Thursday, November 26, 2009

மன்மோகன் சிங்கைக் கடித்த பாம்பைச் சுட்ட விஜய்!


செக்கச் செவேலென அந்தப்புரம் சினிமாவில் வருவது போன்ற செவ்வக் காட்டின் நடுவே எங்கள் வீடு... இப்போ இருக்கும் வீடு இல்லை... இதைக் கட்டுவதற்கு முன்பு இருந்த வீடு. காரை பெயர்ந்தும் லேசாக செம்மண் வழிந்தும் இருக்கும் வீடு... அந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடமான முன்பக்கத்து குச்சிலில் உட்கார்ந்து நேற்று புதிதாக வாங்கிய கார்போன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தேன்.

ஜன்னலோரமாக நின்று பேசிக் கொண்டிருந்த என் கவனத்தை ஈர்த்தாள் என்னோடு அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படித்த கிருஷ்ணம்மாள். இப்போ போலீஸ் வேலையில் இருக்கிறாள். ஆனால் நான் பார்த்தபோது அவள் யூனிஃபார்மில் இல்லை. நைட்டி போல ஒரு உடையை அணிந்துகொண்டு என்னை நோக்கி வந்தாள். ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்டி அவள் கரங்களைப் பிடித்து நலம் விசாரித்தேன்.

மலர்ந்த கண்களோடு கைகளை எட்டிப் பிடித்தவள், சட்டென்று கணநேரத்தில் முகம் மாறி கண்களில் நீரோடு கைகளை விடுவித்துக் கொண்டு போனாள். சற்று தள்ளி இரண்டு காவலர்களும் ஒரு காவலப் பெண்ணும் சீருடையில் இருக்க, கிருஷ்ணம்மாளும் சீருடை அணிந்தபடி அழுத கண்களோடு அவர்கள் பின்னால் நடந்து சென்றாள்.

நான் கைபேசி உரையாடலைத் தொடர்ந்தபடி அண்ணாந்து பார்த்தேன். சிதிலமகி இருந்த என் வீட்டுக் குச்சிலுக்கு மேலே படர்ந்திருந்த பெரிய மரத்தின் கிளையில் பெரிய பாம்பொன்று நகரமுடியாமல் நகர்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் குச்சிலுக்கு உள்ளே நுழைந்த என் தாயும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டார்.

நம்ம வீட்டு பாம்புதான் அது என்று அம்மா எனக்கு அந்தப் பாம்பை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த நொடியில் அந்தப் பாம்பு மரத்தில் இருந்த மிகப் பெரிய பொந்துக்குள் தன்னை நுழைக்கத் தொடங்கியிருந்தது.

நம்ம வீட்டுப் பாம்பு அதுக்குள்ளே போகாதே... இது வேற ஏதோ பாம்பு! என்று பதறிய அம்மா, குச்சிலுக்குக் கீழே இருந்த பங்கருக்குள் படுத்திருந்த அப்பாவை எழுப்பச் சொன்னாள். அப்பா என் பிள்ளைகளுக்காக வாங்கிப் போட்டிருந்த இரண்டு அடுக்குக் கட்டிலின் கீழ் பாகத்தில் படுத்திருந்தார். மேலே உள்ள கட்டிலில் தலைவரையில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தது யார் என்று தெரியவில்லை.

சின்னதாகக் குரல் எழுப்பியும் சைகை காட்டியும் அப்பாவை எழுப்பிவிட்டேன். மேலே பொந்துக்குள் நுழைந்த பாம்பு அதன் வழியாகக் கீழிறங்கி கட்டிலில் நகரத் தொடங்கியது. மேல் கட்டிலில் படுத்திருந்தவரின் அருகில் நீளமாகக் கிடந்த பாம்பு புஸ் புஸ் என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

பங்கரை விட்டு வெளியே வந்த அப்பாவிடம் பாம்பு பற்றிச் சொன்னதும் அய்யோ என் பை என்றபடி மறுபடியும் பங்கருக்குள் நுழைந்து தன் பையை எடுத்துக் கொண்டு வெளியேறும்போது தன்னையறியாமல் கட்டிலை அசைத்ததோடு லேசாக கத்தியும் விட்டார்.

அப்பா போட்ட சத்தத்தில் மேல் கட்டிலில் படுத்திருந்தவர் போர்வையை விலக்க... அட... தலை டர்பன், தாடி சகிதம் மன்மோகன் சிங்! போர்வையை விலக்கிப் பார்த்த மன்மோகன் சிங் மூக்கருகே இருந்த பாம்பு படக்கென்று அவர் மூக்கைக் கடித்துவிட்டது.

என்ன நினைத்ததோ கடித்தவேகத்தில் சரசரவென்று கீழிறங்கத் தொடங்கியது. நானும் அப்பாவும் வேகமாக மேலேறி வந்து பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு பார்க்க, என் வீட்டு குச்சிலின் வாசலில் நின்ற இளைய தளபதி விஜய் அந்தப் பாம்பை தன் கைத்துப்பாக்கியால் பட்டென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்தத் துப்பாக்கி சத்தம் கேட்டு நான் கண்விழித்தபோது மணி மூன்றரை! நான் திடுக்கிட்டு எழுந்த சத்தத்தில் விழித்த மனைவி என்ன கனவா..? என்றார்.

ஆமா... பாம்பு கனவு? என்றேன்.

கனவுல வந்த பாம்பு கடிச்சுதா, இல்லை போயிடுச்சா... ஏன்னா, கனவுல பாம்பு கடிச்சாத்தான் நல்லது நடக்கும்பாங்க!” என்றார்.

கடிச்சுடுச்சு! என்று சொல்லிவிட்டு மொடக்கென்று தண்ணீரைக் குடித்தேன்.

அப்போ நல்ல விஷயம் நடக்கும் என்று சொல்லிவிட்டு தூக்கத்தைத் தொடர்ந்தார் என் மனைவி.

யாருக்கு நல்ல விஷயம்... கனவு கண்ட எனக்கா, இல்லை கடிபட்ட மன்மோகன் சிங்குக்கா?!

Wednesday, November 11, 2009

கதையின் கதை - 2

இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!

சம்சாரி கதையின் முத்தாய்ப்பான வார்த்தைகள் இவை. அந்தக் கதையில் வலி நிறைந்த வார்த்தைகளும் அவைதான்! ஆனால், அந்த வரிகள் நூறு சதவிகிதம் நிஜம். அதிலும் கந்தன் சித்தப்பாவை அந்தக் கோலத்தில் நான் பார்த்தது என் சகோதரனின் திருமணத்தில்!

கந்தன் சித்தப்பாவின் சகோதரர் வீட்டில் இருந்து கொஞ்சநாளிலேயே மாற்றிக் கொண்டு மீண்டும் எங்கள் கிராமத்துக்கு வந்துவிட்டாலும் அந்தக் காம்பவுண்டில் இருந்த அத்தனை வீடுகளிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் அந்த காம்பவுண்டில் எல்லோருடைய வீட்டுக்கும் பத்திரிகை வைத்துவிட்டுத்தான் வந்திருந்தோம். ஆனால், அவர் அப்போது சமையல் காண்ட்ரக்டரிடம் பறிமாறுபவராக வேலை பார்க்கும் விஷயம் தெரியாது. அதே சமையல் காண்ட்ராக்டரை நாங்கள் எங்கள் வீட்டு திருமணத்துக்கு அழைக்க, அவரை கெடுபிடி செய்து பறிமாற அழைத்து வந்துவிட்டார் சமையல்காரர்.

