Saturday, September 28, 2013

குத்தாலிங்கமும் கூப்ட வேலையும்!

மற்றும் பலர்!
என் நண்பன் ராஜ்முருகன் ஒருமுறை தன் சகோதரனை அறிமுகம் செய்து வைத்தபோது, ‘இவன் இல்லைன்னா 12பி படமே இல்லை’ என்றான். அந்த முகத்தை அப்போதுதான் பார்க்கவே செய்கிறேன். 12 பி படத்தின் நாயகன் ஷாம்... அவருடைய நண்பர்கள் பட்டாளத்தில்கூட இந்த முகத்தைப் பார்க்கவில்லை. படத்தின் இயக்குனர்கூட ஒளிப்பதிவாளர் ஜீவா. ஒருவேளை அவருக்கு இந்தக் கதையைச் சொன்னவராக இருக்குமோ என்ற எண்ணத்தோடு பார்த்தேன். படத்தில் பஸ்ஸுல டிராவல் பண்ற ஷாம் பர்ஸை இவந்தான் பிக்பாக்கெட் அடிப்பான்... இவனைப் புடிக்க பஸ்ஸை விட்டு ஷாம் இறங்கறப்பதான் படம் ரெண்டு டிராக்ல பிரியும் என்றார் ராஜுமுருகன். அப்போதுதான் சினிமா தாகத்தோடு சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கும் ஆள் என்பது புரிந்தது. இத்தனைக்கும் 12 பி படத்தில் நடிகர்கள் பட்டியலில்கூட அவர் பெயர் இடம் பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். மற்றும் பலர் என்ற பொதுப் பிரிவில் அவரும் ஒருவர்!
எல்லாருடைய வாழ்க்கையிலுமே அப்படியொரு மற்றும் பலர் பட்டியல் இருக்கும். நம் வாழ்க்கையின் முக்கியமான திருப்பத்தைத் தந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நம் வாழ்வில் பெரிய இடம் இருக்காது. மற்றும் பலர்தான்! அப்படி என் வாழ்வில் இருக்கும் பட்டியலில் கொஞ்சத்தை திரும்பிப் பார்க்கும் முயற்சி இது!
குத்தாலிங்கமும் கூப்ட வேலையும்!
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது குத்தாலிங்கத்தைப் பார்த்தேன். நான் பார்த்தேன் என்பதைவிட அவன் என்னைப் பார்த்தான் என்பதுதான் சரி! பஸ்ஸை விட்டு இறங்கிய கணம் வேகமாக நடந்து கொண்டிருந்த குத்தாலிங்கம் சட்டென்று நின்றுவிட்டான். ‘ஏ... பாபு... எப்டி இருக்கே..? இப்பந்தான் வாரியா..?’ என்றான். நான் ஊருக்குப் போனால் இது ஒரு வேலையாகவே இருக்கும். ‘எப்ப வந்தே..?’ என்று கேட்பவர்களிடம் ஒரே பதிலாக நேத்துதான் என்றும் ‘எப்ப ஊருக்கு..?’ என்று கேட்பவர்களிடம் நாளைக்கு என்றும் ஸ்டாண்டர்டாக ஒரே பதிலைச் சொல்லி வைப்பேன். ஆனால், பையும் கையுமா என்னைப் பார்த்த குத்தாலிங்கம் இப்பதான் வாரியா என்றதும் ஆமாம் என்று தலையசைத்தேன்.
