Wednesday, October 23, 2013

வெளியூரிலும் விலைபோகாத சி.எஸ். சார்..!

இப்போது நினைத்துப் பார்த்தால் சி.எஸ். சாரின் முகம் நினைவுக்கு வரமறுக்கிறது. ஆனால், எப்போது ஜனகராஜ் முகத்தை திரையில் பார்த்தாலும் சி.எஸ், சார் முகம்போலத் தோன்றும். எனக்கு ஆறாங்கிளாஸ் வரலாறு பாடம் நடத்திய சி.சுப்பிரமணியன் சார் பள்ளியில் ஏக பிரபலம். பிரபலத்துக்குக் காரணம் அவருடைய அப்பாவித்தனம். லேசாக மூக்கை விடைத்து அழுத்தி மூச்சு விட்டுக் கொண்டே இருப்பார். ரப்பர் செருப்பு வார் அறுந்திருக்கிறதோ என்று நினைக்கும் வகையில் லேசாக காலைத் தேய்த்துத் தேய்த்துதான் நடப்பார். எப்போதும் ஏதோ சிந்திப்பது போலவே இருக்கும் முகம். கொல்லைக்குப் போகும்போது குளிக்கப் போகும்போதெல்லாம்கூட எதிரே தன்னைப் பார்த்துவிட்டால் வணக்கம் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் பள்ளியில் வைத்து வணக்கம் சொன்னால்கூட புன்னகையோடு நெற்றியில் ஒட்டிய விரல்க்ளை எடுத்துவிட்டு விட்டுப் போவார்.
எப்போதுமே முழுக்கைச் சட்டைதான் அணிந்திருப்பார். அதில் இடது கை முழுக்கையின் கஃப் பட்டன் போட்டு இருப்பார். வலது கையை முழங்கைக்கு மேலே வரையில் ஏற்றிவிட்டிருப்பார். பாடம் நடத்தும்போது போர்டில் சாக்பீஸால் எழுத வேண்டும் என்பதால் கையைச் சுருட்டி விட்டிருக்கிறார் என்று நினைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பஸ்ஸை விட்டு இறங்கும்போதே சட்டை அப்படித்தான் இருக்கும். பேண்ட் நழுவுவது போல இருக்கும். அதை அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக் கொள்வார். ஒருநாள் இழுத்து விடாமல் அவர்பாட்டுக்கு நடமாடிக் கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் முதல் பெஞ்சில் இருந்தவன், ‘டேய்... சி.எஸ். சார் சணலை பெல்ட் மாரி கட்டிருக்காருடா..!’ என்றான். அப்போதுதான் கவனித்தோம். இடுப்பை இறுக்கியிருந்தது சணல்!
வரலாறுதான் அவருடைய சப்ஜெக்ட்... ஆனால், காலாண்டு, அரையாண்டு பரீட்சை முடிந்த பிறகு உள்ளே நுழையும்போத கணக்கு பேப்பர் குடுத்துட்டாங்களாடே..?’ என்பார். ஏனென்றால் கணக்கு டீச்சருக்கு அப்படியே எதிர்குணம். பெயரிலும் அப்படி ஒரு பொருத்தம். கணக்கு டீச்சரின் பெயர் எஸ்.சி டீச்சர்! டீச்சர் பெயர் செண்பக வள்ளி என்றாலும் எல்லோரும் எஸ்.சி டீச்சர் என்றுதான் சொல்வார்கள். வரலாறு பரீட்சையில் எல்லாருமே நல்ல மார்க் வாங்கிவிடுவோம். சி.எஸ். சாரின் தாராள மனசு ஒருபக்கம் காரணம் என்றாலும் வரலாறு என்று வந்தால் நாங்களெல்லாம் பக்கம் பக்கமா எழுதுவோம். ‘கணக்கு பேப்பர் குடுத்துட்டாங்களாடே..?’ என்று அவர் கேட்கும்போதே எங்களுக்கு குஷி பிறந்துவிடும்.
ஒவ்வொருவரின் பேப்பரையும் வாங்கி ஒருதடவைக்கு நாலுதடவை படிப்பார். எங்கேயாவது அரைமார்க் விடுதல் இருந்தால்கூட, ‘என்னடே படிச்சிருக்கா உங்க டீச்சர்... ஒரு கூட்டல், கழித்தல் தெரியலை... இவ எப்படிடே கணக்கு சொல்லிக் குடுப்பா... கொண்டுபோய் ஹெட்மாஸ்டர்கிட்டே கேளுங்கடே... இப்படி சொல்லிக் குடுத்தா பிள்ளைகள் எப்படிடே உருப்படும்...’ என்று அன்று முழுக்க பேசிக் கொண்டே இருப்பார். அவர் திருத்திய பேப்பரில் அப்படி யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாது. வரலாறில் வரைமுறையை எப்படி வகுப்பது?! ஆனால், கணக்குப் பாடமாக இருந்தாலும் செய்முறைக்கு கொஞ்சம் மார்க் போடலாம்... விடை மட்டும் தப்பு என்றால் அதற்குரிய மார்க்கை மட்டும் குறைக்கலாமே என்பது அவருடைய வாதம். கடைசிவரையில் பள்ளிக்கூடத்தில் அவர் வாதம் எடுபடவில்லை. ஹெட் மாஸ்டராக இருந்தவர் கணக்கு வாத்தியாராக இருந்தால் எப்படி எடுபடும்.
ஆறாங்கிளாஸ் படிக்கும் காலத்தில் யாருடைய பின்னணியையும் முழுசாகத் தெரிந்து வைத்திருக்க நியாயமில்லை என்றாலும் சி.எஸ். சாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கணக்குப் பரீட்சையில் பெயிலானதால் அந்த மகனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், அதனால்தான் இவரும் அரைவட்டு போல சுத்திக் கொண்டிருப்பதாகவும் கதைகள் உலவும். நானே அதை பலருக்கு பரப்பியிருக்கிறேன்.
எங்களிடத்தில் மிகுந்த கனிவோடு இருப்பவர் அவர். அவருடைய உடைகளிலும் செருப்பிலும் ஏழ்மையின் சாயல் தெரியும். ஆனாலும், எங்களோடு படித்த சங்கரபாண்டியன் பரீட்சை ஃபீஸ் கட்டமுடியாமல் நின்றபோது அவர்தான் பணத்தைக் கட்டினார். ராஜ்தூத், யமஹா பைக்குகளில் வந்த எல்லா ஆசிரியர்களும் கைகட்டி வெறுமனேதான் நின்று கொண்டிருந்தார்கள். அவருடைய வகுப்பில் எப்போதும் யாராவது ஒருவன் கடைசி பெஞ்சில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். ‘மண்டையிடி சார்...’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்... கடைசி பெஞ்சில் போய் படுத்துக் கொள்ளலாம். சிலர் பொய்யாகச் சொல்லிவிட்டுப் போய் படுத்தாலும் ஒருநாளும் அவர் உண்மையா என்பதை சோதித்து கூடப் பார்த்ததில்லை.
பரீட்சை நேரத்தில் அவர் கண்காணிப்பாளராக வந்தால் காப்பி அடிக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், யாராவது பிட் வைத்திருந்தாலோ அல்லது பேப்பரை மாற்றியிருந்தாலோ அவன் அருகிலேயே போய் உட்கார்ந்து அவனை நடுநடுங்க வைத்து காலில் விழ வைத்துவிடுவார். அப்போதுகூட அந்த பிட்டை வாங்கிக் கொண்டு மேற்கொண்டு எழுத வைப்பாரே தவிர, நான் எப்படி மடக்கிப் பிடித்தேன் பார் என்று வீரம் காட்டும் வேலையில் இறங்கமாட்டார்.
சி.எஸ். சாரின் ஃபேவரிட் டயலாக்... நீ எந்த ஊருடா..? என்பதுதான். ஒருவனை எழுப்பி அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாரென்றால் அன்று முழு வகுப்பும் அவன்தான் பலியாடு! எல்லாக் கேள்விகளையும் அவனிடம்தான் கேட்பார். ஒவ்வொரு கேள்விக்குப் பிறகும் தவறாமல் இந்தக் கேள்வியையும் கேட்பார்... நீ எந்த ஊருடா..? அவன் எங்கள் பள்ளிக்கூடம் இருந்த இலஞ்சியையோ அல்லது அருகில் உள்ள எங்கள் ஊரான கொட்டாகுளம் அல்லது அங்கிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கும் அய்யாபுரத்தையோ சொன்னால் பிழைத்தான். மாறாக தென்காசி என்றோ செங்கோட்டை என்றோ சொன்னால் செத்தான். முன்னந்தலையிலேயே அடிவிழும்.
நீ கள்ள மாடுடா... நல்ல மாடுன்னா உள்ளூர்லயே விலை போயிருப்பே... அங்கே விலை போகலை... தென்காசியிலே எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு... அங்கே உன்னை ஏன் சேர்க்கலை... ஏன்னா நீ கள்ள மாடு... அதான், உன்னைப் பத்தி முன்னே பின்னே தெரியாத இந்த ஊருக்கு வந்திருக்கே...’ என்று திட்டிக் கொண்டே அடிப்பார். அதேபோல அரசு ஊழியரின் குழந்தை என்றாலும் சிக்கல்தான். குறிப்பாக ஆசிரியர் மகன் என்றால் மொத்தமாக தொலைந்தான். ‘உங்க தகப்பனார் பேரை காப்பத்த வேண்டாமா...?’ என்று கேட்டுக் கொண்டே அடிப்பார்.
எட்டாங்கிளாஸ் வரையில்தான் அவர் பாடம் எடுக்கமுடியும். அதனால் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டராக அவர் வர வாய்ப்பில்லை என்றாலும் எட்டு வரையிலான டீச்சர்களின் தலைமை பொறுப்பாக ஒரு உதவி தலைமை ஆசிரியர் பொறுப்பு எங்கள் பள்ளியில் இருந்தது. அந்த இடத்துக்கு வருவதற்கான சீனியாரிட்டி அவருக்கு இருந்தது. அவர் அப்படி வந்தால் பள்ளிக்கூடத்தில் நல்ல மாற்றங்கள் வரலாம் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால், கடைசிவரையில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை! அவர் சிரித்த முகத்துடனேதான் நடமாடிக் கொண்டிருந்தார்.
படிக்காத மாணவனை ஒருநாள் அடிக்கும்போது கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவன், ‘சாரும் கள்ளமாடுதாண்டா... அதான், தென்காசில இருக்கற ஸ்கூலை எல்லாம் விட்டுட்டு இங்கே வேலைக்கு வந்திருக்காரு...’ என்றான். அவருக்கும் அது கேட்டிருக்கும்தான். ஆனால், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக போய் உட்கார்ந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து அவரை கமெண்ட் அடித்தவனிடம் கேட்டார்... ‘நீ எந்த ஊருடா? சில மாடுகள் வெளியூர்லகூட விலைபோகாதுடா!’ என்றார். அவருக்கு உதவி தலைமை ஆசிரியர் ஆகமுடியவில்லையே என்ற வருத்தம் ஒருநாளும் இருந்ததில்லை என்றுதான் அதுவரையில் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

Sunday, October 20, 2013

ஆச்சி!

என் அப்பாவின் அத்தை அவள். ‘என்னல... ஆச்சிய மரியாத இல்லாம அவ இவங்கெ..?’ என்ற என் அம்மாவை ஒரே அதட்டலில் அமர்த்திவிட்டாள். ‘எங்க அய்யா... இல்லிக் கண்ணும் குணுக் குணுக்னு நடையுமா அப்படியே எங்க அய்யாவக் கொண்டிருக்கான்... அவன அப்படியே பேச விடு... சும்மா அதட்டி புள்ளய பயங்காட்டாத... நீ என்ன வா போன்னே கூப்புடு ராசா..’ என்பாள்.

சின்ன வயசில் அவ்வப்போது எங்க வீட்டுக்கு வந்து செல்வாள். ரவிக்கை அணியாத உடம்பில் ரவிக்கை நீளத்துக்கு பசை ஒளிரும். மாநிறம் தான் ஆச்சி. ஆனாலும் மச்சை எடுப்பாகவே இருக்கும். கோலம் போலவும் ஒரு சமயம் மயில் போலவும் தோனறும் பச்சைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் சிரிப்பாள். ‘அதெல்லாம் தெரியாது... ஒருநா ஒரு குறத்தி வந்தா... ஒரு கைக்கு குத்த குருணி அரிசினு கேட்டா... நாங்க நெல்லுக் குத்தி ஒதுக்கி வெச்சிருந்த அரிசியைக் குடுத்து பச்ச குத்திட்டோம்... ஒங்க ஆச்சிக்காரிக்கு ஆங்காரம்... என் புருசன் உழைப்பெல்லாம் குறத்திகிட்டே போவுதே... பக்கத்துல கட்டிக் குடுத்தா இப்படித்தான் பகுமானமா வந்துருவாளுக...’னு புலம்பிகிட்டிருந்தா... நாங்க ரெண்டு கையிலயும் தோள்ல இருந்து மணிக்கட்டு வரைக்கும் அடுக்கட்டுக்கா குத்திட்டுதான் விட்டோம் என்று சிரிப்பாள் ஆச்சி.

ஒங்க ஆச்சிக்காரி என்று அவள் சொன்னது எங்க அப்பாவைப் பெத்த ஆச்சியை. இத்தனைக்கும் அவளும் தோளில் தொடங்கி மணிக்கட்டு வரைக்கும் பச்சை குத்தியிருப்பாள். ‘எங்க... அதைச் சொல்லிப் பாரு... ‘ம்... எங்க மாமா ஆசையா எனக்கு குத்தச் சொல்லி கொறத்திய வண்டி வச்சுல்லா கூட்டிகிட்டு வந்தாவோனு பவுசு கொழிப்பா... எங்க மாமன் மவ... சொந்தம் விட்டுறப்பிடாதுனு எங்க அண்ணனுக்கு கட்டி வெச்சோம். அவ எங்களையே விரட்டிப் பார்த்தா... நடக்குமா... ‘... சவத்து மூதி... சும்மா கெட... நீ வேணுங்கத அள்ளிட்டு போத்தானு எங்க அண்ணன் போதும் போதுங்க அளவுக்கு கட்டிக் குடுக்கும். ஒங்க ஆச்சிக்காரிக்குதான் வயறு கெடந்து பயறு அவிக்கும். அதுக்காக நாங்க பெறந்த வீட்டு பெருமய அள்ளிக்கட்டாம போ முடியுமா..?’ என்பாள்.

எனக்கு விவரம் தெரிந்து நான் ஒன்பதாங்கிளாஸ் படிக்கையில்தான் ஆச்சி வீட்டுக்குப் போனேன். எங்க ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கடையநல்லூர்தான் அவள் வாக்கப்பட்டு போன ஊர். எங்க ஊரில் ஏதோ துஷ்டி. யாருக்கெல்லாம் தந்தி குடுக்கணும்... யாருக்கெல்லாம் நேர்ல சொல்லணும்ங்கற லிஸ்டை வாங்கிக் கொண்டு நானும் நண்பனும் தென்காசி வந்தோம். அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரம்தான்... வண்டியை ஒரு அழுத்து அழுத்தி விடலாமே என்று கடையநல்லூருக்கு அழுத்திவிட்டோம். ஆச்சி வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியதும் பெரிய மாமாதான் கதவைத் திறந்தார். துஷ்டியைச் சொன்னோம். ‘அதுக்காடே இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்துருக்கிய... நல்ல புள்ளகளப்பா...’ என்ற மாமாவின் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தாள் ஆச்சி. அப்போதுதான் மணியைப் பார்த்தோம். இரவு பதினொன்றே முக்கால்!

உன் பேரன்தான் துஷ்டி சொல்லி வந்திருக்கான்...’ என்று மாமா சொல்லிவிட்டு உள்ளே திரும்ப, ஆச்சி உள்ள வா...’ என்றபடி தட்டை எடுத்து வைத்தாள். ‘நான் சாப்டுட்டேன்... வீட்ல சாப்டதுக்கும் மேல கடையில் நாலு ரொட்டி வேற சாப்டுட்டேன்... வேண்டாம்என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, பழையதைப் பிழிந்து தட்டில் வைத்தபடி, அமர்ந்துவிட்டாள். வேறு வழியில்லாமல் நானும் உட்கார்ந்தேன்.

அதன்பிறகு பலமுறை கடையநல்லூருக்குச் சென்றிருக்கிறேன். எங்கள் குலதெய்வம் கோவில் கடைநல்லூரில்தான் இருக்கிறது. கிடா வெட்டு என்றால் வண்டி கட்டிக் கொண்டு போவோம். அப்படி ஒருமுறை சென்றபோது ஏதோ எடுக்க மறந்துவிட்டது. அப்பா என்னை வண்டியை விட்டு இறக்கி, ‘ஆச்சி வீட்டுல போய் வாங்கிட்டு வா... நாங்க பூசை சாமானெல்லாம் வாங்கிட்டு நிக்கோம்என்றார். தேங்காய் திருகும் திருவலக் குத்தி என்பதாக ஞாபகம். ஒரே ஓட்டமாக ஓடினேன். ஆச்சி வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். மூச்சிறைக்க, ‘ஆச்சி... திருவலக்குத்தி வேணும்... எல்லாரும் கோயிலுக்கு போறோம்...’ என்றேன். உள்ளே நுழைந்து முதல் வேலையாக தட்டைத்தான் கையில் எடுத்தாள். ஒரு கை பழையதைப் போட்டு உட்கார வைத்துவிட்டு, திருவலக் குத்தி, சின்ன கத்தி, ரெண்டு அகப்பை எல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு பக்கத்தில் வைத்தாள். காலைல ஏழு மணிக்கு பழையதா என்று நினைத்தாலும் சோற்றைப் பார்த்ததும் லேசாக கள்ளப் பசி எடுத்தது. அவுக் அவுக் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடினேன். ஈரக் கையை டவுசரில் துடைத்தபடி வந்த என்னைப் பார்த்த அப்பா, ‘என்ன... உங்க ஆச்சி சோத்தை திங்க வெச்சுட்டாளாக்கும்... யார் போனாலும் இந்தக் கூத்தை விட மாட்டா...’ என்று மண்டையில் தட்டினார்.

ஒருமுறை ஏதோ கல்யாணப்பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனேன். அப்போது மாலை சுமார் நாலு மணியிருக்கும். தலையைக் கண்டதும், தட்டை எடுத்தாள். ‘ஆச்சி... மணி நாலு... எனக்கு டீ குடிக்க நேரம் இது...’ என்று நான் பேசிக் கொண்டே இருக்க, அவள் பாட்டுக்கு பழையதைப் பிழிந்து தட்டில் வைத்து பழைய குழம்புச் சட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அப்போது அவளுக்கும் மாமாவுக்கும் ஏதோ மனத் தாங்கல்... மாமா எதிர் குச்சிலில் அத்தை பிள்ளைகளோடு இருக்க, இவள் தனியே இருந்தாள்.

ஒருபோதும் அவள் என்னை சாப்டியா... என்று கேட்டதில்லை. அப்போது நேரம் என்னவாக இருக்கிறது... இது சாப்பாட்டு நேரமா... சாப்பாட்டுக்கு பதில் வேறு ஏதாவது கொடுக்கலாமா என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை. எப்போது போனாலும் வாய் வாய்யா...’ என்று உபசரிக்கும். கைகள் தானாக தட்டையும் பழையது பானையையும் தேடும். நாலைந்து வாய் சாப்பிட்ட பிறகுதான் கேட்பாள்... ‘எப்ப ஊர்ல இருந்து வந்த... எத்தன நாள் லீவு... உனக்கு எப்ப கலியாணம் மூய்க்கப் போறான் உங்கப்பா?’என்றெல்லாம்!

என் கல்யாணப்பத்திரிகையைக் கொடுக்கச் சென்றபோது ஆள் தளர்ந்து விட்டிருந்தாள். பெரும்பாலான நேரம் படுக்கையில்தான்... ஒருநாளைக்கு ரெண்டு மூணு தரம் எழுந்து ஒண்ணுக்கு போனாலே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு ஒடுங்கியிருந்தாள். அப்போது சண்டையெல்லாம் முடிந்து மாமாவுடன் சமாதானம் ஆகியிருந்தாள். அத்தைதான் அவளுக்கு பொங்கிக் குடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘கல்யாணத்துக்குள்ள உடம்ப தேத்திரு... நீ வந்து திருநாறு பூசணும்லா...’ என்றபடி நான் அவள் அருகே போய் உட்கார, தனக்கு சாப்பிட வைத்திருக்கும் தட்டை எடுத்து என் பக்கம் நகர்த்தி வைத்தாள். கண்கள் அத்தையைப் பார்த்தன. அன்றும் நான் நாலு வாய் சாப்பிட்ட பிறகுதான், ‘என் பேத்தி இத்தன நாளா எந்த ஊர்ல ஒளிஞ்சுகிட்டிருந்தா..?’ என்றாள். சொன்ன சொல்லை தட்டாமல் கல்யாணத்தன்னிக்கு வந்து திருநாறு பூசிவிட்டாள்.

அதன்பிறகு ஆச்சியைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை. ஊருக்குப் போவதே பெரும்பாடாக ஆகிவிட்டது. ‘பாப்பாத்தி ஆச்சி நம்மள விட்டுப் போயிட்டா...’ என்று அம்மா போனில் சொன்ன நாளில் நான் வேலைக்காக ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் அலைந்து கொண்டிருந்தேன். விசேஷமெல்லாம் கழிந்து ஒருநாள் ஆச்சி வீட்டுக்கு துஷ்டி கேட்கச் சென்றேன். சோகமெல்லாம் கரைந்து ஓரளவுக்கு இயல்பாகி இருந்தது வீடு. அத்தை டீ போட்டுக் கொடுத்தார். குடித்துவிட்டு மாமாவிடம் துஷ்டி கேட்டுவிட்டு வந்தேன்!

Tuesday, October 8, 2013

சு(த)ந்தரம் பெரியப்பா!

போனவாரம் ஊரிலிருந்து சுந்தரம் பெரியப்பா வந்திருந்தார். ஒரு போன்கூட செய்யவில்லை. ஏன் என்று அவரைக் கேட்க முடியாது. ‘என்னல சொல்லுத... மவன் வீட்டுக்கு அப்பன் வாரதுக்கு போன் பண்ணி அப்பாயின்மெண்ட் வாங்கணுமோடே!’ என்பார். ‘இல்ல பெரியப்பா... ஷூட்டிங், அதுஇதுனு எங்கனயாச்சும் போயிருந்தா... அதுக்குதான் கேட்டேன்...’ என்றால், அடுத்த நொடியே பதில் வரும்... ‘அதுக்கென்னல... மருமவ, புள்ளைய வீட்டுலதான இருப்பாங்க...’ என்பார்.
நான் ஷூட்டிங், மீட்டிங் என்று அலையும் தருணங்களில் மனைவிதான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும் கடைகளுக்கும் அழைத்துக் கொண்டு அலைவாள். அப்படியொரு நேரத்தில் இந்த பெரியப்பா வந்திருந்தால், ‘வீட்டப் பாத்துக்கறத விட மருமகளுக்கு அப்படி என்னடே வேல...’ என்பார். அவரைப் பொறுத்த அளவில் அவர் வரும்போதெல்லாம் கையில் செம்போடும் துண்டோடும் காத்திருக்கும் பெரியம்மாதான் சரியாக வீட்டைப் பார்த்துக் கொள்கிறவள். காய்கறி வாங்கக் கூட படியை விட்டு இறங்காத அவள்தான் வீட்டைப் பார்த்துக்கறவள்.
நல்லவேளையாக பெரியப்பா வந்த அந்த காலை நேரத்தில் நான் வீட்டில் இருந்தேன். முதல்நாள் இரவு லேட்டாக வந்து தூங்கியதால் ஏதோ கனவில் காலிங்பெல் அடிப்பது போலத்தான் இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த மனைவி முதல்நாள் மளிகைக்கடை, காய்கறிக் கடை, அந்தக் கடை இந்தக் கடை என்று சுற்றிய அலுப்பில் படுத்திருந்தாள். யாருனு பாருங்க... பால்காரர்னா நாளைக்கு பால் வேணாம்னு சொல்லுங்க...’ என்றாள்.
நான் அரைத் தூக்கத்தோடுதான் கதவைத் திறந்தேன்... ‘என்னடே... இப்பந்தான் எந்திரிக்கியோ..?’ என்ற வார்த்தைகள் முன்னே வர விடுவிடுவென்று உள்ளே நுழைந்தார் பெரியப்பா. ‘அவளை எங்கடே..? இந்த சோபாவை எதுக்குடே வாங்கியிருக்க... பேப்பர் போட்டு வைக்கதுக்கா..?’ என்றபடி சோபாவில் கிடந்த பேப்பர்களை எடுத்து அடுக்கத் தொடங்கிவிட்டார்.
அதுதான் பெரியப்பா... அவருக்கு எல்லாமே வைத்த இடத்தில் இருக்க வேண்டும். பெரிய டைம் டேபிளே வைத்திருப்பார். காலையில் ஆறரை மணிக்கு மேல படுக்கையிலே படுத்திருக்கக் கூடாது. ரெண்டுமுறை குரல் கொடுப்பார்... மூன்றாவது முறை கன்னத்தில் கொடுப்பார். பல் விளக்க பத்து நிமிஷம்... குளிக்க பத்து நிமிஷம், சாப்பிட பத்துநிமிஷம் என்று அவர் டைம் டேபிளில் எல்லாத்துக்குமே பத்து நிமிஷம்தான்!
‘என்னங்க… பால்காரன்கிட்டே சொல்லிட்டீங்களா..?’ என்ற மனைவியை உலுக்கி எழுப்பி, ‘இல்லே… நீ பாத்ரூம்ல இருக்கேனு சொல்லியிருக்கேன்…; என்றதும் கன்ஃப்யூஸ் ஆகி கண்ணை விழித்தாள். பெரியப்பா வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லி அவளை பாத்ரூமுக்குள் தள்ளினேன். முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள். அதற்குள் பெரியப்பா இன்னொரு பாத்ரூமில் காலைக் கடமைகளை முடித்துவிட்டு குளித்திருந்தார். (கரெக்ட்… பத்து நிமிடத்தில்தான்!)
‘என்னடே… ஒரு மனுஷன் வந்திருக்கானே… ஊர்ல பெரியம்ம எப்படி இருக்கா… மேலுகாலெல்லாம் சும்மா இருக்கானு ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலையோ… என்ன புள்ள நீ…’ என்ற பெரியப்பா, ‘என்னம்மா… ஊர்ல அம்மா அப்பா சும்மா இருக்காங்களா… என்ன டிபன் பண்ணப் போறே…?’ என்றபடி பெட்ரூமை எட்டிப் பார்த்தார். பிள்ளைகள் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தன.
‘என்னம்மா… நீ கோழிகூப்புட எந்திரிச்சா போதுமா… பிள்ளைகளையும் எழுப்பி விட்டு பழக்கணும்… அப்பதானே நாளைப்பின்னே நம்ம புள்ளைகளும் நல்லா வளரும்…’ என்றபடி உள்ளே நுழைந்து பிள்ளைகளின் முதுகில் ரெண்டு போட்டு எழுப்பி விட்டார். கிடுகிடுவென்று போர்வைகளை இழுத்துப் போட்டு மடித்து வைத்தார். கையில் டீயுடன் வந்த மனைவி, ‘நீங்க எதுக்கு மாமா இதையெல்லாம் பண்ணிகிட்டு…’ என்றாள். அந்த அடிகளெல்லாம் என் முதுகில் விழுந்த காலம் நினைவில் வந்து போனது. அவர் கடிகாரத்துக்குதான் நாங்களெல்லாம் கட்டுப்பட வேண்டும்.
‘இதென்ன காபியா… காலைல நான் நீராகாரம்தான் குடிப்பேன்… ஒரு சொம்பு கரிக்க உப்பு போட்டு கொண்டா…’ என்றார். ‘இது க்ரீன் டீ பெரியப்பா… ஆண்டி ஆக்ஸிடைன்ஸ் இருக்கு… உடம்புக்கு நல்லது…’ என்றேன். ‘சமாளிக்கியாக்கும்… வீட்டுல நீராகாரம் இருக்கறதுதாண்டா சம்சாரி வீட்டுக்கு லெச்சணம்…’ என்றார். எங்களுக்கு காலை சாப்பாடு நீராகாரத்தில்தான் தொடங்கும்.
ஏழு மணிக்கு எழுப்பியபோதே பாதி ராத்தியில் எழுப்பியது போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற பிள்ளைகள் கையில் பால் தம்ளரை திணித்தாள் மனைவி.
‘அதை இங்க கொண்டா... பல் தேய்க்காம பால் குடிக்கது என்ன பழக்கம்... பேரப்புள்ளைகளா... வாங்க இங்க...’ என்று இழுத்துக் கொண்டு போய் பால்கனியில் நிறுத்தி பல்லை விளக்கிவிட்டார். ‘அம்மா... இங்கனயே குளிக்க ஊத்திரட்டுமா... டவுரசக் கழற்றுடே...’ என்று என் மகனின் டவுசரைக் கழற்றி குளிக்க வைத்து துடைத்து வழிய வழிய எண்ணெய்யைத் தேய்த்துவிட்டார். திருத்தமாக விபூதி வேறு!
மனைவி பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி வைக்க, அதைத் திறந்து பார்த்த பெரியப்பா, ‘என்னம்மா... காக்காய்க்கு சோறு வைக்க மாரி கொறைய வச்சிருக்க... வளர்ற புள்ளைக நல்லாச் சாப்புட வேண்டாமா... நல்லா அள்ளி வை... என் மவன் படிக்கையிலே அவன் கொண்டு போற தூக்குச் சட்டி எப்படி இருக்கும் தெரியுமா..? என்ன புள்ள நீ...’ என்றவர், ‘இப்பம் சாப்புட என்ன வச்சிருக்க..?’ என்றார். என் மனைவி கெலாக்ஸ் பால் ஊத்தி என்று சொன்னது அவளுக்கே கேட்டிருக்குமா என்று தெரியவில்லை.
நான் பிள்ளைகளைக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வரும்போது பெரியப்பாவைக் காணவில்லை. ‘காய் வாங்கப் போயிருக்கார்...’ என்றாள் மனைவி.
எப்போதுமே வீட்டில் காய்கறி வாங்குவது அவர் வேலை. பச்சைப் பசேல் என்று அன்று விளைந்த காய்கள்தான் அவர் சாய்ஸ்! எங்க பெரியப்பா வந்து சொல்லும் வரையில் அன்று என்ன சமையல் என்று பெரியம்மாவுக்கே தெரியாது.
பெரிய மூட்டை போல காய்கறிகளோடு உள்ளே நுழைந்த பெரியப்பா, ‘யம்மா... பிஞ்சு கத்தரிக்காயா கிடந்துது... இதை நாலா வகுந்துபோட்டு எண்ணக் குழம்பு வெச்சிரு... தொட்டுக்கிட இந்த தடியங்காயப் போட்டு கடலைப்பருப்பு கூட்டு வெச்சிரு... முடிஞ்சா முட்டைக் கோஸை பொரிச்சிரு...’ என்றார்.
‘யப்பா... இன்னிக்கு ஒருநாள் சிப்ஸ் வெச்சு சாப்டுக்கறீங்களா...’ என்று கேட்கும் மனைவி திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள். நான் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தேன்.
பெரியப்பாவின் விஜயத்துக்கான காரணம் சாயங்காலம்வரை தெரியவில்லை. சாயங்காலமாக வீடு திரும்பியபோது வீடே தலைகீழாக இருந்தது.
‘பிள்ளைகள் இன்னைக்கு என்கூட படுக்கட்டும்... தாத்தா கதை சொல்றேன்...’ என்று அழைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தார் பெரியப்பா. பத்து நிமிஷத்துல தூங்கிறணும் என்ற பெரியப்பாவின் குரலும் சின்னவளின் அழுகையும் கேட்டது.
‘என்னங்க... ரொம்ப நாளா உங்க பிரவுன் சாக்ஸை காணோம்னு தேடிகிட்டிருந்தீங்களே... அது பீரோவுக்கு மேலே கிடந்துச்சு...’ என்றாள் என் மனைவி. ‘அங்கே உனக்கு என்ன வேலை..?’ என்றேன். ‘நானா... உங்க பெரியப்பா... வீட்டையே தூசி தொடைக்கிறேன்னு துவம்சம் பண்ணிட்டார்... எனக்கே கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மாமானு கேட்டதுக்கு, ‘இந்த வயசுல என்னம்மா ரெஸ்ட் வேண்டியிருக்கு’னுட்டார்.... மாமாவுக்கு இப்ப என்ன வயசு?’ என்றாள். ‘இந்த கார்த்திகை வந்தா எழுபது முடியுது...’ என்று சொல்லிவிட்டுப் படுத்தேன்.
அடுத்தநாள் அலாரம் வைத்து எழுந்து வெளியே வரும்போது பிள்ளைகள் ரெண்டு பேரும் யூனிபார்முடன் உறங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ‘பார்த்தியா... ஒரேநாள்ல எப்படி மாறிட்டாங்கனு... இன்னைக்கு ஆளுக்கு நாலு இட்லியைக் குடு... ஜம்முனு சாப்பிட்டுட்டு போவாங்க...’ என்றதும் என் பிள்ளைகள் அடைந்த அதிர்ச்சியை வாழ்நாளில் முதன்முறையாகப் பார்த்தேன்.
என் மனைவி மெதுவாக வாய்திறந்து, ‘அவங்களுக்கு இட்லி புடிக்காது...’ என்றாள். பெரிதாகச் சிரித்த பெரியப்பா, ‘புள்ளைகளுக்கு எது நல்லது கெட்டதுனு எப்படித் தெரியும்... நாம குடுக்கறதை நம்ம புள்ளைகள் சாப்பிடணும்... அதான் சரி...’ என்றார். நான் அவசரமாக பேண்ட்டை மாட்டிக் கொண்டு பைக்கை எடுக்க கீழிறங்கினேன்.
ஊரில் யாரோ ஒருவரின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களாம். அந்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று விசாரிக்கத்தான் வந்திருக்கிறார். என்னை அழைத்தார். நான் ஷூட்டிங் இருக்கேப்பா... என்றதும் ஊர்ல இருக்கறவங்க நம்ம சொல்ற வார்த்தையை நம்பி இருக்காங்க... நாம உதவலைன்னா எப்படி... உன் கல்யாணத்துல அவன் ரெண்டுநாள் மண்டபத்து ஆக்குப்பறைல கிடையாக் கெடந்தான்... தெரியுமா..? என்றார். எனக்கு இந்த ஈக்வேஷன் புரியவில்லை.
பெரியப்பா அவராகவே போய்விட்டார். முழுக்க விசாரித்து முழு திருப்தியோடு ஊருக்கு கிளம்பினார். புறப்படும்போது பிள்ளைகளை அழைத்துக் கொண்டுபோய் அதிரசம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தார். ‘என்ன்லே... இந்தப் பயலுவ கடைக்குள்ள போனதும் கலர் கலரா சிப்ஸ் பாக்கெட்டை பெறக்குதானுவ... நாம வாங்கிக் குடுக்கதைத் திங்க பழக வேண்டாமா... அதான் அதிரசம் வாங்கிக் குடுத்தேன்...’ என்றவர், என் மனைவி பக்கம் திரும்பினார்.
‘என்னம்மா... இப்ப சரஸ்வதி பூசை லீவு வரும்லா... நாலு நாளைக்கு புள்ளைகளக் கூட்டிட்டு வாயேன்... மிசினு மாரி இல்லாம நினைச்சபடிக்கு சுதந்திரமா இருந்துட்டு வரலாம்ல...’ என்றார் சுந்தரம் பெரியப்பா.

Saturday, September 28, 2013

குத்தாலிங்கமும் கூப்ட வேலையும்!

மற்றும் பலர்!
என் நண்பன் ராஜ்முருகன் ஒருமுறை தன் சகோதரனை அறிமுகம் செய்து வைத்தபோது, ‘இவன் இல்லைன்னா 12பி படமே இல்லை’ என்றான். அந்த முகத்தை அப்போதுதான் பார்க்கவே செய்கிறேன். 12 பி படத்தின் நாயகன் ஷாம்... அவருடைய நண்பர்கள் பட்டாளத்தில்கூட இந்த முகத்தைப் பார்க்கவில்லை. படத்தின் இயக்குனர்கூட ஒளிப்பதிவாளர் ஜீவா. ஒருவேளை அவருக்கு இந்தக் கதையைச் சொன்னவராக இருக்குமோ என்ற எண்ணத்தோடு பார்த்தேன். படத்தில் பஸ்ஸுல டிராவல் பண்ற ஷாம் பர்ஸை இவந்தான் பிக்பாக்கெட் அடிப்பான்... இவனைப் புடிக்க பஸ்ஸை விட்டு ஷாம் இறங்கறப்பதான் படம் ரெண்டு டிராக்ல பிரியும் என்றார் ராஜுமுருகன். அப்போதுதான் சினிமா தாகத்தோடு சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கும் ஆள் என்பது புரிந்தது. இத்தனைக்கும் 12 பி படத்தில் நடிகர்கள் பட்டியலில்கூட அவர் பெயர் இடம் பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். மற்றும் பலர் என்ற பொதுப் பிரிவில் அவரும் ஒருவர்!
எல்லாருடைய வாழ்க்கையிலுமே அப்படியொரு மற்றும் பலர் பட்டியல் இருக்கும். நம் வாழ்க்கையின் முக்கியமான திருப்பத்தைத் தந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நம் வாழ்வில் பெரிய இடம் இருக்காது. மற்றும் பலர்தான்! அப்படி என் வாழ்வில் இருக்கும் பட்டியலில் கொஞ்சத்தை திரும்பிப் பார்க்கும் முயற்சி இது!
குத்தாலிங்கமும் கூப்ட வேலையும்!
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது குத்தாலிங்கத்தைப் பார்த்தேன். நான் பார்த்தேன் என்பதைவிட அவன் என்னைப் பார்த்தான் என்பதுதான் சரி! பஸ்ஸை விட்டு இறங்கிய கணம் வேகமாக நடந்து கொண்டிருந்த குத்தாலிங்கம் சட்டென்று நின்றுவிட்டான். ‘ஏ... பாபு... எப்டி இருக்கே..? இப்பந்தான் வாரியா..?’ என்றான். நான் ஊருக்குப் போனால் இது ஒரு வேலையாகவே இருக்கும். ‘எப்ப வந்தே..?’ என்று கேட்பவர்களிடம் ஒரே பதிலாக நேத்துதான் என்றும் ‘எப்ப ஊருக்கு..?’ என்று கேட்பவர்களிடம் நாளைக்கு என்றும் ஸ்டாண்டர்டாக ஒரே பதிலைச் சொல்லி வைப்பேன். ஆனால், பையும் கையுமா என்னைப் பார்த்த குத்தாலிங்கம் இப்பதான் வாரியா என்றதும் ஆமாம் என்று தலையசைத்தேன்.
குத்தாலிங்கம் என் பள்ளிக்கூட நண்பன். பள்ளிக்கூடத்தில் அவன் பெயர் குத்தாலிங்கம் என்று இருந்தாலும் நாங்கள் அவனை அரி என்றுதான் அழைப்போம். அவனை நண்பன் என்றெல்லாம் சொல்லமுடியாது. என்கூடப் படித்தான்... எங்கள் தெருக்கார பையன்... எனக்கு தூரத்து சொந்தம். என்ன உறவு என்றுகூட சொல்லத் தெரியாது. ஆனால், டெய்லர் சுந்தரம் தாத்தா பையன் என்ற அளவோடு நிறுத்திக் கொள்வேன். அவனும் கம்பவுண்டர் மாமா பையன் என்றுதான் என்னைச் சொல்வான். அந்த அளவில்தான் எங்கள் உறவுமுறை. நான் மூன்றாவது முடித்து நான்காவது போனபோது அவன் இன்னொரு வருடம் மூன்றாவதே படிக்க முடிவு எடுத்திருந்தான். அடுத்து நான் ஆறாவது வேறு பள்ளிக்கூடம் போனபோது அவன் பழைய பள்ளிக்கூடத்தை விட மனசில்லாதவன் போல அங்கேயே நாலாவதுல ரெண்டு வருஷம், ஐந்தாவதுல ரெண்டு வருஷம் என்று பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
முழு ஆண்டு விடுமுறையில் வேலைக்குச் செல்வது என்பது எங்கள் ஊரில் பல பிள்ளைகளுக்கு பழக்கம். ஊரில் பாதி பேர் கொத்தனார் என்பதால் சித்தாள் வேலைக்குச் செல்வார்கள் சிறுவர்கள். அதில் கிடைக்கும் சம்பளம், ஸ்கூல் திறக்கும்போது புத்தகம் வாங்க பயன்படும் என்பதால் எல்லோருமே வேலை பார்க்கத் தயாராகவே இருப்பார்கள். (என்னைப் போல சிலர் மட்டுமே முழு ஆண்டு லீவுக்கு ஆச்சிவீட்டுக்குச் செல்லும் அதிஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள்.) அப்படியொரு முழு ஆண்டு முடிந்து எல்லோரும் பள்ளிக்கூடத்துக்குத் திரும்பிய நாளில் குத்தாலிங்கம் பள்ளிக்கு வரவில்லை.
எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் பள்ளிக்குதான் ஆறாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும். அந்தப் பள்ளியில் ஆறாவது சேர்க்க ஒரு நுழைவுத் தேர்வு வைப்பார்கள். அந்த நுழைவுத் தேர்வுக்கு பயந்தோ என்னவோ அரி தன் படிப்பை ஐந்தாவதோடு முடித்துக் கொண்டான். அதன்பிறகு பல நேரங்களில் சிமெண்ட் படிந்த உடலும் சிரிப்புமாக அவ்வப்போது எதிர்படுவான். ‘என்னடே... எப்படி இருக்க..?’ என்பான். பதிலைக்கூட எதிர்பார்க்காத கேள்வியாகத்தான் இருக்கும் அது.
நான் கல்லூரிக்குப் போன பிறகு ஒருநாள் திடீரென்று அவனைப் பார்த்தேன். ‘என்ன அரி... ஆளையே பாக்க முடியலை..?’ என்றேன். ‘நீ திருநவேலிக்கு படிக்கப் போயிட்டு என்னக் கேக்கியோ..?’ என்றான் சிரிப்போடு. சிரிப்பு அவனுக்கு டிரேட் மார்க். ‘நான் ஊருக்கு வந்து நாலைஞ்சு நாளாச்சு... உன்னைப் பாக்கலையேனு கேட்டேன்..?’ என்றதும், ‘இப்பம் நா கேரளாவுல வேல பாக்கேன்... ஒரு அறுப்பு மில்லுல... நல்ல சம்பளம்... சாப்பாடும் வத்தனையா போடுதானுவ... அலப்பரை இல்லாம போவுது...’ என்றான். அதுதான் அரி. எதையும் அலுப்போடு சொல்லமாட்டான்.
நான் சென்னைக்கு வந்து வேலையில் செட்டில் ஆன பிறகு ஒருமுறை ஊருக்குப் போயிருந்தேன். பையைக் கொண்டுபோய் வீட்டுக்குள் வைத்துவிட்டு கைலியை மாற்றிக் கொண்டு வாசலுக்கு வந்தால் பக்கத்து வீட்டுக்கு எதிரே இருந்த குச்சில் வாசலில் உட்கார்ந்து காபியை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தான் அரி. என்னைப் பார்த்ததும் முகம் கொள்ளாத சிரிப்பு.
‘ஏ... எப்படி இருக்க... இதென்ன செம்மறி ஆட்டுக்கு வளர்ந்தது கணக்கா தாடி மொளச்சிருக்கு... ஒண்ணு முழுசா வைக்கணும்... இல்லை, சிரைக்கணும்... இதென்னடே...?’ என்றான் எடுத்த எடுப்பிலேயே! நூறு ரூபாய் கொடுத்து ஒவ்வொரு முடியாக செதுக்கி வைத்த ஃபிரெஞ்ச் பியர்ட்டை ஒரே வரியில் ஆட்டுத்தாடி என்றுவிட்டான். தாடியை தடவிக் கொண்டே, ‘எப்படி இருக்கே... இங்க என்னடே..?’ என்றேன். குச்சிலுக்கு உள்ளே இருந்து ஒரு இளம்பெண் எட்டிப் பார்த்தாள். ‘இங்க வா... இது நம்ம பாபு... மெட்ராஸ்ல இருக்கான்... ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சோம்... இது என் பொண்டாட்டி...’ என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான். அவனுக்கு கல்யாணம் ஆன விஷயமே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.
‘தையில எனக்கு கல்யாணம் முடிச்சு வைக்கியா இல்லையானு ஒத்தக் கால்ல நின்னுட்டான்... என்ன கிறுக்கோ தெரியலை... கல்யாணத்துக்குனு சேர்த்ததுனு சொல்லி அம்பதாயிரம் ரூபாயைத் தூக்கி அவ்வப்பா மடியில போட்டுட்டான். அந்த மாமாவும் எம்புட்டோ சொல்லிப் பாத்தாவோ. கேக்கலை... சரினு முடிச்சு வெச்சுட்டாவோ. அந்த மட்டுக்கும் வந்த மகராசி நல்லவ... அவன் கொண்டாறதை வெச்சு கட்டு செட்டா கழிக்கா...’ என்றாள் அம்மா.
அன்றைக்கு சாயங்காலம் வாசலில் உட்கார்ந்து கைகால்களுக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தான் அரி. என்னைப் பார்த்ததும் அழகான சிரிப்போடு, ‘என்ன வேலை பார்க்க மெட்ராஸ்ல..? எம் பொண்டாட்டி கேட்டா... சொல்லத் தெரியலை எனக்கு...’ என்றான். ‘பத்திரிகை ஆபீஸ்ல வேலை...’ என்றேன். ‘அங்க உனக்கு வாரச் சம்பளமா... டெய்லி சம்பளமா..?’ என்றான். ஒருகணம் ஆடிப் போய்விட்டேன். மாசச் சம்பளம் என்ற ஒரு விஷயமே அவனுக்கு தெரியவில்லை. நான் சொன்னதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சீட்டு கீட்டு போட்டு துட்டு சேக்கியா... நாளைக்கு கல்யாணம் முடிக்கையிலே வேணும்லா... என்றான். அவன் உலகம் எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
நீ என்ன வேலை பார்க்கிறே..? என்றேன். கூப்ட வேலைக்குப் போறேன்... என்றான். எனக்குப் புரியவில்லை. ‘இன்னைக்கு கொத்தனார் வேலை இருக்குனு சொன்னா பெரியாள் வேலைக்குப் போவேன்... சாந்து குழைக்கறது... செங்கல் சுமக்கறதுனு வேலை இருக்கும்... இல்ல, அறுப்பு மில்லுல வேலைன்னா அதுக்கு போவேன்... தடி தள்ளணும்... ரீப்பர் கட்டணும்னு வேலை இருக்கும். இல்லைன்னா மம்பட்டி வேலைக்கு போவேன்... வரப்பு தரிக்கது, புல்லு சீவுததுனு வேலை இருக்கும்... கூப்ட வேலை... நமக்கு பொழுது விடிஞ்சு பொழுது போனா கையில் சம்பளம் நிக்கணும்...’ என்றான். கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.
அந்த அரிதான் என்னை பஸ்ஸில் இருந்து இறங்கும்போது பார்த்துவிட்டான், எப்டி இருக்க? என்று கேட்டும் விட்டான். அவனுடைய அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்... என்ன வேலை பாக்க? என்ன பதில் சொல்வது?
நீ கொத்தனார் வேலை பார்ப்பது போல... அறுப்பு மில் வேலை பார்ப்பது போல... மம்பட்டி வேலை பார்ப்பது போல நானும் பத்திரிகைகளுக்கு எழுதுகிறேன்... தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுகிறேன்... சினிமாவுக்கு வசனம் எழுதுகிறேன்... இணைய தளங்களில் பத்தி எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்லலாமா... அவனுக்குப் புரியுமா? என்று யோசித்த நேரத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டான்...
‘என்ன பாபு... இப்பம் என்ன வேலை பாக்க?
‘கூப்ட வேலைக்குப் போறேன்..!’

www.tamizhulagam.com இணைய இதழில்

Wednesday, September 11, 2013

காயத்ரி அக்கா!

‘‘அம்மா வாளி இருந்தா வாங்கிட்டு வரச் சொன்னாங்க...’’ என்றபடி கதவைத் தட்டியபோதுதான் காயத்ரி அக்காவை முதன்முதலாகப் பார்த்தேன்... நாங்கள் குடிபோன வளைவு வீட்டு வரிசையில் நாலாவது வீடு காயத்ரி அக்காவின் வீடு. எட்டு வீடுகள் இருந்த் அந்த வரிசையில் முதல் வீடு எங்களுடையது. அடுத்து ஒரு வீட்டில் பீடிக் கடை இருந்தது. அடுத்த வீட்டில் ஒரு டீச்சர் குடியிருந்தார்கள். நாலாவது வீடு காயத்ரி அக்கா வீடு. அடுத்த இரண்டு வீடுகளில் ஓனர் குடியிருக்க எட்டாவது வீடு காலியாக இருந்தது.
வாளியைக் கையில் எடுத்து கையில் கொடுத்துவிட்டு பின்னாலேயே வந்துவிட்டாள் காயத்ரி அக்கா. அப்போது அவள் பெயர் காயத்ரி என்று தெரியாது. தன் வீட்டில் இருந்து இன்னொரு துடைப்பம் எடுத்துக் கொண்டு வந்து அம்மாவோடு சேர்ந்து வீடெல்லாம் கழுவி விட்டாள். தொணதொணவென்று பேசிக் கொண்டே இருந்தாள்.
வாடகை எழுபத்தைந்து ரூபாய் என்பதில் இருந்து கமலுக்கு எப்பவுமே கரெக்டான ஜோடி ஸ்ரீதேவிதான் என்பது வரை எல்லாம் பேசினாள். நாளைக்கு பார்க்கப் போவதில்லை... பேசப் போவதில்லை... அதனால் இன்றே பேசி முடித்துவிட வேண்டும் என்பதாக இருந்தது அவளுடைய பேச்சு!
காயத்ரி அக்காவின் அப்பாவுக்கு ஈபியில் லைன் மேன் வேலை! வீட்டில் இருக்கும் நேரங்களில்கூட காக்கி கலர் டவுசர்தான் போட்டிருப்பார். ஆரம்பத்தில் அவருடைய காக்கி கலர் டவுசரைப் பார்த்து போலீஸோ என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். பின்னாளில் ஒருமுறை அவரை போஸ்ட் கம்பத்தில் பார்த்த பிறகு பயம் தெளிந்திருக்கிறது.
காயத்ரி அக்காவுக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை... அண்ணன் ரமேஷ் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் கிராஃப்ட் வாத்தியாராக இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர் சம்பளமாக இல்லாமல் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நியமித்த டீச்சர் என்பதால் அறுநூறோ என்னவோதான் வாங்கினார். அதில் நூறை எடுத்துக் கொண்டு மிச்சம்தான் வீட்டுக்கு தருவார். அப்பாவின் சம்பளம் பிடித்தமெல்லாம் போக ஆயிரத்துக்குள் வரும். அதில்தான் எல்லா செலவுகளுமே!
ஒருநாள் காயத்ரி அக்கா காடா துணியில் தைத்த பிரேசியர் போட்டிருந்ததைப் பார்த்துவிட்டு அம்மா, ‘என்ன காயத்ரி... இந்த சின்ன வயசுல நாடா வெச்ச பிரா போடாம காடா துணியிலே போட்டிருக்கே?’ என்று கேட்டபோது அக்கா சொன்ன தகவல்கள் இவை!
இந்த காடாதுணி பிரேசியர் கூட மச்சு வீட்டு அக்கா பாவாடை, தலகாணி உறை தைக்க காடா துணி குடுத்ததுல மிச்சம் பிடிச்சு தெச்சேன் என்று காயத்ரி அக்கா சொன்னபோது அம்மா பாவம் என்றாள்.
காயத்ரி அக்காவுக்கு இத்தனை பேச்சு எங்கே இருந்து வந்தது என்பது அந்த அக்காவின் அம்மாவைப் பார்த்தபோது தெரிந்தது. தினத்தந்தியை முதல் பக்கத்தில் இருந்து கடைசிபக்கம் வரை படித்தது போல எல்லா தகவல்களையும் கொட்டினாள் அந்த அத்தை. ஆனால் இருவருக்கும் இருந்த பெரிய வித்தியாசம் அத்தையின் பேச்சில் அது இல்லை இது இல்லை என்ற பஞ்சப்பாட்டு கிடையவே கிடையாது. ‘ஒரு ரசம் வெச்சேன்... ஒரு அப்பளம் பொறிச்சேன்... மழைக்கும் அதுக்கும் சுடச்சுட கூட ரெண்டு வாய் உள்ளே போச்சு என்பாள் அத்தை. அதுவே காயத்ரி அக்கா என்றால்வீட்டுல காய்ங்கற பொறப்பே இல்லை... வேற வழியில்லாம ரசம் வெச்சு அப்பளம் பொறிக்க வேண்டியதாப் போச்சுஎன்பாள்.
காயத்ரி... இல்லே இல்லேனு சொன்னா இல்லாமலேயே போயிரும்... இருக்குனு சொல்லிப் பழகு...’ என்று ஒருமுறை அம்மா சொன்னபோதுகூட வெறுஞ்சட்டியை எப்படிக்கா நிறைஞ்சிருக்குனு சொல்ல முடியும் என்று அலுத்துக் கொண்டுதான் பேசினாள் அக்கா.
நல்ல மழைநாளில் திண்ணையை ஒட்டியபடியே ஓட்டுச் சாய்ப்பில் ஒண்டிக்கொண்டு சுவரை உரசியபடியே லேசாக நனைந்து கொண்டு வந்தாள் காயத்ரி அக்கா. ஒரு குடை கிடையாது... குளிருக்கு உடுத்திக்க கனமான ஸ்வெட்டர் கிடையாது என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்த காயத்ரி அக்காவுக்கு அதிர்ச்சி. அம்மா அப்பாவின் முழுக்கைச் சட்டையை சேலைக்கு மேலே போட்டுக் கொண்டிருந்தாள்.
நீயும் உங்கப்பா சட்டையையோ உங்க அண்ணன் சட்டையையோ போட்டுக்கோ... குளிருக்கு இதமா இருக்கும்... கல்யாணத்துக்கு முன்னே நானும் அப்படித்தான்...’ என்ற அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்த காயத்ரி அக்கா, ‘எங்கப்பா சட்டை அக்குள்ல கிழிஞ்சிருக்கும்... எங்க அண்ணன் சட்டைல சிகரெட் வாசனை அடிக்கும் என்று அதற்கும் ஒரு குறை சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.
காயத்ரி அம்மா... காயத்ரிக்கு மாப்பிள்ளை பாக்கறதுக்குள்ளே உங்களுக்கு நாக்கு தள்ளிப் போயிரும்... எதையெடுத்தாலும் குறை சொல்றாளே... நீங்க இந்திரனையே பார்த்தாலும் இவ பல்லு சரியில்லை... பார்வை கோளாறா இருக்குனு நொட்டை சொல்வா...’ என்ற அம்மாவிடம், ‘எங்க வசதிக்கு எங்கே போய் மாப்பிள்ளை தேடுறது... எங்க அண்ணன் மகன் தாலுகா ஆபீஸ்ல ஆர் ஐயா இருக்கான்... அவனுக்கு இந்த ஐப்பசி வந்தா ரெட்டிச்ச வயசு முடிஞ்சு 29 வந்துடும்... அதனால தையிலே கல்யாணத்தை வெச்சுட வேண்டியதுதான்...’ என்றாள் அத்தை.
காயத்ரி அக்காவின் மனசு போலவே அவள் கல்யாணத்தில் மூன்றாம் பந்தியில் பாயாசம் இல்லை... நான்காம் பந்தியில் கூட்டு பொரியல் இல்லை... ஐந்தாம் பந்திக்கு சோறே இல்லை... மிச்சம் இருந்த சாம்பாரையும் அவியலையும் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். மறுவீடு வந்த அக்காவோடு சாம்பாரும் அவியலும் வந்தது. அம்மா போய் மறுவீட்டு பலகாரத்தோடு கொஞ்சம் சுண்ட கறியும் வாங்கி வந்தாள்.
காயத்ரி அக்கா வீட்டு மாமா லேசாக முன் வழுக்கை வாங்கியிருந்தார். அக்காவுக்கு குறை சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது. அடுத்த முறை வரும்போது கேட்டால், ‘என்ன ஆர் ஐயா இருந்து என்ன பிரயோஜனம்... சிவகுமார் மாதிரி நெத்தியிலே விழுறதுக்கு முன் மண்டையிலே முடி இல்லையே!’ என்பாள் நிச்சயம்.
காயத்ரி அக்கா மாமா வீட்டோடு போன பிறகு மழை பெய்து வெறித்த மாதிரி ஆகிவிட்டது எங்கள் வளவு. அக்கா குடியிருந்த கோவில்பட்டிக்கு ஒருதரம் நாங்க குடும்பத்தோடு போனோம். அப்பாவுக்கு நாலுநாள் லீவு கிடைக்க, கன்னியாகுமரி போய்விட்டு வருவோம் என்று பிளான் போட்டோம். போகிற வழியில் அக்கா வீட்டில் இறங்கி அரை நாள் இருந்துவிட்டுப் போகலாம் என்று திட்டம்.
தலையைக் கண்டதும் உலையை வைனு சொல்ற மாதிரி சாம்பார், ரசம், அவியல் பொரியல்னு அசத்திட்டா காயத்ரி அக்கா. ஆனா, அடுக்களைதான் ஏதோ இரண்டாம் உலகப் போர் நடந்த ஜப்பான் மாதிரி ஏக களேபரமாக் கிடந்தது. சிங்க் தொட்டி நிறைய சோற்றுப் பருக்கை... பருக்கைன்னா ஒண்ணு ரெண்டுனு ஆகிடும்... சோறே கொட்டிக் கிடந்துச்சு!
என்ன காயத்ரி... இவ்ளோ சோறு சிந்தியிருக்கு?’ என்று அம்மா கேட்டதும், ‘பொங்கறதுக்கு பானை வேணும்ல... அதான், பழசு கிடந்ததை கொட்டிட்டேன்... பழசு பட்டையை யாரு திங்கறது... எனக்கு ஆகமாட்டேங்குது...’ என்று காயத்ரி அக்கா சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.
கஞ்சிக்கு வழியில்லாதவர் என்று குறையாகச் சொல்லக் கூடாது என்றாலும் காயத்ரி இருந்த இருப்பென்ன... இப்ப கொழிக்கறது என்ன என்று அம்மா கன்னியாகுமரியில் இருந்து திரும்பற வரைக்கும் புலம்பிக் கொண்டே வந்தாள்.
ஆடி, தலை தீபாவளினு கூட காயத்ரி அக்கா பிறந்த வீட்டுக்கு வருவதில்லை. அங்க வந்தா உங்க தரித்திரம் எனக்கும் ஒட்டிக்கும் என்று சொல்லி வருவதைத் தவிர்த்து விட்டதாக காயத்ரி அக்காவின் அம்மா வந்து அழுதுவிட்டுச் செல்வாள். ஆனால், அவர்கள் போகும்போதெல்லாம் புடவையாக அள்ளிக் கொடுத்து அனுப்புவாள். எல்லாமே அவள் கட்டி அவிழ்த்த புடவை!
எங்கண்ணன் மவன் ரெண்டு கையிலேயும் சம்பாதிக்கறான்... புதுசு ஒண்ணு எடுத்துக் குடுத்தா என்ன குறைஞ்சுடுவா... இதெல்லாம் எனக்கு புடிக்கலை... நாலுதரம் கட்டுனா அலுத்துடுதுனு சொல்லி அவுத்துக் குடுக்கா என் செல்ல மவ...’ என்று அந்த அத்தை கண்ணீர் வடிக்கும்போது கஷ்டமாக இருந்தது.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கல்யாணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக காயத்ரி அக்கா வீட்டுக்குப் போனேன். புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் எல்லாம் நடத்தி விட்டிருந்தாள்.
வெளிவேலைக்கு ஒரு ஆள், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் என்று ஆட்களை வைத்திருந்தாள். ‘சாப்பிட்டுட்டுதான் போகணும்... தம்பிக்கும் சேர்த்து சாப்பாடு வெச்சுடு...’ என்று வேலையாளிடம் சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள் அக்கா. வீடு நன்றாகவே இருந்தது.
ஒவ்வொரு அறையாக சுற்றிக் கொண்டே வந்தபோது, ‘இதுதான் என் ரூம்...’ என்றபடி கதவைத் திறந்தாள். கட்டிலுக்கு கீழே ஐம்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நாகரீகமான நாடா வைத்த உள்ளாடைகள் குவிந்து கிடந்தன!
சூரிய கதிர் செப்டம்பர் 13 இதழில்