Thursday, August 29, 2013

மற்றும் பலர்! - ராஜகணபதி!


உதவி என்று யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் செய்யக் கூடியவர் என்று சொல்லப்படுபவர்களுக்கு மத்தியில் ராஜகணபதி வித்தியாசமானவர். உதவி என்று போய்க் கேட்க் வேண்டியதில்லை. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அவரே ஓடி வந்து செய்வார்.
விகடனில் அவர் சூப்பர் சீனியர் நிருபர். நானோ கத்துக்குட்டி! ஃப்ரீலான்ஸராகப் போய் வந்து கொண்டிருந்த காலத்தில் ஹைகோர்ட், எழும்பூர் கோர்ட், கமிஷனர் அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் என்று சகட்டு மேனிக்கு சுத்தியடிப்பார்கள். எந்த அலுவலகத்துக்குப் போய் நான் விகடன்ல இருந்து வர்றேன் என்று சொன்னாலும் ராஜ கணபதி எப்படி இருக்கார் என்று விசாரிக்க நிச்சயம் ஒருவராவது இருப்பார்.
எப்போதும் கைவசம் நான்குவிதமான டெலிபோன் டைரிகள் வைத்திருப்பார். அரசு வழங்கும் அதிகாரிகளின் எண்கள் அடங்கிய டைரியில்கூட பல எண்களை புதிதாக எழுதி வைத்திருப்பார். எந்தத் துறை பற்றிக் கேட்டாலும் விவரங்கள் விரல் நுனியில் இருக்கும். எனக்கும் அவருக்குமான முதல் அறிமுகம் இன்னமும் எனக்குள் பசுமையாக இருக்கிறது.
குமரியையே கதிகலக்கிய ரவுடி லிங்கம் நாகர்கோவில் கிளை சிறைச்சாலையில் வைத்து கழுத்து அறுத்து கொல்லப்பட்டு விட்டான். அந்தச் சமயத்தில் நான் நெல்லையில் இருந்ததால் உடனே ஸ்பாட்டுக்குப் போய் செய்தி எழுதுங்கள் என்று எனக்குச் சொன்னார்கள். நானும் போய் லிங்கத்தின் கடைசி சடங்குகள் வரை செய்தி சேகரித்து கொடுத்துவிட்டேன். கட்டுரை எல்லாம் ஓகே... ஜெயிலுக்குள்ளே புகுந்து வெட்டியிருக்காங்க... எப்படி நடந்துச்சு இந்த சம்பவம்... அதைச் சொல்லணும்ல என்று ஆபீஸில் இருந்து கேட்க, என்னிடம் பதில் இல்லை.
அப்போது ராஜகணபதி லைனில் வந்தார். பாபு... ஜெயில் விஷயத்தை நான் பார்த்துக்கறேன்... நீங்க அங்கே இருந்து போட்டோ மட்டும் கலெக்ட் பண்ணி அனுப்புங்க... நாம பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அந்த இதழ் ஜூவியில் லிங்கம்தான் கவர் ஸ்டோரி... ஜெயிலின் நீள அகலம் என்ன... அதன் அமைப்பு எப்படி... எங்கே லிங்கம் இருந்தான்... எப்படி கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று பெரிய பாக்ஸ் மேட்டர் வந்திருந்தது. அத்தனையும் ராஜ கணபதியின் உழைப்பு! அன்று அவர்தான் என்னை அலுவலகத்தில் காப்பாற்றினார்.
அடுத்து ஒருமுறை... உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம்... தமிழக அரசியலிலும் பரபரப்பு அனலடித்துக் கொண்டிருந்தது. நானோ விகடனில் கிரிக்கெட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று விஐபிகளிடம் பேட்டி எடுக்கலாம் என்று சொல்லி பட்டியலில் கருணாநிதியின் பெயரையும் எழுதிக் கொடுத்திருந்தேன். அப்போது அவர் முதலமைச்சர்! பட்டியல் ஓகே ஆகி வந்தபோது கருணாநிதி பெயருக்கு அருகில் நட்சத்திர குறி இட்டிருந்தார்கள். அப்படியென்றால் அந்தப் பெயரை சாய்ஸில் விடக் கூடாது என்று அர்த்தம்.
நான் திமுக பீட் பார்க்கும் நிருபரிடம் கருணாநிதியை எப்படி பிடிப்பது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்... ராஜகணபதி என்னிடம் நாளைக்கு காலையிலே எட்டரை மணிக்கு கோபாலபுரம் வந்துடுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அடுத்தநாள் காலையில் கோபாலபுரம் சென்றபோது எனக்கு முன்னே வந்திருந்தார். துரைமுருகன், ஆற்காட்டார் போன்ற அமைச்சர்கள் கீழே காத்திருக்க முதல்வரின் தனி உதவியாளர் சண்முகநாதன் எங்களை மாடிக்கு அழைத்துச் செல்ல, கருணாநிதி காலை உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்த நொடியில், வாய்யா ராஜ கணபதி... என்ன விஷயம்? என்றார். ராஜகணபதி விவரத்தைச் சொல்ல, ரெண்டு இட்லி சாப்பிடும் நேரத்தில் எனக்கு கிரிக்கெட் பேட்டி கொடுத்தார் முதல்வர்.
அந்த பேட்டியில் ராஜகணபதியின் பெயரையும் சேர்த்திருந்தேன். மிக கவனமாக அதை எடுத்து, என் பெயர் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். இதெல்லாம் அஃபீஷியல்...! பத்திரிகையின் நலனுக்காக என்று சொல்லலாம். ஆனால், தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்.
எனக்கும் நண்பர் அறிவழகனுக்குமாக அவர் வீடு தேடி அலைந்திருக்கிறார். ஒரு அபார்ட்மெண்டில் பேச்சிலர்களுக்கு வீடு கிடையாது என்று சொல்ல, அவருடைய அம்மா எங்களோடு தங்குவதாகச் சொன்னார். அந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்பவர். என் தந்தைக்கு டிரான்ஸ்பர் தேவைப்பட்ட பொழுதில் அவர்தான் ஒரு மருத்துவரைப் பார்த்து அவர்மூலம் சுகாதார செயலரைப் பார்த்து டிரான்ஸ்பரை பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகு அவர் டெல்லி செய்தியாளராக தலைநகருக்குச் சென்றபிறகு அதிகம் பேசிக் கொள்வதில்லை. நான் விகடனை விட்ட பிறகு பேசுவது ரொம்பவே அபூர்வமாகி விட்டது.
ஒருநாள் சன் சொலைக்காட்சியில் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் என்னைக் கடந்து போன டூவீலர் காரர் பின்னிருக்கை கதவு சரியாக மூடப்படவில்லை என்று சொல்ல, உடனடியாக இடது ஓரம் நிறுத்தி பார்க்கிங் விளக்கை ஒளிரவிட்டு விட்டு இறங்கி பின் கதவை இறுக மூடினேன். சட்டென்று மொத்த கதவுகளும் லாக் ஆகிவிட்டன. சாவி உள்ளே... என் ஜின் ஓடிக் கொண்டிருந்தது. என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.
என்ன பாபு... என்ன பிரச்னை..? என்று ஒரு குரல்... திரும்பிப் பார்த்தால் ராஜகணபதி நின்று கொண்டிருந்தார். அன்று காலை டெல்லியில் இருந்து வந்தவர், நண்பரிடம் டூ வீலர் வாங்கிக் கொண்டு பெட்ரோல் போடுவதற்காக வந்திருக்கிறார். அதன்பிறகு தன் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு என்னோடு அலைந்து (என்னை அழைத்துக் கொண்டு அலைந்து) ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்து கார் கதவைத் திறந்து கொடுத்தார். அதைவிட ஆச்சரியம், டெல்லி சென்ற பிறகு போன் செய்து அந்த மெக்கானிக் நெம்பி கார் கண்ணாடியை திறந்தாரே... அந்த ஃபீடிங்கை சரி செய்து ஒட்டி விட்டீர்களா... இல்லையென்றால் திருட்டு நடந்துவிடும் என்று நினைவுபடுத்தினார்.
நன்றி ராஜகணபதி சார்... எல்லாவற்றுக்கும்!

Saturday, July 27, 2013

நன்றி நவிலல்!

மரியா கேண்ட்டீன் படித்தேன் என்று ஒரு போன் அதிகாலையில் எழுப்பியது. வழக்கம்போல் நான் ஜான்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட் என்றார் போன் செய்த நண்பர்.
என் ப்ரெண்ட் கோவில்பட்டியிலே ஒரு புத்தக கடையிலே மரியா கேண்ட்டீன்னு ஒரு புத்தகம் பார்த்தேன்... பஸ்ஸுல இருந்ததால இறங்கி வாங்க முடியலைனு சொன்னார். உடனே திருநெல்வேலில புத்தக கடைகள்ல விசாரிச்சேன்... வித்துப் போச்சு... ஆர்டர் போட்டு வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. அதுமாதிரியே வாங்கியும் கொடுத்தாங்க. எல்லாக் கதைகளையும் படிச்சுட்டேன்... நல்லாயிருக்கு என்றார் அந்த நண்பர்.
என்னை நச்சரித்து கதைகளை வாங்கி புத்தகமாகக் கொண்டு வந்த பட்டாம்பூச்சி பதிப்பகம் நா.ரமேஷ்குமாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
வழக்கம்போல மரியா கேண்ட்டீனுக்கும் நன்றி!

Monday, July 1, 2013

இனி இது கொட்டாகுளம்!



‘ஏல… கீழக் கொளத்து வழியாப் போன பதுனமாப் போங்கல… குளம் கழுத்து வரைக்கும் தண்ணி கெடக்கு…’ நாங்கள் பள்ளிக்கூடம் போகையிலே பெரியாளுக சொல்லி அனுப்புத வார்த்தைகள். எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் அஞ்சாப்பு வரைக்கும்தான். அதுக்கு மேலே ஆறாப்பு போணும்னா நாங்க இலஞ்சிக்குதான் போணும். இலஞ்சிக்கு ரோடு சுத்தியும் போலாம்… கீழக் குளத்துக் கரை வழியாவும் போலாம். எங்க தெரு பிள்ளைகளுக்கு கீழக் கொளத்து கரைதான் கிட்டத்துல… அதனால நாங்க கீழக் கொளத்து கரை வழியாத்தான் போவோம்!
எங்க தெருவுல இருந்து பத்துப் பன்னெண்டு பயலுவ ஒண்ணாப் போவோம். அதுல கீழக் கடைசிவீட்டு பேச்சி சும்மா வரமாட்டான். (அனேகமா எங்க தெருவுல வீட்டுக்கு ஒரு பேச்சி இருக்கறதால எல்லாத்துக்கும் ஒரு அடைமொழி உண்டு) ஓரக்கண்ணுல குளத்தாங்கரையை பாத்துகிட்டே வருவான். கையிலே சுருக்கு போட்ட தென்ன ஓல வெச்சிருப்பான். கரையில் பொந்துக்குள்ள இருந்து தலைய மட்டும் நீட்டி பாக்கற தண்ணிப் பாம்புதான் அவன் குறி. சரக்குனு சுருக்கைப் போட்டு படக்குனு புடிச்சுருவான்.
கையிலே ரெடியா பட்டணம் பொடி டப்பா வெச்சிருப்பான். (எங்க காலத்துல பென்சில், குச்சி எல்லாம் போட்டு வைக்கதுக்கு பட்டணம் பொடி டப்பாதான் உண்டு. அதுதான் பென்சில் பாக்ஸ்) அந்த டப்பாவுல கீழ லேசா ரெண்டு மூணு ஓட்டை போட்டு வெச்சிருப்பான். பாம்புக்கு மூச்சு விடுததுக்கு எடம் வேணும்லா என்பது அவன் லாஜிக். பாம்பைக் கொண்டாந்து கிளாஸ்ல காட்டுறது அவனோட வீரச் செயல்கள்ல ஒண்ணு!
திடீர்னு ஒரு மூடு வந்தா அப்படியே டவுசர் சட்டைய கழற்றி கரைல போட்டுட்டு எல்லாரும் குளத்துல குதிச்சிருவாங்க. அதுலயும் நடு மடைல இருந்து குத்துக்கல் வரைக்கும் போய் தொட்டுட்டு வாரவந்தான் ஜெயிச்சான்னு ரூல்ஸ். எல்லாரும் போட்டி போட்டு நீச்சல் அடிப்பாங்க. லீவு நாளுன்னா நீச்சல் ரொம்பநேரம் நடக்கும்.
கீழக் கொளத்துல கொட்டாளத்து பத்து வயல்களுக்கு மட்டும் மூணு மடை உண்டு. பாலத்து பக்கத்துல மொத மடை இருக்கும். அடுத்து கிழக்க வந்த மடைனு ஒண்ணு உண்டு. மூணாவதா நடு மடை. அதுக்கு அங்கிட்டு இலஞ்சி பத்து வயல்களுக்காக ரெண்டு மூணு மடைகள் உண்டு. இதுல நடுமடைங்கறதுதான் குளிக்கதுக்கு தோதான இடம். என்ன தோதுன்னா அம்மாமாருங்க தேடி வரமாட்டாங்க. ஏன்ன கீழக் கொளத்து கரைதான் ஆம்பளைகளுக்கான டாய்லட்! அதுனாலேயே நடுமடைல குளிக்கப் போவாங்க பொடிப் பயலுக!
கொளத்துக் கரையிலே கொல்லைக்கு போனாலும் கழுவறதுக்கு மடை பக்கம்தான் இறங்கணும். நாம குளிக்க குளத்த நாமளே அசிங்கம் பண்ணலாமானு ஒரு விஷயத்தை எல்லாப் பயலுவளுமே கடைபிடிச்சாங்க.
கரெக்டா பள்ளிக்கூடம் திறக்க காலத்துல கண்ணுப்புளி மெட்டு அணையையும் தொறந்துருவாங்க. அங்க இருந்து வாய்க்கா வழியா தண்ணி வந்து மேலக் கொளம் நிறைஞ்சு அப்படியே கீழக் கொளத்துக்கு வந்து அங்க இருந்து வழிஞ்சு ஓடி குண்டாத்துக்குப் போகும். பள்ளிக்கூடம் தொறக்கற சமயம்தான் எங்க ஊருல குற்றாலம் சீசன்கறதால கரையெல்லாம் சேறாத்தான் இருக்கும். ஆனாலும் ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுகிட்டு கரை வழியாத்தான் போவோம்.
கீழக் கொளத்து பாசனங்கறது நம்பிக்கையான பாசனம். நாளைக் குறிச்சு நாத்து பாவலாம். நாள் குறிச்சு நடவு போடலாம். எப்பவும் குளத்துல தண்ணிக்கு பஞ்சமிருக்காது. குளத்தோட அடிமட்டமும் வயலோட மட்டமும் ஒண்ணா இருக்கதால எந்நேரமும் வயல்ல ஈரம் பாவித்தான் கிடக்கும். தண்ணி திறக்க முடியாம சிக்கல் வருதுன்னா அது மடைல தேங்காய் அது இதுனு ஏதும் அடைச்சிருந்தா மட்டும்தான். அதுக்கும் கொல்லங்கொண்டான்னு ஒரு ஆள் உண்டு.
எந்த மடை அடைச்சிருக்கு… முத மடையா… நடுமடையா…’னு கேட்டுகிட்டே வர்ற கொல்லங்கொண்டான் எந்த மடையைச் சொன்னாலும் வேட்டியை அவுத்து வெச்சுட்டு கோமணத்தோடதான் இறங்குவாரு. (அந்தக் காலத்துல அவன்னுதான் சொல்லியிருக்கோம்.) கிட்டத்தட்ட பத்து அடி அகலமுள்ள கரை… சின்னதா ஒரு ஆள் சிரமப்பட்டு போற அளவுக்கான மடை… பத்து நிமிஷம் மூச்சை அடக்கி மடைக்குள்ளே கிடக்க மண்டியை எல்லாம் வழிச்சு வெளில தள்ளி மடையைத் தூர் அள்ளிட்டு அங்கிட்டு வருவாரு கொல்லங்கொண்டான்.
புகார் சொல்லுத ஆளுகிட்டே காசெல்லாம் கேட்ட மாட்டாரு. அதிகபட்சமாப் போனா ஒரு டீ வாங்கிக் குடிப்பாரு. ஆனா. கொளத்துப் பொறவுல இருக்கற வயல்கள்ல அறுப்பு நடக்கையிலே சாங்காலமா களத்துக்கு வந்து நெல்லு வாங்கிட்டுப் போவாரு. அதுதான் கூலி! எங்க வீட்டு வயல் அறுப்பு சமயத்துல ‘சின்னய்யா கையால போடச் சொல்லுங்க… செழிக்கச் செழிக்க எனக்கு பெருகும்’னு என் கையால வாங்கிட்டுப் போவாரு! எங்க கல்லூரிப் படிப்பை சமாளிக்கறதுக்காக கீழக் கொளத்து பொறவுல இருந்த நாற்பது செண்ட் அளவுள்ள எங்க வயலை சில ஆயிரங்களுக்கு வித்துட்டோம். இப்ப கிணத்துப் பாசானம் உள்ள திருத்து வயல் மட்டும்தான் இருக்கு.
சீசன் தொடங்கியது பேப்பர்ல படிச்சதுமே கீழக் கொளம் என் நினைப்புல அலையடிக்க ஆரம்பிச்சிருச்சு. எப்படி இருக்கு கொளம்னு அம்மாவுக்கு போன் பண்ணுனேன். ‘ஊருக்குள்ளே மழை பெஞ்சதுல ஓடித் தேங்குன தண்ணிதான் கிடக்கு. வாய்க்காலைத் திறந்து தண்ணி கொண்டாறலை… கொளம் ரொம்பலைடா’னு சொன்னாங்க.
கீழக் கொளத்துப் பாசன வயல் எல்லாம் ப்ளாட் ஆகிவிட்டது. இப்போது கொளம் ரொம்புனா வயல்ல ஊத்து அடிக்கும்… ப்ளாட்டை வாங்க எவனும் வரமாட்டான்னு கொளத்தைக் காயப் போட்டுருக்காங்க. செண்டுக்கு லட்ச ரூபாய் போகுதாம்.
‘நல்ல வேளைடா… நாம வயலா இருக்கறப்பவே வித்துட்டோம். நம்மகிட்டே வாங்குனவங்க ஏழெட்டு வருசமா விவசாயம் பார்த்துட்டாங்க… இல்லன்னா அடிமாட்டுக்கு லட்சுமியை வித்த மாதிரி குத்த உணர்ச்சி கொன்னுரும்…’ என்றார் அம்மா.
இனி எங்க ஊரைப் போலவே கீழக் கொளமும் கொட்டாகுளம்தான்!

Wednesday, June 12, 2013

மற்றும் பலர்!


யார் எப்போ, ‘சோறு வை’னு சொன்னாலும் எனக்கு கோமதி அக்காவின் ஞாபகம் வந்துவிடும். எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டு முன்னால் இருந்த குடிசைச் சாய்ப்புக்கு கோமதி அக்கா குடிவந்த நாள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.
இருந்த பத்து பாத்திரங்களையும் பளிச்சென்று விளக்கி கழுவி வீட்டை மெழுகி பெரிய கோலமெல்லாம் போட்டு வைத்திருந்தாள் கோமதி அக்கா. என் அம்மா, பக்கத்து வீட்டு ஆச்சி எல்லாரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டதும் சூடாக கொஞ்சம் பால் கொண்டு வந்து கொடுத்தாள். முத்தத்தை ஒட்டி ஒரு அடுக்களை, அதுல இருந்து உள்ளே போனா ஒரு ரூம்னு இருந்த அந்த குடிசை சாய்ப்புக்கு திரைச் சீலை எல்லாம் போட்டிருந்தாள்.
‘அவ பெரிய கைவேலைக் காரியா இருக்கால… அவ வீட்டுல தொங்குத திரைச் சீல, சுவத்துல மாட்டியிருக்க அலங்காரம் எல்லாம் அவளே தைச்சாளாம். எம்புட்டு அளகா இருக்கு… நம்ம ஊரு தேடி வந்துருக்குதுக… நல்லாயிருக்கட்டும்…’ என்று அம்மா ஆசீர்வதித்தாள்.
அந்த ஆசீர்வாதம் சாயங்காலமே சாயம்போய்விட்டது. கோமதி அக்காவின் வீட்டுக்காரர் முழு போதையில் வந்தார். பழகுன மாட்டை வண்டியில் பூட்டுனா அதுவே வீடு வந்து சேர்ந்துடும்னு சொல்ற மாதிரி அந்த மாமாவின் சைக்கிள் அவரை வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்தது. சைக்கிள் கேரியரில் கட்டப்பட்டிருந்த ஐஸ் பெட்டியை அப்படியே இறக்கி வைத்த மாமா உரத்த குரலில் சொன்னார். ‘கோமதி சோறு வை!’
‘ஒரு வீட்டுக்குக் குடித்தனம் வந்து முதல் நாள் வீட்டு ஆம்பள இப்படி வந்தா என்னனு சொல்ல… போ… உன் தலையில ஈசன் எழுதுன எழுத்து அம்புட்டுதான்…’ என்றாள் பக்கத்து வீட்டு ஆச்சி. ‘இல்ல ஆச்சி… எப்பமும் குடிக்க மாட்டாரு… இன்னிக்கு யாரோ இழுத்துட்டுப் போயிருக்காங்க. அவரு நல்லவருதான்…’ என்று சமாதானம் சொன்னாள் கோமதி அக்கா.
கோமதி அக்கா தன் வீட்டுக்காரரை அவரு இவருனு சொன்னதே எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. எனக்குத் தெரிஞ்சு வீட்டுக்காரரை அவுகனு சொல்றதுதான் மரியாதை. அவருனு சொன்னா அவமரியாதை. ‘அது படிச்ச புள்ளைல… அதுக்குத் தெரியாத மரியாதையா… எல்லாம் போதும்… போ… உன் சோலியப் பாரு’ என்று தலையில் குட்டினாள் அம்மா.
கோமதி அக்காவின் வீடு அத்தனை சுத்தமாக இருக்கும். பொட்டுப் பொடுசுகளாக ரெண்டு பிள்ளைகள் இருந்தாலும் வீட்டில் குப்பையாக இருந்ததே இல்லை. தினமும் மெழுகி, துடைத்து, ஒட்டடை அடித்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தாள். வீட்டு வாசலில் கனகாம்பரமும் டிசம்பர் பூவும் செடி வாங்கி நட்டு வைத்தாள்.
அந்த மாமாவுக்கு ஐஸ் வியாபாரம். எங்கள் ஊரில் ஐஸ் கம்பெனிகாரர் ஒருவர் இருந்தார். அவர் கம்பெனியில் ஐஸ் எடுத்து ஊர் ஊராக விற்கும் வேலை மாமாவுக்கு. சுற்று வட்டாரங்களில் வியாபாரம் செய்தால் மூணு மணிவாக்கில் வீட்டுக்கு வந்துவிடுவார். சைக்கிளை விட்டு இறங்கும்போதே, ‘கோமதி… சோறு வை! பசி தீபிடிக்கி…’ என்றபடிதான் இறங்குவார்.
எப்படியும் சாயங்காலம்தானே வருவார் என்ற நம்பிக்கையில் அப்போதுதான் அக்கா உலையே வைத்திருப்பாள். ஆனாலும் கையில் வைத்திருக்கும் ராணியையோ தேவியையோ அப்படியே மடித்து வைத்துவிட்டு, ‘கைகால் கழுவிட்டு வாங்க…’ என்பாள்.
‘யக்கா… என்ன தைரியத்துல மாமாவை சாப்பிடக் கூப்பிடுத… சடார்னு வந்து உக்காந்துடாவன்னா என்ன செய்வ… உலைத் தண்ணிய எடுத்து ஊத்திக் குடுப்பியா… சோறு ரெடியாவலைனு சொல்ல வேண்டியதுதானே…’ என்றால் சிரிப்பாள். அதற்குள் மாமா அடுத்து ஒருமுறை சோறு வை என்றிருப்பார்.
மாமாவின் குணம் அவளுக்குத் தெரியும். சில முறை பார்த்தபிறகு எனக்கும் தெரிந்துவிட்டது. வண்டிய விட்டு இறங்கியதும் பின்பக்கம் போய் வருவார். பிறகு வண்டியில் இருந்து ஐஸ் பெட்டியை இறக்கி ஆச்சி வீட்டு திண்ணையில் வைப்பார். பிறகு அதில் மிச்சமிருக்கும் ஐஸ் எத்தனை என்று சின்னதாக ஒரு கணக்கெடுப்பார்.  பிறகு ஐஸ் பெட்டி மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பார். அதன்பிறகு சைக்கிளை நிழலில் கொண்டு போய் நிறுத்தி துணியை எடுத்து வண்டியைத் துடைப்பார். அதையும் முடித்து விட்டு வந்து கைகால் முகமெல்லாம் கழுவி விட்டு வந்து பிள்ளைகளுக்கு அருகே படுத்து உறங்கும் குழந்தைகளைக் கொஞ்சுவார். இந்த இடைவெளியில் பத்து தடவையாவது சோறு வை என்பதையும் சொல்வார்.
இந்த அரைமணியில் அக்கா சோறு பொங்கி ரசமோ புளித்தண்ணியோ தாளித்து கடலைத் துவையலும் அரைத்துவிடுவாள். அனேகமாக துவையலை அரைத்து வழிக்கும்போது வந்து உட்காருவார். சாப்பிட்டு விட்டுப் போனாரென்றால் பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் வியாபாரம் பார்த்துவிட்டு கம்பெனிக்கு போய் கணக்கு கொடுத்துவிட்டு வருவார், செட் சேர்ந்தால் ஆடிக் கொண்டே!
அக்காவின் பகல் பொழுதுகளெல்லாம் அம்மாவுக்கும் பக்கத்து விட்டு ஆச்சிக்கும் பொறாமைதரக் கூடிய பொழுதுகளாக இருக்கும். காலையில் குளித்து துவைத்து மாமாவுக்கு சாப்பாடு போட்டு அனுப்பிவிட்டாளென்றால் அதன்பிறகு அவளுக்கு வேலை கிடையாது. அவள் பிள்ளைகள் இரண்டும் அப்படியொரு சமத்து. ரெண்டு கரண்டியை எடுத்து முன்னே போட்டால் அதை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். அக்கா புத்தகம் படிப்பாள், பூ தொடுப்பாள், திரைச் சீலையில் குயில் கிளி எல்லாம் பின்னுவாள்.
உன் புருசன் உன்னை மடியில வெச்சுல்லா தாங்குதான்… உனக்கு என்னத்தா குறை… என்று அடிக்கடி அங்கலாய்ப்பாள் பக்கத்து விட்டு ஆச்சி. இந்த மனுசனுக்கு மிலிட்டரி மென்சன் வருது… ஆனா, இன்னும் என்னை பீடி சுத்து பீடி சுத்துனு போட்டு படுத்தி எடுக்காரு. கேட்டா உன் காப்பிச் செலவுக்காவது ஆவும்லாட்டினு வக்கணையா பேசுதாரு. இவரு குடிக்க பீடிச் செலவை மிச்சம் புடிக்க என்னை பீடி சுத்தச் சொல்தாரு…’ என்று ஆச்சி சொல்லும்போது கோமதி அக்கா முகம் பெருமையில் மின்னும்.
அன்றாடங்காய்ச்சி வேலைதான் என்றாலும் ஞாயித்துக் கிழமைகளில் மாமா ஐஸ் வியாபாரத்துக்குப் போகமாட்டார். பள்ளிக்கூடம் லீவு என்பதால் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. தெருத்தெருவாகச் சுத்த வேண்டும் என்றாலும் பள்ளிக்கூட வியாபாரம் போல கிடைக்காது என்பதால் அன்று ஐஸ் எடுக்க மாட்டார். அன்றைக்கு கோமதி அக்காவின் பிள்ளைகள் எங்க வீட்டில்தான் கிடக்கும்.
மறுநாள் மாமா வியாபாரத்துக்குப் போன பிறகு ஆச்சி கிண்டலாகச் சொல்வாள். ‘ஏட்டி… நீ திரைச்சீலை போடுற ரகசியம் இன்னைக்குல்லா எனக்குத் தெரிஞ்சுது. பகலை ராத்திரியாக்கி பவுசு கொண்டாடுதியாக்கும்…’ என்பாள். கோமதி அக்காவுக்கு முகம் கூடுதலாகச் சிவக்கும்.
மாமா கொண்டு வரும் காசில் கொஞ்சம் மிச்சம் பிடித்து ஊருக்கு வெளியே ஒரு துண்டு நிலம் வாங்கிப் போட்டாள். குச்சுலோ குடிசையோ சொந்த நிலத்துல கட்டிரு ஆத்தா… அதுதான் உனக்கு பெருமை என்று ஆச்சி உசுப்பேத்தி விட, அக்கா இன்னும் வேகமாக காசு சேர்க்கத் தொடங்கினாள்.
‘ஆச்சி… பீடி சுத்தறது எப்படினு எனக்குச் சொல்லித் தர்றீங்களா..?’ என்று கோமதி அக்கா கேட்டபோது ஆச்சி கொஞ்சம் அசந்து போனாள். ‘அவன் உன்னை ராசாத்தி மாதிரி வெச்சிருக்கான்… நீ ஏன் இந்த போயிலைக்குள்ளே மூஞ்சியைக் குடுக்கணும்னு பாக்கே… வேண்டாம் தாயி…’ என்றாள். ‘இல்லே ஆச்சி… சும்மா ஆசைக்கு…’ என்றாள்.
ஆஸ் வெச்சு அளவெடுத்து பேப்பரில் வெட்டி உமியை வைத்துச் சுருட்டி முதல் நாள் பேப்பர் பீடி சுற்றிப் பார்த்த கோமதி அக்கா ஒரே வாரத்தில் பீடி இலையில் புகையிலை வைத்து பீடி சுற்ற கற்றுக் கொண்டு விட்டாள்.
வீட்டில் பேப்பரில் சுற்றிய பீடிக் கட்டு கிடப்பதைப் பார்த்த மாமா கோமதி அக்காவை திட்டித் தீர்த்துவிட்டார். ‘இந்தச் சோலியை இன்னையோட விட்ரு… இந்த புகையிலை வாசனை புள்ளைகளை சீக்காளி ஆக்கிரும்… உன்னையும் உருக்கிரும்… நமக்கு வேண்டாம் இந்தப் பொழப்பு…’ என்று கோபித்துக் கொண்ட மாமா, ‘இனி குடிப்பதில்லை… அதுக்காகற செலவையும் நிறுத்திக்கறேன்…’ என்றபோது அக்கா அழுதே விட்டாள். ஆனாலும் பீடி சுற்றும் லாவகமும் அதில் கிடைக்கும் லாபமும் அவளை இழுத்தது. ‘ஆச்சி… உங்க கணக்குல கூடுதலா நூறு தூள் வாங்கிட்டு வாங்க… நான் தனி கட்டு போட்டுத் தாரேன்… கடைக்காரன் என்ன சொல்லுதான்னு பார்ப்போம்…’ என்றாள்.
பீடிக் கடையில் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதுதான் வழி! பீடி சுற்ற ஆசைப்படுபவர்கள் முதலில் ஏற்கனவே சுற்றுபவர்களிடம் சில பீடிகளைச் சுற்றிக் கொடுப்பார்கள். அதை தங்கள் கட்டுகளில் வைத்து கடையில் கொடுப்பார்கள். கடைக்காரன் பீடி தரம் பார்க்கும்போது புதிதாகச் சுற்றியவர்களின் பீடியை உருவி எடுக்காவிட்டால் முதல் கட்டம் பாஸ்.
அடுத்து புதிதாக சுற்றுபவர்கள் தனி கட்டாக ஒரு கட்டு சுற்றிக் கொடுப்பார்கள். அதுவும் ஓகே ஆனால் பழைய ஆளின் கணக்கில் தூள் இலை கொடுப்பார்கள். அதுவும் ஓகே ஆனால் தனி அட்டை போட்டுக் கொடுப்பார்கள். கோமதி அக்கா அந்த இடத்தில் இருந்தாள்.
‘உன் மாப்பிள்ளை இம்புட்டு தூரம் சொல்லியிருக்கான்… நீ பீடி சுத்தணும்னு சொல்லுதியே… உன் ஆசைக்குதான் என் இலை தூள்ல சுத்திட்டியே… பிறகு ஏம்ட்டி இந்த புடிவாதம்…’ என்று ஆச்சி தயங்க, ‘உன் வீட்டுல வெச்சு சுத்திக் குடுத்தா அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு. அவருக்கு தன் புள்ளைகளுக்கு ஏதும் ஆகிடுமோனுதான் பயம்… கூட நாலு காசு வந்தா எங்களுக்கு நல்லதுதானே…’ என்றாள். ஆச்சியால் அதன்பிறகு மறுக்க முடியவில்லை.
ஆச்சி வாங்கிக் கொடுத்த இலை தூளில் பீடி சுற்றி கட்டு போட்டு ஆச்சியிடமே கொடுத்தாள். ‘நீயும் கடைக்கு வா… அப்பதானே அவன் சொல்லுத குத்தம் குறை உனக்கும் தெரியும். நல்லாயிருக்குனு சொல்லிட்டாம்னா இன்னைக்கே தனி அட்டை போட்டுறலாம்ல…’ என்று ஆச்சி கூப்பிட, ‘அவரு வந்ததும் சோறு வைனு நிப்பாரு… சோத்தை வடிச்சுட்டு வந்துறட்டுமா…’ என்ற கோமதி அக்கா பரபரவென்று சோற்றை வடித்துவிட்டு ஆச்சியோடு புறப்பட்டாள்.
கோமதி அக்காவின் பீடி சுற்றும் திறமையை கடைக்காரன் பாராட்டித் தள்ளிவிட்டான். ‘கல்லு மாதிரி சுத்தியிருக்கியே தாயி… ஒரு நாளைக்கு ஐநூறு தூள் கூட சுத்துவ போல இருக்கே… ஆச்சி… நீ கொஞ்சம் இந்த பிள்ளைகிட்டே கத்துக்கோ… பாதிக்கு பாதி கழியுது…’ என்ற கடைக்காரர் கோமதி அக்காவுக்கு தனி அட்டை போட்டுக் கொடுத்துவிட்டார்.
‘ஐநூறு தூள் சுத்துனா உன் புருஷன் ஐஸ் விக்கவே போ வேணாம்… அவனை உக்கார வெச்சு நீ சோறு போடலாம்… இன்னைக்கு நூறு தூள் மட்டும் வாங்கு… ஆனா, உன் புருஷன்கிட்டே சொல்லிட்டு செய்…’ என்று ஆச்சி ஆலோசனை சொல்லி இலை தூள் வாங்கிக் கொடுத்துவிட்டாள்.
அந்த இலை தூளோடு கோமதி அக்கா வீட்டுக்கு வந்த அன்றுதான் மாமா மீது ஒரு லாரி இடித்து மாமா ஸ்பாட்டிலேயே இறந்து போனார். அக்காவை பீடித் தட்டும் கையுமாகப் பார்க்க மாமாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கோமதி அக்காவை அந்த பீடி சுற்றும் வேலைதான் காப்பாற்றியது. வாங்கிப் போட்ட மனையில் வீடு கட்டி விட்டாள். மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டாள். மகனுக்கு கல்யாணம் முடித்துவிட்டாள்.
இப்போது பேரன் சொல்கிறான், ‘கோமதி சோறு வை’ என்று… அதே அதிகாரத்தோடு! கோமதி அக்கா பீடி சுற்றுவதை விட்டுவிட்டாள்.

Sunday, May 5, 2013

நினைவுத் தடங்களைத் தேடி..!



 அஞ்சு நிமிஷம்தான் டைம்... ரொம்ப தொந்தரவு பண்ணக் கூடாது...’ என்று சொல்லித்தான் உள்ளே அனுமதித்தார்கள். நான் அஞ்சு நிமிஷத்தை அரைமணிநேரமாக நீட்டிக் கொள்ளும் சூட்சுமம் தெரிந்தவன். என் தொழிலின் பாலபாடம் அது. சரியென்று தலையாட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன். ஒரு கிரவுண்ட் நீள அகலத்தில் பெரிய ஹால்... நடுநாயகமாக இருபுறமும் வளைந்து ஏறிய படிக்கட்டில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளமே பிரமிப்பை உண்டாக்கியது. படிகளின் அடியில் பெரிய பியானோ கவனத்தை ஈர்த்தது. இதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. பியானோவை ஒட்டி இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன்.

இந்த ரத்தினக் கம்பளமோ பியானோவெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல உட்கார்ந்திருந்தார் அந்த உயர்ந்த மனிதர்
. தகுதியால் மட்டுமல்ல உருவத்தாலும் உயர்ந்த மனிதர்தான். யெஸ்... என்றபடி திரும்பியபடி அவர் என் கண்களை நேராகப் பார்க்க அந்த கரண்ட் எனக்குள்ளும் இறங்கியது போல இருந்தது.

பேச்சை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் பையில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்
. நிதானமாக அதில் உள்ள தகவல்களை வாசித்துவிட்டு, ‘யங் ஜர்னலிஸ்ட்... வெரிகுட்... ஐ லைக் பீப்பிள் லைக் யூ...’ என்று தோளில் தட்டினார்.

நான் மெதுவாக உதட்டை ஈரம் செய்து கொண்டு
, ‘வணக்கம் அமிதாப்ஜி... எனக்கும் உங்களைப் போன்ற ஸ்டார்களைப் பிடிக்கும்...’ என்றேன் உடைந்த ஆங்கிலத்தில்!

ஆனந்த விகடனைப் பற்றி அவருக்கு தெரிந்திருந்தது
. ‘எஸ்.எஸ்.வாசனின் நிறுவனம்தானே என்றவர், ‘இப்ப என்ன... உங்களுக்கு என் பேட்டி வேண்டுமா..?’ என்றபடி கைதட்டினார். கொள்ளைகூட்ட தலைவனின் கைதட்டலுக்கு எட்டிப் பார்க்கும் அடியாள் போல டை கட்டிய ஆசாமி ஒருவர் எட்டிப் பார்த்தார். ‘எஸ் பாஸ்என்று மட்டும்தான் சொல்லவில்லை. அமிதாப் எதற்கு அழைப்பார் என்று தெரிந்தவர் போல ஒரு ஃபைலை அமிதாப் கையில் கொடுத்தார்.

அதை என்னிடம் கொடுத்த அமிதாப்
, ‘இதில் என் பேட்டிகள், என்னைப் பற்றிய கட்டுரைகள், நான் நடித்த படங்கள் பற்றிய தகவல்கள், நான் வாங்கிய விருதுகள் என்று எல்லா தகவல்களும் இருக்கின்றன. நீங்கள் கேள்வி கேட்டது போலவும் நான் பதில் சொன்னது போலவும் எழுதிக் கொள்ளுங்கள். ஹிந்திவாலாக்கள் மாதிரி நீங்களும் எழுதுவீர்கள்தானே..!’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போதுதான் தோன்றியது
... அந்த பிரம்மாண்ட ஹால் உழைப்பாளி படத்தில் இடம் பிடித்திருந்த செட்..!

அமிதாப்பை சந்தித்த அந்த இடத்தை
...

அம்பது ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு போலீஸ் யூனிபார்ம் குடுங்க... முப்பது நாப்பது பேர் வெள்ளை வேட்டி சட்டை, வேட்டி குடுங்க... கொஞ்சபேர் பப்ளிக் மாதிரி இருக்கட்டும்... ரெயின் ஷாட்டுக்கு முன்னால் ஸ்டாக் ஷாட் கொஞ்சம் எடுத்துக்குவோம்...’ பல இன்ஸ்ட்ரக்‌ஷன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்த புதுமுக இயக்குனர் முருகதாஸ். எல்லாம் ரெடியான பிறகு சாரைக் கூப்பிடலாம் என்று சொல்லியிருந்ததால் சார் மேக்கப் ரூமில் இருந்தார்.

அந்த சார் அழைப்பின்பேரில்தான் நான் சென்றிருந்தேன்
. அந்த படத்துக்குப் பிறகுதான் அவருக்கு தல என்ற பெயர் வந்தது. சொல்லுங்க ஜி... என்ன நடக்குது நாடுல என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த அஜீத் ஷாட் ரெடியானதும் ஷூட்டிங் போய்விட்டார்.

நான் ஜூவியில் தொடராக எழுதிய நான் ரமேஷ் நாயகன் ரமேஷ் அந்தப் படத்தில் சின்னதாக ஒரு வேடம் கட்டியிருந்தார்
. அதற்கு முன் அஜீத் நடித்த அமர்க்களம் படத்தில் நண்பர் இயக்குனர் சரண் மூலம் அறிமுகமாகியிருந்தார் நான் ரமேஷ். அப்போது கிடைத்த அறிமுகத்தின் பேரில் அஜீத் தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

தீபாவளிக்கு மிக நெருக்கமான அந்த நாளில் நான் ரமேஷை குடும்பத்துடன் வரவைத்து மொத்த குடும்பத்துக்கும் உடைகள்
, பலகாரம், பட்டாசு எல்லாம் கொடுத்ததோடு பணமும் கொடுத்தார் அஜீத். நான் ரமேஷ் சிறையில் இருந்து மீண்ட பிறகு வந்த இரண்டாவது தீபாவளி. அமர்க்களமாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். அவர் குடும்பத்துக்கும் மகிழ்ச்சி!

கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அந்தக் குடும்பமே கண்ணில் ஆனந்த கண்ணீரோடு நின்றது இன்னமும் மனக்கண்ணில் இருக்கிறது
.

அஜீத் அன்போடு பரிசு கொடுத்த அந்த இடத்தை
...

அசைவமெல்லாம் அந்தப் பக்கம் போங்க
... சைவமெல்லாம் இந்தப்பக்கம் போங்க... என்று ஆளாளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்க, அசைவத்துக்குப் போகும் வழியில்ஒதுங்கஇடம் எங்கே என்று உடன்பிறப்புகள் தவித்துக் கொண்டிருந்தார்கள். திமுகவின் பொதுக்குழு கூட்டம். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் திருநெல்வேலி மாவட்ட திமுக அடையாள அட்டையோடு நானும் கும்பலில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தேன்.

எலேய்
... தீர்மானம் எப்ப வாசிப்பாங்க... பஸ்ஸை சீக்கிரம் எடுத்தா ராத்திரி மேல்மருவத்தூர்ல சாமி கும்பிட்டுப் போயிறலாம்... என்று ஒரு பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொண்டிருக்க, அதுவும் சரிதான்... ஆனா, கோயிலுக்கு போணும்னா மேற்படி ஒண்ணும் செய்யமுடியாதே... |ண்னு செய்வோமா... கையிலே வெச்சுகிட்டு ராத்திரி பார்த்துக்கிடுவோமா... என்று பெரிதாக பிளான் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் டி
.ஆர். மீது ஏதோ நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் வேவு பார்க்கவும் செய்தி சேகரிக்கவும் அந்த மண்டபத்தில் இங்கும் அங்கும் அலைய வேண்டியிருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்தில் டி.ஆர். என்றும் என் தலைவன் கலைஞர்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார். அந்தக் கூட்டம் முடிந்து அவருடைய ஆதரவாளர்கள் அவரை நெருக்க, அவர்கள் மத்தியில் அவர் மிதந்தபடி சென்ற காட்சி எந்தத் தலைவனுக்குமே சந்தோஷம் தரக்கூடியது.

அப்படி வாசல் வரை அவரை அலேக்காகத் தூக்கிக் கொண்டு போன விஜய மஹால் கார் பார்க்கிங் இடத்தை
...

நாசர் சாருடன் அமர்ந்து விவாதம் செய்த இடத்தை
...

தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா என்று ராஜு சுந்தரம் காதல் ஒழுக சிம்ரனுடன்
(அப்போது இருவருக்குள்ளும் காதல் ஓடிக் கொண்டிருந்தது)ஆடிப்பாடிய இடத்தை...

பாரதி படத்தில் பாரதிக்கு டப்பிங் பேசிய ராஜீவை சந்தித்துப் பேசிய இடத்தை
...

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
... என் நினைவுகளில் பதிந்து கிடக்கும் இந்த இடங்களை போர்ம் விஜயா மால் என்ற ஆசியாவின் மிகப் பெரிய வணிக வளாகம் என்று சொல்லப்படும் வளாகத்தில் தேடி அலைந்தேன்... கிடைக்கவில்லை!

நரைச்ச தலைக்கு டை அடிங்கன்னா கேக்கறீங்களா என்றாள் என் மனைவி
! சரிதான்!

Wednesday, May 1, 2013

மற்றும் பலர்! - 1

முத்தண்ணா
அந்தக் கால சினிமாவில் டைட்டில் போடும்போது நாயகன் நாயகி நகைச்சுவை நடிகர், நகைச்சுவை நடிகை, வில்லன், குணச்சித்திர நடிக நடிகைகள் என்று எல்லா பெயர்களும் போட்டு முடித்த பிறகு மற்றும் பலர் என்று ஒரு டைட்டில் கார்டு வரும்... அது சினிமாவில் மட்டுமில்லை... எல்லா வாழ்க்கையிலும் இருக்கிற டைட்டில் கார்டு! இன்று இருக்கும் நான் என்ற என்னை உருவாக்கியதில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ மட்டும் காரணமில்லை... மற்றும் பலர் இருக்கிறார்கள்.

சி|றுவயது பிராயத்தில் மதுரைக்கு என் பாட்டி வீட்டுக்கு லீவுக்குச் சென்ற காலங்களில் தன் துணியை தானே துவைத்து மடித்து வைக்கப் பழகிய என்னைவிட ரெண்டு வயது பெரியவனான முத்தண்ணாவில் தொடங்கி நேற்று நான் கலந்து கொண்ட பயிலரங்கத்தில் மாணவராக வந்து, சார் இவ்ளோ நல்லா பேசறீங்க... இதை ஒரு புத்தகமாக் கொண்டாறலாம்ல... என்று கையைப் பிடித்துக் கொண்டு நின்ற தோழர் வரை (மே 1 அன்னிக்கு சந்திச்சதுக்கு இதாச்சும் இருக்கட்டுமே!) மற்றும் பலருக்கும் பங்கு இருக்கிறது.

முத்தண்ணாவில் இருந்தே தொடங்குகிறேன். அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன் கொஞ்சம் முன்கதை..! நாலாங்கிளாஸ் படிக்கிற காலத்திலேயே கோடை லீவு என்றால் அது மதுரையில் இருக்கும் ஆச்சி (அம்மாவின் அம்மா) வீடுதான். அப்போதெல்லாம் அம்மா தன் அப்பாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். எங்களுக்கு (எனக்கும் என் அண்ணாச்சிக்கும்) பரீட்சை தொடங்கிய வேளையில் அம்மா எழுதும் கடிதத்தில் ஓரமாக நாங்களும் ஒரு வரி எழுதுவோம். தாத்தா... எங்களுக்கு வர்ற 27ம் தேதி வரலாறு புவியியல் பரீட்சை... என்று!

கொள்ளைக்கூட்ட தலைவனுக்கும் அதன் அடிப்பொடிக்கும் இருக்கும் கோட் வேர்டை விட வலிமையானவை இந்த வார்த்தைகள். சரியாக வரலாறு புவியியல் பரீட்சை அன்று காலையில் எங்க தாத்தா வந்து இறங்கிவிடுவார். நாங்கள் போய் பரீட்சையை எழுதிவிட்டு வருவதற்குள் எங்கள் உடைகளை பேக் பண்ணி ரெடியாகி விடுவார். செங்கோட்டையில் இருந்து அர்த்தராத்தியில் ரயிலைப் பிடித்து அதிகாலையில் மதுரை வந்து இறங்குவோம். முழுசாக முப்பது நாட்கள் மதுரைதான்.

இந்த ஒரு மாதத்தில் ரெண்டு சினிமா, ரெண்டுமுறை பொருட்காட்சி (ஒரே நாளில் முழுக்க சுற்ற முடியாது. அவ்ளோ பெருசு) ஒருமுறை சர்க்கஸ்... அவ்வளவுதான்! ஆனால் அதையெல்லாம் விட சந்தோஷமாக இருப்பது காலையில் என் தாத்தாவின் நண்பர் கோபால் தாத்தா வீட்டுக்கு போய் பேப்பர் வாங்கி வருவதும் மாலையில் நூலகத்துக்குப் போய் வருவதும்தான்! இதில் முப்பது நாளும் முப்பது வகை டிபன், முப்பது வகை குழம்பு என்று அசத்தும் ஆச்சியின் கைமணம் தனி சந்தோஷம்!

வந்துவிட்டேன் முத்தண்ணா கதைக்கு!

மேலப்பொன்னகரம் மூன்றாவது தெருவில் சி 6 பிளாக்கில் 11ம் எண் வீடு ஆச்சி வீடு. மூன்றாவது தளம்... இரண்டாவது தளத்தில் 10ம் எண் வீடு முத்தண்ணா வீடு. அந்த அண்ணாவின் அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்வதால் விடுமுறைக்கு எங்கும் செல்ல மாட்டார்கள். எப்போ பார்த்தாலும் முகம் கழுவி திருநீறு வைத்த நெற்றியோடுதான் இருப்பான் முத்தண்ணா. (நானும் ஸ்கூல் காலத்துக்குப் போயிட்டேன். அதான் மரியாதை குறைஞ்சிடுச்சு) சட்டையும் டவுசரும் பளிச்னு இருக்கும்.

அவன் மூஞ்சியைப் பார்த்தியால... லெட்சுமி களை ஜொலிக்கு. உன் மூஞ்சியும் இருக்கே... போ... போய் மூஞ்சியைக் கழுவி பவுடர் கிவுடர் போட்டுட்டு வாஎன்று ஆச்சி துரத்திவிடுவார். அந்த அளவுக்கு பளிச்சென்று இருப்பான் முத்தண்ணா.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போதே அந்த அண்ணன் ஏழோ எட்டோ படிச்சான். ஊர்ல செல்லாங்குச்சி, பம்பரம், கோலிக்காய் விளையாடிகிட்டிருந்த என்கிட்டே, ‘வர்றியா... டிரேட் விளையாடுவோம்என்றான். எனக்கு அந்த விளையாட்டே தெரியாதேனு சொன்னதும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் காட்டுனான். நம்ம தாயக்கட்டை விளையாட்டு மாதிரிதான். அதுல காயை நகர்த்திகிட்டே போய் நடுவுல இருக்கற ஊர்களை விலைக்கு வாங்கி அங்க வீடு கட்டுறது, தியேட்டர் கட்டுறதுனு ஒரு விளையாட்டு! நாலைஞ்சு பேரு உட்கார்ந்து விளையாட ஆரம்பிச்சோம்னா சாயங்காலம் வரைக்கும் ஓடும்.

முத்தண்ணாவுக்கு தனி தட்டு. அவனோட தங்கை லதா அக்காவுக்கு தனி தட்டு. அவங்க சாப்ட தட்டை அவங்கதான் வெளக்கி கழுவி வைக்கணும். அவங்க துணிமணிகளை அவங்களே சோப்பு போட்டு காயப் போட்டு எடுத்து மடிச்சு வைக்கணும்னு ரொம்ப கண்டிஷனான வீடு.

திங்கற தட்டுல கையைக் கழுவுதியே... போ... அந்த முத்து காலைக் கழுவிக் குடி... அப்பயாச்சும் புத்தி வருதானு பார்ப்போம் என்று பல வீடுகளில் திட்டு விழும். அந்த அளவுக்கு முத்தண்ணா எல்லா விஷயங்கள்லேயும் கரெக்டா இருந்தான். அவங்க வீட்டுல உட்கார்ந்து இந்த ட்ரேட் விளையாடுறப்ப தண்ணி தாகம் எடுத்து உள்ளே போய் குடத்துல மோந்து குடிச்சுட்டு வந்தோம்னா மெனக்கெட்டு உள்ளே போய் நான் குடத்து பக்கத்துல வெச்ச தம்ளரை எடுத்து பாத்திரங்கள் அடுக்கியிருக்கற இடத்துல வெச்சுட்டு வருவான்.

முத்து... இந்தப் பயகளுக்கு கொஞ்சம் சைக்கிள் சொல்லித் தர்றியாப்பா என்று ஆச்சி வைத்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து ஒரு லீவு முழுக்க எங்களை தோளில் சுமந்து கொண்டு கிழக்கும் மேற்குமாக அலைந்தான். என் மாமாகூட, ‘ஏண்டா... வீட்டுல இடமில்லையா என்ன... எதுக்கு முத்து தோள்ல தொங்கிகிட்டு தூங்குத...’ என்று கேலி செய்திருக்கிறார். ஆனா, இடுப்பை வளைக்கறதை மட்டும் கரெக்ட் பண்ணிட்டா நீ சூப்பரா ஓட்டிருவேடா என்று நம்பிக்கை வார்த்தை சொல்லி நம்மை மகிழ்விப்பான் முத்தண்ணா.

படிப்பிலேயும் கில்லாடி. எப்படியும் முந்நூத்தம்பது மார்க்குக்கு மேல வாங்கிடுவான் என்று வீட்டில் சொன்னார்கள். நான் ஏழாவது படிக்கும்போது முத்தண்ணா பத்தாவது என்று நினைவு. அந்தமுறை அம்மாவுடன் ஊருக்குப் போய் இறங்கினோம். பயணக் களைப்பில் இருந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அம்மாவிடம் ஆச்சி ஏதோ அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளை வளர்க்கறதுல ரொம்ப கவனமா இருக்கணும்மா... அதுலயும் இந்த பத்தாங்கிளாஸ்ங்கறது பெரும் கண்டமால்ல இருக்கு... மூக்குக்கு கீழ புல்லு கணக்க ...சுரு மொளச்சதும் என்னமெல்லாமோ கத்துகிட்டு வருதுங்க...’ என்ற ஆச்சியின் புலம்பலை சட்டை செய்யாமல், ‘அம்மா... நான் முத்தண்ணாவை பார்த்துட்டு வர்றேன்...’ என்று செருப்பில் காலை நுழைத்தேன்.

முத்தண்ணா அவன் இவன்னு போன... கால வெட்டிருவேன்... ஒழுங்கு மரியாதையா வீட்டுல கிட..!’ என்றார்கள் கண்டிப்பான குரலில்!

Tuesday, December 11, 2012

எங்க வீட்டு சினிமா!



ஊருக்குள் எங்கே மைக் செட் கட்டி பாட்டு போட்டுக் கொண்டிருந்தாலும் இரவு ஏழு மணியானால் மைக் செட் காரனை எங்கள் வீட்டில் பார்க்கலாம். ஏழு மணி என்பது என் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்து குளியல் முடிந்து ஈஸி சேரில் தெருவோரமாக முற்றத்தில் அமர்ந்திருக்கும் நேரம். கையில் புகையும் சிகரெட்டை ஒருமுறை இழுத்துக் கொண்டு புகையோடு வார்த்தைகளை ஊதுவார்.
‘‘என்னடே... யார் வீட்டுல விசேஷம்..?’’ பதிலுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த கேள்வி வந்து விழும்.
‘‘தில்லானா மோகனாம்பாள் கொண்டாந்துருக்கியா..?’’ மைக் செட் காரனின் தலை வேகமாக ஆடும்... ‘‘இருக்கு ஐயா... வசந்தமாளிகைகூட வெச்சிருக்கேன்...’’ என்பான். அப்பா லேசாக எக்கி வேட்டி மடிப்பில் இருந்து ஐந்து ரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுப்பார். ‘‘இன்னைக்குதில்லானா மோகனாம்பாள்போடு...’’ என்பார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்பட வசனம் ஒலிக்கத் தொடங்கும். ஒரு வீட்டு விசேஷத்துக்கு மைக் செட் கட்டி ரெண்டுநாள் அலற விட்டால் அவனுக்கு கிடைக்கும் பணம் எழுபது ரூபாய். ஆனால், ரெண்டு நாளும் ராத்திரி ரெண்டு சிவாஜி பட வசனங்களைப் போட்டு பத்து ரூபாய் சம்பாதித்துக் கொண்டு போய்விடுவான். அப்பாவுக்கு சிவாஜி என்றால் உயிர்.
அப்போதெல்லாம் நாங்கள் சின்னப் பிள்ளைகள் என்பதால் அப்பா சிவாஜி படங்களை ரிலீஸ் அன்றே போய்ப் பார்ப்பாரா இல்லை, நிதானமாகப் பார்ப்பாரா எனத் தெரியாது. ஆனால், அந்தமான் காதலி படத்தில் முதல் காட்சியில் சிவாஜி எந்த கலர் சட்டை போட்டிருந்தார் என்ற தகவல் எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தார். எனக்கு விவரம் தெரிந்தபோதே எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து அதிமுகவையும் ஆரம்பித்துவிட்டார். சிவாஜி ரசிகன் என்பதாலேயே அப்பா எம்.ஜி.ஆரைப் பிடிக்காதவராகவும் இருந்தார். அதனாலேயே தி.மு.. அனுதாபியாகவும் இருந்தார். சிவாஜி காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் அப்பா அதையும் நடிப்பு கணக்கில் சேர்த்துவிட்டிருந்தார் போலும். அவரது மேடைப் பேச்சுகளை ரசிப்பார். ஆனால், வோட்டு என்னவோ திமுகவுக்குதான். சிவாஜியும் தீர்மானமாக தன் ரசிகர்களிடம் நீ நான் சொல்லும் சின்னத்தில்தான் வோட்டு போடவேண்டும் என்று வலியுறுத்தாததால் அப்பாவுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை.
மற்றபடி அப்பாவின் பேச்சில் எங்காவது ஓர் இடத்தில் சிவாஜி எட்டிப் பார்த்துவிடுவார். என் தாய்மாமா நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். என் அம்மா மீது அவருக்கு அபார பாசம். பட்டாசாலையில் இருந்த வால்வ் ரேடியோவில் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...’ பாடல் ஒலிக்கத் தொடங்க கண்ணில் நீர் கட்ட என் மாமா ரேடியோ அருகே அமர்ந்திருந்தார். எழுந்து உள்ளே போன அப்பா அதேவேகத்தில் வந்து எங்களிடம்சிவாஜி இங்க உக்காந்து அழுவுறாரு... சாவித்திரி அடுக்களைல உக்கார்ந்து அழுவுதா...’ என்று கேலியாகச் சொல்ல, நாங்கள் ஓடிச் சென்று அடுக்களையில் தோசைக்கல் முன்னால் உட்காந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்துச் சிரித்தோம். அதைத் தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அப்பா சிவாஜியை வேறு யாருடனும் ஒப்பிட்டதில்லை.
தேவர் மகன் ரிலீஸ் சமயத்தில்கூட, ‘நல்லாப் பாரு... கமலஹாசன் கண்ணுல ஒரு பயம் தெரியும் பாரு...’ என்று தன் கட்சி வாதங்களை வைத்துக் கொண்டேதான் இருப்பார். சிவாஜிக்கு ஆதரவு திரட்டும் அதேநேரத்தில் என் அண்ணனை லேசாகச் சீண்டுவது போலவும் இருக்கும். சிவாஜியின் கலை வாரிசாக கமல் இருந்த காரணத்தாலோ என்னவோ என் அப்பாவின் வாரிசான என் அண்ணன் கமல் ரசிகனாக இருந்தார்.
எங்கள் வீட்டுச் சுவர்களில் கமல்ஹாசனின் சித்திரங்கள் இடம் பிடித்திருக்கும். ஊர்த் திருவிழாவில் கமல் போலவே நடனம் எல்லாம் ஆடிப் பார்த்திருக்கிறார். எல்லா கமல் ரசிகர்களையும் போலவே குணா, மகாநதி போன்ற படங்களை சிலாகித்துக் கொண்டும் சகலகலா வல்லவன், சிங்கார வேலன் போன்ற படங்களை கமல் தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தார் என் அண்ணன். அப்போது வீட்டுக்கு வரும் வார பத்திரிகைகளில் வெளியாகும் கமல் படங்களை வெட்டி ஒட்டி ஆல்பம் செய்வதும் கமல் பாட்டு புத்தகங்களை வாங்கி மனப்பாடம் செய்வதும் அவருடைய வேலை.
ஒரு வீட்டில் இரண்டு ஆண்பிள்ளைகள் இருந்து அவர்களில் ஒருத்தன் கமல் ரசிகனாக இருந்தால் இன்னொருவன் ரஜினி ரசிகனாக இருக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு குடும்ப நிலவரப்படி எங்கள் வீட்டில் நான் ரஜினி ரசிகன். நாலாம் வகுப்பு பள்ளிக்கூட குரூப் போட்டோவில் லேசாக தலையைச் சாய்த்து கண்ணை மூடிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து இப்போதும் பலர் ஏன் கண்ணை மூடிகிட்டிருக்கே..? என்று கேட்பார்கள். அது ரஜினி ஸ்டைலில் நான் கொடுத்த போஸ் என்பது யாருக்குமே புரிவதில்லை. ரசிகன் என்ற நிலையில் இருந்து தொண்டன் என்ற நிலைக்கு நான் உயர்ந்தது தளபதி ரிலீஸ் போதுதான். அப்போது காவிரி பிரச்னையில் ரஜினி வாய்ஸ் (அனேகமாக ரஜினியின் முதல் வாய்ஸ்!) கொடுத்திருந்தார். நண்பர்கள் ஒன்றுகூடி போஸ்டர் அடிப்பது என்று முடிவு செய்து என்ன வாசகம் போடலாம் என்று மண்டையை உடைத்து கடைசியில் கொட்டை எழுத்துகளில் காத்திருக்கிறோம் கர்நாடகா செல்ல... என்று போட்டு கீழே மன்னனின் தளபதிகள் என்று மட்டும் போட்டோம். அந்த போஸ்டர் எங்களை கவனிக்க வைத்தது.
அண்ணாமலை ரிலீஸ் அன்று பத்து ரூபாய் டிக்கெட்டை ஒரு ரசிகர் 356 ரூபாயும் (அவருடைய மொத்த கையிருப்பு) ஒரு முழுக்கை பாலியெஸ்டர் சட்டையும் கொடுத்து வாங்கியபோது உண்மையிலேயே அதிர்ந்து போனேன். ரசிகர்களின் வெறித்தனமான மனோபாவம் எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ரஜினியின் பெயரால் ரத்ததானம் செய்யும் இயக்கத்தில் மட்டும் இருப்பது... சினிமாவை எல்லாம் ஒரு வாரம் கழித்து பார்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன். அதன்பிறகு ரத்ததானம் என்பது யார் பெயராலும் செய்ய வேண்டியதில்லை என்றும் முடிவு செய்துகொண்டேன். ஆனாலும் நான் ரஜினி ரசிகந்தான்!
வீட்டுக்குள் வெட்டு குத்து அளவுக்கு போகாவிட்டாலும் எனக்கும் அண்ணனுக்கும் யார் பெரியவர் (அதாவது யார் பெரியவர் ரஜினியா... கமலா..!) என்ற மோதல் அவ்வப்போது வெடிக்கும். எங்கள் அணிக்கு வலு சேர்ப்பதற்காக அம்மாவை இழுப்போம். நீங்க சொல்லுங்கம்மா... உங்களுக்கு யார் பிடிக்கும்..? என் அம்மா நிதானமாகச் சொல்வார். ‘எனக்கு விஜயகாந்த் புடிக்கும்...’ என்று. ஏன்மா என்றால், ‘பாவம்டா... நாம கறுப்புனு காம்ப்ளெக்ஸ் இல்லாம நடிக்குது... யாராச்சும் ரசிகனா இருக்க வேண்டாமா என்பார். பின்னாளில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியபோது அம்மா அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போனார்.
எல்லா இளம் பெண்களையும் போலவே என் தங்கை கார்த்திக் ரசிகை. ‘அப்படி என்னதான் இருக்கு அந்தாளுகிட்டே..?’ என்றால் சிரிப்பு... என்பாள். அதற்காக கார்த்திக் படங்கள் என்றால் ஓடி ஓடி பார்க்கிறவள் இல்லை. எப்போதாவது படம் போகலாம் என்று வந்தால் அது கார்த்திக் படமாக இருந்தால் சந்தோஷமாக வருவாள். கோபுரவாசலிலே படமெல்லாம் பார்த்தபோது எனக்கே எங்கே கட்சி மாறிவிடுவேனோ என்ற எண்ணம் எழுந்தது.
என் தங்கைக்கு திருமணம் முடிந்து கொஞ்சநாளில் வீட்டுக்கு வந்திருந்தாள் அத்தானோடு! அம்மா ரெண்டுபேரையும் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போ என்றார்கள். நானோ அவங்க போயிட்டு வரட்டும் என்று சொல்லி டிக்கெட்டுக்கு மட்டும் சொல்லி வைத்தேன். என் தங்கைக்கு பிடித்த கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித் தா படம்..! டிக்கெட்டுக்குச் சொன்ன பிறகு ஒரு சந்தேகம். ஒருவேளை கல்யாணமான பிறகு கார்த்திக்கைப் பிடிக்கும் என்று சொன்னால் அத்தான் என்ன நினைப்பாரோ என்று. அத்தானை மெதுவாக அணுகி சொன்னேன். அத்தான்... சினிமாவுக்கு போயிட்டு வாங்க... உள்ளத்தை அள்ளித்தா படம்... தங்கச்சிக்கு கார்த்திக்னா உசுரு... என்று!
அத்தான் முகம் மலர்ந்தார். சூப்பர்... எனக்கு ரம்பான்னா ரொம்பப் பிடிக்கும்!