Saturday, September 1, 2007

ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் அல்லது சுபராத்திரி!

யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக் கொண்டிருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருளில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் குளிரைத் தாங்க வேண்டும் என்பதற்காகவும் கரிய நிற ராமசாமி காதை மறைத்து வெள்ளைத் துண்டைச் சுற்றியிருந்தான். ரொமானே தன்னுடைய துப்பட்டாவால் தலையை மூடியிருந்தாள். கைகளுக்குள் பொத்திய விளக்கு போல அந்த இருட்டிலும் ரொமானேவின் முகம் பளீரென்று ஜொலித்தது. குளிரின் மிகுதியால் ராமசாமிக்கு நெருக்கமாக வந்து நின்று கொண்ட ரொமானே, அவன் கைகளையும் பற்றிக் கொண்டாள்.

இத்தனை அண்மையில் ஒரு பெண் அதுவும் தன் தோளோடு இணைந்து நிற்கையில் ராமசாமிக்கு டீக்கடை பாய்லராக உடம்பு கொதிக்க ஆரம்பித்தது.ரயில் பயணத்தில் திடீரென்று புளியோதரை கொடுத்து உபசரிக்கும் பக்கத்து சீட்காரர்போல, ராமசாமிக்கு மூன்று நாட்களாக பல கனவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ரொமானே!

குற்றாலத்தில் 'ராமசாமி சவுண்ட் சர்வீஸ்' என்ற பெயரில் மைக்செட் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறான் ராமசாமி. 'ஆயிரம் வாட்ஸ் முதல் ஐயாயிரம் வாட்ஸ்வரையும், கண்ணைக் கவரும் கலர் டியூப்லைட்டுகள், சிந்தனையைத் தூண்டும் சீரியல் செட்டுகள் மூலம் மின்சாரம் இருக்கும் இடங்களுக்கும் மின்சாரம் அல்லாத இடங்களுக்கும் பேட்டரி அண்ட் ஜெனரேட்டர் மூலம் ஒலி ஒளி அமைத்துக் கொடுக்கும்' சாதாரண மைக்செட்காரன்.

அதிகபட்சமாக கிழக்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆலங்குளம் வரையும், வடக்கே புளியங்குடிவரையும்தான் ஆர்டர் அடிக்கப் போயிருக்கிறான். தெற்கேயும் மேற்கேயும் மலையும் மலையாளமும் தடையாக இருப்பதால் அதுகுறித்த முயற்சிகளில் ராமசாமி இறங்கவில்லை. ஆனால், மைக்கில் பேசும்போது 'ஆல் இந்தியாவிலும் மீண்டும் மீண்டும் பாராட்டப்பட்ட...' என்று சொல்லித்தான் தன்னுடைய மைக்செட் பெருமைகளை அறிவிப்பான்.
ஆல் இந்தியாவில் பாராட்டப்பட்டானோ இல்லையோ அஸ்ஸாம் பெண்ணான ரொமானே ஹொசாரிகாவால் பாராட்டப்பட்டு விட்டான்.

'இந்தியாவின் பல பகுதிகள் பலவிதமான கலாசாரங்களால் நிறைந்து கிடக்கிறது' என்ற ஏழாங்கிளாஸ் பாடப்புத்தகத்தை எதிரே கொண்டு வந்து காட்டியது போல குற்றாலத்துக்கு வந்து இறங்கிய கலைக்குழுவில் இருந்தாள் ரொமானே!

