Friday, February 14, 2014

எனக்கு வேலை போய்விட்டது! 01

பெரியவனைப் பத்தி கவலையில்லை... எப்படியும் என்ஜினியர் ஆகிடுவான். சின்னவனும் டாக்டராகிட்டாம்னா நாம கவலையத்து இருக்கலாம்...’ என்ற அப்பா அம்மாவின் ஆசையில் என் பத்தாங்கிளாஸ் மார்க் பெரிய மண்ணாக விழுந்தது. 280 மார்க்குக்கு ஃபர்ஸ்ட் குருப்பே கிடைக்காது என்ற நிலையில் அக்கவுண்டன்சி சேர்ந்தேன். அதுக்கென்ன... இதை முடிச்சா பிகாம்... அப்படியே சிஏ.. இல்லன்னாக் கூட பேங்க் எக்ஸாம் எழுதி வேலைக்குப் போயிறலாம்ல! என்று தங்கள் கனவைக் கொஞ்சம் ஆல்டர் பண்ணிக் கொண்டார்கள். அறுநூற்று சொச்சம் மார்க் எடுத்து அங்கேயும் ஒரு செக் வைத்தேன். பிஏ எகனாமிக்ஸ் கிடைத்தது.

நம்மூர்ல லாயரே கிடையாது தெரியும்ல... நம்மூர் வம்பு வழக்குகளைப் பார்த்துகிட்டு இருந்தாக் கூட நாளெல்லாம் வேலை இருக்கும்... மரியாதையான தொழில் அது என்று அவர்கள் அடுத்த கனவுக்கு போக, நான் பிஏவை இரண்டாம் வகுப்பில் பாஸ் பண்ணி அவர்களைத் திகைக்க வைத்தேன். அவர்களும் விடுவதாக இல்லை. எம்.. சேர்த்தார்கள்.

அப்படியே எம் ஏ முடிச்சு, எம்ஃபில் முடிச்சுட்டா காலேஜ்ல வாத்தியார் ஆகிடலாம். இன்னைக்கெல்லாம் என்ன மரியாதை தெரியுமா..? என்று விடாமல் விரட்டிக் கொண்டு வந்தார்கள் அம்மாவும் அப்பாவும்! எம் ஏ படிக்கும்போதே பத்திரிகை பக்கம் கவனம் திரும்ப, அதன்பிறகு தொலைதூரக் கல்வியில் சேர்ந்த எம்ஃபில் அப்படியே தொலை தூரத்திலேயே தேங்கிவிட்டது.

இவன் என்ன ஆகப் போகிறான் என்ற கவலையோடு அம்மாவும் அப்பாவும் இருக்க, நான் என்னவெல்லாமோ செய்தேன்... இன்னமும் செய்துகொண்டிருக்கிறேன்.

என்ஜினியரிங் முடித்த என் சகோதரர் என்ஐஐடியில் படித்துவிட்டு ஊரில் ஒரு கம்ப்யூட்டர் செண்டர் தொடங்க, நானும் அங்கே அவ்வப்போது தலைகாட்டத் தொடங்கினேன். அவர் கிளாஸுக்குப் போகும் நேரத்தில் செண்டரைப் பார்த்துக் கொள்வதுதான் என் வேலை. ஆனால், முதல் வேலையாக விசிட்டிங் கார்டு அச்சடித்து அந்த செண்டரில் நானும் ஓர் அங்கம் என்று காட்டிக் கொண்டேன்.

அந்தச் சமயத்தில்தான் ப்ராஜெக்ட் தயாரித்து தரமுடியுமா என்று கேட்டு கல்லூரி மாணவியர் இருவர் வர, என் சகோதரர் சின்ன யோசனையோடு இருந்தார். நான் தான், ‘ஆர்டர் எடுப்போம்... வருஷத்துக்கு ஒரு தடவை கிடைக்கற வாய்ப்பு... கிளாஸ் எடுக்கற நேரம் போக எக்ஸ்ட்ராவா இருக்கற நேரத்தில் செய்யலாமே... கூடுதலா காசு கிடைக்குமே..?’ என்றேன். ஓகே என்றார்.

பகலெல்லாம் கம்ப்யூட்டர் செண்டரில் பாடம் நடத்தும் பணி போகும். மாலையானதும் ஆளுக்கொரு கம்ப்யூட்டராக எடுத்துக் கொண்டு பசங்க ப்ராஜெக்ட் டைப்பிங்கில் இறங்குவார்கள். இதில் வசதி என்னவென்றால் பத்து பேர் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்வார்கள். அதனால், ஒரே புத்தகத்தை பத்து காப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும்.

அதற்கென ஒரு பிராஜெக்ட் தயாரித்தோம். ஒவ்வொரு சேப்டர் தொடங்கும்போதும் ஒரு தலைப்பு இருக்கும். அதற்கு ஏற்ப ஒரு டிசைனைப் பிடித்து அதை அழகாக வடிவமைத்து ஒரே ஒரு பிரிண்ட் எடுத்து அதை பல காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்தோம். அங்கே கொஞ்சம் கமிஷன், புக் பைண்டிங்கில் கொஞ்சம் கமிஷன் என்று பக்காவாக பிளான் பண்ணி வேலையில் இறங்கினோம். பத்து பேருக்கு பத்து புத்தகங்கள் என்னும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான கட்டணங்கள். அதில் கொஞ்சம் கமிஷன் என்று சகல வகையிலும் திட்டம் போட்டேன்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஒரிஜினல் அளவுக்கு சார்ஜ் செய்தால் நியாயமா என்று கேட்ட என் சகோதரருக்கு அதெல்லாம் தொழில் தர்மம் என்று வகுப்பு எடுத்தேன். இரவும் பகலுமாக பிரிண்டிங், பைண்டிங், டைப்பிங் எல்லாம் ஓடியது. மொத்த பிராஜெக்டும் முடிந்து கணக்கு போட்டுப் பார்த்தபோது அந்த சீசனில் கணிசமான ஒரு தொகை கையில் நின்றது.

ஆனால், இந்த காலகட்டத்தில் காதில் விழுந்த ஃபாக்ஸ்ப்ரோ, லோட்டஸ், சி ப்ளஸ் போன்ற வார்த்தைகளும் அதற்கான குறியீடுகளும் மண்டையைச் சூடாக்கியிருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்றார் என் சகோதரர். அந்த கல்லூரி ப்ராஜெக்ட் சீசனில் கிடைத்த பணத்தில் எனக்கு ஒரு தொகையைக் கணக்கு போட்டு எடுத்துக் கொண்டு, இந்த சிஸ்டத்தை வெச்சு அடுத்தடுத்து பிக்கப் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்! ஏனென்றால் அந்த பிராஜெக்ட் முடிந்துவிட்டால் எனக்கு அங்கே எந்த வேலையும் இல்லை.

ஆமாம்... எனக்கு வேலை போய்விட்டது!

2 comments:

கிருஷ்ணா said...

Antha naal gnabagam . . . . almost 21 years passed . . . .

கிருஷ்ணா said...

Antha naal . . . . Gnabagam . . . . . almost 21 years passed.