பத்திரிகை வைத்து அழைத்திருந்தாலும் அவரால் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. இந்தக் கதையில் ஒரு விவசாயி வீழ்ந்து போன சோகத்தைப் பதிவு செய்யும் நோக்கத்தில் சம்பவங்களை அமைத்துவிட்டேன். ஆனால், கல்யாணத்துக்கு முந்தையநாள் இரவும், பறிமாறும் வாளியோடு அவர் தயாரான தருணத்திலும் அவருடைய உள்மன போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் பதிவு செய்யமுடியவில்லை.

என்னைப் பார்த்ததும் கந்தன் சித்தப்பா, ‘ஏய் பாபு... எப்படியிருக்கே... மெட்ராஸ்ல வேலை பாக்கியாமே... அண்ணாச்சி சொன்னாவோ! என்னடே இப்படிப் பாக்கே... வெள்ளை வேட்டி சட்டை பொட்டுகிட்டு நின்னா அழுக்காயிரும்லா!” என்றார் அதே குறுஞ்சிரிப்போடு! அந்தச் சிரிப்பு என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தியது.

எத்தனை கந்தன் சித்தப்பாக்கள் விவசாயத்தைக் கைவிட்டு (அல்லது விவசாயம் அவர்களைக் கைவிட்டு) இப்படி நிற்கிறார்களோ..!

(இந்தக் கதை விகடனில் வந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு பிரதி வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். என்னுள் குறுகுறுக்கும் குற்ற உணர்வைப் போல அவரிடம் பத்திரமாக இருக்கிறது அந்தக் கதை!)

Monday, November 9, 2009

சம்சாரி





கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது ஆய்க்குடியில்!

ஆய்க்குடி.... என் பால்யத்தின் பள்ளி நாட்கள் கழிந்தது அந்த ஊரில்தான். கோலி, செல்லாங் குச்சி, பம்பரம் என எல்லா விளை யாட்டுக்களையும் கற்றுத்தந்தது அந்த ஊர்தான்.



என் தந்தைக்கு அரசாங்க உத்தியோகம். அடிக்கடி இடம் மாற்றம் வந்துகொண்டே இருக்கும். ஒரு முறை, விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த என்னை அழைத்துக்கொண்டு ஆய்க்குடியில் போய் இறங்கினார் அப்பா. ''இனி மூணு வருஷத்துக்கு இந்த ஊர்தான்!'' என்று சொல்ல, எனக்கு பழைய நண்பர்களிடம் விடை பெறக்கூட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்.

நாற்றங்காலில் இருந்து பிடுங்கப்பட்டு வயலில் நடப்பட்ட நாற்று, முதல் நாளில் வாடி, அடுத்த நாள் துளிர்க்குமே... அது போல, ஒரே வாரத்தில் ஆய்க்குடியுடன் ஐக்கியமாகிவிட்டேன்.


கிராமத்துக்கும் பெரிய கிராமத்துக்கும் இடைப்பட்ட ஊர் ஆய்க்குடி. ஒரு சிவன் கோயில், ஒரு முருகன் கோயில், தெளிவாக ஓடும் ஒரு நதி, ஒரு பள்ளிக்கூடம், ஓர் ஆஸ்பத்திரி எல்லாம் இருந்தாலும், கிராமத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது டூரிங் டாக்கீஸ். திருநெல்வேலியில் ரிலீஸாகி, செகண்ட் ரிலீஸாக தென்காசிக்கு வந்து ஓடித் தேய்ந்துபோன படங்களைத்தான் திரையிடுவார்கள். என்றாலும், அந்த ஊருக்கு டூரிங் டாக்கீஸ் தனி கம்பீரத்தைத் தந்தது.

ஆய்க்குடிக்குப் போய்ச் சேர்ந்த அன்றைக்கே அந்த டூரிங் டாக்கீஸில் படத்துக்கு கூட்டிப் போனார் அப்பா. கூடவே அம்மா, அப்பாவின் அத்தை, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் என்று பாதி கொட்டகைக்கு நாங்களே இருந்தோம்.

வசதியான வீடு பார்த்துக்கொள்ளும் வரையில், தன் வீட்டில் இருக்கச் சொல்லியிருந்தாள் அப்பாவின் அத்தை, சோளச் சோறு, கேழ்வரகுக் கூழ், அகத்திக் கீரை என்று நான் பார்த்தறியாத உணவுப் பண்டங்களை ருசித்தது அங்கேதான்.

அத்தைக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது என்று அப்பா வேலை நேரம் போக, மீதி நேரமெல்லாம் தீவிரமாக வீடு தேடினார். அவருடைய சிரமத்தைக் குறைக்க, என் பங்குக்கு நானும் வீடு தேடினேன். என் வகுப்புத் தோழன் ஒரு வீடு பற்றிச் சொல்ல, அதை என் அப்பாவிடம் சொன்னேன். அன்றைக்குச் சாயங்காலமே இருவரும் அந்த வீட்டைப் பார்க்கப் போனோம்.

ஒற்றை அறை, அதை ஒட்டி ஒரு சமையலறை, அதைத் தாண்டி சந்து வழியாகச் கொஞ்ச தூரம் நடந்தால் டாய்லெட், பாத்ரூம் என்று மிகவும் சிறிய வீடு. பார்த்ததும் எனக்கே பிடிக்கவில்லை.

''நம்ம ஊரில் கிடக்கும் உன் கட்டிலைக் கொண்டு வந்தால், இங்கே போட இடமிருக்காது. வேறு வீடு பார்க்கலாம்'' என்று அப்பா சொல்லிக்கொண்டே வர, திரும்பி நடந்தோம்.

''அண்ணாச்சி, வீடு தேடுதியளோ..?'' என்று ஒரு குரல் எங்களைத் தடுத்து நிறுத்தியது. வைக்கோல் போரே தலையாக எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு மனிதர், எங்கள் பதிலை எதிர்பார்க்காமல், ''எங்க அண்ணன் ஒரு வீடு கட்டியிருக்காரு. வாடகைக் குதான் கொடுக்கணும்னு சொல் லிட்டிருந்தாரு. பாருங்களேன்!'' என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

அப்படித்தான் கந்தன் சித்தப்பா எனக்கு அறிமுகமானார். இப்போ தும் கந்தன் சித்தப்பாவை நினைத் தால், வைக்கோல் போர் தலையராக அவர் நின்ற காட்சிதான் மனதில் தோன்றும்.

''என்ன அண்ணாச்சி..! ஆறாங்கிளாஸ் படிக்கும் பையன் கூப்பிட்டான்னு இத்தாம் பெரிய ஆள் வீடு பாக்க வந்திருக்கியளே..!'' என்று பேசியபடி, கிடுகிடுவென்று முன்னால் நடந்தார்.

வீடு அமைப்பாகவே இருந்தது.. நாலு பத்தி வீடு. எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. புதிய வீடு என்பதால், மனசுக்கும் சந்தோஷமாக இருந்தது.

''எல்லாம் சரிதான்... எதுத்தாப்புல மாடு கட்டியிருக்காங்களே..'' என்றாள் அம்மா.

''மதினி..! நீங்க ஏன் கவலைப்படுதிய? நீங்க குடி வார அன் னைக்கு மாடுகளை என் தொழுவுல கட்டிக்கிருதேன்'' என்று உரிமையாக உறவு கொண்டாடத் தொடங்கினார் கந்தன் சித்தப்பா.

''பால் காய்ச்சணும்னு கடைக்கு கிடைக்கு பால் வாங்கப் போயிடாதீய. நம்ம வீட்லயே நாலு பால் மாடு நிக்கு'' என்ற கந்தன் சித்தப்பா கையோடு ஒரு சொம்பு பாலையும் கொண்டுவந்து கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் புது பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் எடுத்துக்கொண்டு வந்தாள் முருகம்மா சித்தி.

''பால் காய்ச்சுற வீட்டுக்கு கம்மா வர முடியுமா.. அதான், கடை திறந்ததும் இதெல்லாம் வாங்கிட்டு ஓடியாறேன்'' என்ற முருகம்மா சித்தி, பால் காய்ச்சிய பாத்திரம், தம்ளர்களை விளக்கிக் கழுவி ஓரமாக அடுக்கிவைத்தாள்.

நாங்கள் குடிவந்த காம்பவுண்டிலேயே அடுத்த வீடுதான் கந்தன் சித்தப்பா வீடு. அவர் வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தது என் விளையாட்டுக்குத் தோதாக இருந்தது.

''ஏடே! இன்னிக்கு எங்கூட குளிக்க வாரியா? மதினி, இவனையும் வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்'' என்று வராண்டாவில் கிடந்த துண்டை எடுத்து எனக்கு மாலையாகப் போட்டு அழைத்துக் கொண்டு போனார்.

கந்தன் சித்தப்பாவின் வயற்காட்டில் எனக்குப் பிடித்தது அந்த வட்டக் கிணறுதான். அவர் தந்த செவ்விளநியை விட, கண்ணை நிறைத்த நெல்வயலைவிட, மீன்கள் துள்ளும் கிணறுதான் கவர்ச்சியாக இருந்தது.

''நம்ம வயல் எது சித்தப்பா?'' என்றேன். பழகிய பத்தே நாட்களில் எனக்கும் அந்த உரிமை வந்துவிட்டது.

''இந்த ஒரு கிணத்துப் பாசனமும் நம்ம வயல்தாண்டே. இன்னைக்கு கிணத்தைத் தூர் அள்ளப் போறோம். மோட்டார்ல ஆசை தீரக் குளிப்பியேனுதான் கூட்டிட்டு வந்தேன். சாயங்காலம்தான் வீட்டுக்கு'' என்று டவுசரை அவிழ்த்துவிட்டார். இரண்டு மோட்டார் பம்புகள் ஓடத் தொடங்கின. இரண்டிலும் ஓடி ஒடிக் குளித்தேன். வேலையாட்களை விரட்டிக்கொண்டே தென்னந் தோப்பின் நடுவே பாத்தி கட்டித் தண்ணீரை நிரப்பினார்.

மூன்று மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு கிணறு தரை தெரியவும், முருகம்மா சித்தி பெரிய தலைச்சுமையோடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

''அதுக்குள்ள வத்தவெச்சுட்டியளாக்கும்! நான் கொஞ்சம் துணி சோப்பு போட்டுறலாம்னு பார்த்தேன்'' என்று சித்தி சொல்ல,

''அடி இவளே! வயலுக்குப் பாயுற தண்ணியில சோப்பு போடப் போறியா..? அழுக்கைத் தூக்கிக்கிட்டு ஆத்துக்குப் போக வேண்டியதுதானே..?'' என்றபடி அவள் தலைச்சுமையை இறக்கினார் சித்தப்பா.

''அண்ணாச்சி! விறால் எல்லாத்தையும் புடிச்சிரவா..?'' என்று கிணற்றுக்குள் இருந்து குரல் வர, ''எலேய்! அடுத்தாப்புல மீன் திங்க ஆசையில்லையா? எண்ணி பத்து விறாலுக்கு மேல புடிக்கப்படாது'' என்று கிணற்று விளிம்பில் நின்று கத்தினார் சித்தப்பா.

கிணற்றுக்குள் இருந்து கேட்ட குரலும், பதிலுக்கு சித்தப்பா பேசியதன் எதிரொலியும் வித்தியாசமாகப் பட, கிணற்றை எட்டிப் பார்த்தேன். ஈர வாசனை ஜிலீர் என்று முகத்தை வருடியது.

''உள்ளே இறங்கிப் பாக்கியா..? உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மாதிரி ஜில்லுனு இருக்கும்!'' என்று சித்தப்பா என் இடுப்பில் கயிற்றைக் கட்டி உள்ளே இறக்கினார்.

ஈரம் கசியும் ஊற்றுகளும், பாசி படிந்த சுவர்களும் அடிவயிற்றைப் பயமாகக் கவ்விப்பிடிக்க, மெதுவாகக் கிணற்றுக்குள் இறங்கினேன். இறங்கிய நொடியில் பயம் போய்விட, ஓடி ஓடி மீன் பிடித்தேன்.

என்னை இறக்கிய கயிற்றில் மீன்களைப் போட்ட வாளியைக் கட்டிவிட, சரசரவென்று மேலே இழுத்த சித்தப்பா, பத்து நிமிட இடைவெளியில் வாளியைக் கீழே இறக்கி என்னை அதில் உட்காரச் சொல்லி, மேலே தூக்கிவிட்டார்.

பத்து நிமிடம் பாதாள உலகத்தைப் பார்த்துவிட்டு வந்தது போலப் பரவசமாக இருந்தது. சித்தப்பா கட்டி வைத்திருந்த பாத்தியில் நீந்திக்கொண்டு இருந்த விறால்களை ஒவ்வொன்றாகப் பிடித்து உரசி, கழுவி நறுக்கத் தொடங்கினாள் சித்தி.

என்னை அழைத்துக் கொண்டு வயலைச் சுற்றி வந்த சித்தப்பா, ''ஏய்.. என்னப்பா தண்ணி அடைக்கீங்க..? கீழக் கடைசியில ஒரு துண்டு காஞ்சு கிடக்கு. அடுத்த மோட்டாருல முதல் தண்ணியை இங்க திருப்புங்க!'' என்று குரல் கொடுத்தார்.

வயலைச் சுற்றிய அரை மணி நேரத்தில் மணக்க மணக்க மீன் குழம்பு தயாராகி இருந்தது. ''கை காலைக் கழுவிட்டு உட்காருடே..!'' என்று சொல்லிவிட்டு, வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து இலை அறுத்துக்கொண்டுவந்தார் சித்தப்பா.

''அவனுக்குக் காட்டுக்குள்ள எல போட்டுச் சாப்பிடத் தெரியாதுனு தட்டு கொண்டாந்திருக்கேன். நீங்க முதல் சோறு சுடுசோறு வாங்கிட்டுப் பிறகு பழையது வாங்குதியளா..?'' என்றபடி, தட்டில் சோற்றைத் தோண்டினாள் சித்தி.

சித்தப்பா, ''எனக்குப் பழையது போதும்'' என்று சொல்லிக்கொண்டே தரையில் பள்ளம் பறித்து, அதில் வாழை இலையைப் பதித்தார். சித்தி பழையதும் நீச்சத் தண்ணியுமாக அதில் சாப்பாட்டைப் போட்டு, மீன் துண்டைத் தனியாக ஒரு இலையில் எடுத்துவைத்தாள்.

''சித்தி.. எனக்கும் பழையது. அதுவும் இலை போட்டு'' என்றேன்.

''ஆத்தி.. கிணத்து தண்ணியில இந்த ஆட்டம் ஆடியிருக்கே! அதுக்கு மேல பழையது தின்னா அக்காளுக்கு யாரு பதில் சொல்லுறது? சித்தப்பா கணக்கா இலை வேணா போட்டுக்கோ!'' என்று எனக்குப் பள்ளம் பறித்து இலைபோட்டு சுடுசோறு பரிமாறினாள் சித்தி.

''சாப்பாடு மட்டும்தான் சித்தப்பா மாதிரினு ஆசையா, இல்லை சம்சாரி ஆகணும்னும் ஆசையா?'' என்று குறுஞ் சிரிப்போடு கேட்டார் சித்தப்பா.

வயல்களிடையே அவர் கம்பீரமாக நடைபோடுவதையும், வீடெல்லாம் நிறைந்து கிடக்கும் நெல் தானியங்களையும், மாடுகளுக்குத் தீவனமாக வைக்கோல் சுமப்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் குறுஞ்சிரிப்போடு வாழும் அவர் இயல்பையும் பார்த்தபோது சம்சாரி (விவசாயி) ஆகவும் ஆசை வந்தது.

ஆனால், யதார்த்தம் என்னை கம்ப்யூட்டர் இன்ஜினீயராக்கி, சென்னையில் இருந்துகொண்டு அமெரிக்காக்காரனின் பிரச்னைக்குத் தீர்வு சொல்ல வைத்துவிட்டது.

தென்காசியில் ரயிலைவிட்டு இறங்கி, குளித்துத் தயாராகி ஆய்க்குடிக்கு புறப்பட்டேன். கதிரேசன் தாலி கட்டியதும் கந்தன் சித்தப்பா வீட்டுக்குப் போய்விட வேண்டும். இப்போதாவது வீடு, குடும்பம் என்று இருக்கிறாரோ... இல்லை மாடு, வயல் என்று அலைகிறாரோ! என்னைப் பார்த்தால் அதிர்ந்து விடுவார். முருகம்மா சித்திக்கு என்னை அடையாளம் தெரியுமா என்று பார்க்கலாம்!

மண்டபத்தில் நுழைந்தவுடன், ''மாப்பிள்ளையும் பொண்ணும் தாலி கட்டக் கோயிலுக்குப் போயிருக்காங்க. அவங்க வர்றதுக்குள் டிபன் சாப்பிட்டுடலாமே!'' என்று ஒருவர் உபசரித்து டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார். இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!


இந்தக் கதையை வாசித்துப் பாருங்கள்... இந்தக் கதையின் கதை இன்னொரு சந்தர்ப்பத்தில்!

Wednesday, November 4, 2009

என் மகனும் என் மதமும்!


நேற்றிரவு படுக்கையில் இருந்தபோது என் மகன் தீபன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். ’அப்பா... என் பிரெண்ட் ஆகாஷ் கிரிஸ்டியனாம்... நான் யார்?’ என்றான். அவனுக்கு விளக்கங்கள் சொல்லத் தயாராகிக் கொண்டே, ‘நீ இந்து!’ என்றேன். அவனிடமிருந்து அடுத்த கேள்வியாக, ‘எப்படி நான் இந்து?’ என்று வரும் என்ற எதிர்பார்ப்போடு, அதற்கான பதிலைத் தயார் செய்து கொண்டேன். ஆனால், அவனோ, ‘அப்ப நீ?’ என்றான். நான் இந்துங்கறதாலதாண்டா நீ இந்து’ என்றெல்லாம் சொல்லாமல் கேள்விக்கு மட்டும் பதிலாக ’நானும் இந்துதான்... என்றேன். அடுத்தடுத்து அப்போ அம்மா, அப்போ தர்ஷினி (என் மகள்) என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.

சிறிது நேரம் மவுனமாக இருந்தவன், ‘ச்சே... மிஸ் ஆகிப் போச்சு!’ என்றான் சின்ன வருத்தத்தோடு!

என்னடா மிஸ் ஆச்சு? என்றேன்.

‘எங்க மிஸ் யாரு இங்கே இந்துனு கேட்டாங்க... ஒருத்தன்தான் கையைத் தூக்கினான். நான் இந்துனு தெரிஞ்சிருந்தா கையைத் தூக்கியிருக்கலாம். மிஸ் ஆகிடுச்சு!’ என்றவன், அடுத்து நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியைக் கேட்டான்.

‘இந்துனா எப்படித் தெரியும்?’ என்றான்.

‘நம்ம வீட்டிலே பூஜை ரூமில் பிள்ளையார், ராகவேந்திரா, ஆண்டாள் எல்லா படங்களும் இருக்குதில்லையா... அதை நீ கும்பிடுறே இல்லையா... அந்தச் சாமியைக் கும்பிடுறவங்க இந்து’ என்றேன்.

’அப்போ கிரிஸ்டியன்?’ என்றான்.

‘அவங்க ஜீஸஸைக் கும்பிடுவாங்க! நாம முன்னே இருந்த வீட்டுக்கு எதிரில் இருந்ததே சர்ச்... அதுதான் அவங்க கோவில்’ என்றேன்.

‘நாமகூட அங்கே போய் சாமி கும்பிட்டிருக்கோமே... கேண்டில் எல்லாம் ஏத்தினோமே... அப்போ நாம எப்படி இந்து?’ என்றான்.

‘இல்லைடா... எல்லா சாமியும் ஒண்ணுதான்...’ என்றேன்.

‘அப்போ வேற என்ன வித்தியாசம்?’ என்றான்.

‘இந்துனா தீபாவளி, பொங்கல் எல்லாம் கொண்டாடுவாங்க!” என்றேன்.

‘அப்போ கிரிஸ்டியன் என்ன கொண்டாடுவாங்க?’ என்றான்.

‘கிருஸ்துமஸ் கொண்டாடுவாங்க... ஸ்டார் எல்லாம் கட்டுவாங்க!’ என்றேன்.

‘நம்ம வீட்டுலயும் கிருஸ்துமஸ் ஸ்டார் கட்டினோமே...’ என்றான்.

’தம்பிக்கு ஸ்டார் பிடிக்குமேனு கட்டினேன்... அதோட ஸ்டார் போட்டப்ப வீடு எவ்ளோ அழகா இருந்தது... அதுவும் ஒரு காரணம்’ என்றேன்.

கொஞ்சநேரம் மவுனமாக இருந்தான்.

‘சரி, கிரிஸ்டியன், இந்து மாதிரி இன்னும் என்னவெல்லாம் இருக்கு? என்றான் அடுத்ததாக!

‘அது நிறைய இருக்கு...’ என்றேன்.

‘ஏதாவது சொல்லு என்றான் விடாப்பிடியாக.

‘முஸ்லிம், சீக், சமணம், புத்தம்னு நிறைய இருக்கு’ என்றேன்.

‘முஸ்லிம் எனக்குத் தெரியும்... என் பிரெண்ட் அர்ஷத் முஸ்லிம்தான்...’ என்றான்.

‘உனக்கு எப்படித் தெரியும், அவன் முஸ்லிம்னு’ என்றேன். அதற்கு பதில் அவனுக்குத் தெரியவில்லை.

‘ஆனால், அவன் என் பெஸ்ட் ஃபிரெண்ட் தெரியுமா? ரெண்டுபேரையும் எங்க மிஸ் சேட்டை பண்ணினோம்னு நிக்க வெச்சிருக்காங்க...’ என்றவன், தொடர்ந்து, ‘சீக்னா எப்படி இருப்பாங்க?’ என்றான்.

’டர்பன் கட்டி தாடி வெச்சு!’ என்றதும் நம்ம மினிஸ்டர் மாதிரியா? என்றான்.

அவனுடைய அப்சர்வேஷன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

‘எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் என்றான்.

சமணம் பற்றியும் புத்தம் பற்றியும் அவனிடம் எந்தக் கேள்விகளும் இல்லை. என்னிடமும் விளக்கங்கள் இல்லை.

உறங்கப் போகும் முன் திடீரென்று ‘நல்லவேளை, நான் எஸ்கேப்... மிஸ் யாரு இந்துனு கேட்டப்போ நான் கை தூக்கலை!’ என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டான்.

நான் யாரு என்று அவன் கேட்டபோது, ‘நீ இந்து என்று சொல்லியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது!

ஆனால், வேறு என்ன சொல்வது?