மத்திய அரசு சார்பாக நாடெங்கும் நம்முடைய கலாசாரத்தைப் பரப்புவதற்காக அமைக்கப்பட்டிருந்தது அந்தக் குழு. ஜம்முவில் பிரதமர் தலைமையில் நடக்கும் விழாவில் நிறைவடையப் போகும் அந்தக் கலாசாரப் பயணத்தை லோக்கல் அமைச்சர் தலைமையில் குற்றாலத்தில் தொடங்கினார்கள். ராமசாமியின் சவுண்ட் சர்வீஸ்தான் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தது. அங்கு வைத்துதான் ராமசாமிக்கும் ரொமானேவுக்கும் அறிமுகம் ஆனது. முதல்நாள் நிகழ்ச்சி சம்பிரதாயமான பேச்சாகவே விழா முடிந்து போனது. அடுத்த மூன்று நாட்களுக்குத்தான் கலைவிழா! அந்த மூன்று நாளும் ராமசாமிக்கு கலாசார குழுவோடுதான் சாப்பாடு எல்லாமே! மத்தியான நேரம் சாப்பிட்டுவிட்டு, ஆம்ப்ளிபயர் பக்கத்தில் தலைவைத்து கொஞ்சம் கண்ணசந்த நேரத்தில்தான் ரொமானே அவனைத் தேடி வந்தாள். அவளுக்கு முன்னதாக வந்தது சலங்கைச் சத்தம்.

செப்பு போல மூக்கு, சிவந்த சின்ன உதடுகள், கொஞ்சம் ஏறுநெற்றி, கோதுமை நிறம் என்று எல்லா வகையிலும் தனக்கு எதிர்துருவமாக இருந்த ரொமானேவைப் பார்த்த ராமசாமி, தன்னுடைய ஆங்கில அகராதியில் இருந்து வார்த்தைகளைக் கலைத்துத் தேடி, ஒரே ஒற்றைச் சொல்லான 'யெஸ்'ஸைப் பயன்படுத்தினான். தமிழ் தெரியாதவர்களிடம் அவன் அதிகம் வைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு தமிழ் தவிர ஏதும் தெரியாது. ஆனால், ரொமானே முப்பது நாட்கள் காத்திருக்கத் தயாராக இருந்தால், அஸ்ஸாம் மொழிகூட கற்கத் தயாராக இருந்தான்.

ரொமானேவும் உடைந்த ஆங்கிலத்தில் ஏதோ பேசினாள். அவளுடைய பேச்சு புரியாவிட்டாலும் கையில் வைத்திருந்த கேஸட்டை தன்னுடைய டேப்பில் போடச் சொல்கிறாள் என்பதை சைகை மூலம் புரிந்து கொண்டான். உடனே வாங்கிப் போட்டான். 'தன்னுடைய ரேடியோகூட அஸ்ஸாமி பாட்டு பாடுகிறதே...' என்று ராமசாமிக்கு ஒரே ஆச்சரியம்.

ராமசாமி என்ற ஒற்றை ரசிகனுக்காக ரொமானே சுழன்று சுழன்று ஆடினாள். அரைமணிநேர ஆட்டத்தின் முடிவில் களைத்து சரிந்த ரொமானே, சைகை காட்டி தண்ணீர் கேட்டாள். ஓடிப் போய் ஒரு சொம்பு நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தான். நெஞ்சு நனைய தண்ணீரைக் குடித்த ரொமானே, ''தேங்க்ஸ்'' என்றபடி அப்படியே மேடையில் படுத்துவிட்டாள்.

எந்த விகல்பமும் இல்லாமல் இடுப்பில் கட்டிய துப்பட்டாவுடன் படுத்துக் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபோது, ராமசாமிக்கு மனசுக்குள் எதுவோ செய்தது. தேடித்தேடி வார்த்தைகளைக் கோத்து கேள்வியாக்கினான். ''எந்த ஊரு?''.

''கவுஹாத்திக்குப் பக்கத்தில்...'' என்று ரொமானே சொன்னது, ராமசாமிக்கு ஏதோ தின்பண்டத்தின் பெயர்போலப் பட்டது. 'யாதும் ஊரே... யாவரும் கேளீர்' என்ற ரீதியில் அடுத்த கேள்விக்குத் தாவினான். ''பேர் என்ன?''

''ரொமானே ஹொசாரிக்கா'' என்று சின்ன சிரிப்போடு சொல்லிவிட்டு, ''நைஸ் மியூசிக் சிஸ்டம்...'' என்று பாராட்டிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனாள். அதன்பிறகு, 'ஆல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் பாராட்டப்பட்ட...' என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே உச்சரிக்க முடிவு செய்து கொண்டான்.

போன வேகத்தில் திரும்பி ஓடிவந்த ரொமானே, ''சாயங்காலம்... என் டான்ஸ்... பாக்க மறந்துடாதீங்க...'' என்று சாடையாக சொல்லிவிட்டு மீண்டும் ஓடிப் போனாள்.

மதியம் மூன்றுமுறை ரிகர்சல் செய்ததில் ரொமானேவின் நடனம் ராமசாமிக்கு அத்துபடியாகி இருந்தது. உடனே தென்காசிக்கு பறந்து போய், எக்ஸ்ட்ராவாக கொஞ்சம் கலர் ஜரிகைத் தாள்களும், பவர்கூடிய பல்பும் வாங்கிக் கொண்டு வந்தான். அவசரமாக அட்டையை வெட்டி வண்ண ஜரிகை காகிதங்களை ஒட்டி, ஃபோகஸ் லைட்டின் முன்னால் எடுத்து வைத்தான். ரொமானேவின் நடனம் வந்தபோது, எக்ஸ்ட்ரா விளக்கின் ஒளியை வண்ண வண்ண ஜரிகை காகிதங்களின் வழியே செலுத்தி நடனத்தை மேலும் மெருகேற்றினான்.

நடனம் முடிந்தபோது, ராமசாமி கொடுத்த லைட்டிங்கால் நடனம் பிரமிக்கத்தக்கதாக ஆகிவிட, கைதட்டல் குற்றால அருவி போலக் கொட்டியது. கவுஹாத்திக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த தின்பண்டப் பெயர் போன்ற ஊரில் இருக்கும் ரொமானேவின் அப்பா அம்மாவுக்குக்கூடக் கேட்டிருக்கும்.

அன்று இரவு மேக்கப்பைக் கலைத்து விட்டு வந்த ரொமானே, ''நைஸ் லைட்டிங்...'' என்று கூடுதலாகப் பாராட்டிவிட்டுப் போனாள். அன்று ராத்திரி முழுக்க ராமசாமி பொங்குமாங்கடல் விளிம்பில் நின்று நடனமாடிய ரொமானா மீது கலர் கலராக லைட் அடித்தான்.

விழித்தபோது கனவு கண்ட கண்ணில் எரிச்சலாக இருந்தது.
கையில் டீ கோப்பையோடு வந்து நின்ற ரொமானேவைப் பார்த்தபோது குளிர்ச்சியாக இருந்தது. 'இதிலே என்ன இருக்குனு படிச்சு சொல்லேன்' என்பது போல் கையில் இருந்த தினத்தந்தியைக் காட்டினாள்.

'கலைநிலாவின் மயிலாட்டம்' என்று தலைப்பு போட்டு கலர் போட்டோ போட்டிருந்தார்கள். கீழே, 'வண்ண விளக்கொளியில் ரொமானே ஹொசாரிகா ஆடிய ஆட்டம் கண்ணைவிட்டு அகலாமல் இருந்தது' என்றெல்லாம் எழுதியிருந்தார்கள்.

அன்று மாலை ரொமானேவின் நடனம் இல்லை. சந்தன சோப் வாசனையோடு, கீழே இறங்கி வந்து ராமசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவனுடைய லைட்டிங் திறமைகளை ரசித்துக் கொண்டிருந்தாள். இடையிடையே காதோரம் குனிந்து, குசுகுசுவென்று ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அன்று விழா முடிந்ததும், ''என்னை வெளியில் கூட்டிட்டுப் போறியா?'' என்றபடி வந்து நின்றாள் ரொமானே! ராமசாமிக்கு குற்றால நகரியத்துக்கு சேர்மனாகிவிட்ட மாதிரி சந்தோஷமாக இருந்தது. இருவரும் சந்தோஷமாக நடந்தார்கள். ரொமானேவுக்கு அருவி சந்தோஷம், ராமசாமிக்கு ரொமானே சந்தோஷம்! அகால நேரத்தில் அருவிக்கரையில் எண்ணெய் விற்றுக் கொண்டிருந்த பெட்டிக் கடையில் வெற்றிலை பாக்கு வாங்கி, சிவக்க சிவக்க தாம்பூலம் தரித்தார்கள்.

