Thursday, March 3, 2011

நானும் விகடனும்! 02

விகடன் எனக்கு என்ன கொடுத்தது என்ற யோசனையில் இருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்த விஷயம் இது. அது என்ன என்பதற்கு முன்னால் மறுபடியும் விகடன் எடிட்டோரியல் மீட்டிங்..!

புதிய பகுதிகளாக என்னவெல்லாம் கொண்டுவரலாம் என்பது பற்றிய ஒரு விவாதத்தில் எம்.டி. ஒரு ஐடியாவை முன் வைத்தார். அவர் அதிகமாக கடவுள் பற்றி சிலாகித்துப் பேசமாட்டார். ஆனால், அவர் சொன்ன ஐடியாவின் தலைப்பு ஒரு தெய்வம் நேரில் வந்தது. அந்த ஐடியாவுக்கான பின்னணி கதையையும் சொன்னார்.

எம்.டி. பறவைகளை நேசித்து பராமரிக்கும் படப்பை பண்ணையில் விளிம்பு வரை ததும்பும் கிணறு ஒன்று இருக்கிறது. அந்த கிணறைத் தோண்டும் முயற்சியில் பல்வேறு இடங்களில் நீரோட்டம் பார்த்திருக்கிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் தோண்டவும் செய்திருக்கிறார்கள். எங்கேயுமே தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோருமே களைத்துப் போய் அடுத்து என்ன செய்யலாம்... கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டுவிடலாமா என்ற யோசனையில் இருந்தபோது அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்து கிணறு தோண்டப் போறீங்களா... இந்த இடத்தில் தோண்டிப் பாருங்க என்று ஒரு இடத்தைக் கைகாட்டியிருக்கிறார். அவநம்பிக்கையோடு தோண்ட ஆரம்பித்த தொழிலாளிகள் உற்சாகமாகிவிட்டார்கள். சில அடிகளிலேயே நீர் கசிவைப் பார்த்துவிட்ட அவர்கள், பரபரப்பாகத் தோண்டுவதைத் தொடர, எம்.டி. இடத்தைக் கைகாட்டிய ஆளைத் தேடியிருக்கிறார்.

‘கையில் கம்பு வைத்திருந்ததால் அவரை மாடு மேய்ப்பவர் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அங்கே எந்த மாடுமே இல்லை. சரி, பக்கத்து ஊர்காரராக இருப்பார் என்ற நினைப்பில் ஆட்களை அனுப்பி பக்கத்து ஊர்களில் எல்லாம் தேடிவிட்டோம். அப்படி ஒரு ஆளே இல்லை. அப்படியானால் வந்தவர் யார்? எப்படி அவரால் இன்றளவும் வற்றாமல் இருக்கும் கிணறைத் தோண்ட இடத்தைக் காட்ட முடிந்தது... கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிட்ட நேரத்தில் வந்து வழிகாட்டிய அவரைத் தெய்வம் என்று கொள்ளலாமா? அதுபோல பலரும் ஒரு மனிதனை தெய்வமாக உணர்ந்திருப்பார்களே... அந்த அனுபவங்களை எழுதலாமா?’ என்றார். எல்லோரும் ஒப்புக் கொள்ள ஒரு தெய்வம் நேரில் வந்தது..? என்ற தலைப்பில் வாரம் ஒரு பிரபலம் எழுதினார்கள்.

அந்தப் பகுதிக்காக பாடகி வாணி ஜெயராமைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். போனிலேயே கருத்தைச் சொல்லியிருந்ததால் சம்பவத்தை நினைவுபடுத்தி கோர்வையாக்கி வைத்திருந்தார்.

‘இமயமலைச் சாரலில் நடந்த இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது பாதை பழுதாகிவிட்டது. கார் அதற்கு மேல் செல்லாது என்ற நிலை. நிகழ்ச்சிக்கு அரைமணிநேரம்தான் இருக்கிறது. எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த நேபாளி இளைஞர் ஒருவர், என் கையைப் பிடிச்சுகிட்டு வாங்க என்று என்னை மலைப்பாதையில் அழைத்துக் கொண்டு போய் சரியான நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குக் கொண்டுபோய் உட்கார வைத்தார். எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் எப்படி முன் வந்தார். நான் எப்படி முகம் தெரியாத அந்த இளைஞரை நம்பிச் சென்றேன் என்பது இதுவரை விடை தெரியாத கேள்விகள்... என்னைப் பொறுத்த அளவில் தெய்வம் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றதாகத்தான் நினைக்கிறேன்’ என்று வாணி ஜெயராம் சொல்லிமுடித்தார்.

நிருபராக எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. ஆனால், விகடன் எனக்குக் கொடுத்ததாக நினைக்கும் விஷயம் அடுத்து நடந்ததுதான்!

பேட்டிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பாடிய மேகமே... மேகமே..! என் ஆல்டைம் ஃபேவரிட் என்றேன். சிறு தயக்கம்கூட இல்லாமல் இந்த ஒற்றை ரசிகனுக்காக அந்தப் பாடலை முழுமையாகப் பாடிக் காட்டினார். எந்த ரசிகனுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?!

தெய்வம் நேரில் வந்தது, விகடன் ரூபத்தில்!

2 comments:

Chitra said...

பேட்டிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பாடிய மேகமே... மேகமே..! என் ஆல்டைம் ஃபேவரிட் என்றேன். சிறு தயக்கம்கூட இல்லாமல் இந்த ஒற்றை ரசிகனுக்காக அந்தப் பாடலை முழுமையாகப் பாடிக் காட்டினார். எந்த ரசிகனுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?!


...wow! பொறாமையாக இருக்கிறது! அவரின் இனிமையான குரலை நேரிலே கேட்கும் வாய்ப்பு அமைந்து இருக்கிறதே.

சி. முருகேஷ் பாபு said...

நன்றி சித்ரா...
அதுதான் விகடன் வாய்ப்பு!