும் இடமாகவே இருக்கிறது. அதையும் தாண்டி சில தருணங்கள் தங்க வாய்த்திருக்கிறது.

எந்த அகால நேரத்தில் சென்றாலும் எனக்காக ஃபில்டர் காபியோடு தயாராக இருப்பார். ஊரெல்லாம் டீ குடிக்கும் ஆசாமியான எனக்கு ஃபில்டர் காபி மீது தனி காதல் உண்டு. அதை எப்போதோ ஒருமுறை சொல்லி வைக்க, அதன்பிறகு எப்போது சென்றாலும் ஃபில்டர் காபி நிச்சயமாக இருக்கும்.

சும்மா கடமைக்கு காபி போட்டுக் கொடுத்தோம் என்பதாக இருக்காது. அதைக் கையில் கொடுத்துவிட்டு நம் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். முதல் வாய் குடித்தவுடன் நம் முகத்தில் தெரியும் ரியாக்‌ஷன் அவருக்கு முக்கியம். அதன்பிறகு எத்தனை பாராட்டினாலும் உண்மையான பாராட்டு அந்த முக பாவனைதான்! அதைக் கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால், அவர் மனதில் எந்த கணத்தில் என்ன ஓடுகிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது, முற்றம், திண்ணை, தாண்டினால், ஹால், அதையடுத்து படுக்கையறை, பின்னால் அடுக்களை என்ற வழக்கமான வரிசை போல இல்லாமல் சிறிதும் பெரிதுமான அறைகளோடு புதிர்கட்டங்களைப் போன்ற அவருடைய வீட்டைப் போலவே அவர் மனமும்!

Sunday, July 25, 2021

வீடுபேறு! 11/16

 ‘மதுரையில இருந்து காரைக்குடி போற பஸ்ல ஏறிடு… திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டுல இறங்கி அப்படியே வெளில வந்து ரைட் திரும்பு… ஒரு கோவில் கண்ணுல படும். அதோட காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஒரு சந்து மாதிரி போகும்… அதிலே நுழைஞ்சு வந்தா சந்து முடிவிலே ஒரு தெப்பக்குளம் வரும். அதை ஒட்டி ஒரு லைன் வீடு இருக்கும்… அதிலே முதல் வீடு…’ செழியன் தன் வீட்டுக்கு வழி சொல்வதே கூகுள் மேப் போட்ட மாதிரி தெளிவாக இருக்கும்.

செழியன் எப்போதுமே அப்படித்தான்… எதையுமே விலாவாரியாகப் பேசுவான். அந்த விஷயத்தில் அவன் அம்மா மாதிரி. ‘பாபு…’ என்று ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், கை பரபரவென்று வேலை செய்து கொண்டே இருக்கும். ‘வந்தவனை ஒரு வாய் சாப்பிட விடும்மா… பேசிகிட்டே இருந்தா எப்படி..?’ என்று அப்பா சொன்னால்கூட வாய்தானே சாப்பிடப் போவுது… பேசுறது காதுலதானே விழணும்… சும்மா இருங்க…’ என்று அதற்கும் டீடெய்லாகப் பேசுவார்கள்.

நீச்சல் குளத்தோடு வீடு என்பது பெரிய கனவான்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை… செழியனின் அப்பா போன்ற எளிய பள்ளிக்கூட ஆசிரியரின் வீடாகவும் அது இருக்கலாம். செழியன் அடையாளம் சொல்லும் தெப்பக்குளம் என்பது அவன் வீட்டு நீச்சல் குளம் போல வீட்டோடு ஒட்டித்தான் இருக்கும். ஆனால், நான் போன சமயங்களில் எல்லாம் பெரும்பாலும் வறண்டு போய்த்தான் கிடக்கும்.

செழியன் என் கல்லூரி நண்பன். நான் பொருளாதாரம் படித்த பாளை, சேவியர் கல்லூரியில் அவன் வேதியியல் படித்தான். விடுதியிலும் ஒரே அறையில் கூட தங்கியதில்லை. ஆனால், அவன் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்தான். யார் எது செய்தாலும் பாராட்டுவது அவன் குணம்.

தன் வீட்டைப் பற்றியும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி பற்றியும் பேசிக் கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் வீடு மீது எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போனது. போய் அவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

‘டேய்… எங்க புதுக்கோட்டை ஏரியாவுல ஜல்லிக்கட்டு பிரமாதமா இருக்கும்… பொங்கலுக்கு வீட்டுக்கு வர்றியா என்று கேட்டான். எங்கள் வீட்டில் பொங்கல் முக்கியமான பண்டிகை என்பதையோ இறந்து போன எங்கள் ஆச்சிக்கு அன்று இரவு சேலை வைத்துக் கும்பிடுவோம் என்பதையோ மறந்து, அவனோடு புறப்பட்டு விட்டேன். (பொங்கலுக்கும் ஏன் வரவில்லை என்று என் அப்பா விடுதிக்கு தேடி வந்ததும், என்னவோ தோன்றி பொங்கல் அன்று பகலில் நான் செழியன் வீட்டில் இருந்து புறப்பட்டு இரவில் வீடு வந்து அம்மாவிடம் திட்டு வாங்கியதும் தனிக் கதை!)

வெளிப்பார்வைக்கு செழியன் வீடு வராண்டா, ஹால், படுக்கையறை, கிச்சன் என்று இருந்தாலும் உண்மையில் அது அம்மாவின் அன்பு, அப்பாவின் கனிவு, அக்காவின் செல்லம், தங்கையின் பாசம், தம்பியின் உரிமை போன்றவற்றின் வடிவமாகத்தான் இருந்தது.

ஒட்டுமொத்தமாக நண்பர்கள் கூட்டமாகச் சென்றபோது மொட்டைமாடியில் படுத்து உறங்குவது, மொத்தமாக சோறு பிசைந்து அம்மா உருட்டி உருட்டித் தர எல்லோரும் சாப்பிட்டது என்று இப்போது சொல்வதற்கு விக்ரமன் பட மாண்டாஜ் போல இருந்தாலும் அன்று அத்தனையும் கொண்டாட்டமாகவே இருந்தது.

அம்மா எங்களோடு எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொள்வார். அப்பா எல்லாவற்றுக்கும் மவுன சாட்சியாக இருப்பார். அதுதான் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு ஆதாரம். சின்னதாக சாதித்தாலும் பெரிதாக பாராட்டுவார். பெரிதாக தவறு செய்தாலும் சிறிதாக தண்டனை தருவார். அம்மா கொடுக்கும் தண்டனை என்பது மற்றவர்கள் பார்வைக்கு சின்னதாகத்தான் இருக்கும். ஆனால், அனுபவிப்பவனுக்குத் தெரியும், அதன் வேதனை!

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். நாற்காலி தண்டனை, அம்மாவின் தண்டனைகளில் ஒன்று. ஏதாவது தப்பு பண்ணிட்டா, சேர்ல உட்காருனு சொல்வாங்க. அதாவது கைகளை சேரில் வைத்திருப்பது போல நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்திருப்பது போன்ற போஸில் இருக்க வேண்டும். ப்பூ… இவ்ளோதானா என்று தோன்றும். ஆனால், அப்படி அரைகுறையாகக் குனிந்த நிலையில் ஐந்தாவது நிமிடத்தில் மணிக்கட்டு தொடங்கி, இடுப்பு, குதிகால், மூட்டு என்று சகல பாகங்களும் நம்மிடம் மன்னிப்புக் கேளுடா பாவி… என்று கெஞ்சத் தொடங்கும். மன்னிப்புக் கேட்ட பிறகும் சகஜமாக நிமிர்ந்து நிற்க, இன்னோர் ஐந்து நிமிடங்கள் பிடிக்கும்.

கல்லூரிக் காலம் தாண்டினால் அதோடு நண்பர்களின் தொடர்பும் விட்டுப் போவது இயற்கைதானே… ஆனால், எங்கள் நட்பு இயற்கைக்கு விரோதமானது.

நான் மேற்படிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு டிப்ளோமோ படித்தேன். அதற்கான செமினாரில் கலந்து கொள்ள மதுரை வருவேன். அப்போதெல்லாம் செழியன் வீட்டுக்குப் போவேன். சனி இரவு போய் தங்கிவிட்டு ஞாயிறு காலை மறுபடியும் வகுப்புகளுக்காக மதுரை திரும்பிவிடுவேன். சில நாட்களில் செழியன் ஊரில் இருக்க மாட்டான். ஆனாலும் என் வீடுதானே என்ற உரிமையோடு செல்வேன்.

இன்னும் சில நாட்களில் என்னோடு செமினாரில் கலந்து கொள்ள வந்த நண்பர்களையும் எதுக்கு லாட்ஜ்ல ரூம் எடுக்கறீங்க… என்கூட வாங்க என்று அழைத்துக் கொண்டு செழியனின் வீட்டுக்குப் போவேன். போன் வசதி எல்லாம் இல்லாத அந்த காலகட்டத்தில் திடுதிப்பென்று இரவு சாப்பாட்டு நேரத்தில் இரண்டு மூன்று பேரோடு போய் நின்றால் பெத்த அம்மாவுக்கே கோபம் வரும். ஆனால், செழியனின் அம்மா சிரித்த முகமாக வந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பார். அப்பா டிபனுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குவார்.

அந்த சுற்றுவட்டாரத்தில் என்ன நிகழ்வு என்றாலும் அதற்கான மையப்புள்ளியாக செழியன் வீடு இருக்கும். காரைக்குடியில் நண்பர் குள. சண்முக சுந்தரத்தின் திருமணத்துக்கு போகும்போது வழியில் திருப்பத்தூரில் இறங்கி செழியனையும் கூட்டிக் கொண்டுதான் போனேன். கல்யாணச் சாப்பாட்டை மிஸ் பண்ணிவிட்டு (லேட்டாகப் போனதும் ஒரு காரணம்) செழியன் வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டேன்.

பாதைகள் மாறி பயணங்கள் வேறான பிறகு என் வீட்டுக்குச் செல்வதே அபூர்வமானது போல செழியன் வீட்டுக்குச் செல்வதும் இல்லை என்றாகி விட்டது. விகடனுக்காக ஒருமுறை சர்வே டூர் சென்றிருந்தோம். கிடைத்த அரைமணி இடைவெளியில் திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வலது பக்கம் திரும்பி, கோவில் காம்பவுண்டை ஒட்டிய சந்து வழியாக ஓடி, காய்ந்து கிடந்த தெப்பக்குளத்தைக் கடந்து லைன் வீட்டின் முதல் வீட்டின் முன்னால் போய் மூச்சு வாங்கி நின்றேன். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது.

பக்கத்து வீட்டு கதவைத் தட்டினேன். ‘குழந்தை சாமி சார்…’ என்றதும் ‘அவங்க காலி பண்ணி போயிட்டாங்களே… சர்ச் பக்கத்துல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்காங்க…’ என்றார்.

அங்கே போனேன். அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். ‘வா பாபு… அக்கா கல்யாணத்துக்குப் பிறகு… தங்கச்சியைக் கட்டிக் குடுத்த பிறகு… அப்பா ரிட்டையர்ட் ஆன பிறகு… செழியன் பிசினஸ் அதுஇதுனு அலைஞ்சு கடைசியா லாரி வாங்கி செட்டில் ஆன பிறகு… என்று அம்மா வழக்கம் போல பேசிக் கொண்டே போக அப்பா வழக்கம் போல அமைதியாக இருந்தார்.

ஆனால், இருவர் முகத்திலும் வழக்கமான சிரிப்பு இல்லை, ஒருவேளை அது ஒருபோதும் அலையடிக்காத அந்த தெப்பக் குள வீட்டிலேயே இருக்குமோ?!

Tuesday, July 20, 2021

வீடுபேறு! 10/16

படையப்பா படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில் ரஜினியின் உடைகளை செந்தில் அணிந்து கொண்டு பெண்பார்க்கச் செல்வார். அப்போது ரஜினி வழியெல்லாம் மாப்பிள்ளை அவர்தான்… அவர் போட்டிருக்கும் உடை என்னுடையது என்று சொல்லிக் கொண்டே செல்வார். அதுபோல, நான் சென்னையில் முதன்முதலில் வாங்கிய வீடு என்னுடையதுதான்… ஆனால், அதில் குடியிருந்தது நண்பன் ராஜநாராயணன் தான்!

ஊரில் சொந்தமாக வீடு இருக்கிறது… சென்னை என்பது பிழைக்க வந்த ஊர்தான் என்ற எண்ணம் பிரதானமாக இருந்தாலும் வாங்கும் சம்பளம் செலவுக்கே சரியாகப் போய்விடும் நிலையில் இருந்த எனக்கு சொந்த வீடு என்பது கனவிலும் நடக்காத விஷயமாகத்தான் இருந்தது.

ஆனால், நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கினேன். அதற்கு இருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். முதலாவது ஆள் என்னுடைய சீனியர் அசோகன் சார் (இப்போது தமிழ் இந்து நாளிதழின் ஆசிரியர்) அவர்களுடைய மனைவி அஞ்சனா மேடம். ‘என்னங்க… வீடு கீடுனு வாங்க வேணாமா… இப்பதான் காசு கையிலே மிஞ்சி நிற்கும்.. குடும்பம் குழந்தைனு ஆகிட்டா வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்… இப்பவே பாருங்க…’ என்று சொன்னதோடு நில்லாமல் வண்டியில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் காட்டினார். அதனால்தான் முதல் நன்றி அவருக்கு!

அப்போது சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளான ஆதம்பாக்கம்,. வேளச்சேரி பகுதிகளில் அவர் காட்டாத வீடு இல்லை, பார்க்காத தெரு இல்லை. எல்லாமே ஆறு லட்சம், ஏழு லட்சம் என்கிற ரேஞ்சில் இருந்தது. சும்மா விசாரித்துப் பார்க்கலாமே என்று சம்பள கணக்கைக் காட்டி வங்கியில் வீட்டுக் கடன் கேட்டபோது அதிகபட்சம் ரெண்டு லட்சம் வரை தரலாம் என்றார்கள். மீதிக்கு..?

வீடு ஐடியாவை மூட்டை கட்டிவிட்டு, வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் சொன்னது போலவே அஞ்சனா மேடம் அலுவலகத்தில் உள்ள பல இளைஞர்களிடமும் சொல்லியிருப்பார் அல்லவா..? அப்படிப்பட்ட ஒரு ஆள் ம.கா.சிவஞானம். அவருக்கு தான் இரண்டாவது நன்றி..! ஏன் என்று அடுத்து சொல்கிறேன்.

பழைய வீடுகளாகப் பார்க்கலாம். கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற யோசனையோடு தேடிய ம.கா.சி. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டைப் பற்றி பேப்பரில் படித்துவிட்டு குறித்து வைத்திருந்தார். ‘பாபு… ஆபீஸ் போற வழியில் அதைப் பார்த்துட்டுப் போகலாமா..? என்று கேட்க, நானும் ஓகே சொன்னேன். அவரிடம் விலாசம் வாங்கிக் கொண்டு நான் முதலில் அந்த இடத்துக்குப் போய்விட்டேன். அது ஒற்றைப் படுக்கையறை வீடு!

மகாசி தேடிக் கொண்டிருந்தது இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. நான் ஒற்றைப் படுக்கை விஷயத்தைச் சொன்னதுமே, அப்ப அதைப் பார்க்கிறது வேஸ்ட்… விட்டுறலாம் பாபு என்று சொல்லிவிட்டார். அவர் வேண்டாமென்று சொன்ன வீடு என்னைப் பார்த்து வாங்கிக்கோயேன் என்று வேண்டி விரும்பிக் கேட்டது போல இருந்தது.

ஆதம்பாக்கம் ஏரியாவில் வீடு தேடி அலைந்த காலத்துக்கும் இப்போது கோடம்பாக்கத்தில் வீட்டைப் பார்த்துக் கொண்டு நின்ற இந்த காலத்துக்கும் இடையே என் சம்பளம் ஏதோ கொஞ்சம் உயர்ந்து நின்றது. வங்கியில் விசாரித்தபோது நாலு லட்சம் வரை கடன் கிடைக்கும் என்றார்கள். ஒரு லட்சம் மேற்கொண்டு தேவைப்பட்டது. அதை என்னுடைய பர்சனல் வங்கியான அப்பாவிடம் இருந்து வாங்கினேன்.

அப்படித்தான் சென்னையில் நான் ஹவுஸ் ஓனர் ஆனேன். என் திருமணமும், வீடு வாங்கும் படலமும் ஒன்றாக நடந்தது. திருமண சமயத்தில் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட, திருமணம் முடிந்த நிலையில் ரெஜிஸ்ட்ரேஷன்  முடிந்தது. வாங்கும்போது குடியிருந்த பழைய ஓனர் காலி செய்ய, இரண்டு மாதம் எடுத்துக் கொள்ள, அதற்குள் நாங்கள் வாடகை வீட்டில் செட்டில் ஆகியிருந்தோம்.

சரியாக அந்த வீடு காலியான நேரத்தில் நண்பன் ராஜநாராயணனுக்கு திருமணம் நடந்தது. இங்கே குடி வந்துவிடேன் என்று சொல்ல, அவனும் மனைவி மதுவுடன் வந்து இறங்கினான். அவர்களை வரவேற்று ஆரத்தி எடுத்து வீட்டுக்கு பால் காய்ச்சி எல்லாமும் செய்து குடி வைத்தோம்.

அன்றுமுதல் அது ராஜநாராயணனின் வீடானது. நான் மிகவும் உரிமையோடு போய்த் தங்குவேன். எல்லாமும் செய்வேன். ஆனால், அது என் வீடு என்று தோன்றவே தோன்றாது. அதுதான் ஆச்சரியம்!

ராஜநாராயணன் வீடு காலி செய்து போன பிறகு கூட அடுத்தடுத்து வாடகைக்கு ஆள் தேடினோமே தவிர, அங்கு குடி போகலாம் என்ற எண்ணமே எழவில்லை. இத்தனைக்கும் நாங்கள் குடியிருந்ததும் ஒற்றைப் படுக்கையறை வீடுதான்!

சில காலங்களுக்குப் பிறகு வேறு வேறு ஆட்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். ஒரு வீட்டு ஓனராக அங்கு செல்வதும் குடியிருப்பவர் வீட்டில் ஒரு தம்ளர் காபி குடிப்பதுமாகத்தான் அந்த வீட்டோடு உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு சில இளைஞர்கள் வந்து தங்கினார்கள். என் நண்பனின் மருமகன் வந்து வீடு கேட்டான். அவனும் இன்னும் இரு நண்பர்களும் தங்கப் போவதாகச் சொல்லி! சரி… அபார்ட்மெண்டில் குற்றம் சொல்லாத வகையில் நடந்து கொள்ளுங்க என்ற கோரிக்கையோடு அவர்களைத் தங்க வைத்தேன். அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மொட்டை மாடியில் அதிகம் திரிகிறார்கள் உங்கள் டெனண்ட் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. மொட்டை மாடிக்கெல்லாம் போகாதீங்கப்பா என்றேன். சரிங்க அங்கிள் என்றார்கள். ஒருகட்டத்துக்குப் பிறகு அவர்களைக் காலி செய்ய வைக்க வேண்டியதாகிவிட்டது.

அதன்பிறகு குடி வைத்தால் குடும்பத்துக்குதான் என்ற முடிவோடு இருந்தேன். கணவன், மனைவி, குழந்தை என்று சிம்பிளான குடும்பம் வந்து கேட்க, சம்மதித்து சாவியைக் கொடுத்தேன். மாதம் 2500 ரூபாய் வாடகை என்பது பேச்சு. ஆனால், ஒரு மாதம்கூட அவர் முழு வாடகையைக் கொடுத்தது கிடையாது.

சார்… பாத்ரூம் தாழ்ப்பாள் மாத்தினேன்… முப்பத்தி ரெண்டு ரூபா ஆச்சு என்று கழித்துக் கொண்டு கொடுப்பார். அடுத்த மாதம், பால்கனியில் சின்ன ரிப்பேர் என்று ஒரு தொகையைக் கழிப்பார்.

இதையெல்லாம் செய்யும் முன்னே சொல்லலாமே என்றால் எப்படி சார் உங்களைத் தொந்தரவு செய்ய முடியும்? என்றார்.

இதில் ஏற்பட்ட சலிப்பு ஒருபக்கம்… குடியிருந்த வளசரவாக்கம் பகுதியில் இரண்டு படுக்கையறை வீடாகப் பார்க்கலாம் என்ற திட்டம் மறுபுறமுமாக நெருக்க, இந்த வீட்டை விற்றுவிடலாம் என்று முடிவு செய்தேன். அப்போது அந்த வீட்டின் சந்தை மதிப்பு 14 லட்ச ரூபாய். குடியிருந்த மனிதரே வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஆனால், எனக்கு சிறு சலுகை தரவேண்டும். வாடகைக்காகக் கொடுத்த அட்வான்ஸைக் கூட வீட்டை வாங்குவதற்கான அட்வான்ஸாக வெச்சுக்கோங்க… மேற்கொண்டு பத்து லட்ச ரூபாய் கொடுத்துடறேன் என்றார். அதாவது மொத்த மதிப்பு 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

கட்டாது சாமி என்று காலி செய்ய வைத்தேன்.

இவர் கொடுத்த சலிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இந்த வீட்டை விற்றுவிடலாம் என்ற விதை என்னுள் விழுந்தது அந்த பேச்சிலர்ஸ் இருந்தார்கள் என்று சொன்னேனே… அப்போதுதான்..!

ராஜநாராயணன் இருந்த போது என் வீடென உரிமையோடு புழங்கிய வீட்டில்… அடுத்து வந்த வாடகைகாரர்கள் காபி கொடுத்து உபசரித்த வீட்டில்… உள்ளே வராதீங்க சார் என்று சொல்லி கதவைத் திறக்க மறுத்த இளைஞன்தான் அந்த வீடு உனக்கானதில்லை என்பதை உணர்த்தினான். வாடகைக்கு விட்டுட்டீங்கள்ல… நாங்க சொன்னால்தான் வரணும் என்றான். இத்தனைக்கும் என்னிடம் நான் பார்த்துக்கறேன் அங்கிள் என்று பேசி வாடகைக்கு வந்த என் நண்பனின் மருமகன் அந்த வீட்டை தன் நண்பர்களுக்கு உள் வாடகைக்கு விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த நண்பர்களில் ஒருவன் தான் என்னை வாசலில் நிறுத்தினான்.

பரவாயில்லைப்பா… மொத்த அபார்ட்மெண்டையும் ரிப்பேர் செய்யப் போறாங்க… தனிப்பட்ட முறையில் வீட்டில் ஏதாவது செய்யணுமா என்று நான் பார்க்கணும்… அதனால் நீ கதவைத் திறந்துதான் ஆகணும்… என்று சொன்னதோடு அந்த மருமகனுக்கும் போன் அடித்தேன். பிறகுதான் கதவு திறந்தது.

ஒருவேளை அவர்கள் என் வீட்டை டாஸ்மாக் குடோனுக்கு உள் வாடகைக்கு விட்டிருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு கிச்சன் நிறைந்திருந்தது.

ஆக என்னை வெளியில் நிறுத்தி வீட்டை விற்கும் முடிவெடுக்கத் தூண்டியவன் உண்மையில் ‘குடி’யிருந்தவன் தான்!

Wednesday, July 14, 2021

வீடுபேறு! 9/16

வீடு என்பது திண்ணை, முற்றம், படுக்கையறை, அடுக்களை என்று எல்லாமும் சேர்ந்ததுதானே… ஆனால், சில வீடுகளின் திண்ணை மட்டுமே வீடென அறியப்படும். அவை எல்லாமே ஆசிரியர்களின் வீடுகள். அவர்கள் வீட்டுத் திண்ணையில் நடக்கும் டியூஷன் வகுப்புகள்தான் நமக்கு அந்தத் திண்ணையையே டியூஷன் சார் வீடு என்று அடையாளப்படுத்தும். அதிகபட்சம் போனால் யாரேனும் ஒருவருக்கு அடுக்களையில் போய் தவலைப்பானையில் தண்ணீர் மோக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

எனக்கு அதில் கூடுதலான வாய்ப்பாகக் கிடைத்தது நான் ஆறாங்கிளாஸில் டியூஷன் படித்த ஏ.சி. சார் வீட்டில்! பள்ளிக்கூடத்தில் ஏ.சி. சார்… வெளியே வந்துவிட்டால் ஏ.சி. சித்தப்பா! என் அம்மாவின் அத்தை மகன்..! எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரான இலஞ்சியில் இருந்தது நான் படித்த பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக டியூஷனுக்குப் போவோம். பையைத் தூக்கி திண்ணையில் போட்டுவிட்டு வீட்டுக்கு பக்கத்தில் கிடக்கும் காலி மனையில் விளையாடிக் கொண்டிருப்போம்.

எங்களுக்குப் பிறகு பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் ஏசி சார், பேண்ட் சட்டையை மாற்றி கைகால் முகமெல்லாம் கழுவிவிட்டு துண்டால் துடைத்தபடியே குரல் கொடுப்பார். ஓடிப் போய் உட்கார்ந்து வீட்டுப் பாடமோ இல்லை ஏதேனும் கணக்கோ போட்டுக் காட்டி விட்டு கொஞ்சநேரம் படித்துவிட்டு புறப்படுவோம். பெரும்பாலும் இருட்டும் முன் கிளம்புங்க என்று அனுப்பிவிடுவார். ஏனென்றால், குளத்துக் கரை வழியே நடந்து வீட்டுக்குப் போக வேண்டும்.

எப்போதாவது சில நேரங்களில் கிளம்பும்போது பாபு… அந்த கல்யாண வீட்டுக்கு அம்மா மட்டும் வர்றாங்களா… இல்லை, அப்பாவும் வர்றாங்களா..? என்பது போன்ற குடும்ப விஷயங்கள் பேசும்போது மட்டும் தெரியலை சித்தப்பா என்று பதில் சொல்லுவேன். மற்றபடி எல்லா மாணவர்களையும் போல சார்தான்! அதேபோல அபூர்வமான சில சமயங்களில் சித்தி ஏதேனும் ஒரு தின்பண்டத்தை ஒளித்துக் கொடுப்பார். வாங்கி பைக்குள் போட்டுக் கொள்வேன். சித்தப்பாவுக்கு தெரிந்தால் சித்திக்கு திட்டு விழும். எல்லாமே சின்னப் புள்ளைங்க… அவனுக்கு மட்டும் கொடுத்தா என்ன அர்த்தம்? என்பார்.

அந்தத் திண்ணையே வாய்ப்பாடுகளாலும் பிரசண்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ்களாலும் அதிரும். அந்த அளவுக்கு கத்திக் கத்தி படிப்போம். சும்மா சம்பிரதாயத்துக்கு ஒரு பிரம்பு பக்கத்தில் வைத்திருப்பார். அதேபோல, யாரிடமும் ஏண்டா ஃபீஸ் கொண்டு வரலை என்று அதட்டிய நினைவு இல்லை. கொடுத்தால் வாங்கிக் கொள்வார்.

பிறகொரு நாளில் என் அண்ணனின் திருமணப் பத்திரிகையைக் கொடுக்கச் சென்றிருந்தபோதும் அதே ஓரோண் ஒண்ணு… மூவெட்டா இருவத்தி நாலு என்று திண்ணை சுவர்கள் வாய்ப்பாடு கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாறி ஒன்பதாம் வகுப்புக்கு ஆய்க்குடி என்ற ஊருக்குப் போனேன். அந்தப் பள்ளிக்கூடத்தில் முதன் முதலில் நடந்த தேர்வில் ஆங்கிலத்தில் ஃபெயில். ஆங்கிலம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்னும் ரேஞ்சுக்கு இருந்தது நிலைமை.

ஒருநாள் விடியற்காலையில் வீட்டுக்கு வந்திருந்த ஒரு விருந்தினர் என்ன படிக்கிறே..? என்றார். நான் நைன்த் என்றேன். (ஒழுங்காக ஒன்பதாங்கிளாஸ் என்று சொல்லியிருக்கலாம்) என் ஆங்கிலத்தில் வியந்து, ஓ… நைஸ்… வாட் இஸ் யுவர் ஃபாதர்? என்றார். எனக்குப் புரியவில்லை. மை ஃபாதர் இஸ் எ ரிவர் என்றேன். அவர் அப்பா எங்கே என்று கேட்டதாக நினைத்துக் கொண்டு, அவர் ஆற்றுக்கு குளிக்கப் போயிருக்கிறார் என்று பதில் சொன்னேன். (என் அப்பாவை நன்கு அறிந்த அந்த நபர் எதற்காக உன் அப்பா என்ன செய்கிறார்? என்று கேட்கப் போகிறார் என்பது என் எண்ணம்) அவர் சிரித்துக் கொண்டே போய்விட்டார்.

என் ஆங்கிலப் புலமை சிரிப்பாகச் சிரித்தது அன்றுதான். அப்பா வந்ததும் அம்மா நடந்ததைச் சொல்ல, அன்று மாலையே நான் கணேசன் சார் வீட்டை நோக்கி நடந்தேன், ஆங்கிலம் கற்றுக் கொள்ள! அவர் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை. மாறாக ஏபிசிடியில் தொடங்கி கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆங்கிலத்தின் மீதிருந்த வெறுப்பு மறைந்து நட்பு பிறந்தது. ஆங்கிலத்தில் ஓரளவு மதிப்பெண் எடுக்கத் தொடங்கினேன்.

கணேசன் சார் வீட்டில் பெரும்பாலும் காலையில்தான் டியூஷன் இருக்கும். அவர் வீட்டுக்கு எதிரே இருந்த அறைதான் டியூஷன் நடக்கும் இடம். நாங்கள் அதிகாலையில் டியூஷனுக்குப் போய்விடுவோம். அப்போது அந்த அறையில் கணேசன் சார் பையன் தலைவரை போர்த்திக் கொண்டு படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். அவனைச் சுற்றி அமர்ந்திருப்போம். வேகமாக வரும் சார், எதையாவது தூக்கி உறங்குபவன் மீது வீசுவார். அவன் வாரிச் சுருட்டி எழுந்திருப்பான். ஆக்கங்கெட்டாப்ல, ஒருத்தனை மூடிப் போட்டு சுத்தி உக்காந்திருக்கீங்க… வந்ததும் தடிமாட்டை எழுப்பி விடவேண்டியதுதானே என்பார்.

கணேசன் சார் பொயட்ரி படிக்கச் சொல்கிறார் என்றால் குளிக்கப் போகிறார் என்று அர்த்தம்… ஒரு மார்க் கேள்வி எழுதச் சொல்கிறார் என்றால் சாப்பிடப் போகிறார் என்று அர்த்தம். அதேபோல வீட்டில் இருக்கும்போது செய்யது பீடி, ஸ்கூலுக்குப் போகும்போது கத்தரி சிகரெட்..! இதுதான் கணேசன் சாரின் அடையாளம். இன்று ஏதோ ஓரளவு ஆங்கிலம் வருகிறது என்றால் அது கணேசன் சார் தயவால்தான்!

அங்கிருந்து கிளம்பி பத்தாங்கிளாஸ் செங்கோட்டையில் வேறொரு பள்ளிக்கூடம்… வேறொரு டியூஷன்..! அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு ஆசிரியரிடம் டியூஷன் படித்தாக வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு கண்டிப்பு வாத்தியார் கட்டளையே போடுவார். யாரிடம் டியூஷன் படிக்கிறே என்று கேட்டு நாம் ஒருவரிடமும் இல்லை என்று சொன்னால், நாளை முதல் டியூஷன் வா என்று சொல்வார். அதனாலேயே நான் அவரை சமாளிக்க இன்னொரு சாரிடம் டியூஷன் சேர்ந்தேன்.

அவர்தான் ராமச்சந்திரன் சார்… எந்த அதட்டலும் இருக்காது, கண்டிப்பும் இருக்காது. சந்தேகம் கேட்டால் சொல்லிக் கொடுப்பார். இல்லையென்றால் நாமாகப் படித்துக் கொள்ளலாம். அவர் வீட்டிலும் திண்ணையில்தான் டியூஷன். அவர் மகனும் எங்களோடுதான் படிக்க உட்காருவான். ஒருநாள் அவன் வரவில்லை என்றாலும் எங்கே அவன் என்று எங்களைத்தான் கேட்பார்… ஒருவேளை அவங்கப்பா ஃபீஸ் குடுக்க முடியாம நிறுத்திட்டாரோ என்னவோ..? என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிச் சிரித்துக் கொள்வோம்.

டியூஷன் சார் வீட்டுக்குப் போய் மற்ற மாணவர்கள் வருவதற்கு முன்னால் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் அவர் சொல்லும் நியூஸ் பேப்பர் வாங்கி வரவேண்டும். அது என் வேலை. அதில் சொதப்பினால் மட்டும் கடுமையான கோபம் வரும். மற்றபடி டியூஷனுக்கு வரும் மாணவர்களே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொடுத்துக் கொள்வோம்… படித்துக் கொள்வோம். சில நேரங்களில் சார் மகன் அப்பா இந்தக் கேள்வி எல்லாம் குறிச்சுக் கொடுத்தாரு என்பான். அதைப் படிப்போம்.

அப்போதெல்லாம் தேர்வு முடிவுகள் பேப்பரில்தான் வெளியாகும். நம் நம்பர் பேப்பரில் இருந்தால் பாஸ்… இல்லையென்றால் ஃபெயில். என ரிசல்ட் வந்த பேப்பரோடு ராமச்சந்திரன் சாரைப் பார்க்கப் போனேன். இது என்னடே புது பேப்பர்… வழக்கமா வாங்கறது கிடைக்கலையா..? என்றார்.

அன்று பத்தாங்கிளாஸ் ரிசல்ட் என்பது அவருக்கு நினைவில் இல்லையா… அல்லது நீயெல்லாம் பேப்பர் பார்த்துதான் ரிசல்ட் தெரிஞ்சுக்கணுமா… என்கிட்டே டியூஷன் படிச்சதனாலேயே பாஸ் ஆகிட மாட்டியா என்று சொல்லாமல் சொன்னாரா..? தெரியவில்லை!

Thursday, July 8, 2021

வீடுபேறு! 08/16

 பள்ளிக்கூட காலத்தில் எல்லோருக்கும் யாராவது ஒருவர் ஹீரோவாக இருப்பார். சைக்கிளில் வருவதே சாகசம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவனுக்கு மோட்டார் வைத்த சைக்கிளில் வருபவர்தானே ஹீரோவாக இருக்க முடியும். அப்படித்தான் ராமலிங்கம் அண்ணனை முதன்முதலாகப் பார்த்தேன். அவருடைய வண்டி சைக்கிள் ஸ்டாண்டில் வந்து நிற்பதே அத்தனை ஸ்டைலாக இருக்கும்.

பள்ளி முடிந்த பிறகு கல்லூரிப் படிப்பு… எங்கள் ஊரின் அருகில் உள்ள கல்லூரி என்றால் அது ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரிதான். ராமலிங்கம் அண்ணன் அந்தக் கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த வருடம் அங்கு எனக்கு இடம் கிடைக்காமல் போக நான் திருநெல்வேலி சேவியர் கல்லூரிக்குப் போய்விட்டேன். ஆனாலும் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி மாணவர் தலைவனாக ராமலிங்கம் அண்ணன் தேர்தலில் வென்றதைக் கேள்விப்பட்டபோது இன்னொருமுறை ஹீரோவாகத் தெரிந்தார்.

மூன்றாவதாக அவருடைய புல்லட்டும் ஜீப்பும் அவரை எனக்கு ஹீரோவாகக் காட்டின. தென்காசி நகருக்குள் சர்புர் என்று ஜீப்பிலும் புல்லட்டிலும் பறப்பார். டிவியே பிரபலமாகாத காலத்தில் அவரும் அவர் அண்ணனும் வீடியோ லைப்ரரி நடத்தினார்கள்.

ஒருவர் எப்போது நமக்கு ஹீரோ ஆகிறார் என்றால் நாம நினைச்ச மாதிரி அவரு வாழுறார் இல்லே என்று நினைக்கும்போதுதான்!

இடைப்பட்ட காலத்தில் நான் சென்னைக்குப் பெயர்ந்தபோது ராமலிங்கம் அண்ணனைப் பற்றிய விஷயங்கள் எதுவும் காதில் விழவில்லை. கிட்டத்தட்ட அவரைத் தொலைத்துவிட்ட நிலைதான்! மீட்டெடுக்க உதவியது முகநூல்..! அப்போது அவர் மணிவண்ணன் ஆகியிருந்தார்.

இலக்கிய உலகிலும் கட்டுமானத் துறையிலும் பலப்பல நண்பர்களைக் கொண்டவராக இருந்த ராமலிங்கம் அண்ணன் அப்போது மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் சொந்தக்காரர். (அவருடைய அண்ணனும் இவரும் பங்குதாரர்கள்) உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தம்பி… நல்லா எழுதறேடா..! என்று போன் செய்வார். அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லும்போதே பல நேரங்களில் நாக்கு தடித்திருக்கும். தம்பி… வீட்டுக்கு வாடா… என்றார் ஒருநாள். நிச்சயமா வர்றேன்ணே என்றேன்.

ஆனாலும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஏனென்றால் நான் இருக்கும் வளசரவாக்கத்துக்கும் அவர் இருக்கும் வேளச்சேரிக்கும் வடதுருவ தென் துருவ பந்தம்! இந்த உறவு புதுப்பிக்கப்பட்ட காலத்தில் நானும் பத்திரிகையாளர் பணியை விட்டு சினிமாவுக்குள் நுழைந்துவிட்டேன். அதனாலும் அவகாசம் வாய்க்கவில்லை.

சொல்லி மிக நீண்டகாலத்துக்குப் பிறகு சென்னையில் உள்ள அவர் வீட்டில் ஒருநாள் அவரைச் சந்தித்தேன். அண்ணே… அட்ரஸ் அனுப்புங்க என்றேன். டேய்… மூணாவது மாடி… மூச்சு திணறாம ஏறிடுவியா..? என்றார். சிரித்துக் கொண்டே ஏறிடுவேன், நின்னு நின்னாவது… நீங்க அட்ரஸைக் குடுங்க என்றேன். அனுப்பி வைத்தார்.

கூகுள் மேப் உதவியுடன் வீட்டைக் கண்டுபிடித்தேன். அபார்ட்மெண்ட் வாசலில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அவருடைய புல்லட்! அப்போதே உள்ளுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நிற்காமல் ஒரே மூச்சில் மூன்றாம் மாடியில் ஏறி நின்றேன்.

கதவு திறந்தவர், ‘வாடா தம்பி…’ என்றார்.

இரண்டு படுக்கை வீடு, மூன்று படுக்கை வீடு, டியூப்ளக்ஸ் வீடு என்றெல்லாம் சனிக்கிழமை செய்தித் தாள் விளம்பரம் போல எல்லா வகையிலும் வீடுகளைப் பார்த்துப் பழகிய எனக்கு காணக் கிடைக்காத ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் வீட்டைக் காட்டினார் ராமலிங்கம் அண்ணன். அவர் வீடு அப்படிப்பட்ட ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்!

மிக நீண்ட கறுப்பு நிற சோபா, அதன் எதிரே மறைப்பாக இருந்த கம்ப்யூட்டர் டேபிள், இந்த மறைப்புக்கு அந்தப்பக்கம் பரந்து விரிந்து கிடக்கும் கிங் சைஸ் படுக்கை, அதன் எதிரே கதவுகளால் மூடப்பட்ட அலமாரி என்று வீடு தொடங்கும் முன்னே முடிந்து போகும் அளவுக்கு சிறிய வீடு. அந்த அலமாரியை ஒட்டி சிறு படி ஏறினால் வலது பக்கம் பாத்ரூம், அதையடுத்து சிறிய கிச்சன்..! அவ்வளவுதான் வீடு! இடதுபக்கம் இருக்கும் பால்கனி பகுதியை வலையடித்து டைனிங் டேபிளைப் போட்டு வைத்திருக்கிறார். இந்த குருவிக் கூடு போன்ற வீட்டில் பறவைகளுக்கும் அணில்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார்.

என்னடா சாப்பிடுறே..? என்றார். அவர் சாப்பிடும் எதுவும் நான் சாப்பிடுவதில்லை. இல்லண்ணே… வீட்டில் சாப்பிட்டுட்டுதான் வந்தேன் என்றேன்.

எப்படி அண்ணே… தனியா… பொழுது எப்படிப் போகுது என்று கேட்டேன், ஒருமுறை தொலைபேசி உரையாடலின்போது! என்னடா தனியா… ராமலிங்கத்துக்கு துணையா மணிவண்ணன் இருக்கான்… மணிவண்ணனுக்கு துணையா ராமலிங்கம் இருக்கான்… என்றார்.

திடீரென்று ஒருநாள் மகிழ்ச்சியோடு தொலைபேசுவார், டேய்… என் மகன் தனுஷ் வந்திருக்காண்டா..! என்று… ஒரு தந்தையின் குரலை அன்று நான் கேட்பேன். அதன்பின்னர் பேசும்போது தனுஷ் என்ன பண்றான் என்பேன். தனியா இருக்கேண்டா என்பார். அது வீடாக இருப்பதும் வேறாக இருப்பதும் அவர் குரலில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது சில காலமாக எல்லா தொலைபேசியிலும் சிரிப்பு தெறிக்கிறது. தனுஷ் பற்றி அதிகம் பேசுகிறார். வேறாக இருந்தது அவனால் வீடாகி இருக்கிறது இப்போது!

முன்பெல்லாம் பெரும்பான்மையான நாட்கள் அவர் தனியாக இருந்ததில்லை. அந்த வீட்டுக்கு அதிதிகளாக வந்து செல்பவர்களின் எண்ணிக்கை வேளச்சேரி மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். ஆண்கள், பெண்கள் என்று பேதமில்லாத நட்பு வட்டம் அவருடையது.

ஆனாலும் அவருக்குள் ஒரு தீராத வருத்தம் இருக்கிறது, தம்பி… எல்லாரும் என் வீட்டுக்கு வந்திருக்காங்க… மனுஷ்யபுத்திரனும் வரணும்னு ஆசைப்படுறார்… ஆனால், என் வீட்டில் லிஃப்ட் இல்லை… ஆனாலும் ஒருநாள் நிச்சயம் வருவேன்னு சொல்லியிருக்கிறார். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன், என்னை எப்போதும் வரவேற்கும் மனுஷை என் வீட்டில் வரவேற்க! என்றார்.

நிச்சயம் வருவார்… படிகளெல்லாம் நம் மனதில் தானே அண்ணா இருக்கு!  

Monday, July 5, 2021

வீடுபேறு..! 07/16

 அடிக்கடி என் கனவில் ஒரு வீடு வந்துபோகும். விசாலமான புல்தரை, அதிலிருந்து படியேறினால் திறந்த திண்ணை… அதில் பிரம்பு நாற்காலிகள், அந்தத் திண்ணையில் இருந்தே செல்லும் வகையில் ஒரு அறை… படிக்கவும், எழுதவும்..! திண்ணையில் இருந்து உள்ளே நுழைந்தால் உயர்ந்த சீலிங் கொண்ட பெரிய அறை, அதிலேயே மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள், அங்கிருந்து உள்ளே சென்றால் சமையலறையும் பக்கத்தில் படுக்கையறையும். மாடியில் இரண்டு அறைகள், பால்கனிகளோடு..! இந்த வீட்டில் எல்லா அறைகளுமே மிகப் பெரிய அளவில் இருக்கும். பெரும்பாலும் நான் மாடியில் இருக்கும் பால்கனியில் நின்று காபி குடித்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போதோ கனவு கலைந்துவிடும்.

செல்லதுரை தாத்தா வீட்டுக்குச் சென்றபோது என் கனவு வீட்டைக் கண்டேன்… என்னுடைய இந்தக் கனவில் வராத விஷயம் அந்த வீட்டில் இருக்கும் மனிதரின் மலர்ந்த புன்னகை!

ஒரு வீடு என்பது குடும்பத்தின் அடையாளம்… குடும்பத்தின் அடையாளம் என்பது ஊரின் அடையாளமாகவும் இருக்கும் என்றால் அது செல்லத்துரை தாத்தாவுடையதுதான். செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் வல்லம் கிராமத்தில் வீனஸ் குடும்பம் என்றால் மிகவும் பிரபலம். அந்தக் குடும்பத்தில் ஒருவர்தான் செல்லதுரை தாத்தா. எங்கள் மாமாவுக்கு மகளைக் கொடுத்ததன் மூலமாக எனக்குத் தாத்தாவாக ஆனார்.

பூர்வீகம் வல்லம் கிராமம் என்றாலும் நான் தாத்தாவைப் பார்த்தது எல்லாமே செங்கோட்டையில் இருந்த வீட்டில்தான். என் இரண்டு மாமாக்கள் செல்லதுரை தாத்தாவின் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் எங்களுக்குள் இரட்டிப்பு உறவு என்றுகூடச் சொல்லலாம்.

இரண்டு மாமாக்களின் திருமணங்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் செல்லதுரை தாத்தா செங்கோட்டை பஸ் ஸ்டாண்டு பின்புறமிருக்கும் பெரிய வீட்டை வாங்கினாங்க, என் கனவில் வந்து போன வீட்டை!

முதன்முதலாக அந்த வீட்டுக்குப் போனபோது அத்தனை சந்தோஷமாக இருந்தது. கூடுதலாக வாசலில் நின்றபடி வாங்க பேரப்புள்ள என்று செல்லதுரை தாத்தா புன்னகை முகமாக அழைத்த விதமும் மகிழ்ச்சியைத் தந்தது.

திண்ணையின் இடதுபக்கம் இருக்கும் அறையை தாத்தா அலுவலக அறையாகப் பயன்படுத்தினாங்க. அங்கே ஒரு சோபா செட் இருக்கும். அவங்களுக்கான அலுவலக மேசையும் நாற்காலியும் இருக்கும். டீத் தூள் பிசினஸில் இருந்தாங்க. ஆனால், ஒருநாள்கூட என் தொழில் எப்படி தெரியுமா… என்னவெல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா என்றெல்லாம் பேசியது கிடையாது.

எல்லா விஷயங்களும் பேசுவோம். அரசியலில் தொடங்கி சினிமா முதற்கொண்டு சீரியல் வரைக்கும் எல்லாமும் பேசுவோம். கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருப்பார்களே தவிர எந்த விஷயத்திலும் இது இப்படித்தான் பேரப்பிள்ளே… என்ன தெரியாமப் பேசுறீங்க என்று சொன்னதே கிடையாது.

அரசியலில்… அதிலும் தேர்தல் வந்துவிட்டால் அனுமானங்களையும் ஆசைகளையும் கலந்து கேள்விகளாகக் கேட்பாங்க. எப்படி பேரப்புள்ள அதிமுகதான் ஜெயிக்கும்னு சொல்லுதீங்க..? என்று கேட்பாங்க. இதுதான் தாத்தா என் யூகம் என்றால் ஓ… அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல… அதுக்குதான் பேரப்புள்ள வேணுங்கறது… எனக்கு இது தோணலை பார்த்தீங்களா..? என்று சந்தோஷப்படுவாங்க.

இடையே லட்சுமி ஆச்சி டீ கொண்டு வருவாங்க. லட்சுமி… போன தடவை பேரப்புள்ள வந்திருந்தப்ப இப்படி ஒரு விஷயம் சொன்னான்னு உன்கிட்டே சொன்னேன்ல… அது அப்படியே நடந்துச்சு பார்த்தியா… அதுதான் பத்திரிகைகாரங்க மூளை..! என்று பாராட்டுவாங்க.

நான் கல்லூரி முடித்த போது சினிமாவில் போய் வேலை பார்க்கலாம் என்ற ஆசை எழுந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சினிமா என்ற நிலையில்லாத துறையில் சிரமப்பட வேண்டுமே என்ற கவலை. அப்போது என்னிடம் செல்லதுரை தாத்தாதான் பேசினாங்க. பெற்றவங்களோட கவலை எத்தனை நியாயமானது. அவங்களோட ஓய்வுகாலத்துல பிள்ளைகளின் நிலைமைக்காக கவலைப்படுற சூழல் வந்துட்டா எத்தனை கஷ்டம்… அந்த பயம் அவங்களுக்கு இருக்குமில்லையா… நீ ஒரு வேலையத் தேடிகிட்டு அதுக்குப் பிறகு கனவைத் துரத்திகிட்டு போ… அவங்களும் சந்தோஷமா ஆசீர்வாதம் பண்ணுவாங்க என்று எடுத்துச் சொன்னாங்க. நான் கிட்டத்தட்ட சினிமா கனவை மூட்டை கட்டும் முடிவுக்கு வந்துவிட்டேன்.

அடுத்து வந்த ஒருநாளில் அம்மாவும் அப்பாவும் என்னை உட்கார வைத்து நீ ஆசைப்பட்டபடி சினிமாவுக்கு முயற்சித்துப் பார்… ஐந்து வருடம் உனக்கு அவகாசம்… அதுக்குள்ளே உன்னால் அதில் காலூன்ற முடியும்னு தோணலைன்னா திரும்பி வந்துடு… அதுவரைக்குமான உன் செலவுகளை நாங்க பார்த்துக்குவோம் என்று சொன்னபோது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

என்னிடம் அப்பா அம்மாவின் தரப்பு நியாயங்களைப் பேசியதுபோலவே செல்லதுரை தாத்தா அவங்ககிட்டே என் தரப்பு நியாயங்களையும் என் ஆசையையும் எடுத்துச் சொல்லியிருந்திருக்கலாம். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பாங்க போல!

ஆனால், நான் சினிமாவை விட்டுவிட்டு பத்திரிகைத் துறைக்கு வந்தபோது செல்லதுரை தாத்தாவுக்கு பெரிய சந்தோஷம். உன் கனவுக்கும் உங்க அம்மா அப்பா எதிர்பார்ப்புக்கும் ஏத்த மாதிரி ஒரு துறையப் புடிச்சிட்டியே… சந்தோஷம்னு சொன்னாங்க!

எனக்குத் திருமணம் ஆனபிறகு கூட மனைவியோடு தாத்தா வீட்டுக்குப் போனால், பேத்திப் பொண்ணு… நீதான் மாப்பிள்ளை கூட நாளெல்லாம் இருக்கப் போறியே… அவனை என்கூட கொஞ்சநேரம் தனியா விட்டுரு… நாங்க பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு…னு சிரிச்சுகிட்டே சொல்வாங்க. என் மனைவியும் லட்சுமி ஆச்சியும் செட் சேர்ந்துக்குவாங்க.

என்னிடம் பழகுவதைத் தாண்டி நான் செல்லதுரை தாத்தாவிடம் வியந்து பார்த்த விஷயம் அவங்களோட நட்புதான். அவங்ககிட்டே இஸ்மாயில்னு ஒரு தாத்தா உதவியாளரா இருந்தாங்க. லட்சுமி ஆச்சி இல்லாமல் கூட சில நாள் தாத்தா இருந்துடுவாங்க… இஸ்மாயில் தாத்தா இல்லைன்னா கை உடைஞ்ச மாதிரி ஆகிடும். எந்த விஷயமா இருந்தாலும், இஸ்மாயில்… என்ன சொல்லுதே என்று ஒரு வார்த்தை கேட்பாங்க… அதிலும் அவங்க இஸ்மாயில் என்பதை ஸ்மால் என்பது போலச் சொல்லும் தொனி கேட்கவே அழகாக இருக்கும்.

இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என்று நான்கு பிள்ளைகள். அனைவருக்குமே திருமணம் முடித்து வைத்து மகன்களிடம் தொழிலை ஒப்படைத்த பிறகு ஒருவித ஓய்வு மனநிலைக்கு வந்துட்டாங்க தாத்தா. பழைய பரபரப்பு இல்லாததால் கொஞ்சம் பலவீனமாகி விட்டது போல எனக்குத் தெரிந்தது.

ஒருமுறை போய்ப் பார்த்தபோது மலர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தாங்க. ரொம்ப நாளாச்சு பாபு இப்படிப் பேசி… சந்தோஷமா இருக்கு… நீ அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போ என்று சொன்னாங்க. லட்சுமி ஆச்சியும் தாத்தா சத்தம் ரொம்ப நாளைக்குப் பிறகு இன்றைக்குதான் கேட்டுச்சுனு சொன்னாங்க.

அதன்பிறகு அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டும் என்றானது தாத்தாவின் உடல்நிலை. அதனால் தென்காசியில் மகன் வீட்டில் வந்து தங்கினாங்க. அங்கு போய்ப் பார்த்தபோதும் அந்த மலர்ச்சி முகத்தில் இருந்தது.

பிறகொரு நாளில் போன் வந்தது, செல்லதுரை தாத்தா நம்மள விட்டுட்டுப் போயிட்டாங்க என்று! இன்னமும் நான் அந்த வீட்டுக்குப் போகவில்லை. என் கனவு வீட்டின் கதவுகளைத் திறக்கும் புன்னகைச் சாவியைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன்!

Thursday, July 1, 2021

வீடுபேறு! 6 – 16

 முதன்முறையாக சுப்புராஜ் வீட்டுக்குச் சென்றபோது கோழிக்கறி வாசனையோடு என்னை வரவேற்றது அவன் வீடு. வீடு என்று சொல்லிக் கொண்டாலும் வரவேற்றது அம்மாதான். என்னை யாரென்று கூட சுப்பு அம்மாவுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால், சுப்புவின் குரல் கேட்டு அடுக்களையில் இருந்து வரும்போதே இரண்டு தட்டுகளோடு வந்தார் அம்மா. அவன் எப்போதும் நண்பர்களோடுதான் வீட்டுக்கு வருவான் என்று நினைத்தார்களோ அல்லது அவனோடு சேர்ந்து அமர்ந்து தானும் சாப்பிடலாம் என்று நினைத்து எடுத்து வந்தார்களோ தெரியாது, ஆனால், அன்றைக்கு அவன் வீட்டு அரிசியில்தான் என் பெயர் எழுதப்பட்டிருந்தது.

கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு வீடுமே ஒவ்வொரு நினைவைத் தரும். சுப்புவின் வீடு எனக்கு எப்போதும் வாசனை அடையாளத்தையே தரும். எப்போதும் ஏதேனும் ஒரு வாசனையைச் சுமந்தபடிதான் நிற்கும் அந்த வீடு. ஒன்றுமில்லாவிட்டாலும் நைனாவின் பொடி வாசனை… அல்லது திண்ணையில் இருக்கும் கண்ணாடி முன்னால் இருக்கும் பவுடர் டப்பா வாசனை!

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் சுப்பு. பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தில் நான் தலைவர், அவன் செயலாளர். இலக்கிய மன்றக் கூட்டங்களுக்கு விருந்தினர் அழைத்து வரும் வேலைக்காக இருவரும் அலைந்து கொண்டேதான் இருப்போம். எத்தனை தூரத்தில் இருந்தாலும் வீட்டுக்கு போயிட்டு ஸ்கூலுக்குப் போகலாம் என்பான். நானும் சரி என்பேன். இருவரும் அவன் வீட்டில் சாப்பிடச் செல்வோம்.

ஒரு திண்ணை, அடுத்து ஒரு சிறிய அறை, அடுத்து அடுக்களை என்று மிகச் சின்னதான வீடுதான் சுப்புவின் வீடு. அதை ஒட்டி இதே அளவுக்கான இன்னொரு வீடு இருந்தது. இரண்டுக்கும் எதிரே ஒரு தனி அறை இருந்தது. இந்த மூன்றும் ஒரு காம்பவுண்ட் உள்ளே இருந்தது. இது மொத்தமும்தான் சுப்புவின் வீடு.

ஆனால், பக்கத்து வீட்டில் வேறொரு குடும்பம் இருந்தது. எதிரே இருந்த அறையில் சுப்புவின் அண்ணன் ரவி அண்ணனின் அலுவலகம் இருந்தது. அவர் ஏதோ போஸ்டல் சேமிப்பு வேலையைப் பகுதி நேரமாகச் செய்து வந்தார். முழு நேர வங்கிப் பணி அவருக்கு! அண்ணிக்கு அம்பாசமுத்திரத்தில் ஆசிரியை வேலை என்பதால் குடும்பம் அங்கே இருந்தது. அண்ணன் மட்டும் ரயிலில் வந்து போய்க் கொண்டிருப்பார். எங்களை அவர் பார்க்கும் ஒரு பார்வையில் உழைப்பின் மதிப்பு தெரியுமா என்ற தலைப்பில் ஒரு மணிநேர சொற்பொழிவுக்கான செறிவு இருக்கும். அவர் உழைப்பு அந்த அளவுக்கானது!

என்னுடைய முதல் எழுத்து சுப்புவின் வீட்டில்தான் தொடங்கியது. என்னுடைய பத்திரிகைப் பணிக்கான முதல் விதையை அவன் வீட்டில் இருந்துதான் தூவினேன். எனக்கு  முன்னதாக விகடனில் வேலை செய்தவன் அவன். அவனைப் போல எழுத ஆசைப்பட்டுதான் பத்திரிகையாளன் ஆனேன். இப்போதும் அவன் அனுப்பும் குறுஞ்செய்தியும் சிறு வார்த்தைகளும் பல பக்கங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்.

பொதுவாக வீட்டுக்கு ஊரில் இருந்து அக்கா, மாமா எல்லாம் வந்திருந்தால் நண்பர்களுக்கு இடமிருக்காது. சொந்தங்களை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்ற நிலையில் நண்பர்களைக் கூப்பிடவே மாட்டார்கள். ஆனால், சுப்பு வீட்டில் அக்கா, பாவாக்கள் வந்திருக்கும்போதுதான் நாங்கள் கூடுவோம். சுப்புவுக்கு இணையாக பாவாவைக் கலாய்ப்போம். அவரும் சிரித்துக் கொண்டே சமாளிப்பார்.

பிள்ளைகள் மாமா மாமா என்று தோளில் தொங்கிக் கொண்டே திரிவார்கள். நாங்களும் அடுத்த ஆளுக்கு மிச்சமிருக்குமா என்றெல்லாம் கவலை இல்லாமல் சட்டியைக் கவிழ்த்து சாப்பிட்டு விட்டு வருவோம்.

தென்காசியில் சுவாமி சந்நிதி தெருவில் இருந்த நைனாவின் தையல் கடை வீட்டுக்கு இடமாறியது. கிட்டத்தட்ட நைனா ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனால், அம்மாவுக்கு ஓய்வே இல்லை. அடுக்களைக்கும் திண்ணைக்குமாக நடந்து கொண்டேதான் இருந்தார்.

எப்போதும் பத்திருபது பேரோடு கலகலவென்றிருக்கும் வீடு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானது. சுப்புவுக்கு வேலை கிடைத்து வெளியூர் கிளம்பினான். அவன் தம்பி கிருஷ்ணாவும் திருப்பூருக்குப் போனான். நாங்களும் சென்னைக்கு வந்தோம். அதன்பிறகு தென்காசிக்குப் போகும்போது சுப்பு வீட்டுக்குப் போனால் அம்மா மட்டும் கட்டிலில் படுத்துக் கிடப்பார்.

வாப்பா பாபு… டீ குடிக்கிறியா..? என்பார். இல்லம்மா… நீங்க படுங்க என்றால், நானும் குடிச்சுக்குவேன்… என்று டீ போடுவார். ஊர் பக்கமே வர்றதில்லையா… இல்லை, இங்கே வராம ஓடிப் போயிடுறியா..? என்பார். ஊருக்கு வருவதே குறைஞ்சுடுச்சும்மா என்று சொல்லும்போது குரல் உள்ளே போய்விடும். எதற்காக ஓடி ஓடி காசு சேர்க்கிறீங்க..? என்று அவர் கேட்காவிட்டாலும் நம் மனம் அந்தக் கேள்வியைக் கேட்கும். குற்ற உணர்ச்சியில் தலை தானாகக் குனியும்.

வேலை எப்படி இருக்கு..? வருமானம் சமாளிக்க முடியுதா..? உங்க நைனா கொண்டு வர்ற காசை வெச்சு அஞ்சு புள்ளைகளை ஆளாக்கினேன்… இப்ப எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தாதுங்கற மாதிரி இருக்கு… நீங்க ஓடத்தானே வேண்டியிருக்கு… உங்க பிழைப்பும் அங்கே கிடக்கு… வர்றப்ப அம்மாவை ஒரு எட்டு பார்த்துக்கோங்க… அது போதும் என்பார். குற்ற உணர்ச்சிக்கெல்லாம் தேவையில்லை… என்று நமக்கு ஆறுதல் சொல்லும் வார்த்தைகளாக அவை இருக்கும்.

ஒருகட்டத்தில் நைனாவும் இல்லாமல் அம்மாவுக்கும் தனியே இருக்க முடியாமல் அக்கா வீட்டோடு போய் விட்டார். சுப்பு திருநெல்வேலியில் இருந்தான். அம்மாவுக்கு தென்காசியைத் தாண்டி வர மனதில்லை. கடைசி வரை தென்காசியிலேயே இருந்துவிட்டுப் போய்விட்டார்.

இப்போதும் தென்காசியில் இருக்கும் சுப்புராஜின் வீடு வாசனையோடுதான் இருக்கும், அம்மாவின் வாசனையோடு..!

Friday, June 25, 2021

வீடு பேறு! 5 -16

'நாங்க விசாரிக்கப் போயிருந்த அன்னிக்கு அவங்க வீடு முளைப்புடிச்சுகிட்டு இருந்தாங்க… அதுவே நல்ல சகுனமாகப் பட்டது…’ என்றார் அப்பா. அப்பா அந்த அளவுக்கு சகுனமெல்லாம் பார்க்கும் ஆள் இல்லை. ஆனால், சில விஷயங்கள் மனதுக்குப் பட்டது என்றால் பட்டென்று பிடித்துக் கொள்வார்.

இப்படித்தான் வீட்டுக்கு ஒரு டிவி வாங்கலாம் என்று கடைக்குப் போனார். கலர் டிவி வாங்கும் அளவுக்கு காசு கொண்டுதான் போயிருந்தார். ஆனால், ‘இதைப் போட்டுக் காட்டுப்பா…’ என்று ஒரு டிவியைக் கைகாட்ட, கடைக்காரரும் போட்டுக் காட்டியிருக்கிறார். அந்த கறுப்பு வெள்ளை டிவியில் பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ‘இது நல்லாயிருக்கு… இதையே பேக் பண்ணிருங்க…’ என்று சொல்லி, வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அவர் மனதுக்கு சரி என்று படவேண்டும்.

அப்படித்தான் அந்த விஷயமும் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணா புரம் முதல் தெருவில் இருக்கும் அந்த முளைப் பிடித்த வீட்டுக்கு எதிரில் இருந்த விஜய் ஸ்டோர்ஸ்காரங்க வீட்டுக்குப் பெண் பார்க்கப் போனோம். (புதிதாகக் கட்டுவதற்காக முளைப் பிடித்த வீடும் அவர்களுடையதுதான்!) தெருவெல்லாம் கல் பரப்பி வைத்திருக்க, தெருமுனையிலேயே காரை விட்டு இறங்கி நடந்தோம். ஆச்சியின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நான் கடைசி ஆளாக வீட்டினுள் நுழைந்தேன்.

பெண் பார்க்கும் படலம்… புறப்படும்போது நான் அசத்தலாக இருக்கும் என்று நம்பி போட்டுக் கொண்டிருந்த ஆரஞ்சு கலர் சட்டையைப் பார்த்த அப்பா, ‘என்னடா… சட்டை மாத்தலையா..?’ என்று கேட்டு காலி பண்ணினார் என்றால், பெண் வீட்டில் லட்டு கொடுத்தவுடன், ‘ஏண்டா… பொண்ணு வீட்டுல கேசரி கொடுப்பாங்கனுதானே மேட்சா கேசரி பவுடர் கலர்ல சட்டை போட்டுகிட்டு வந்தே… இப்படி மிஸ் ஆகிடுச்சே..?’ என்று அண்ணாச்சி இன்னொருபக்கம் கேலி பண்ணினார்.

அந்த விஜய் ஸ்டோர்ஸ் வீடுதான் என் மாமனார் வீடு! ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜய் ஸ்டோர்ஸ் வீடு என்பதே முழு விலாசம். அந்த அளவுக்கு நகரின் பிரபலமான குடும்பம்.

அண்ணனும் தம்பியும் ஒரே குடும்பமாக இருக்காங்க… ரெண்டு பேரின் குழந்தைகளும் ஒரே வயிற்றில் பிறந்த மாதிரி இருக்காங்க… பெரிய குடும்பம்… நல்லாயிருக்கும்…’ என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல, அந்த குடும்பத்துப் பெண்ணே எனக்கு மனைவியானார்.

ஐந்து பெண்கள் மூன்று பிள்ளைகள் என்று மொத்தம் எட்டு குழந்தைகள். இவர்களில் என் மனைவி ஐந்தாமவர். பெண்களில் நாலாவது ஆள்! அதனால் எப்போதும் கலகலவென்று இருக்கும் வீடு.

மூத்த மருமகன் வழக்கறிஞர், அடுத்தவர் சொந்தத் தொழில், மூன்றாவதாக நான்… பத்திரிகைக்காரன்..! ஒரு மாப்பிள்ளையாவது தேதி கிழிச்சா சம்பளம் வர்ற மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளையா அமையலையே! என்று மனைவியின் பாட்டி வருத்தப்படுவார்களாம். அடுத்து வந்த இரண்டு மாப்பிள்ளைகளுமே தனியார் பணிதான்!

பத்திரிகைத் தொழில் என்பது அந்த வீட்டுக்கு ரொம்பவே புதியது. பத்திரிகைக்கும் அவர்களுக்கும் இருந்த ஒரே தொடர்பு தினமணி பேப்பர் மட்டும்தான்! திருமணமான பிறகு நான் போன அன்று கடைக்குட்டி மாப்பிள்ளையிடம் தினத்தந்தி வாங்கி வரச் சொன்னேன். அதைப் பார்த்ததும் தீயை மிதித்தது போல பதறிப் போனார் பெரிய மாமா. ஆனால், மறுநாள் முதல் தினத்தந்தியும் வீட்டுக்கு வந்தது.

என் வீட்டைப் போலவே மனைவியின் வீடும் நீளமான ரயில் பெட்டி வீடுதான். வராந்தா, முன்னறை, அடுத்த அறை, அடுக்களை பின்கட்டு என்று கச்சிதமான வீடு. வீட்டு ஆட்கள் அதிகம் என்பதால் நாலைந்து வீடு தாண்டி இன்னொரு வீடும் எதிரே ஒரு வீடும் என்று மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால், சமையல் செய்யும் வீடுதானே வீடு!

மூத்த மகனின் திருமணத்துக்குப் பிறகு பெரிய மாமாவும் சின்ன மாமாவும் தனித்தனி குடும்பங்கள் ஆனார்கள். மருமகன்கள் என்பவர்கள் வரும் நேரமெல்லாம் திருநாளாக இருக்கும். ஆனால், மருமகள் என்பவள் வீட்டிலேயே இருக்க வேண்டியவள். அதனால், அவளுக்கான இடமும் நேரமும் கூட்டுக் குடும்பத்தால் மூச்சுமுட்டிவிடக் கூடாது என்பதால் எல்லோருமாகப் பேசி தனித்தனி ஆனார்கள். ஆனால், மருமகன்கள் வரும் நேரம் ஒரே குடும்பமாகத்தான் இருக்கும்!

தினத்தந்தி போலவே அந்த வீட்டில் என்னால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. எப்போது அங்கு போனாலும் அசைவம் மணக்கும். சைவம் சமைத்தாலும் அசைவ வாசனையோடு பட்டை சோம்பு மசாலா இல்லாத சமையலே இருக்காது. விருந்து உபசரிப்பு என்பதே அந்த வாசனைதான்! ஆனால், எனக்கு மசாலா வாசனை அலர்ஜி.

திருமணத்துக்குப் பிறகு எங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். சென்னைக்கு புறப்படும்போது தென்காசியில் இருந்து ரயில் ஏறுவோம்… ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பை கொடுக்கப்படும். அனேகமாக மாமா, அத்தை, மச்சான் என்று மொத்த குடும்பமுமே ரயில் நிலையத்தில் இருப்பார்கள். சில நிமிடங்கள் என்றாலும் பார்த்துக் கொள்ளமுடியுமே என்ற ஆசைதான்! அவர்கள் கொடுக்கும் பையில் அன்று புதிதாக கடைக்கு வரும் வார பத்திரிகை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் பால்கோவா பாக்கெட்டுகள், கூடவே இரவு உணவு, தண்ணீர் பாட்டில்! (அந்த தண்ணீர் பாட்டில் சென்னை வந்த பிறகும் இரண்டு மூன்று நாட்கள் என் மனைவியின் ஊர் தாகத்தைத் தீர்க்கும்)

தொடக்கத்தில், ஒருமுறை இந்த பட்டியலில் கடைசியாக இருந்த உணவுப் பாக்கெட்டைத் திறந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பான ஹோட்டலில் இருந்து வரவைக்கப்பட்ட பிய்த்துப் போட்ட பரோட்டா, சிக்கன் குருமா..! ஒரே நேரத்தில் அய் என்றும் அய்யே என்றும் இரண்டு குரல்கள்! அய் என்பது மனைவியின் குரல். அய்யே என்பது என் குரல்!

ஏன் அய்யே என்று கேட்ட மனைவியிடம், ஹோட்டலில் சாப்பிடுவது என்றால் பார்டர் பரோட்டாவே வாங்கியிருக்கலாமே… வீட்டு சாப்பாடுதானே வேணும் என்று விளக்கம் சொன்னேன். அது அப்படியே ரெக்கார்டட் வாய்ஸாக விஜய் ஸ்டோர்ஸ் வீட்டுக்குப் போய்ச் சேர அன்றுமுதல் இன்று வரை வீட்டுச் சாப்பாடுதான்!

அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கெட்டில் காய்கறிக் கடை வைத்திருப்பவர், சரியாகச் சொல்லிவிடுவார், நான் என்று ஊருக்கு வருகிறேன் என்று! நான் ஊருக்குப் போகும் தினத்தில் அவர் கடை கத்தரிக்காய் கடைசலும் இட்லியும்தான் காலை டிபனாக இருக்கும்! சின்ன மாமா காய்கறிக் கடைக்கு காலங்கார்த்தால போய்விடுவார்.

முதலில் சின்ன மாமா, அடுத்து அவர்களின் சகோதரி, சமீபத்தில் பெரிய மாமா என்று கால இடைவெளியில் ஒவ்வொருவராக இயற்கையுடன் கலந்துவிட, களையிழந்து விட்டது விஜய் ஸ்டோர்ஸ் வீடு. ஆனாலும் அடுத்த தலைமுறை இன்னும் உத்வேகத்தோடும் அன்போடும் பொலிவு பெற்று விட்டது வீடு! அதன் உதாரணம் முந்தைய தலைமுறைக் கனவை அடுத்த தலைமுறை கையில் எடுத்திருப்பதுதான்!

என் இரண்டாவது மச்சான் திருப்பதி என் மகனிடம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான், ‘மருமவனே… என்ன வேணா படி… ஆனா, பச்சை மையில கையெழுத்துப் போடுற வேலைக்குப் போயிரு… அதுதான் கவுரவம்… புரியுதா… மருமகனுக்கு பச்சை மை மாமா கடையிலருந்துதான்… சரியா?’