Sunday, January 21, 2024

டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி!

 எங்க ஊர்ல (கொட்டாகுளம், தென்காசி மாவட்டம்) டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சினு ஒருத்தி இருந்தா! (ஒருமை எல்லாமே உரிமைதான்!) அந்த வீட்டுத் தாத்தா ரயில்வேயிலே டிரைவரா இருந்ததால அந்த ஆச்சி டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி! அவளுக்கு வேறு சில பெயர்களும் இருந்தன. சுளுக்கு தடவுத ஆச்சி… பார்வை பாக்குற ஆச்சி என்பது போல… கூடவே பெத்தவங்க வெச்ச பேரான பொன்னம்மா ஆச்சி என்ற பெயரும் இருந்தது!

பொதுவாக இரட்டைப் பிள்ளைகளைப் பெறும் அம்மாக்களுக்கு சுளுக்குத் தடவும் திறன் வந்துவிடுவதாக ஊர்பக்கம் ஒரு நம்பிக்கை! அந்த ஆச்சிக்கும் இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். ராமலட்சுமி சித்தியும் லட்சுமண மாமாவும்! அந்த இருவரும் கடைக்குட்டிகள்… அவர்களுக்கு முன்னதாக சண்முக ஆச்சியில் (ஆமா… அம்மாவும் ஆச்சி… மகளும் ஆச்சி…) தொடங்கி அரி மாமா வரையில் மூணு நாலு பொம்பளைப் புள்ளைகள்… ரெண்டு மூணு ஆம்பளைப் புள்ளைகள்!

சிறு வயதில் மரங்களில் ஏறுவது, குளங்களில் தாவுவது, வயக்காடுகளில் ஓடுவது போன்றவற்றுக்கு நடுவே பள்ளிக்கூடமும் போய் வந்து கொண்டிருந்தேன். அதனால் அடிக்கடி எனக்கு சுளுக்குப் பிடித்துக் கொள்ளும். அம்மா பொன்னம்மா ஆச்சி வீட்டுக்குத்தான் கூட்டிப் போவார்.

இந்த இடத்தில் டிரைவர் தாத்தா பற்றிய சிறு குறிப்பு… நான் முதன்முதலில் சட்டைக் கைப் பகுதியில் தங்க பித்தான் வைத்து போட்டிருந்ததைப் பார்த்த முதல் மனிதன் அவர்தான். எனக்கு விவரம் தெரிந்த காலத்திலேயே அவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனாலும் டிரைவர் என்பதுதான் அவர் அடையாளம். முன் பற்கள் கொட்டிப் போய் நாக்கை வைத்து அந்தப் பள்ளத்தை மறைத்துக் கொண்டேதான் பேசுவார்.

கூடவே இடைவிடாமல் கையில் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். அதனாலும் இருமலுக்கு நடுவே பேசுவதால் அவருடைய பேச்சில் தெளிவு இருக்காது. ஆனால், கிண்டல் செய்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்.

‘என்னடே… மாசத்துக்கு ஒரு தரவ எம் பொண்டாட்டி ஒன்னத் தடவிக் குடுக்கணுமோ… கூட்டுப் போய் கூட வச்சுக்கிட வேண்டியதுதான… என்பார். அந்த வயதில் எனக்குப் புரியாது. ஒங்களுக்கு வேணும்னா நீங்களும் தடவச் சொல்லுங்க… என்பேன். சுற்றி இருக்கும் எல்லாரும் சிரிப்பார்கள். அதுவும் எதற்கு என்று எனக்குப் புரியாது. என்ன சொல்லுதாவோ ஒங்க தாத்தா என்றபடி அடுக்களையில் இருந்து ஈரக் கையைச் சேலையில் துடைத்தபடி வருவாள் ஆச்சி.

அவளுக்கு முன்னே வரும் அவளுடைய சிரிப்பு. சின்ன சத்தம் எல்லாம் இல்லை… ஹா… ஹா… என்றாள் என்றால் பத்து தெரு தாண்டி இருக்கும் பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஏ.டி. ஹார்ன் அடித்தது போல இருக்கும். சத்தம் தெருவுக்கு கேட்கும் வகையில் இடியாகச் சிரிப்பது அவள் இயல்பு.

தாத்தா தங்கப் பித்தான் என்றால் ஆச்சி சின்ன ஜரிகைக் கரை வைத்த பட்டுப் போன்ற சேலைதான் கட்டுவாள். பெரும்பாலும் அடர் நிறத்தில் இருக்கும் சேலையாகத்தான் இருக்கும். எப்போது போனாலும் துலக்கமாக இருப்பாள்.

சிறு பிள்ளைகளுக்கு குடல் ஏறிவிட்டது என்றால் ஆச்சியிடம்தான் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். என்னன்னே தெரியல… வயத்தால நிக்காம போவுது… என்று வரும் தாயை முதலில் பிள்ளைக்கும் தாய்க்கும் விபூதி பூசி விட்டு சமாதானப்படுத்துவார். ‘ஒண்ணுஞ் செய்யாது… முதல்ல புள்ளையத் தூக்கி நிக்க வை… என்பாள். பிள்ளையின் முன்னால் குத்துக்கால் வைத்து அமர்ந்து கொண்டு தன் முன்னங்கால்களைக் கொண்டு நிற்க வைக்கப்பட்ட பிள்ளையின் கால்களை அழுத்தி மிதித்துக் கொள்வாள்.

அடி வயிற்றில் இடமும் வலுமாக தட்டிப் பார்ப்பாள். ஏதோ ஒரு பக்கத்தில் பொத் பொத்தென்று சத்தம் வரும். அந்த இடத்தைக் குறித்துக் கொள்வாள். எண்ணையைத் தொட்டு மெதுவாக மேலே இருந்து பெருவிரலால் அழுத்தி கீழ் நோக்கி இழுப்பாள். பிள்ளை மூச்சுத் திணறும். முறுக்கிக் கொள்ள முயற்சிக்கும். ஆனால், காலை நகர்த்தவே முடியாமல் ஆச்சியில் முன்னங்கால் அழுத்தியிருக்கும்.

‘குன்னுதாம் பாரு… எங்கனயோ தலைகுப்புற விழுந்திருக்கான்… அதான், குடலு ஏறியிருக்கு…’ என்பாள். அந்தப் பிள்ளையைப் பெத்தவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வரும். ஆமா ஆச்சி… நேத்து சாய்ங்காலம் நா டிவி பாத்துகிட்டு இருந்தேன்… இந்தப் பய பின்னாடிகூடி சேருல ஏறுனான்… அப்டியே கொட சாஞ்சுட்டான்… தல தரையில அடிக்கதுக்குள்ள தூக்கிட்டேன்… அப்பம் புடிச்சு பாலுகூட குடிக்கல… அதான் கொடல் ஏத்தம் போலுக்கு! என்றபடி பிள்ளையைப் பிடித்துக் கொண்டு நிற்பாள்.

நல்லா கம்முகூட்டுக்குள்ள கையக் குடுத்து அத்தாசமா தூக்கிப் புடி… வில்லா வளையுதாம் பாரு… என்றபடி பொத் பொத்தென்று சத்தம் வரும் பகுதியில் இடது உள்ளங்கையை தொடுவது போல வைத்துக் கொண்டு அந்தப் புறங்கையில் வலது கையால் லேசாகக் குத்தியபடி மேலே இருந்து கீழே இறக்குவாள்.

முக்கிக் கொண்டும் முனங்கிக் கொண்டும் இருந்த பிள்ளை மெதுவாகச் சிரிக்கும். ஒரு துண்டு அச்சுவெல்லத்தை எடுத்து கையில் கொடுத்து, தூக்கிட்டுப் போ… நல்லா அழவிட்டு பாலக் குடு… வயத்தால போறது புடிச்சிரும்… என்று இன்னொரு முறை விபூதியைப் பூசி அனுப்பி விடுவாள். ஒரு பைசா ஃபீஸ் கிடையாது! அவர்களிடம் எல்லாம் எதுவும் சொல்லாத டிரைவர் தாத்தா என்னிடம் மட்டும் எசலுவார்.

ஏடே… ஒங்கப்பன்கிட்ட ரூவா வாங்கியாந்திருக்கியா… சும்மா சும்மா எம் பொண்டாட்டிட்ட வந்து சட்டையக் கழட்டிட்டு நிக்கியே… என்னடே நெனைச்சுகிட்டிருக்க…’ என்பார். எனக்கு அவர் விளையாட்டாகக் கேட்கிறாரா… சீரியஸாகக் கேட்கிறாரா என்று ரொம்ப நாளுக்குத் தெரியாமல் இருந்தது.

மார் முழுக்கச் சளி படர்ந்து இருமலுக்குக் கூட தெம்பில்லாமல் தவித்து மிகவும் சிரமப்பட்டார் தாத்தா. அந்த தங்க பித்தான் சட்டைக்கு மேலே கம்பளிச் சட்டை போட்டு காதை மறைத்து கம்பளித் துண்டு கட்டியிருந்தாலும் கூட அவரால் குளிரைச் சமாளிக்க முடியவில்லை.

உடல் ஒருபக்கம் படுத்தி எடுக்க மனதை வருத்தும் விதமாக மருமகன்கள் இருவரின் அடுத்தடுத்த மரணம் தாத்தாவை இன்னும் பலவீனமாக்கியது. சம்பிரதாயம் என்ற பெயரில் மகள்கள் அணிந்திருந்த வெள்ளைச் சேலை இருவரையும் உலுக்கி விட்டது. படுக்கையே வீடானது தாத்தாவுக்கு. அவருடைய உடல் உபாதை எல்லாரையும் வருத்தியது. ஒருநாள் எல்லோர் வருத்தமும் தீர அவர் விடைபெற்றுக் கொண்டார். தாத்தாவின் காலத்துக்குப் பிறகு ஆச்சியின் கோலம் வெள்ளையாகி விட்டது.

தொடர்ந்த வாழ்வில் மருமகப் பிள்ளைகளின் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்த போதே மரணம் குறித்த அவள் சிந்தனை விரிந்திருக்க வேண்டும். தாத்தாவின் மரணம் அந்தச் சிந்தனையை இன்னும் ஆழமாக்கியது. மூத்த மருமகனில் தொடங்கிய வரிசை எதிர்பாராத தருணங்களில் அடுத்தடுத்த மருமகன்களின் உயிரில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆச்சியும் சிந்தனையின் ஆழங்களுக்குச் சென்று கொண்டே இருந்தாள். துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் சின்னதாகக் கண்கள் கசியும்… அவ்வளவுதான் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டாள் ஆச்சி.

பிள்ளைகளின் வளர்ச்சி… பேரக் குழந்தைகளின் கல்யாணம் என்று பலதும் பார்த்து ஓய்ந்து வாழ்க்கையின் இறுதிக்கு வந்துவிட்டாள் ஆச்சி. இந்த காலகட்டத்தில் அவள் சிந்தனை சலனமில்லாத ஆழத்துக்குள் சென்றுவிட்டது. பேச்சு குறைந்து எல்லாவற்றையுமே வேறு உலகத்தில் இருந்து பார்க்கும் பார்வையுடனே அணுகத் தொடங்கினாள்.

ஆச்சிக்கு உடலும் நலிந்து விட்டது. ஒருநாள் அழைத்து, நாளைக்கு விடியக் காலைல எல்லாப் படத்துக்கும் பூப் போட்ருங்க… வெளக்கு எல்லாம் தேய்ச்சு வைச்சிருங்க… சக்கரப் பொங்கலு வெச்சிருங்க… என்றெல்லாம் சொல்லிவிட்டு, கட்டில் வேண்டாம்… படுக்கைய தரையில கிழமேலா விரிச்சுப் போடுங்க என்று சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாள். எல்லோரும் விசும்பி அழ, யாரும் அழப்படாது… நா ஒண்ணும் கையிலயும் இடுப்புலயுமா நண்டு சிண்டுகள விட்டுட்டுப் போவல… எல்லாம் அனுபவிச்சுட்டுதான் போறேன்… சுத்தியிருந்து எல்லாரும் ஓம் நமச்சிவாய சொல்லுங்க… போற வழிக்கு கேட்டுகிட்டே போறேன்… என்றவள், தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.

சொன்னது போலவே ஊரே கூடி எல்லோரும் ஓம் நமச்சிவாய பாட, சிரித்த முகத்தோடு இந்த உலகை விட்டு விடைபெற்றுச் சென்றாள், டிரைவர் வீட்டு ஆச்சி என்று அழைக்கப்பட்ட, சுளுக்கு தடவுத ஆச்சி என்று அழைக்கப்பட்ட, தொக்கம் எடுக்க ஆச்சி என்று அழைக்கப்பட்ட, பொன்னம்மா ஆச்சி!

No comments: