Tuesday, June 5, 2012

படம் ரொம்ப நேர்மையா இருக்கு!

எனக்கும் என் நண்பனுக்கும் பல நேரங்களில் பல கருத்துகள் குறித்து விவாதங்கள் நடந்திருக்கிறது... நடந்து கொண்டிருக்கிறது... இன்னும் நடக்கும். பெண்ணுரிமை தொடங்கி பெரிய விஷயங்களாக இருந்தாலும் சரி, பேப்பர் படிப்பது போன்ற அன்றாட விஷயங்களாக இருந்தாலும் சரி, இருவரும் எப்போதுமே எதிர் எதிர் திசைகளில்தான் இருப்போம்.
சில தினங்களுக்கு முன்னால் சினிமா குறித்த விவாதம் அவனுக்கும் எனக்கும்! நல்ல சினிமா என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தில் பல விஷயங்களை விவாதித்தோம். நான் சொல்லும் உதாரணங்களைக் கேட்ட பிறகு கடைசியாக ஒன்று சொன்னான்.
‘உன்னுடைய எஸ்தடிக் சென்ஸ் முற்றாக அழிந்துவிட்டது. எல்லா படங்களையும் விமர்சனப் பார்வையோடுதான் பார்க்கிறாய்...’ என்றான். ‘அப்படியில்லை... நல்ல படங்கள் பார்க்கும்போது எனக்கும் கண்கள் கசிகின்றன... நானும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கத்தான் செய்கிறேன்... ஆனால், வாரந்தோறும் வெளியாகும் படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் பல நேரங்களில் அயர்ச்சி ஏற்படுகிறது. அதை வைத்து என் அழகியல் உணர்வைக் குறை சொல்லிவிடாதே...’ என்றேன்.
அந்த உரையாடலைத் தொடர்ந்து என் நினைவுகளை ஆக்ரமித்தது சமீபத்தில் நான் பார்த்த கிருஷ்ணவேணி பஞ்சாலை படம். என் நண்பர் தனபால் பத்மநாபன் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம். நண்பரின் படம் என்பதைத் தாண்டி அதன் உள்ளடக்கம் என்னை ஈர்த்திருந்தது.
கதையைப் பற்றி சொல்லும்போதே இது பல தளங்களில் இயங்கும் கதை என்று தனபால் சொல்லியிருந்தார். ‘வித்தியாசமான கதை...’ என்று சொல்லும் இயக்குனர்களைக் கண்டிருக்கிறேன். புது ட்ரீட்மென்ட் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், தனபால் சொன்னது புதிதாக இருந்தது.
கையில் பைண்ட் செய்யப்பட்ட ஸ்கிரிப்டை வைத்திருந்தார். ஆனால், எனக்கு அப்போது அதைப் படிக்க நேரமில்லாமல் போய்விட்டது. அதன்பிறகு படப்பிடிப்பின் சிரமங்களைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொள்வோம். படம் முழுமையடைந்த பிறகு ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘டைரக்டர் மகேந்திரன் சார் படத்தைப் பார்த்தார். படம் ரொம்ப நேர்மையா இருக்குனு சொன்னார்...’ என்றார் தனபால்.
எனக்கு இன்னும் ஆச்சரியமாகி விட்டது. படம் நல்லாயிருக்கு... நல்லாயில்லை என்று சொல்வதுதான் வழக்கம். ஆனா, நேர்மையா இருக்குனு சொல்வது... அதுவும் மகேந்திரன் மாதிரியான தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் சொல்வது சந்தோஷமான விஷயம் என்று சொல்லிவிட்டு, எப்போது படம் காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன்.
பிசினஸ் பேச்சு வார்த்தை ஓடிக் கொண்டிருக்கிறது... படத்தை எடுப்பதைவிட அதை மார்க்கெட்டிங் செய்வதுதான் பெரும் பாடாக இருக்கிறது. அதற்கான காட்சியின்போது சொல்கிறேன் என்றார். அதன்படி சொல்லவும் செய்தார்...
பஞ்சாலைப் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை. ஒரு வரியில் படத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் இப்படித்தான் சொல்லவேண்டும். ஆனால், தனபால் சொன்னதுபோலவே இந்தப் படம் பல தளங்களில் பயணித்திருக்கிறது.
கறுப்பு வெள்ளை காலத்தில் ஒரு முதலாளியின் வீம்புப் பிடிவாதத்தின் விளைவாகத் தொடங்கப்படும் கிருஷ்ணவேணி பஞ்சாலை எண்பதுகளின் இறுதியில் ஒருசில தொழிலாளிகளின் வீம்பு பிடிவாதத்தால் முடிவுக்கு வருகிறது. இது ஒரு தளம்... மில் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மூடப்படும் காலம் வரையில் மில்லோடும் முதலாளி, தொழிலாளிகளோடும் சேர்ந்தே பயணிக்கும் ஜாதிய சிந்தனை இன்னொரு தளம்... மில் வாழ்க்கை தரும் நெருக்கத்தால் ஏற்படும் காதல்கள், மோகங்கள் என்று ஆண் பெண் ஈர்ப்பு தரும் விளைவுகள் மூன்றாவது தளம்... இந்த மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் விதத்தில் நிச்சயம் கவனம் ஈர்க்கிறார் தனபால்.
அவருடைய இயல்பைப் போலவே படத்திலும் மிக நிதானமான கதை சொல்லல் பாணியைக் கையாண்டிருக்கிறார். சில இடங்களை... குறிப்பாக பாடல்களை அவர் படமாக்கி இருக்கும் விதம் மிகுந்த அழகியலோடு இருக்கிறது.
இதைத் தாண்டி படத்தைப் பற்றி சொல்வது நியாயமாக இருக்காது. பார்க்கும்போது கிடைக்கும் அனுபவத்துக்கு குறுக்கே நிற்பதாகிவிடும். அதனால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
என் நண்பனோடு பேசிய சினிமா அழகியல் பேச்சின் முடிவில் எனக்கும் சினிமாவைப் பார்க்கும்போது கண்கள் கசிந்திருக்கின்றன என்று சொன்னதன் தொடர்ச்சியாகத்தான் கிருஷ்ணவேணி பஞ்சாலையின் நினைவு வந்தது.
காரணம், கிருஷ்ணவேணி பஞ்சாலையின் மிச்சமாகவும் குறியீடாகவும் தனபால் க்ளைமாக்ஸில் காட்டும் அந்த காட்சியில் என் கண்கள் கசிந்தன.
புரிந்து கொள்வாயா நண்பனே..!