குத்தாலிங்கம் என் பள்ளிக்கூட நண்பன். பள்ளிக்கூடத்தில் அவன் பெயர் குத்தாலிங்கம் என்று இருந்தாலும் நாங்கள் அவனை அரி என்றுதான் அழைப்போம். அவனை நண்பன் என்றெல்லாம் சொல்லமுடியாது. என்கூடப் படித்தான்... எங்கள் தெருக்கார பையன்... எனக்கு தூரத்து சொந்தம். என்ன உறவு என்றுகூட சொல்லத் தெரியாது. ஆனால், டெய்லர் சுந்தரம் தாத்தா பையன் என்ற அளவோடு நிறுத்திக் கொள்வேன். அவனும் கம்பவுண்டர் மாமா பையன் என்றுதான் என்னைச் சொல்வான். அந்த அளவில்தான் எங்கள் உறவுமுறை. நான் மூன்றாவது முடித்து நான்காவது போனபோது அவன் இன்னொரு வருடம் மூன்றாவதே படிக்க முடிவு எடுத்திருந்தான். அடுத்து நான் ஆறாவது வேறு பள்ளிக்கூடம் போனபோது அவன் பழைய பள்ளிக்கூடத்தை விட மனசில்லாதவன் போல அங்கேயே நாலாவதுல ரெண்டு வருஷம், ஐந்தாவதுல ரெண்டு வருஷம் என்று பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
முழு ஆண்டு விடுமுறையில் வேலைக்குச் செல்வது என்பது எங்கள் ஊரில் பல பிள்ளைகளுக்கு பழக்கம். ஊரில் பாதி பேர் கொத்தனார் என்பதால் சித்தாள் வேலைக்குச் செல்வார்கள் சிறுவர்கள். அதில் கிடைக்கும் சம்பளம், ஸ்கூல் திறக்கும்போது புத்தகம் வாங்க பயன்படும் என்பதால் எல்லோருமே வேலை பார்க்கத் தயாராகவே இருப்பார்கள். (என்னைப் போல சிலர் மட்டுமே முழு ஆண்டு லீவுக்கு ஆச்சிவீட்டுக்குச் செல்லும் அதிஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள்.) அப்படியொரு முழு ஆண்டு முடிந்து எல்லோரும் பள்ளிக்கூடத்துக்குத் திரும்பிய நாளில் குத்தாலிங்கம் பள்ளிக்கு வரவில்லை.
எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் பள்ளிக்குதான் ஆறாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும். அந்தப் பள்ளியில் ஆறாவது சேர்க்க ஒரு நுழைவுத் தேர்வு வைப்பார்கள். அந்த நுழைவுத் தேர்வுக்கு பயந்தோ என்னவோ அரி தன் படிப்பை ஐந்தாவதோடு முடித்துக் கொண்டான். அதன்பிறகு பல நேரங்களில் சிமெண்ட் படிந்த உடலும் சிரிப்புமாக அவ்வப்போது எதிர்படுவான். ‘என்னடே... எப்படி இருக்க..?’ என்பான். பதிலைக்கூட எதிர்பார்க்காத கேள்வியாகத்தான் இருக்கும் அது.
நான் கல்லூரிக்குப் போன பிறகு ஒருநாள் திடீரென்று அவனைப் பார்த்தேன். ‘என்ன அரி... ஆளையே பாக்க முடியலை..?’ என்றேன். ‘நீ திருநவேலிக்கு படிக்கப் போயிட்டு என்னக் கேக்கியோ..?’ என்றான் சிரிப்போடு. சிரிப்பு அவனுக்கு டிரேட் மார்க். ‘நான் ஊருக்கு வந்து நாலைஞ்சு நாளாச்சு... உன்னைப் பாக்கலையேனு கேட்டேன்..?’ என்றதும், ‘இப்பம் நா கேரளாவுல வேல பாக்கேன்... ஒரு அறுப்பு மில்லுல... நல்ல சம்பளம்... சாப்பாடும் வத்தனையா போடுதானுவ... அலப்பரை இல்லாம போவுது...’ என்றான். அதுதான் அரி. எதையும் அலுப்போடு சொல்லமாட்டான்.
நான் சென்னைக்கு வந்து வேலையில் செட்டில் ஆன பிறகு ஒருமுறை ஊருக்குப் போயிருந்தேன். பையைக் கொண்டுபோய் வீட்டுக்குள் வைத்துவிட்டு கைலியை மாற்றிக் கொண்டு வாசலுக்கு வந்தால் பக்கத்து வீட்டுக்கு எதிரே இருந்த குச்சில் வாசலில் உட்கார்ந்து காபியை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தான் அரி. என்னைப் பார்த்ததும் முகம் கொள்ளாத சிரிப்பு.
‘ஏ... எப்படி இருக்க... இதென்ன செம்மறி ஆட்டுக்கு வளர்ந்தது கணக்கா தாடி மொளச்சிருக்கு... ஒண்ணு முழுசா வைக்கணும்... இல்லை, சிரைக்கணும்... இதென்னடே...?’ என்றான் எடுத்த எடுப்பிலேயே! நூறு ரூபாய் கொடுத்து ஒவ்வொரு முடியாக செதுக்கி வைத்த ஃபிரெஞ்ச் பியர்ட்டை ஒரே வரியில் ஆட்டுத்தாடி என்றுவிட்டான். தாடியை தடவிக் கொண்டே, ‘எப்படி இருக்கே... இங்க என்னடே..?’ என்றேன். குச்சிலுக்கு உள்ளே இருந்து ஒரு இளம்பெண் எட்டிப் பார்த்தாள். ‘இங்க வா... இது நம்ம பாபு... மெட்ராஸ்ல இருக்கான்... ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சோம்... இது என் பொண்டாட்டி...’ என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான். அவனுக்கு கல்யாணம் ஆன விஷயமே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.
‘தையில எனக்கு கல்யாணம் முடிச்சு வைக்கியா இல்லையானு ஒத்தக் கால்ல நின்னுட்டான்... என்ன கிறுக்கோ தெரியலை... கல்யாணத்துக்குனு சேர்த்ததுனு சொல்லி அம்பதாயிரம் ரூபாயைத் தூக்கி அவ்வப்பா மடியில போட்டுட்டான். அந்த மாமாவும் எம்புட்டோ சொல்லிப் பாத்தாவோ. கேக்கலை... சரினு முடிச்சு வெச்சுட்டாவோ. அந்த மட்டுக்கும் வந்த மகராசி நல்லவ... அவன் கொண்டாறதை வெச்சு கட்டு செட்டா கழிக்கா...’ என்றாள் அம்மா.
அன்றைக்கு சாயங்காலம் வாசலில் உட்கார்ந்து கைகால்களுக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தான் அரி. என்னைப் பார்த்ததும் அழகான சிரிப்போடு, ‘என்ன வேலை பார்க்க மெட்ராஸ்ல..? எம் பொண்டாட்டி கேட்டா... சொல்லத் தெரியலை எனக்கு...’ என்றான். ‘பத்திரிகை ஆபீஸ்ல வேலை...’ என்றேன். ‘அங்க உனக்கு வாரச் சம்பளமா... டெய்லி சம்பளமா..?’ என்றான். ஒருகணம் ஆடிப் போய்விட்டேன். மாசச் சம்பளம் என்ற ஒரு விஷயமே அவனுக்கு தெரியவில்லை. நான் சொன்னதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சீட்டு கீட்டு போட்டு துட்டு சேக்கியா... நாளைக்கு கல்யாணம் முடிக்கையிலே வேணும்லா... என்றான். அவன் உலகம் எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
நீ என்ன வேலை பார்க்கிறே..? என்றேன். கூப்ட வேலைக்குப் போறேன்... என்றான். எனக்குப் புரியவில்லை. ‘இன்னைக்கு கொத்தனார் வேலை இருக்குனு சொன்னா பெரியாள் வேலைக்குப் போவேன்... சாந்து குழைக்கறது... செங்கல் சுமக்கறதுனு வேலை இருக்கும்... இல்ல, அறுப்பு மில்லுல வேலைன்னா அதுக்கு போவேன்... தடி தள்ளணும்... ரீப்பர் கட்டணும்னு வேலை இருக்கும். இல்லைன்னா மம்பட்டி வேலைக்கு போவேன்... வரப்பு தரிக்கது, புல்லு சீவுததுனு வேலை இருக்கும்... கூப்ட வேலை... நமக்கு பொழுது விடிஞ்சு பொழுது போனா கையில் சம்பளம் நிக்கணும்...’ என்றான். கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.
அந்த அரிதான் என்னை பஸ்ஸில் இருந்து இறங்கும்போது பார்த்துவிட்டான், எப்டி இருக்க? என்று கேட்டும் விட்டான். அவனுடைய அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்... என்ன வேலை பாக்க? என்ன பதில் சொல்வது?
நீ கொத்தனார் வேலை பார்ப்பது போல... அறுப்பு மில் வேலை பார்ப்பது போல... மம்பட்டி வேலை பார்ப்பது போல நானும் பத்திரிகைகளுக்கு எழுதுகிறேன்... தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுகிறேன்... சினிமாவுக்கு வசனம் எழுதுகிறேன்... இணைய தளங்களில் பத்தி எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்லலாமா... அவனுக்குப் புரியுமா? என்று யோசித்த நேரத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டான்...
‘என்ன பாபு... இப்பம் என்ன வேலை பாக்க?
‘கூப்ட வேலைக்குப் போறேன்..!’

www.tamizhulagam.com இணைய இதழில்

No comments: