Sunday, October 20, 2013

ஆச்சி!

என் அப்பாவின் அத்தை அவள். ‘என்னல... ஆச்சிய மரியாத இல்லாம அவ இவங்கெ..?’ என்ற என் அம்மாவை ஒரே அதட்டலில் அமர்த்திவிட்டாள். ‘எங்க அய்யா... இல்லிக் கண்ணும் குணுக் குணுக்னு நடையுமா அப்படியே எங்க அய்யாவக் கொண்டிருக்கான்... அவன அப்படியே பேச விடு... சும்மா அதட்டி புள்ளய பயங்காட்டாத... நீ என்ன வா போன்னே கூப்புடு ராசா..’ என்பாள்.

சின்ன வயசில் அவ்வப்போது எங்க வீட்டுக்கு வந்து செல்வாள். ரவிக்கை அணியாத உடம்பில் ரவிக்கை நீளத்துக்கு பசை ஒளிரும். மாநிறம் தான் ஆச்சி. ஆனாலும் மச்சை எடுப்பாகவே இருக்கும். கோலம் போலவும் ஒரு சமயம் மயில் போலவும் தோனறும் பச்சைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் சிரிப்பாள். ‘அதெல்லாம் தெரியாது... ஒருநா ஒரு குறத்தி வந்தா... ஒரு கைக்கு குத்த குருணி அரிசினு கேட்டா... நாங்க நெல்லுக் குத்தி ஒதுக்கி வெச்சிருந்த அரிசியைக் குடுத்து பச்ச குத்திட்டோம்... ஒங்க ஆச்சிக்காரிக்கு ஆங்காரம்... என் புருசன் உழைப்பெல்லாம் குறத்திகிட்டே போவுதே... பக்கத்துல கட்டிக் குடுத்தா இப்படித்தான் பகுமானமா வந்துருவாளுக...’னு புலம்பிகிட்டிருந்தா... நாங்க ரெண்டு கையிலயும் தோள்ல இருந்து மணிக்கட்டு வரைக்கும் அடுக்கட்டுக்கா குத்திட்டுதான் விட்டோம் என்று சிரிப்பாள் ஆச்சி.

ஒங்க ஆச்சிக்காரி என்று அவள் சொன்னது எங்க அப்பாவைப் பெத்த ஆச்சியை. இத்தனைக்கும் அவளும் தோளில் தொடங்கி மணிக்கட்டு வரைக்கும் பச்சை குத்தியிருப்பாள். ‘எங்க... அதைச் சொல்லிப் பாரு... ‘ம்... எங்க மாமா ஆசையா எனக்கு குத்தச் சொல்லி கொறத்திய வண்டி வச்சுல்லா கூட்டிகிட்டு வந்தாவோனு பவுசு கொழிப்பா... எங்க மாமன் மவ... சொந்தம் விட்டுறப்பிடாதுனு எங்க அண்ணனுக்கு கட்டி வெச்சோம். அவ எங்களையே விரட்டிப் பார்த்தா... நடக்குமா... ‘... சவத்து மூதி... சும்மா கெட... நீ வேணுங்கத அள்ளிட்டு போத்தானு எங்க அண்ணன் போதும் போதுங்க அளவுக்கு கட்டிக் குடுக்கும். ஒங்க ஆச்சிக்காரிக்குதான் வயறு கெடந்து பயறு அவிக்கும். அதுக்காக நாங்க பெறந்த வீட்டு பெருமய அள்ளிக்கட்டாம போ முடியுமா..?’ என்பாள்.

எனக்கு விவரம் தெரிந்து நான் ஒன்பதாங்கிளாஸ் படிக்கையில்தான் ஆச்சி வீட்டுக்குப் போனேன். எங்க ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கடையநல்லூர்தான் அவள் வாக்கப்பட்டு போன ஊர். எங்க ஊரில் ஏதோ துஷ்டி. யாருக்கெல்லாம் தந்தி குடுக்கணும்... யாருக்கெல்லாம் நேர்ல சொல்லணும்ங்கற லிஸ்டை வாங்கிக் கொண்டு நானும் நண்பனும் தென்காசி வந்தோம். அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரம்தான்... வண்டியை ஒரு அழுத்து அழுத்தி விடலாமே என்று கடையநல்லூருக்கு அழுத்திவிட்டோம். ஆச்சி வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியதும் பெரிய மாமாதான் கதவைத் திறந்தார். துஷ்டியைச் சொன்னோம். ‘அதுக்காடே இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்துருக்கிய... நல்ல புள்ளகளப்பா...’ என்ற மாமாவின் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தாள் ஆச்சி. அப்போதுதான் மணியைப் பார்த்தோம். இரவு பதினொன்றே முக்கால்!

உன் பேரன்தான் துஷ்டி சொல்லி வந்திருக்கான்...’ என்று மாமா சொல்லிவிட்டு உள்ளே திரும்ப, ஆச்சி உள்ள வா...’ என்றபடி தட்டை எடுத்து வைத்தாள். ‘நான் சாப்டுட்டேன்... வீட்ல சாப்டதுக்கும் மேல கடையில் நாலு ரொட்டி வேற சாப்டுட்டேன்... வேண்டாம்என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, பழையதைப் பிழிந்து தட்டில் வைத்தபடி, அமர்ந்துவிட்டாள். வேறு வழியில்லாமல் நானும் உட்கார்ந்தேன்.

அதன்பிறகு பலமுறை கடையநல்லூருக்குச் சென்றிருக்கிறேன். எங்கள் குலதெய்வம் கோவில் கடைநல்லூரில்தான் இருக்கிறது. கிடா வெட்டு என்றால் வண்டி கட்டிக் கொண்டு போவோம். அப்படி ஒருமுறை சென்றபோது ஏதோ எடுக்க மறந்துவிட்டது. அப்பா என்னை வண்டியை விட்டு இறக்கி, ‘ஆச்சி வீட்டுல போய் வாங்கிட்டு வா... நாங்க பூசை சாமானெல்லாம் வாங்கிட்டு நிக்கோம்என்றார். தேங்காய் திருகும் திருவலக் குத்தி என்பதாக ஞாபகம். ஒரே ஓட்டமாக ஓடினேன். ஆச்சி வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். மூச்சிறைக்க, ‘ஆச்சி... திருவலக்குத்தி வேணும்... எல்லாரும் கோயிலுக்கு போறோம்...’ என்றேன். உள்ளே நுழைந்து முதல் வேலையாக தட்டைத்தான் கையில் எடுத்தாள். ஒரு கை பழையதைப் போட்டு உட்கார வைத்துவிட்டு, திருவலக் குத்தி, சின்ன கத்தி, ரெண்டு அகப்பை எல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு பக்கத்தில் வைத்தாள். காலைல ஏழு மணிக்கு பழையதா என்று நினைத்தாலும் சோற்றைப் பார்த்ததும் லேசாக கள்ளப் பசி எடுத்தது. அவுக் அவுக் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடினேன். ஈரக் கையை டவுசரில் துடைத்தபடி வந்த என்னைப் பார்த்த அப்பா, ‘என்ன... உங்க ஆச்சி சோத்தை திங்க வெச்சுட்டாளாக்கும்... யார் போனாலும் இந்தக் கூத்தை விட மாட்டா...’ என்று மண்டையில் தட்டினார்.

ஒருமுறை ஏதோ கல்யாணப்பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனேன். அப்போது மாலை சுமார் நாலு மணியிருக்கும். தலையைக் கண்டதும், தட்டை எடுத்தாள். ‘ஆச்சி... மணி நாலு... எனக்கு டீ குடிக்க நேரம் இது...’ என்று நான் பேசிக் கொண்டே இருக்க, அவள் பாட்டுக்கு பழையதைப் பிழிந்து தட்டில் வைத்து பழைய குழம்புச் சட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அப்போது அவளுக்கும் மாமாவுக்கும் ஏதோ மனத் தாங்கல்... மாமா எதிர் குச்சிலில் அத்தை பிள்ளைகளோடு இருக்க, இவள் தனியே இருந்தாள்.

ஒருபோதும் அவள் என்னை சாப்டியா... என்று கேட்டதில்லை. அப்போது நேரம் என்னவாக இருக்கிறது... இது சாப்பாட்டு நேரமா... சாப்பாட்டுக்கு பதில் வேறு ஏதாவது கொடுக்கலாமா என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை. எப்போது போனாலும் வாய் வாய்யா...’ என்று உபசரிக்கும். கைகள் தானாக தட்டையும் பழையது பானையையும் தேடும். நாலைந்து வாய் சாப்பிட்ட பிறகுதான் கேட்பாள்... ‘எப்ப ஊர்ல இருந்து வந்த... எத்தன நாள் லீவு... உனக்கு எப்ப கலியாணம் மூய்க்கப் போறான் உங்கப்பா?’என்றெல்லாம்!

என் கல்யாணப்பத்திரிகையைக் கொடுக்கச் சென்றபோது ஆள் தளர்ந்து விட்டிருந்தாள். பெரும்பாலான நேரம் படுக்கையில்தான்... ஒருநாளைக்கு ரெண்டு மூணு தரம் எழுந்து ஒண்ணுக்கு போனாலே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு ஒடுங்கியிருந்தாள். அப்போது சண்டையெல்லாம் முடிந்து மாமாவுடன் சமாதானம் ஆகியிருந்தாள். அத்தைதான் அவளுக்கு பொங்கிக் குடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘கல்யாணத்துக்குள்ள உடம்ப தேத்திரு... நீ வந்து திருநாறு பூசணும்லா...’ என்றபடி நான் அவள் அருகே போய் உட்கார, தனக்கு சாப்பிட வைத்திருக்கும் தட்டை எடுத்து என் பக்கம் நகர்த்தி வைத்தாள். கண்கள் அத்தையைப் பார்த்தன. அன்றும் நான் நாலு வாய் சாப்பிட்ட பிறகுதான், ‘என் பேத்தி இத்தன நாளா எந்த ஊர்ல ஒளிஞ்சுகிட்டிருந்தா..?’ என்றாள். சொன்ன சொல்லை தட்டாமல் கல்யாணத்தன்னிக்கு வந்து திருநாறு பூசிவிட்டாள்.

அதன்பிறகு ஆச்சியைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை. ஊருக்குப் போவதே பெரும்பாடாக ஆகிவிட்டது. ‘பாப்பாத்தி ஆச்சி நம்மள விட்டுப் போயிட்டா...’ என்று அம்மா போனில் சொன்ன நாளில் நான் வேலைக்காக ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் அலைந்து கொண்டிருந்தேன். விசேஷமெல்லாம் கழிந்து ஒருநாள் ஆச்சி வீட்டுக்கு துஷ்டி கேட்கச் சென்றேன். சோகமெல்லாம் கரைந்து ஓரளவுக்கு இயல்பாகி இருந்தது வீடு. அத்தை டீ போட்டுக் கொடுத்தார். குடித்துவிட்டு மாமாவிடம் துஷ்டி கேட்டுவிட்டு வந்தேன்!

No comments: