Tuesday, February 25, 2014

எனக்கு வேலை போய்விட்டது - 02

சீக்கிரம் வாய்யா... ஆளெல்லாம் காத்துகிட்டிருக்கில்லா...’ என்று தலையில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லாத குறையாக வயலுக்கு கூட்டிக் கொண்டு போவார்கள். தளதளவென்று கலங்கி நிற்கும் தொழி(சேறு)யில் எல்லாம் தயாராக இருக்க, நான் கம்பீரமாகப் போய் வயலில் இறங்குவேன்.
‘நல்லா சாமியக் கும்பிட்டுக்கோ... இந்தா..’ என்று ஒரு கொட்டானைக் கையில் கொடுப்பார்கள். அதற்குள் இடதுகையை விட்டு கைநிறைய விதை நெல்லை அள்ளி அப்படியே வயலில் தூவுவேன்.
சின்னவன் கையால விதை நெல்ல அள்ளி வீசுனம்னா ரெண்டு போகம் செழிக்க செழிக்க வரும்லா...’ என்று என்னை உச்சி மோந்து முத்தமிட்டு வீட்டுக்குக் கூட்டி வருவார்கள். அதேபோல அறுவடை நாளிலும் முதல் கதிரை அறுத்து அறுவடையைத் தொடங்கி வைப்பேன். அப்பேர்ப்பட்ட ராசிக்காரன் நான். அப்படி இருக்கும்போது படித்து முடித்துவிட்டு சும்மா இருக்கலாமா..?
‘அப்பா... நான் விவசாயம் பாக்கலாம்னு இருக்கேன்...’ என்ற என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார் அப்பா. ‘அதுல உனக்கு என்னடே தெரியும்... பம்பு செட்ல குளிக்கதத் தவிர்த்து எதுக்கும் நீ போனதில்லையே..?’ என்றார். இல்லப்பா... நான் சில பிளான் வெச்சிருக்கேன்... நல்லா பண்ணிருவேன்... என்றேன்.
‘சரி, உன் பிளானச் சொல்லு..!’ என்றார் என் அப்பா. ’கார், பிசானம்... ரெண்டு போகத்துக்கும் நடுவுல இருக்கற காலத்துல சின்ன வெங்காயம் போடலாம்னு பிளான்... நல்லா வரும்...’ என்று நானே சொன்னேன். இந்தப் பருவத்துக்கு சரியா வராதே என்று தயங்கினார். நம்மை விவசாயியாக ஆகவிடாமல் தடுக்க திட்டமிடுகிறார் என்று எண்ணிய நான் உறுதியான குரலில், எல்லாம் சரியா வரும்பா என்றேன்.
சரி, உன் பட்ஜெட்டைச் சொல்லு என்றார். சொன்னேன். வங்கியிலே லோன் தர்ற மேனேஜர் மாதிரி சில பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, அப்ரூவ் பண்ணினார். பரபரப்பாக களத்தில் இறங்கினேன்.
வயலில் பாத்தி கட்டி வெங்காய விதைகளை வாங்கி பாவினேன். பம்ப் செட்டில் இருந்து தண்ணீர் பாய்ச்சி, ஊடுபயிராக காய்கறிகளெல்லாம் போட்டு பக்கா விவசாயியாகவே மாறிவிட்டேன்.
விவசாயத்தில் மட்டுமல்ல... வயலோரம் உட்கார்ந்து சாப்பிடுவது, பம்பு செட்டில் குளிப்பது, உரம் பூச்சி மருந்து என்றே பேசுவது என்|று நானும் விவசாயியாகவே ஆகிவிட்டேன்.
வெங்காயம் நல்ல பதத்துக்கு வந்துவிட்டது. மார்க்கெட்டில் விலையை விசாரித்துக் கொண்டு பிடுங்க வேண்டியதுதான் என்ற நேரத்தில் பிடித்தது மழை. வெங்காயத்தை மண்ணிலேயே விட்டால் அழுகிவிடும்... பிடுங்கி எடுத்தாலும்   விலை இல்லை... என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தேன்.
மண்ணிலே விடுவதில் பயனில்லை என்பதால் பிடுங்கிவிட்டேன். வயலை ஒட்டிய தோப்புக்குள் சாக்கு விரித்து வெங்காயத்தைக் கொட்டி வைத்தேன். ஈரம் ஒழுகிக் கொண்டிருந்தது. வியாபாரி அங்கேயே வந்து எடை போட்டு எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். ஈர எடையைக் கழித்து வியாபாரி சொன்ன விலையில் கொஞ்சம் மயக்கம் வந்துவிட்டது. ஆனாலும் வழியில்லை. எடைக்குப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
அப்பா கேட்டார். கணக்குச் சொன்னேன். கூட்டிக் கழிச்சு பார்த்தால் கையில் கொஞ்சம் லாபம் நின்றது. உன் உழைப்புக்கு கூலி..? என்றார். என்னிடம் பதில் இல்லை.
சரி, அடுத்த பூவு(பருவம்)க்கு என்ன பிளான்..? என்றார். உங்க வயல்... நீங்க முடிவு பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன். ஒரு பருவத்து விவசாயத்திலேயே சலித்துவிட்டது.
ஆமாம்... எனக்கு வேலை போய்விட்டது!

2 comments:

Thanks said...

அடுத்து எந்த டிபார்ட்மெண்ட் பாபு?

Thanks said...

அடுத்து எந்த டிபார்ட்மெண்ட் பாபு?