தன்னுடைய நடனத்துக்கு சிறப்பாக லைட்டிங் கொடுத்த ராமசாமிக்கு சிகரெட்டு கொளுத்த, லைட்டர் பரிசாகக் கொடுத்தாள் ரொமானே. பதிலுக்கு ராமசாமி பாசிமாலை, காதுமாட்டல், கைவளையல் எல்லாம் செட்டாக வாங்கிக் கொடுத்தான். ரூமுக்கு திரும்பியதும், ராமசாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு ''சுபராத்திரி'' என்றாள் ரொமானே! அப்படியென்றால் 'குட்நைட்' என்று அர்த்தமாம். ''சந்தோஷமா இருந்தா மனசுக்கு பிடிச்சவங்ககிட்டே சுபராத்திரி சொல்லாமல் தூங்கப் போக மாட்டேன். வீட்டில் இருந்தால் அப்பா அம்மாவிடம் சொல்வேன்.. நீங்க தமிழில் எப்படி சுபராத்திரி சொல்வீங்க'' என்றாள் அறையின் வாசலில் நின்றபடி.

ராமசாமிக்கு நினைவு தெரிந்து யாருக்கும் குட்நைட் சொன்னதில்லை. சந்தோஷமா இருந்தா சரக்கு அடிப்பான். அந்த சந்தோஷத்துல தூங்கிடுவான். யாரும் குட்நைட் சொன்னதில்லை. தமிழ்ல குட்நைட்டுன்னா நல்ல ராத்திரினு சொல்லணும்.
''நாளைக்கு வேணா யாருகிட்டயாவது விசாரிச்சுட்டு வந்து சொல்றேன்'' என்றான் வாய்கொள்ளாத சிரிப்போடு.

''நாளைக்கு காலைல எல்லோரும் பாலக்காட்டுக்குப் போறோம் தெரியுமா?'' என்று ரொமானேவே ஆரம்பித்தாள், அருவியைப் பார்த்தபடி. அருவியைப் போலவே அவளுடைய கண்களும் பளப்பளத்துக் கிடந்தன. ''இன்னும் எனக்கு நீ குட்நைட்டுக்கு அர்த்தம் சொல்லலை'' என்றாள் போலியான சிரிப்போடு.

ராமசாமிக்கு மூன்று நாள் திருவிழா முடிவுக்கு வந்துவிட்டது உறைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. 'என்ன பெரிய கழுதை குட்நைட்டு... அதுக்கு அர்த்தம் தெரியலைனா மனுஷன் வாழமுடியாதா?' என்ற சலிப்பு எழுந்தது. அது முகத்திலும் எரிச்சலாக பிரதிபலித்தது.

அதை உணர்ந்துகொண்டவளாக, ''ஓகே! தேங்கஸ் ராமசாமி...'' என்று சொன்ன ரொமானே, தளும்பும் கண்களோடு, ''சுப ராத்திரி..!'' என்று சொல்லிவிட்டு இருளில் மறைந்து போனாள்.

ராமசாமி பேச்சற்று நிற்க, அருவி இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்தது.

1 comment:

M.Rishan Shareef said...

ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் அல்லது சுபராத்திரி!


ஏற்கெனவே விகடனில் பார்த்து மனதைப் பாதித்த கதை.
திரும்பவும் இங்கே வாசிக்க உதவியதற்கு மிகவும் நன்றி.
நகைச்சுவை கலந்து தந்த விதத்தில் கதை நாமங்களும்,கதைக்கருவும், கதாபாத்திரங்களும் நீண்ட நாட்களுக்கு
மனதிலே பதிகின்றன.
நிச்சயமாக கதாசிரியரும்தான்.
பாராட்டுக்கள்.
தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்...!

எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.