Wednesday, May 1, 2013

மற்றும் பலர்! - 1

முத்தண்ணா
அந்தக் கால சினிமாவில் டைட்டில் போடும்போது நாயகன் நாயகி நகைச்சுவை நடிகர், நகைச்சுவை நடிகை, வில்லன், குணச்சித்திர நடிக நடிகைகள் என்று எல்லா பெயர்களும் போட்டு முடித்த பிறகு மற்றும் பலர் என்று ஒரு டைட்டில் கார்டு வரும்... அது சினிமாவில் மட்டுமில்லை... எல்லா வாழ்க்கையிலும் இருக்கிற டைட்டில் கார்டு! இன்று இருக்கும் நான் என்ற என்னை உருவாக்கியதில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ மட்டும் காரணமில்லை... மற்றும் பலர் இருக்கிறார்கள்.

சி|றுவயது பிராயத்தில் மதுரைக்கு என் பாட்டி வீட்டுக்கு லீவுக்குச் சென்ற காலங்களில் தன் துணியை தானே துவைத்து மடித்து வைக்கப் பழகிய என்னைவிட ரெண்டு வயது பெரியவனான முத்தண்ணாவில் தொடங்கி நேற்று நான் கலந்து கொண்ட பயிலரங்கத்தில் மாணவராக வந்து, சார் இவ்ளோ நல்லா பேசறீங்க... இதை ஒரு புத்தகமாக் கொண்டாறலாம்ல... என்று கையைப் பிடித்துக் கொண்டு நின்ற தோழர் வரை (மே 1 அன்னிக்கு சந்திச்சதுக்கு இதாச்சும் இருக்கட்டுமே!) மற்றும் பலருக்கும் பங்கு இருக்கிறது.

முத்தண்ணாவில் இருந்தே தொடங்குகிறேன். அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன் கொஞ்சம் முன்கதை..! நாலாங்கிளாஸ் படிக்கிற காலத்திலேயே கோடை லீவு என்றால் அது மதுரையில் இருக்கும் ஆச்சி (அம்மாவின் அம்மா) வீடுதான். அப்போதெல்லாம் அம்மா தன் அப்பாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். எங்களுக்கு (எனக்கும் என் அண்ணாச்சிக்கும்) பரீட்சை தொடங்கிய வேளையில் அம்மா எழுதும் கடிதத்தில் ஓரமாக நாங்களும் ஒரு வரி எழுதுவோம். தாத்தா... எங்களுக்கு வர்ற 27ம் தேதி வரலாறு புவியியல் பரீட்சை... என்று!

கொள்ளைக்கூட்ட தலைவனுக்கும் அதன் அடிப்பொடிக்கும் இருக்கும் கோட் வேர்டை விட வலிமையானவை இந்த வார்த்தைகள். சரியாக வரலாறு புவியியல் பரீட்சை அன்று காலையில் எங்க தாத்தா வந்து இறங்கிவிடுவார். நாங்கள் போய் பரீட்சையை எழுதிவிட்டு வருவதற்குள் எங்கள் உடைகளை பேக் பண்ணி ரெடியாகி விடுவார். செங்கோட்டையில் இருந்து அர்த்தராத்தியில் ரயிலைப் பிடித்து அதிகாலையில் மதுரை வந்து இறங்குவோம். முழுசாக முப்பது நாட்கள் மதுரைதான்.

இந்த ஒரு மாதத்தில் ரெண்டு சினிமா, ரெண்டுமுறை பொருட்காட்சி (ஒரே நாளில் முழுக்க சுற்ற முடியாது. அவ்ளோ பெருசு) ஒருமுறை சர்க்கஸ்... அவ்வளவுதான்! ஆனால் அதையெல்லாம் விட சந்தோஷமாக இருப்பது காலையில் என் தாத்தாவின் நண்பர் கோபால் தாத்தா வீட்டுக்கு போய் பேப்பர் வாங்கி வருவதும் மாலையில் நூலகத்துக்குப் போய் வருவதும்தான்! இதில் முப்பது நாளும் முப்பது வகை டிபன், முப்பது வகை குழம்பு என்று அசத்தும் ஆச்சியின் கைமணம் தனி சந்தோஷம்!

வந்துவிட்டேன் முத்தண்ணா கதைக்கு!

மேலப்பொன்னகரம் மூன்றாவது தெருவில் சி 6 பிளாக்கில் 11ம் எண் வீடு ஆச்சி வீடு. மூன்றாவது தளம்... இரண்டாவது தளத்தில் 10ம் எண் வீடு முத்தண்ணா வீடு. அந்த அண்ணாவின் அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்வதால் விடுமுறைக்கு எங்கும் செல்ல மாட்டார்கள். எப்போ பார்த்தாலும் முகம் கழுவி திருநீறு வைத்த நெற்றியோடுதான் இருப்பான் முத்தண்ணா. (நானும் ஸ்கூல் காலத்துக்குப் போயிட்டேன். அதான் மரியாதை குறைஞ்சிடுச்சு) சட்டையும் டவுசரும் பளிச்னு இருக்கும்.

அவன் மூஞ்சியைப் பார்த்தியால... லெட்சுமி களை ஜொலிக்கு. உன் மூஞ்சியும் இருக்கே... போ... போய் மூஞ்சியைக் கழுவி பவுடர் கிவுடர் போட்டுட்டு வாஎன்று ஆச்சி துரத்திவிடுவார். அந்த அளவுக்கு பளிச்சென்று இருப்பான் முத்தண்ணா.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போதே அந்த அண்ணன் ஏழோ எட்டோ படிச்சான். ஊர்ல செல்லாங்குச்சி, பம்பரம், கோலிக்காய் விளையாடிகிட்டிருந்த என்கிட்டே, ‘வர்றியா... டிரேட் விளையாடுவோம்என்றான். எனக்கு அந்த விளையாட்டே தெரியாதேனு சொன்னதும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் காட்டுனான். நம்ம தாயக்கட்டை விளையாட்டு மாதிரிதான். அதுல காயை நகர்த்திகிட்டே போய் நடுவுல இருக்கற ஊர்களை விலைக்கு வாங்கி அங்க வீடு கட்டுறது, தியேட்டர் கட்டுறதுனு ஒரு விளையாட்டு! நாலைஞ்சு பேரு உட்கார்ந்து விளையாட ஆரம்பிச்சோம்னா சாயங்காலம் வரைக்கும் ஓடும்.

முத்தண்ணாவுக்கு தனி தட்டு. அவனோட தங்கை லதா அக்காவுக்கு தனி தட்டு. அவங்க சாப்ட தட்டை அவங்கதான் வெளக்கி கழுவி வைக்கணும். அவங்க துணிமணிகளை அவங்களே சோப்பு போட்டு காயப் போட்டு எடுத்து மடிச்சு வைக்கணும்னு ரொம்ப கண்டிஷனான வீடு.

திங்கற தட்டுல கையைக் கழுவுதியே... போ... அந்த முத்து காலைக் கழுவிக் குடி... அப்பயாச்சும் புத்தி வருதானு பார்ப்போம் என்று பல வீடுகளில் திட்டு விழும். அந்த அளவுக்கு முத்தண்ணா எல்லா விஷயங்கள்லேயும் கரெக்டா இருந்தான். அவங்க வீட்டுல உட்கார்ந்து இந்த ட்ரேட் விளையாடுறப்ப தண்ணி தாகம் எடுத்து உள்ளே போய் குடத்துல மோந்து குடிச்சுட்டு வந்தோம்னா மெனக்கெட்டு உள்ளே போய் நான் குடத்து பக்கத்துல வெச்ச தம்ளரை எடுத்து பாத்திரங்கள் அடுக்கியிருக்கற இடத்துல வெச்சுட்டு வருவான்.

முத்து... இந்தப் பயகளுக்கு கொஞ்சம் சைக்கிள் சொல்லித் தர்றியாப்பா என்று ஆச்சி வைத்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து ஒரு லீவு முழுக்க எங்களை தோளில் சுமந்து கொண்டு கிழக்கும் மேற்குமாக அலைந்தான். என் மாமாகூட, ‘ஏண்டா... வீட்டுல இடமில்லையா என்ன... எதுக்கு முத்து தோள்ல தொங்கிகிட்டு தூங்குத...’ என்று கேலி செய்திருக்கிறார். ஆனா, இடுப்பை வளைக்கறதை மட்டும் கரெக்ட் பண்ணிட்டா நீ சூப்பரா ஓட்டிருவேடா என்று நம்பிக்கை வார்த்தை சொல்லி நம்மை மகிழ்விப்பான் முத்தண்ணா.

படிப்பிலேயும் கில்லாடி. எப்படியும் முந்நூத்தம்பது மார்க்குக்கு மேல வாங்கிடுவான் என்று வீட்டில் சொன்னார்கள். நான் ஏழாவது படிக்கும்போது முத்தண்ணா பத்தாவது என்று நினைவு. அந்தமுறை அம்மாவுடன் ஊருக்குப் போய் இறங்கினோம். பயணக் களைப்பில் இருந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அம்மாவிடம் ஆச்சி ஏதோ அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளை வளர்க்கறதுல ரொம்ப கவனமா இருக்கணும்மா... அதுலயும் இந்த பத்தாங்கிளாஸ்ங்கறது பெரும் கண்டமால்ல இருக்கு... மூக்குக்கு கீழ புல்லு கணக்க ...சுரு மொளச்சதும் என்னமெல்லாமோ கத்துகிட்டு வருதுங்க...’ என்ற ஆச்சியின் புலம்பலை சட்டை செய்யாமல், ‘அம்மா... நான் முத்தண்ணாவை பார்த்துட்டு வர்றேன்...’ என்று செருப்பில் காலை நுழைத்தேன்.

முத்தண்ணா அவன் இவன்னு போன... கால வெட்டிருவேன்... ஒழுங்கு மரியாதையா வீட்டுல கிட..!’ என்றார்கள் கண்டிப்பான குரலில்!

No comments: