Sunday, September 13, 2009

ஹேப்பி பர்த் டே!

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்... கிராமத்தில் எங்கள் வீடே பரபரப்பாக இருந்தது. விடிந்தால் அப்பாவுக்கு அறுபது வயது பூர்த்தி ஆகிறது. நானும் மனைவி குழந்தையும் முதல்நாளே போய்விட்டோம். நாங்கள் போய்ச் சேர்ந்த தினத்தின் மாலையில் தங்கையும் அத்தானும் குழந்தைகளோடு வந்து சேர்ந்தார்கள். அண்ணன் முக்கியமான வேலை இருப்பதால் காலை வெள்ளனே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்.

சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டிருந்தோம். சித்தப்பா குழந்தைகள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வந்துவிட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டோம்.

கோவில் எல்லாம் வேண்டாம்... வீட்டில் விளக்கு முன்னால் அமர்ந்து எல்லோருக்கும் ஆசி வழங்கினால் போதும் என்று முடிவு செய்திருந்தோம். கோவில்களுக்குப் போய் விமரிசையாகச் செய்து கொண்டால் அத்தனை திருப்திகரமாக வாழ்க்கை தொடர்வதில்லை என்று சிலர் சொன்னதால் இந்த ஏற்பாடு!

‘ஏங்க... மாமாவும் அத்தையும் ஆசீர்வாதம் பண்ணும்போது வெறுங்கையோடு பண்ணினா நல்லாவா இருக்கும்...’ என்று என் மனைவி சொல்ல, நாங்களும் தங்கையும் அடித்து பிடித்து ஆட்டோ எடுத்துக் கொண்டு தென்காசிக்கு ஓடினோம்.

‘கொடுக்கற பொருள் காலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி இருக்கணும்...’ என்று பேசிக் கொண்டே போய், கடைசியில் பாத்திரக் கடையில் புகுந்து எல்லோருக்கும் அடுக்கு ஜாடிகளை வாங்கிக் கொண்டோம்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது... அப்பா குளித்து முடித்து புதிய ஆடைகள் அணிந்து வந்தர்... அம்மாவும் புதிய சேலை கட்டியிருந்தார். அண்ணனும் அண்ணியும் குழந்தைகளோடு வந்து சேர பேரக் குழந்தைகளால் வீடே கலகலப்பானது.

அப்பாவும் அம்மாவும் முதன்முதலாக தாத்தா ஆச்சி (அம்மாவின் அப்பா அம்மா) காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, தாத்தாவும் ஆச்சியும் அறுபது ஸ்பெஷல் மோதிரம் அணிவித்தார்கள். அடுத்து ஒவ்வொருவராக அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். ஒவ்வொருவருக்கும் பரிசுகளை எடுத்துக் கொடுக்கும்போது அப்பா அம்மா முகத்தில் அத்தனை பெருமிதம்.

இதுவரையில் எங்கள் ஊரில் அப்படி யாரும் செய்ததில்லை. ஆனால், ஆசி பெற்றவர்கள் திருப்தி முகமாக நிமிர்வதைப் பார்த்தபோது என் மனைவியை நன்றியோடு பார்த்தேன். எங்களுக்கும் விபூதி பூசி பரிசு கொடுத்தார்கள் அப்பாவும் அம்மாவும்.

அண்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்பாவுக்கு அறுபது ஸ்பெஷல் மோதிரம் அணிவித்தார். அப்பாவுக்கு பெருமிதமாக இருந்தது. அவருடைய ரிட்டயர்ட்மெண்ட் தினத்துக்கு நாங்கள் யாரும் போகமுடியாத சூழல் இருந்ததை இந்த நிகழ்ச்சி மறக்க வைத்துவிட்டது.

எல்லோருக்கும் சுவையான சூப்பரான சாப்பாடு போட்டோம். அன்று நாள் முழுக்க அம்மா ஈரங்கசிந்த கண்களோடு நடமாடிக் கொண்டிருந்தார். இரவில் ஏன் என்று கேட்டபோது, ‘பிள்ளைகள் எல்லாம் கூடி அறுபதாவது பிறந்த நாள் கொண்டாட உங்கப்பாவுக்கு கொடுத்து வெச்சிருக்கு’ என்றார்.

இது பழைய கதை...
இன்று என் அம்மாவுக்கு அறுபது வயது பூர்த்தியாகிறது. அம்மா கிராமத்தில்... நான் சென்னையில்... என் சகோதரி சேலம்- ஆத்தூரில்... என் சகோதரர் சுவிட்சர்லாந்தில்!

காலையில் போன் செய்தேன்... ஹேப்பி பர்த் டே அம்மா என்றேன்... நீ வீடு கிரஹப் பிரவேசத்துக்கு எடுத்துக் கொடுத்த சேலையைக் கட்டாம வெச்ச்ருக்கேன்... அதைத்தாண்டா இன்னிக்கு கட்டப் போறேன்... எல்லாருக்கும் இங்கேருந்தே என் ஆசீர்வாதங்கள்’ என்றார்.

அதுதான் அம்மா!

3 comments:

Unknown said...

Good observation and it is 100% true.

Unknown said...

Good observation and it is 100% true.

Please continue to flood your thoughts in this blog.

-Jey

Vaidehi.S said...

இது மிகவும் நன்றாக இருக்கிறது!